Followers

Showing posts with label அரசியல்:அனுபவம்:நிகழ்வுகள். Show all posts
Showing posts with label அரசியல்:அனுபவம்:நிகழ்வுகள். Show all posts

Saturday, December 26, 2015

கலைஞர் தொலைத்த மதராசி!

கலைஞர் மீது குடும்ப அரசியல், ஈழத்தமிழர்கள் இரு பெரும் அரசியல் தவறுகளின் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆட்சித்திறனின் நன்மைகள் தமிழர்களுக்கு பரவலாக போய் சேர்ந்திருக்கிறது. என்னடா தேர்தல சமயத்துல யூ டர்ன் போடுறானே....அவ்வ்வ்ன்னு நினைப்பவர்களுக்கு சட்டியில் இருப்பதுவே அகப்பையில் வருகிறது.

இந்தி சிரிப்பு நடிகர் மெஹ்மூத் முத்துக்குளிக்க வாரீகளா என்ற ஆச்சி மனோரமாவின் பாடலை இந்தியில் அப்படியே பிரயோகித்ததோடு மதராசிகள் இந்தி பேசுவதை நையாண்டி செய்வார். தமிழனுக்கு இந்தியே தெரியாது என்ற அடிப்படையே தெரியாமல் நிலம் பெயர்ந்த சேட்டன்களும், ஏமண்டிகாரும், தாராவி தமிழர்களும் பேசிய இந்திக்கு நக்கலுக்கானவர்கள் மதராசிகள். 

இதற்கான காரணம் மெட்ராஸ் மட்டுமே வடக்கத்தியவர்களுக்கு தெரிந்த ஊர்.திருவனந்தபுரம்,கொச்சின்,ஹைதராபாத்,விசாகபட்டினம்,பெங்களூர்,மங்களூர் போன்றவை ஆப்பிரிக்க இருண்ட கண்டத்தின் பெயர்கள்.

முன்பு வைஜயந்திமாலா, ஹேமமாலினி,ரேகா, ஸ்ரீதேவி ( ஸ்ரீ எப்படி தட்டச்சுவதுன்னு சொல்லுங்களேன்,தலையை குழப்புது) இப்பொழுது தொலைகாட்சி விரிவாக்கத்தால், அமிதாப்பச்சன், சாருக்கான், கமலஹாசன் போன்றவர்களால் ஓரளவு தென்னிந்தியா பற்றி வட இந்திய சராசரி மனிதர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். 

மெரினா கடற்கரையே தெரியாத தமிழ்நாட்டு மாவட்டக்காரர்கள் போல் முன்பு வட இந்தியர்களுக்கு கர்நாடகா,கேரளா,ஆந்திரா,தமிழகம் எல்லைகள் தெரியாது. தென்னிந்தியாவிலிருந்து யார் வடக்கே சென்றாலும் அவர்கள் மதராசிகள்தான் பின் பாலசந்தரின் ஏக் துஜே கே லியே கமலஹாசன் வசனம்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள்தான் மதராசிகளின் புதிய அளவுகோல். 

உத்தர பிரதேஷ்,மத்திய பிரதேஷ்,டெல்லி இந்தியோடு ஒப்பிடும் போது தென்னிந்தியர்களின் இந்தி உச்சரிப்பு அவர்களை எளிதாக காட்டிக்கொடுத்து விடும். மெஹ்மூத் கிண்டல் இந்தி பேசுபவர்கள் யார் என்ற என் அகழ்வாராய்ச்சியில் சிக்கியவர்கள் ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தை சார்ந்தவர்கள். ஹைதராபாத்தை விட கடப்பா பம்பாய்க்கு பஞ்சம் பிழைக்க வறுமையான மாவட்டம் என்பதோடு எளிதான ரயில் பயணமும் கூட.

சிவசேனாவுக்கு எப்பொழுதும் ஒரு எதிரி வேண்டும். முன்பு மதராசிகள். இப்பொழுது பீகாரிகள்.

