Followers

Thursday, July 26, 2012

அணு ஆயுதம் - கென்னடி முதல் மெகமுத் அகமத்நிஜாத் வரை

நேற்று அணு ஆயுத பரவலை தடுக்கவும் பூஜ்யம் அளவில் எந்த நாடுமே அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாத்தியமா என்ற ஆவணப்படம் ஒன்று காண நேரிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி J.F கென்னடி 1961ம் வருடம் ஐ.நா சபையில் ஆற்றிய உரையின் முக்கியத்துவமாக விபத்து,தவறான கணிப்பீடு,கிறுக்குத்தனம் என்ற மூன்று காரணங்களால் அணு ஆயுத ஆபத்துக்கள் ஏற்படலாம்.எனவே அணு ஆயுதங்கள் நம்மை அழிப்பதற்கு முன் நாம் அவற்றை அழிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

Today, every inhabitant of this planet must contemplate the day when this planet may no longer be habitable. Every man, woman and child lives under a nuclear sword of Damocles, hanging by the slenderest of threads, capable of being cut at any moment by accident, or miscalculation, or by madness. The weapons of war must be abolished before they abolish us. 

(In an address before the General Assembly of the United Nations on September 25,1961.Courtesy-Wikipeadia)

கென்னடி சொன்னதில் விபத்தாக ரஷ்யாவின் செர்னபில்,சுனாமியால் ஜப்பான் விபத்துக்கள் சாட்சியாக திகழ்கின்றன.தவறான கணிப்பீடாக அமெரிக்கா தான் நான்கு அணு பரிசோதனைகள் செய்யப்போவதாக ரஷ்யாவுக்கு அறிவிக்க அமெரிக்க நான்கு அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அனுப்புகிறது என்று மொழிப்பிரச்சினையால் ரஷ்ய விஞ்ஞானிகள் யெல்சினுக்கு சொல்ல விஞ்ஞானிகள் கூற்றில் சந்தேகம் கொண்ட யெல்சின் அடுத்த சில நிமிடங்களில் தடுப்பு நடவடிக்கைக்கு அனுமதி தராமல் இருந்ததால் ஒரு தவறான கணிப்பீடு மூலமாக ஒரு போர் உருவாவது தடுக்கப்பட்டது. கிறுக்குத்தனத்திற்கு ஒசாமா பின் லேடனும் 9/11ம் போதும். பின்லேடன் ஆப்கானிஸ்தானில் கொடிகட்டிப் பறந்த கால கட்டத்தில் பாகிஸ்தானின் அணுகுண்டும் பின்லேடனின் கையில் கிடைத்து 9/11 நிகழ்ந்திருந்தால்?

அமெரிக்க,ரஷ்ய பனிப்போர் காலத்தில் இவை இரண்டையும் சார்ந்த நாடுகள் என்ற நிலை மாறி பிரிட்டன்,பிரான்ஸ்,சீனா போன்ற நாடுகளும் அணு ஆயுதப் பரிசோதனை செய்து தம்மை அணு ஆயூத தாதாக்களாக மாறி விட உலக மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்களாக ஐ.நா அமைப்பிலும் அங்கம் வகிப்பவர்களாகி விட்டார்கள்.இருக்குது ஆனால் இல்லை என்ற நிலையில் இஸ்ரேலும்,இந்திய சீனப்போரின் காரணமாக இந்தியா 1974ல்  சிரிக்கும் புத்தனாக தனது முதல் அணு ஆயுதப்பரிசோதனை செய்து வெற்றி பெற்று விட அதனைத் தொடர்ந்து மக்கள் புல்லை உண்ணும் நிலை ஏற்பட்டாலும் கூட இந்தியாவுக்கு எதிரான அணு ஆயுதப் பரிசோதனையை கை விட மாட்டோம் என்று பாகிஸ்தான் சொன்னது. சொன்னதோடு இஸ்லாமிக் பாம்ப் என்று இன்று போஸ்டரும் ஒட்டிக்கொண்டது.

ஒரு பக்கம் சீனாவின் ஆதரவும் இன்னொரு புறம் அமெரிக்க கரிசனையும் சேர்ந்து பாகிஸ்தான் 1980ல் அணு ஆயுத நாடாக உருவாகி விட்டாலும் கூட  அப்துல் கலாம் என்ற பெயர் பிரபலமான May 11 1998ம் வருடம் இந்தியா பொக்ரான் 5 அணு ஆயுத பரிசோதனையை செய்த அடுத்த சில தினங்களில் பாகிஸ்தானின் 6 பரிசோதனைகள் செய்து விஞ்ஞானி அப்துல் காதிர் கான் என்ற பெயரும் பிரபலமாகி விட்டது.அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாகி விட அப்துல் காதிர் கான் முஷ்ரஃபின் ஆட்சிக்காலத்தில் வீட்டு சிறைக்கு தள்ளப்பட்டதிலிருந்து இரண்டு நாடுகளுக்குமான அணு ஆயுதப் போட்டியின் பாதையை புரிந்து கொள்ளலாம்.

