பூகோளமும்,வரலாறும் சரியாக கற்றுக்கொடுக்கப்படாமையும், சோசலிச காலத்து அரசியல் இழுபறிகளும் இன்றைய மீனவர் துயரங்களுக்கான காரணங்களுக்கான காரணிகளில் ஒன்று என்பேன்.நம் குழந்தைகள் ஐ.க்யூவில் சிறந்தவர்கள்.வரலாற்றுத்தளங்ள்,பயணங்கள் என்று கொண்டு சென்று இனி மேலாவது வரலாறும்,பூகோளமும் கற்க வைப்போம்.அதுவே பாடங்கள் புரிதலுக்கும்,எதிர்காலத்தில் மனித நல் உணர்வுகளை வளர்க்கவும் பயன்படும்.
முந்தைய காலகட்டங்களில் கச்சத்தீவு பற்றிய தொலைநோக்குப்பார்வை இல்லாமல் இலங்கைக்கு தாரை வார்த்துக்கொடுத்தது இந்தியாவின் பலவீனத்தையே காட்டுகிறது.வெறுமனே கருத்துக்கள் சொல்லாமல் கூகிள் பூமியண்ணனிடம் என்னைக்கூட்டிச்செல் என்று கட்டளையிட்டால் நீலக்கலரில் ஏதோ ஒரு திட்டு மாதிரி இடத்துக்கு கொண்டு சென்று விட்டு விட்டது.இதென்ன பேரும் இல்லாமல் ஊருமில்லாமல் என்று வரைபடம் தேடினால் இதுதானப்பா நீ தேடுற விலாசம் என்று இவர் துணைக்கு வந்தார்.இதனை விட கூகிள் பூமியண்ணன் சொன்ன ஒரு ருசிகர தகவல் என்னவென்றால் இந்தியாவிலிருந்து ஏழுகடல் தூரமிருக்கும் தாய்லாந்தில் பாங்காக் பக்கத்திலிருக்கும் அந்தமான் தீவு இந்தியாவுக்கு சொந்தமானதாம்.படகை ஓட்டி நடுக்கடலில் மீன்பிடிக்கும் தூரத்திலிருக்கும் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமில்லையாம்.கச்சத்தீவின் கூகிள் படம் பார்த்தால் அடப்போங்கப்பா நான் நடுநிலைவாதிங்கிற மாதிரி இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் மத்தியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளது.(வெள்ளைச் சதுரம்)
இலங்கை இந்திய அரசியல் காரணங்கள் மூக்கை நுழைக்காவிட்டால் தமிழக மீனவனும்,தமிழீழ மீனவனும் சிங்கள மீனவனும் ஓய்வு எடுத்துக்கொள்ளவும்,வலைகள் காயப்போடவும் மீண்டும் தமது நாட்டுக்கரைகளை நோக்கி பயணிக்கவும் சிறந்த இடமாகவே இருக்கிறது.ஆனால் நிகழும் துப்பாக்கி சூடுகள்,மீனவர் படுகொலைகள் என்பன இலங்கை இந்தியாவின் தென்னக இறையாண்மைக்கு குழி வெட்டுகிறதோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.பூகோள அமைப்பை நன்றாக ஊன்றிக்கவனித்தால் இலங்கை தன் சுயபாதுகாப்புக்கான அத்தனை நில அமைப்பு,கடல் அமைப்பைக்கொண்டிருக்கும் பட்சத்தில் தேவையற்ற துப்பாக்கி சூடுகள்,மீனவர் துயரங்கள் போன்றவை இலங்கை அரசின் இன்னொரு முகத்தை இந்தியாவுக்கு அடையாளம் காட்டுகிறது என்றே தெரிகிறது.கூடவே இலங்கையின் பெயரால் கண்ணுக்கு இதுவரைப் புலப்படாத பின்புலங்களும் மறைந்து நிற்கின்றனவா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.
பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் அமைத்து,ஆப்கானிஸ்தானின் கந்தகார் நிகழ்வுகளில் அடிப்பட்ட சீனாக்காரன் இப்பொழுது கொள்ளைப்புற வழியாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையிலும் பங்கு போட்டுகொண்டுள்ளான் என்கிற செய்திகள் கசிகின்றன.எங்கள் தேசப்பிதாக்கள் நாற்காலி கனவுகளிலேயே மிதக்கிறார்கள்.இணைய தகவல்கள் நிருபமா ராவின் நகர்வுகளை மட்டுமல்ல,இலங்கைப்பயணத்தின் பேச்சுவார்த்தைகள்,அதன் விளைவுகள் எதிர்காலத்தில் மாற்றங்களை உருவாக்குமா என்ற கேள்விகளை முன்வைப்பதோடு பயணம் தமிழக தேர்தலுக்கான முகப்பூச்சா என்பதையும் எதிர்காலம் காட்டிக்கொடுத்து விடும்.