கலைஞர் மெட்ராஸை சென்னை என்று மாற்றிய பெயரோடு மதராசிகள் காணாமல் போய் விட்டார்கள். 
கிரிக்கெட் அரசியலை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகி விட்டது.
சாருக்கான் லுங்கி டான்ஸ் குத்தாட்டம் போட வைக்கிறது.

உடன் பிறப்பே!
எதிரிகள் அணியிலிருந்து கழக பாசறைக்கு
வந்த நீ முகநூலுக்கு முரசு கொட்டு
ட்விட்டரின் கதவை டொக் என்று தட்டு

என கலைஞரின் கவிதைக்கு காத்திருக்கிறேன்!



Wednesday, December 23, 2015

மூப்பனார்,ரஜனி & சகாயம்?

நானறிந்த வரை சூழல்கள் ஒருவருக்கு சிம்மாசனத்தை தூக்கி கொண்டு சுற்றும். தனி மனித சிந்தனை, உள் அரசியல் போன்றவை எதிர்பார்ப்புக்களை நீர்க்க செய்து விடும். அந்த வரிசையில் மூப்பனார்,ரஜனி போன்றவர்களிடம் தலைக் கீரிடம் கோபித்துக்கொண்டு ஓடி விட்டது. 

இப்போதைய தமிழக அரசியல் சூழலில் வை.கோவும்,விஜயகாந்தும் தங்கள் ஈகோக்களை விட்டு ஓரணியில் மூன்றாம் அணிக்கு சந்தர்ப்பம் அமையுமா என்பதை  பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2010ல் எதிர்பார்த்த சீமான் உரத்த குரல் தவிர எப்படி பெரியாரியல் அரசியல் களமாடுவது என்ற அடிப்படை மறந்து பச்சைத் துண்டு,முருகன் வேல் சின்னம் என 2016ல் தான் தான் முதலமைச்சர் கனவு தமிழக வெள்ளத்துக்கும் முன்பே எங்கோ போய் முட்டிக்கொண்டு விட்டது.

இரண்டு கழக ஆட்சிகளும் தமிழகத்திற்கு தங்கள் கடமையை செய்து விட்டார்கள். ஒன்று ஜனநாயகத்திற்கு எதிரான வாரிசு அரசியலை உருவாக்குகிறது. இன்னொன்று ஒற்றை ஆட்சி முறையென்பதால் தமிழ் நாட்டின் எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை. தமிழகத்தில் ஜனநாயக பரவல் தேவையென்றால் வலுவான தலைமையோடு மாற்று அரசியல் தேவைப்படுகிறது. மக்கள் விரும்பினால் 2016லேயே அந்த மாற்று அரசியலை கொண்டு வந்து விட முடியும். ஓடுவதே ஓடட்டுமென்றாலும் தமிழகத்தின் எதிர்காலம் வெறுமையாகவே இருக்கிறது.

வழியில் போகும் ஓணானை பழமொழி மாதிரி விகடன் வழியில் போவோரை வழி மறித்து அடுத்த முதல்வராக யாரை விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தது.
ஒரு பையன் 41C
ஒரு பெண்மணி மைக்கிலிருந்து 100 அடி தள்ளி போய் நின்று கொண்டார்
ஒருவர் நல்லாட்சி தரும் யாராக இருந்தாலும் என்ற மதில் மேல் பூனை
காக்கி உடையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் நாங்க கவர்ன்மெண்டு ஆட்கள் கருத்து சொல்லக் கூடாது
நாமம் போட்ட ஒருவர் மழைக்கு யாருமே வரவில்லையென்ற புலம்பல்.
ஒருவர் ஜெயலலிதா
இன்னொருவர் கலைஞர்
புதுசா யாராவது வரனுங்க
ஆளை விடுங்க சாமி என ஒதுங்கியவர்கள் அதிகம்

படித்தும் கட்சி சுவற்றில் ஒட்டிய பல்லிகள் நிறைய இருக்கிறார்கள். இவர்களை தவிர இலவசம் தவிர எங்களுக்கு அரசியல் தெரியாது என்பவர்களும்,என்னதான் சொல்லுங்க என் ஓட்டு இவருக்குத்தான் என்ற அசையா நெஞ்சர்கள் நிறைய இருக்கிறார்கள். 

