Followers

Showing posts with label கல்லூரி:கலாட்டா:சட்டம்:ஒழுங்கு. Show all posts
Showing posts with label கல்லூரி:கலாட்டா:சட்டம்:ஒழுங்கு. Show all posts

Thursday, March 3, 2011

கல்லூரிக்காலங்கள் ஹார்மோன் சுரப்பியின் பொற்காலங்கள்.

கல்லூரிக் காலங்களில் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்கள் எந்தக் கல்லூரியில் சேர்கிறார்கள் என்பதை விட பொதுவாக கல்லூரிக் காலங்கள் படிப்புடன் கூடிய கலாட்டாக் காலங்கள் என்பதே சரியான பார்வையாய் இருக்கும்.

பச்சையப்பன் கல்லூரியின் கீழ்ப்பாக்க வளாகம்,சட்டக்கல்லூரியின் பாரிஸ் கார்னர் போன்ற நகரின் முக்கிய இட அமைப்புக்களே இவ்விரு கல்லூரிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறதென்பேன்.ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் தரமணி கலாட்டாக்கள் வெளியே வருவதில்லை.ராகிங் என்றால் மருத்துவக்கல்லூரிதான் என்ற பெயரெல்லாம் மக்கள் மனதில் பதிந்ததில்லை.கஞ்சாவும்,போதை மருந்துகளும் சரளமாகப் புழங்கிய இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற கல்லூரி வளாகத்துக்குள் சம்மணம் போட்டு வெறும் பார்வையாளனாக இருந்த அனுபவம் எனக்குண்டு.இவைகள் அனைத்தும் கல்லூரி வளாகம் என்ற சுற்றுக்குள் விளைவதால் சமூகம் இதற்கெல்லாம் பொறுப்பேற்பதில்லை.ரயில் தொழிலாளர்களுடன்,பேருந்து இயக்குபவர்களுடன் தகராறு என்பதும் பேருந்து தினம் பொது மக்களுக்கு இடையூறு என்ற காரணம் கொண்டே மாணவர்கள் விவாதப்பொருளாகிறார்கள்.

விவேகானந்தா கல்லூரி மாணவர்களும் கூட பேருந்து நாளை அதே கோலாகலத்துடன் கொண்டாடியதாக அறிந்தேன்.கலாட்டா செய்தாலும் சமத்து பசங்க பெயர் சிலருக்கு இயல்பாய் வந்து விடுவதும், உரிமைக்கும், மொழிக்கும் கூடவே கொஞ்சம் கலவரங்களுக்கும் இடம் கொடுப்பதால் இரு கல்லூரிகள் ஓரம் கட்டப்படுவது வேதனைக்குரியது.இதனையும் கடந்து இந்தக்கல்லூரிகள் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு அளித்திருக்கிறது.

என்னமோ ஏனைய கல்லூரி மாணவர்கள் மட்டும் வாழ்க்கை கடலில் நீந்தி கடந்து விடுவது போலவும்,இவ்விரு கல்லூரி மாணவர்களும் சமுதாய ரவுடிகளாகிப்போவதும் மாதிரியான பிம்பங்கள் சரியென படவில்லை.முதலில் ரவுடியிசம் என்பது குவாரி,மணல்,துறைமுகம் இன்னும் பல தொழில் சார்ந்த கட்டிங்க்,வசூல் எதிர்க்குழு வெட்டு குத்து என்பவற்றோடு அரசியல்வாதியின் பெரும் கடலில் தஞ்சம் என்பதில் சங்கமமாகிறது என்பதோடு ரவுடியிசத்தின் மொத்த குத்தகைக்காரர்கள் அரசியல்வாதிகளே என்ற புரிதல் வேண்டும்.இந்த அரசியல் இலக்கணத்துக்குள் பெரும்பான்மையான ரவுடியிசம் வந்து விடும்.