வட கொரியா கம்யூனிஸத்தாலும்,அமெரிக்காவுக்கு எதிரான நிலையாலும் தனிமைப்படுத்தப்பட்ட்டாலும் கூட தனது அணு ஆயுத வலிமையால் பொருளாதார செலவுகளை சமன்படுத்த அணு ஆயுத பரவலை ஊக்குவித்தது. இதே பொருளாதார செலவுகளை சமாளிக்கவே பாகிஸ்தானும் அணு ஆயுத பரவல் செய்தது.

இதில் பிறந்த அணு ஆயுதக் குழந்தைதான் ஈரானின் அணு ஆயுதக்கொள்கை. தனது பொருளாதாரக் கொள்கையாக நாளை பெட்ரோல் தீர்ந்து விட்டால் மாற்று எரிபொருள் தேவையென்றே அணு மின் நிலையங்கள் அமைப்பதாக கூறிக்கொண்டாலும் கூட உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்று பிரகடனப்படுத்திய ஈரானின் இஸ்ரேல் சார்ந்த வெளியுறவுக்கொள்கையே அமெரிக்காவும்,இஸ்ரேலும் ஈரானின் அணு எரிபொருள் பரிசோதனைக்கு தடை விதிக்கின்றன.

பனிப்போர் காலம் தொட்டு அமெரிக்கா கிட்டத்தட்ட 65000 அணு ஆயுதங்கள் வைத்திருந்தது.அதே அளவில் ரஷ்யாவும் வைத்திருக்க அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கைகள் மூலமாக இவை சுமார் 6500 அளவில் குறைந்து விட்டாலும் கூட யாரிடம் எவ்வளவு ஆயுதங்கள் உள்ளதோ அவற்றை வைத்துக்கொள்ளலாம் ஆனால் யாரும் புதிதாக அணு ஆயுதங்கள் தயாரிக்க கூடாது என்கிறது ஐ.நா ஐவர்  வீடோ குழு.இந்தியா,பாகிஸ்தான்,இஸ்ரேல் அவரவர் நலன் கருதி அணு ஆயுத பரவல் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.இந்தியா முழு அணு ஆயுத தடைக் கொள்கையை வற்புறுத்துகிறது.பாகிஸ்தானோ நாயகன் பட வசனமாக அவனை நிறுத்தச் சொல் பின் நான் கையெழுத்திடுகிறேன் என்கிறது.இஸ்ரேலோ சுற்றியும் பகை நாடுகளை வைத்துக்கொண்டு என்னால் கையெழுத்திட முடியாது என்கிறது.

இந்த நிலையில் அணு ஆயுத குழுவில் நுழைய முயற்சிக்கும் ஈரானின் ஜனாதிபதி மெகமுத் அகமத்நிஜாத் கேட்கும் கேள்வி...

அணு ஆயுதங்கள் வைத்திருப்பது நன்மையென்றால் அதனை ஈரான் அனுபவிக்க அமெரிக்கா தடை செய்ய என்ன உரிமை உள்ளது?

அணு ஆயுதங்கள் வைத்திருப்பது ஆபத்து என்றால் அதனை அமெரிக்கா வைத்திருப்பதற்கு என்ன உரிமை உள்ளது?

புல்லைத் தின்றாலும் பரவாயில்லை என பாகிஸ்தான் பயணிக்கிறது. இந்தியாவும் சுகாதார கழிவிடங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாட்டின் தற்காப்பு முக்கியம் என பயணிக்கிறது.இப்பொழுது இலங்கையும் அணுக்குழுவில் நுழைய ஆவல் கொண்டு பாகிஸ்தான் உதவியை நாடுவதாக இந்தியா டுடே நேற்று செய்தி வெளியிட்டிருப்பது அணு ஆயுதப் போட்டியையும்,இலங்கை சார்ந்த இந்திய வெளியுறவு கொள்கையிலும் புதிய பரிணாமத்தை தோற்றுவித்துள்ளது. இதோடு ஈரானின் முயற்சிகளைப் பொறுத்து வளைகுடா நாடுகளின் கள நிலைமைகள் மாறுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.

இந்தியா,பாகிஸ்தானிடம் நூற்று சொச்சத்துக்குள் அணு ஆயுதங்கள் இருந்தாலும் கூட இரு நாடுகளின் போட்டி மனப்பான்மை ஆபத்தானது. வடகொரியா,பாகிஸ்தானின் பொருளாதார வியாபாரத்தால் ஈராக்,லிபியா போன்ற நாடுகளின் முயற்சி தோல்வியடைந்த போதிலும் ஈரான் அணு ஆயுத நாடுகள் குழுவுக்குள் புகுந்து விடும் சாத்தியமிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் விட அமெரிக்காவும்,ரஷ்யாவும் நிரந்தர பூஜ்ய அளவிலான அணு ஆயுத அழிப்பு செய்யும் வரை உலகம் தலைக்கு மேல் கத்தியை சுழல விட்டே பயணிக்கும்.