அரசியல் ஈகோ,உள்குத்து வேலைகளை பின் தள்ளி Administration Oriented Ministers and Chief Minister என்ற நோக்கில் சகாயம் போன்றவர்களை முன் நிறுத்துவது மாற்று அரசியலுக்கான வழியை திறக்கும் என்ற போதிலும் இது போன்ற சிந்தனைகள் கொண்டவர்கள் படித்த வர்க்கத்து மைனாரிட்டியாக இருக்கலாம். மேலும் ஊழல்கள் அரசு துறை ஆவணங்களில் கருத்தரிக்கின்றன என்பதால் ஊழலை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பங்களும் அமையலாம் அல்லது அதிக கரு முட்டைகளையும் இடலாம்.

இதையெல்லாம் தாண்டி சகாயம் அரசியலுக்கு வருவாரா என்பதே மில்லியனோடு ஒற்றை ரூபாய் சேர்த்த கேள்வி.

வந்தால்? தமிழகத்தின் புது அரசியல் முயற்சி.

பதிவை முடிவு செய்யும் தருணத்தில்  மக்கள் நலக்கூட்டணி விஜய்காந்துக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள். ஆட்டம் எப்படி போகுது பார்க்கலாம்.

Saturday, December 19, 2015

அர்னாப் கோஸ்வாமியை புரிந்து கொள்ள

சென்னை,டெல்லி,கல்கத்தா,மும்பாய் நான்கு நகரங்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால் சென்னை திரை உலகம் சார்ந்து வருபவர்களையும் அல்லது சேட்டுகள் போன்ற வியாபாரிகளையும் உயரத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்.
புது டெல்லி அரசாங்க வேலைகள்,பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்ந்து செய்தி வெளியிட சிறந்த இடம்.கல்கத்தா ட்ராம் வண்டி போலவே மெதுவாக நகரும் நகரம்.அரசியல் போராட்டங்கள்,காளி கோயில் பிரார்த்தனை,ஹுப்ளி பாலம்,அதனை கீழே பாயும் நதியும், கரையும் தத்துவ மனநிலைக்கும், ஜோதிபாசுவின் தொடர் ஆட்சி கம்யூனிஸ சிந்தனைக்கு சிறந்த இடம்.

இதில் மும்பாய் எப்படி வித்தியாசப்படுகிறதென்றால் திறமை,உழைப்பு இருந்தால் பாலிவுட்டிலும் சேரலாம். சாதாரண மனிதனின் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்கிற  நம்பிக்கையை ஊட்டும் நகரம். இது தவிர இந்தியாவின் வர்த்தக மையம் அப்பொழுதும் இப்பொழுதும். மும்பாயின் குண்டு வெடிப்பு துயரங்களையெல்லாம் தூசி தட்டி விட்டு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் நகரமும் மக்களும்.

சர்ச்கேட்,ஸ்டாக் எக்சேஞ் பக்கம் விற்கும் பழைய புத்தகங்கள் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா,மிட் டே,ஸ்கிரின் தவிர,மராட்டி பத்திரிகைகள் போக சொல்லிக் கொள்ளும் படியான பத்திரிகைகள் இருந்ததில்லை. தொலைக்காட்சி ஊடகங்கள் மெதுவாக ஆக்கிரமித்த போது விளம்பர நிறுவனங்கள் கொடி கட்டிப் பறந்தன.