விமர்சனங்களில் மாட்டிக்கொண்டும் பதிவர்கள் சொல்லும் அவரவர் சார்ந்த கருத்துக்கள் மன உணர்வின் வெளிப்பாடு என்ற நோக்கில் சரியென்றால் கல்லூரி கலாட்டக்களும் அவர்களது வயது சார்ந்த,இளமை, குழு சார்ந்த நோக்கில் சரியானதுதான்.இதற்கு எதிர்வினை செய்ய யாராவது துடித்தால் வின் தொலைக்காட்சியில் எஸ்.வி.சேகர் இது குறித்து கருத்து சொன்ன டி.சியக்கொடுத்து அனுப்பினாலும் தப்பில்லங்கிற கருத்து மாதிரி சுய அளவீடுகளோடு விமர்சனம் செய்பவர்கள் என்பேன்.சேர்ந்து வாழும் மனோபாவத்துக்கு நல்ல உதாரணங்கள் பள்ளி வாழ்க்கையும்,கல்லூரி வாழ்க்கையும் என்பேன்.இது தொழில்,அலுவலகம் என்று மேல் நோக்கி நகரும் போதும் வாழ்க்கையில் ஒரு வேளை பிரதிபலிக்கலாம் அல்லது வாழ்க்கை தரும் பாடங்களில் மாறியும் போகலாம்.எதுவும் உத்தரவாதமானதல்ல. 

குறும்புகள் என்பவை ஒரு சில நண்பர்களோடு சேர்ந்து வரும் உடல் தசைகளின் குஸ்தி.கலாட்டாக்கள் என்பது குழு என்ற கூட்ட உணர்வின் வெளிப்பாடு.கல்லூரிப்பசங்கன்னா குறும்பு,எதிர்பால் ஈர்ப்பு,கேளிக்கைன்னு இருந்தாலும் பரிட்சைக்கு 10 நாட்கள் முன்பாவது பாடப்புத்தகத்தை படிக்கும் பொறுப்பு வந்து விடும்.சோடாப்புட்டி கண்களோடு முதல் வகுப்பு மாணவர்கள் விதிவிலக்குகள் என்பதால் இது பொதுவான மாணவனுக்கான பார்வையாக நோக்குவது நல்லது.

நடு நிசி நாய்களை விமர்சிக்கும் இக்கால பதிவர்களை விட நடுநிசி சாயா குடித்தாவது தேர்வின் வெற்றியை தேடும் பொறுப்பானவர்கள்தான் மாணவர்கள்.பதிவுலக கொட்டங்கள்,சண்டைகளை விட மாணவர் கலாட்டக்கள் அந்த அந்த காலகட்டத்தோடு மறைந்து விடும் ஒன்றுதான்.அதோடு வாழ்க்கையின் போராட்டங்களோடு சங்கமிப்பதில் மாணவன் என்பவனே அடையாளம் தெரியாமல் போய் விடுகிறான்.இவனை பிற்காலத்தில் எங்கே தேடி கண்டுபிடிப்பீர்கள்?


ஆமா! இந்த பேருந்து தினம் எப்ப எப்படி முளைச்சது?எப்படியோ முளைச்சிடுச்சு அதனை சீராக எப்படி வளர்ப்பதென்பதில் இனி  கவனம் செலுத்தலாம்.ஜல்லிக்கட்டுல கூடத்தான் மாட்டுக்கு சாராயம்,மொளகாய்ப் பொடி தில்லுமுல்லுக நடக்கிறதா கேள்விப்படுகிறேன்.அதற்காக ஜல்லிக்கட்டே வேண்டாமென்றா நீதித்துறை தீர்ப்பு சொல்கிறது.கல்லூரி பேருந்து தினமும் ஒழுங்கு படுத்த வேண்டிய ஒன்றே.பயணத்திற்கே மூச்சுத்திணறும் பொதுமக்களின் 2 ட்ராக் பயண பாதையில் மாணவர்கள் குறுக்கீடே முதல் அத்துமீறல் என்பேன். 

கல்லூரிக்காலங்களில் பெண்கள் எவ்வளவு பொறுப்பாக வீடு,கல்லூரி,டிபன் கேரியர்,கர்சீப்,படிப்பு,சிலருக்கு மெல்லிய காதல்ன்னு ஸ்மார்ட்டா இருக்காங்க.ஆனால் அடிப்படியும்,குடும்ப அரவணைப்புமென்று இவர்கள் வட்டம் குறுகிப்போகிறது.கலாட்டாகள்,தேடல் என்பவற்றோடு மாணவன் சமூக டாமினேசியாகிறான்.A paradox of Iife.

டிஸ்கி: கண்ணுகளா!பதிவில் சொன்னமாதிரி பச்சையப்பன் கல்லூரி கீழ்ப்பாக்கத்தில் என்பதும்,சட்டக்கல்லூரி பாரிஸ் கார்னரில் என்பதும் தவிர அதன் சுவர்களின் முழு திசைகள் கூட நான் அறியேன்.கூடவே முன்பு கல்லூரிப்போராட்டங்களை கண்டு எரிச்சல் பட்டுக்கொண்டு ஒரு கல்லையும் கூட எறியாத அகிம்சைவாதி நான்:)