முன்பு ஜார்ஜ் புஷ்,டோனி பிளேர் போன்றவர்கள் வெள்ளை மாளிகையில் புல்வெளியில் உலாவும் போது காலாற நடக்கிறார்கள் என்றே நினைத்திருந்தேன்.வெள்ளை மாளிகையின் சுவர்களுக்கும் கூட பேசும் திறன் இருக்கலாமென கருதி சில ரகசிய பேச்சுக்களை புல்வெளியில் நடந்து கொண்டே பேசுவது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்று கருதியும் கூட ஒருவேளை நடைப்பயிற்சி செய்து இருக்கலாம்.உலகளாவிய அளவில் சிறந்த ஒட்டுக்கேட்கும் கதாநாயகன் ஜேம்ஜ்பாண்ட் 007.அசலா CIA, KGB, Scotlandyard மற்றும் Interpol போன்ற நிறுவனங்கள் எனலாம்.இவைகளெல்லாம் மடியிலே கனமிருப்பவர்களுக்கு மட்டுமே.அரசியல் ரீதியாக எங்கே எப்படியெல்லாம் ஒட்டுக் கேட்கப்பட்டதோ ஆனால் வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றியது வாட்டர்கேட் ஊழல் என்ற நிக்சன் காலத்து ஒட்டு.
மக்களாட்சியை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒட்டுக்கேட்டல் என்ற அரசியல் மீறல்களும் கூட வெளிச்சத்துக்கு வந்து விடுவதுதான்.மக்களாட்சி தத்துவத்தில் ஒட்டுக்கு வழிகாட்டிய அமெரிக்காவுடன் நாமும் போட்டி போடாவிட்டால் எப்படி என இந்தியாவும் இப்போது தனது ஒட்டு பங்களிப்பை செய்கிறது.
ஒட்டுக்கேட்டல் இந்திய பாராளுமன்றத்திலேயே ஒலிக்கும் போது ஆளுநர் பதவியில் ஆற அமர்ந்து இருப்பதன் காரணம் கொண்டோ மிட்டாய்க்கடை,பணியாளர்கள் குரல்கள் மட்டுமே கிட்டும் பழக்கதோசத்தின் துக்கத்திலோ ஒட்டுக்கேட்டலின் மகிமையை ஒருவர் டமாரம் கொட்டுகிறார்.
இப்போதைய காலத்து அரசியலில் கல்லறை வரை ரகசியத்திருடர்கள் என இருவரைக் குறிப்பிடலாம்.ஒன்று முந்தைய பிரதமர் நரசிம்ம ராவ். அடுத்து எம்.கே.நாராயண். ஒரு பீரோகிராட்டிக்காக நரசிம்ம ராவை விட ரகசியங்களை எம்.கே நாராயண் தன்னகத்தே வைத்திருக்க கூடும்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,நேபாளம்,பங்ளாதேஷ், சீனா, அமெரிக்கா என இவரது பங்களிப்பை சரித்திரம் எழுதி வைக்க மறந்து போனாலும் ஈழத்தமிழர்களின் ரத்தக்கறையின் பங்காளிகளில் ஒருவர் என்பதை தமிழக வரலாறு நிச்சயம் எழுதி வைக்கும்.
இனி திருவிளையாடல் ஸ்டைலில்
வாசிப்பின் சுகத்துக்கு
மால்குடி நினைவுகள் ஆர்,கே.நாராயண்
ஒட்டு கேட்கும் சுகத்துக்கு
எம்.கே.நாராயண்
ஒட்டு கேட்பது சுகம் என்ற அவரது திருவாய் மலர்ந்தது இங்கே
இனி அரசியலுக்கும் அப்பால் கொஞ்சம் ஒட்டும்,ஒட்டு சார்ந்த இடங்களையும் காணலாம்.
ஹலோ யார் பேசறது வடிவேலுவுக்கும் முன்பான க்ராஸ்டாக் பேச்சுக்களின் ஒட்டுக்கேட்டல் எல்லோருக்கும் இலவசம்.ஆனா லாட்டரி மாதிரி யார் யாருக்கு என்ன டயலாக் மாட்டுமென்பது கண்ணதாசன் பாடலின் இறைவன் கொடுத்த வரம்.இருந்தும் மொபல்களுக்கும் முன் யூத்களுக்கு ஒட்டுக்கேட்பதில் எல்லாம் விருப்பமிருப்பதில்லை.மாறாக ஒட்டுக்கேட்கும் நிறுவனத்தின் வருமானத்தில் கைவைக்கும் படியாக ஒற்றை ரூபாய் நாணயத்தில் நூலைக்கட்டி நண்பனுக்கோ காதலிக்கோ கடலை போட்டு விட்டு காசை திருப்பி எடுத்துக் கொள்வதுடன் சரி.ஒரு முறை கல்லூரி சேர்மன் பிரின்சிய திட்டனுமென்று டெலபோன் முகத்துக்கு கர்சீப் போட்டு கரகர என்று கத்தினான்.அந்தப்புறம் அவர் கத்த இங்கே இவன் கத்த பக்கத்திலிருந்த அல்லக்கைகளான எங்களுக்கு ஒரே ஒட்டு கேட்ட சிரிப்பு.
கிணற்று மேடு,குழாயடி,அலுவலக கேன்டீன்,பேன் பார்த்துக் கொண்டே பக்கத்து வீட்டு கதைகள் என பெண்களின் ஒட்டுப்பேச்சு இலக்கிய தரத்து பிரபலம்.ஏதோ பக்கத்துல இருந்து ஒட்டு கேட்ட மாதிரி சினிமா கிசு கிசுன்னு ஒன்று இருக்குது.பத்திரிகை கிசு கிசு படிக்கிறதுன்னா லட்டு மாதிரி ஜொள்ளு விடற வயசுல.அப்புறம் நிருபருக்கு காசு கொடுத்து நடிகரோ, நடிகையோ,நடிகையோட அம்மாவோ செய்யும் வியாபார மார்க்கெட் தந்திரமின்னு தெரிஞ்சப்புறம் உப்பு,காரமில்லாத பத்தியம் மாதிரி ஆயிடுச்சு.சமீபத்துல சிம்பு நயன்தாரா உதடு கடி வியாபார சந்தைப்படுத்தலின் ஒரு உதாரணம்.சமீபத்தில் ஒரு பதிவர் இன்னொரு சமீபத்துக்களை கிசு கிசுத்திருந்தார்.இதுவும் ஒட்டு கேட்டலின் உள்ளடக்கம்.எங்கேயோ துவங்கி எங்கேயோ மொக்கை ஓடுது. ஜூட்.