தமிழகத்தின் சன் தொலைக்காட்சிக்கு நிகராக ஜி தொலைக்காட்சி இருந்தது எனலாம்.அமெரிக்கா எங்கே சண்டை மூட்டி விடுகிறது எனப் பார்ப்பதற்கு சி.என்.என் வுல்ஃப் பிளிட்ஸர். தசாவதாரம் பிளிட்ஸர் வைரல் தேடுவது மாதிரியே வுல்ஃப் சதாம் ஹுசேன் வைரல்களை தேடி தகவல் சொல்பவர். பி.பி.சியின் ஹார்ட் டாக் டிம் செபாஸ்டின் தான் பிரணாப் ராய்,கரன் தபார்,பர்கா தத் போன்ற டெல்லி சார் ஊடகங்கள்,மற்றும் தமிழகத்தில் இப்பொழுது களமாடும் ஞான சேகரன்,ரங்கராஜ் பாண்டே போன்றவர்களுக்கு முன்னோடி.

இதில் முக்கியமான ஒருவர் விடுபட்டு போனார்.அவர்தான் அதிரடி மன்னன் அர்னாப் கோஸ்வாமி. பொதுவாக சத்தம் போடுகிறார்,மற்றவர்களை பேச விடுவதில்லை,டைம்ஸ் நவ் தாதா என்ற பலரின் விமர்சனங்களுக்கு அவருடைய நிகழ்ச்சியும் அதனை நிகழ்த்தும் விதமும் காரணம்.

 டெல்லி ஊடகங்கள் செயல்படும் விதம் போரடித்த காரணத்தினால் மும்பாய் வந்ததாகவும் டீ பார்டி,கண்காட்சிகள்,கட்சி சார்ந்து கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தம் போன்றவை டெல்லி ஊடகத்துறையாளர்களை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.பர்கா தத்,ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்களின் 2G பக்க சார்பை உதாரணமாக கூறலாம். 

ஒரு நாள் மும்பாயின் மெரின் டிரைவில் நடக்கும் போது எதிர்ப்பட்டவர்களின் முகங்கள் தனக்கு டெல்லியின் அவநம்பிக்கையை போக்கியதாக கூறுகிறார் அர்னாப்.உலக ஊடகங்களான சி.என். என்,பி.பி.சி போன்றவை மும்பாயிலிருந்து இயங்குவதற்கான வாய்ப்புக்களாக மும்பாய்,பெங்களூர் போன்ற நகரங்களின் தொழில் நுட்பம் பயன் படுமென்றார். சி.என்.என் டைம்ஸ் நவ் செயல்பாட்டை கவனித்துக்கொண்டிருக்கிறது.

மும்பையின் லோயர் பரேலில்  டெல்லி மாதிரி தனக்கு சனிக்கிழமை விருந்து அழைப்புக்கள் இல்லாத சூழலில் எந்த கட்சி சார்ந்தும் கருத்து சொல்லாத சூழல் மும்பாயில் இருப்பதாக சொல்கிறார். காமன் வெல்த் ஊழலை பிரிட்டிஷ் மகாராணியின் ஒரு சின்ன கடிதம் மூலம் மோப்பம் பிடித்து லண்டன் வரை சென்று செய்தியாக கசிய விட கல்மாடி ஓவராக சீன் போட்டதில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வெளிக்கொண்டு வந்ததாக கூறுகிறார். தன்னுடன் பணியாற்றுபவர்கள் துடிப்புள்ள 30 வயதுக்கும் கீழான இளைஞர்கள் என்கிறார். அருகிலேயே ஜெர்மன் போன்ற ஏனைய நாடுகள் தங்கள் நெட்வொர்க்குடன் செயல்படுவதால் மும்பாய் உலக மீடியா செயல்படுவதற்கான சிறந்த இடம் என்கிறார்.

அர்னாப் கோஸ்வாமியை அவரது நிகழ்ச்சிகளுக்கும் அப்பால் சரியாக புரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய யூட்யூப் காணொளிகள்.



அன்னா ஹசாரே, அர்விந்த கெஜ்ரிவால் கூட்டணி கொஞ்சம் நம்பிக்கை தந்து திசை மாறி விட்டது.

முன்பு நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவும்,ராகுலும் பந்தா காண்பித்து விட்டு இன்று பெயிலுக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

இன்றைக்கு அர்னாப் கோஸ்வாமி காட்டில் கொய்யாப்பழம்தான்.காங்கிரஸை கடிச்சு தின்னப் போறார்.