11 comments:

ஜோதிஜி said...

ஒவ்வொரு வரிகளும் எடுத்து பேச வேண்டிய அளவுக்கு இருக்கு.

இது போன்ற விசயங்கள் அடங்கிய வலைபதிவுகள் அதிகம் வர வேண்டும் என்பது என் ஆசை.

தருமி said...

ஜோதியை வழி மொழிகிறேன்.

வவ்வால் said...

ராஜ்,

மூக்கு இருக்கிற வரை ஜலதோஷம் இருக்கும், பெரியண்ணன் அமெரிக்கா இருக்கிற வரைக்கும் அணு ஆயுதம் /சக்தி இருக்கும் :-))

Adirai Iqbal said...

//கிறுக்குத்தனத்திற்கு ஒசாமா பின் லேடனும் 9/11ம் போதும். பின்லேடன் ஆப்கானிஸ்தானில் கொடிகட்டிப் பறந்த கால கட்டத்தில் பாகிஸ்தானின் அணுகுண்டும் பின்லேடனின் கையில் கிடைத்து 9/11 நிகழ்ந்திருந்தால்?//


இன்னும் இதே பொய்யை எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டே இருக்கப்போகிறீர்கள்
please click here http://www.youtube.com/watch?v=lAQFCZmskjY

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அருமையான பதிவு.தொடரட்டும் பணி.

நன்றி

தனிமரம் said...

இந்த அணுமோகம் தீராது அமெரிக்கா பெரியண்ணாவாக இருக்கும் வரை!

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!நலமா?எட்டி தொட்டு விடும் தூரத்தில் போன் வந்தும் கூட வசதிகள் இன்னும் தூரத்திலேயே நிற்கின்றன.அந்தக்காலத்து கடிதம் மாதிரி பின்னூட்டமே சரணம்:)

இனியும் ஏதாவது தேறினால் உங்கள் ஆசையை நிறைவேற்றி விடலாம் இந்த பின்னூட்டம் மாதிரி தாமதமாக இருந்தாலும்.

ராஜ நடராஜன் said...

தர்க்க சாஸ்திர தருமி ஐயா!அப்ப உண்டியல் குலுக்கிட வேண்டியதுதான்:)

ராஜ நடராஜன் said...

பாஸ்!அணு ஆயுதங்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் சுழற்சியே அமெரிக்காவை சார்ந்து இருப்பதால் அமெரிக்கா அன்பும்,வெறுப்பும் கலந்த உறவுதான்.

ராஜ நடராஜன் said...

அதிரை இக்பால்!ரமலான் வாழ்த்துக்கள்.உங்களுக்கு பதில் சொல்லி Provoke செய்வதா என்று சிறு தயக்கம் இருந்த போதிலும் பின்னூட்டத்தின் சாரம் கருதி பதில் சொல்லி விடுகிறேனே!

நீங்கள் கொடுத்த தொடுப்பு காணொளி கண்டேன்.இதனை விட மைக்கேல் மூர் உங்களுக்கு நல்ல வக்கீலாக வரக்கூடும்.மேலும் Conspiracy theory க்கு இன்னும் நிறைய காணொளிகள் காணக்கிடைக்கின்றன.தேடி கண்டுபிடியுங்கள்.

இந்த பதிவை எழுத தூண்டிய உந்துசக்தி மெகமுத் அகமத்நிஜாத் கேட்ட கேள்வியே.மதம் என்பது தனது சுயதேவை என்ற நோக்கோடு மனம்,கண்கள் அகல விரிய சம நிலையோடு நல்லவை தீயவைகளை உற்று நோக்கி உலகை பார்க்கும் வரை சுயசிந்தனைக்கான சாத்தியெமேயில்லை.

ராஜ நடராஜன் said...

தனிமரம் அண்ணா!எங்கே உங்க கூட்டத்தையே காணோம்?ஒருவேளை எனது குறைந்த நேர பதிவுலக பார்வையில் நான் தவற விட்டு விடுகிறேனோ?

இன்றைய உலகம் நடந்து கடந்து வந்த பாதையில் அணுவும்,ஆயுதங்களும் ஒரு அங்கமாகி போய் விட்டன.ஆளவந்தான் கமல் புகழ் வைரமுத்துவின் வரிகளான கடவுள் பாதி,மிருகம் பாதி மாதிரி மிருகம் முந்திக்கொள்ள முயற்சிப்பது உலகியலின் சோகம்.