 

Saturday, December 12, 2015

பாரதி நினைவாக

இரண்டாயிரத்து ஒன்பதாம் வருட சம கால வரலாறே மறக்கும் புத்தி கலவையின் மொத்த கூறுகளில் கொஞ்சம் மண்டையை கசக்கினால் பெரியார்,காமராஜர்,தமிழகத்தில் பங்காளி சண்டை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்,கொடியில் மட்டும் உட்கார்ந்து கொண்ட அண்ணா தாண்டி நாம் பயணிப்பதில்லை.

அதையும் தாண்டி ஆகஸ்ட் 15ம் தேதி கொடியேற்றி ஜெய் ஹிந்த் சொல்லி மிட்டாய் சாப்பிடுவதுடன் இந்திய வரலாறும் முடிந்து விடுகிறது.ஆனால் குறை சொல்ல வேண்டுமானல் காந்தியின் கயமை என்போரும்,மறுக்கப்பட்ட உரிமையென அம்பேத்காரும் என பேச படுகிறார்கள்.அனார்கிஸ்டுகளாக பார்க்கப் பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்,கடவுள் மறுப்பாளன் பகத்சிங் போன்றவர்கள் காந்தியின் அகிம்சை,பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமாதானம் போன்ற உடன்படிக்கையின் முன் பின் தள்ளப்பட்டு விட்டார்கள்.இந்தியாவின் சகிப்புத்தன்மையின் பிரதிபலிப்பு மட்டுமே இவை.

ஆனால் மொத்த சகிப்புத்தன்மையை தாங்கிய மண் இந்தியா என்பதை அலெக்ஸாண்டர்,மங்கோலியர்.முகலாயர்,போர்த்துகீசியர்,டச்சு,பிரெஞ்சு,ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பினை கவனித்தால் சகிப்புத்தன்மையும்,அடிமைத்தன்மையும் அண்ணன் தம்பிகள் மாதிரி.இந்தியாவின் சகிப்புத்தன்மைதான் இந்திய கூட்டமைப்பை இன்னும் தக்க வைத்த் கொண்டிருக்கிறது என்ற போதிலும் ஆமை வேக வளர்ச்சிக்கும்,ஊழல் நிறைந்த ஜனநாயக ஆட்சி முறைக்கும் இதுவே காரணம்.இதன் காரணம் கொண்டே இங்கொன்றும் அங்கொன்றுமாக புரட்சியென நக்சல் இயக்கமும்,ஜனநாயகத்துக்கு மாற்றான சிந்தனைகளும் உருவாகின்றன. ஆனாலும் இந்திய சூழலில் அவை சாத்தியமற்றவை.

உலகில் பல ஆட்சி முறையை பல நாடுகளும் பரிட்சை செய்து ஜனநாயகத்தில் மையம் கொண்டிருக்கின்றன.அதன் காரணமாகவே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பாரதியும் விமர்சிக்கப்படுகிறார். வ.உ.சியும் பிழைக்கத் தெரியாதவர் என ஆங்கிலேயர் காலத்து வரலாறு திரிபு படுகிறது.சம காலத்து சினிமா பாடல்கள் பக்கம் வந்தால் மட்டுமே பாரதியை பாமரனும் புரிந்து கொள்ள முடியும்.ஏழுக்கட்டை இப்பொழுது நாட்டுக்கட்டையாகி விட்ட போதிலும் ஆதி,தாளம்,பல்லவி மீதி சங்கீத கட்டமைப்புக்களை பாரதியின் பாடல்கள் கட்டுடைக்கின்றது.

கண்ணதாசனின் பாடல் வரிகள் தமிழ் இசையின் நிரந்தரமாகி விட்டது போல் இயற்கை,சுதந்திரம்,தாலாட்டு,பாஞ்சாலி சபதம் என பாரதியும் தமிழின் கொடை. பாடல் கூட ஆட்சி இயந்திரத்துக்கு கோபம் கொண்டு வரும் என்பதற்கு கோவனின் பாடல் சான்று.ஆங்கிலேயருக்கும் பாரதியின் பாடல்கள் கோபத்தை கொண்டு வந்தது. ஜெயலலிதாவுக்கோ அல்லது ஆங்கிலேயருக்கோ பாடல் வரிகள் தெரிவதேயில்லை. தெரியப்படுத்துவதெல்லாம் இப்போதைய ஆட்சி உளவுத்துறையும், கரைவேஷ்டிகளும்தான் மாதிரி அப்பொழுதும் ஆட்சி உளவுத்துறையும்,பட்டா மிட்டா மிராசுகளும்,ஆட்சிக்கு உதவும் தமிழ் அல்லக்கைகளும்தான். 

சுதந்திர குண்டு வைத்த மண்டேலாவுக்கு நோபல் பரிசு. பாடலும்,பத்திரிகையில் புரட்சி கருத்தும் சொன்ன பாரதிக்கு தேச துரோகி பட்டம். ஜாதிகள் இல்லையடி பாப்பா பாடலுக்கு அப்புறம் ஏன் சார் பள்ளியில் ஜாதி எழுதுகிறீர்கள் என கேட்க இன்னும் ஒரு பாப்பாவும் கற்பிக்கப் படவில்லை .ஜாதி கேட்டால் குழந்தையை பள்ளியில் சேர்க்க மாட்டேன் என்ற கமலஹாசனுக்கு விழும் கும்மாங்குத்து மின்சார தடையில் கூட சத்தமாகவே ஒலிக்கிறது.பள்ளீயில் ஜாதி நீக்கமின்றி  ஜாதி கூக்குரல்கள் வெற்றுக் கூச்சல்.ஸ்டிக்கர் கலாச்சாரம் கால கட்டத்திலும் வீழ்வேனென்று நினைத்தாயோ பலருக்கும் உத்வேகத்தை தருவது மட்டுமே ஆறுதல் பரிசு.

புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த போதும் பாரதி பேசிய அரசியல் ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு ஒன்றுதான். இடி மடி மீது வந்து வீழ்ந்த போதும் கழகங்கள் என்ற செக்கு மாட்டு கரை தாண்டி புது சிந்தனை எதுவுமின்றியே இணையமும்,தமிழ்மணமும்,முகநூலும்,செய்திதாளும்,தொலைக்காட்சிகளும் தமது கருத்தையும்,சிந்தனையையும் தெளளி இறைக்கின்றன. இதில் பாரதி இப்படியாக்கும், அப்படியாக்கும் என்ற சேட்டையும் வேற சமாளிக்க வேண்டியிருக்குது. வேற.வ.ராமசாமி அனுபவமெல்லாம் ஓசியில்தானே ஒட்ட வைத்திருக்கிறார்கள்.படிச்சுத்தான் பார்க்கறது போலிச் சாமியார்கள் மாதிரி ஆன்மீக உலா வராமல் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் உலா வருவதுதானே!

பாரதியே! ஒரு முறை நினை நினைந்து

சொல்லவும் கூடுவதில்லை அவை
சொல்லும் திறன் தமிழ்மொழி எனக்கில்லை
மெல்ல தமிழினிச் சாகும்
என்றந்த பேதை உரைத்தான்
எட்டுத் திக்கும் சென்றடைந்தோம் கலைச்
சொல்லிங்கு கொண்டு சேர்த்தோம்

இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன் ஆருயிர் மக்காள்
கொன்றிடல் போன்றொரு வார்த்தை - இங்கு
கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி-என
மேவிய யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ் நாடு

இனி காவிரிக்கு கெஞ்சி
பெண்ணையும் காணோம் பாலாறும் காணோம்
வைகைக்கு குரல் கொடுத்து பொருள் நிதி தேடி
கூவம்,பக்கிங்காம் காலவாய் என கூனி குறுகி போனோம்

மழையே என் செய்தாய் எம்மை!