நடந்து முடிந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்று ஐக்கிய தேசிய முன்னேற்றுக் கட்சியும் எதிர்க்கட்சிகளும் செய்த கூத்துக்கள்,சேட்டைகள் போலவே எனது முந்தைய பதிவில் எப்படியாவது சதம் அடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கும்மிப்பதிவர்கள் கும்மு,கும்முன்னு கும்மி விட்டார்கள்.
தமிழ் சினிமாவுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்கின்றது.ஒரு படம் கதாபாத்திரத்தின் காரணமாக வெற்றி பெற்று விட்டால் அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அல்லது நடிகருக்கு அதே மாதிரியான ஒரு முத்திரையை தயாரித்து விடுவார்கள்.அந்த மாதிரி நடிகர் நடிகைகளை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.
அப்படி ஒரு முத்திரையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சிவாஜி கணேசன்,கமல் மாதிரி வித்தியாசமான பாத்திரங்களை ஏற்க வேண்டும்.நான் அந்த மாதிரி நடிப்பில் மெழுகா உருகிப்போய் விட்டு அந்த பாலபாடங்களையெல்லாம் மறந்து விட்டால் என்னையும் கும்மிப்பதிவன் என்ற முத்திரை குத்தி விடுவார்கள் என்ற ஞானோதயத்தில் உருவான பதிவு இது.
தற்போது தமிழில் புகைப்படம் பதிவர் வட்டத்தில் சேர்ந்த பின் தெரிந்து கொண்ட விசய ஞானம் படங்களை எடுத்து சிறிது மெருகேற்றியதும் போட்டிக்கான கற்பனைகளுடன் பதிவிரக்கம் செய்து விடுகிறோம். ஆனால் எடுத்த படத்துக்கும் அப்பால் படங்களுக்கு மெருகூற்றுவது ,அந்தப் படங்களை எப்படிப் பேசவைப்பது ( பதிவுகளில் எதச்சொன்னாலும் மக்கள் நம்புறாங்கப்பாங்கிற வெட்டிப்பயலின் வாசகம் வருவதால் பேசுவது) என்பது அனிமேசன் எனக்கூறப்படும் படங்களின் நகர்வு, மேலும் குறுந்தகடுகளாவதற்கு முந்தைய எடிட்டிங் எனக்கூறப்படும் தணிக்கை இறுதியில் குறுந்தகடுகளாக மாற்றுவது எப்படி போன்ற தொழில் நுட்பங்கள் ஒழிந்து கிடக்கின்றன. பிரேம்ஜி போன்ற வித்வான்கள் இந்த நுட்பங்களை பகிர்ந்து கொண்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.
அடுத்து கும்மிகள் - இருக்கும் மன அழுத்தங்களை குறைக்க உதவினாலும் பெரும்பாலான பதிவுகளும் பின்னூட்டங்களும் அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.பகிர்தல் என்ற கோட்பாட்டில் தமிழையும், அதற்கு உதவும் தமிழ்மணத்தையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.முக்கியமாக இதன் தாக்கம் இன்னும் விரிவடைய வேண்டும். ஆறுகோடித்தமிழர்களில் எத்தனை பேருக்கு பதிவுகளின் தாக்கம் சென்றடைகிறதென்று தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நாவின் அறிக்கை : தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வரிகளை ஊக்கப்படுத்தும் படி இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துபோகும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கும் என்பது.எனக்கும் கூட பொதுப்புத்தி அறிவில் அது சரியாகத்தான் இருக்கும் எனப்பட்டது. அந்தக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக வாழ்வைத் தேடிப்போன இடத்தில் மொழி மறந்து போன சான்றாய் இன்றும் மொரிஷியஸ்,ஆப்பிரிக்கா,அய்ரோப்பா நாடுகளில் வாழும் சந்ததியினர் கூடவே சமீபத்து கென் பதிவில் ஒட்டவைத்த சாருவின் எழுத்துக்கள் போன்றவை இதனை உறுதி செய்தது.ஆனால் தமிழ்மணம் போன்ற அசாத்திய திரட்டிகளும் பதிவர்களின் ஆக்கபூர்வமான உழைப்பும் அந்தக் கூற்று தோற்றுப் போய்விடும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.
ஒளி ஊடகங்கள் மக்களின் ரசனைகளை மென்மைப்படுத்தியிருக்கலாம்.கமல்கூட சின்னத்திரைகள் திரைப்படத்தைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் என நினைத்தார்.ஆனால் திரைப்படம் சின்னத்திரையின் பலங்களை அழித்து தமிழ்வாழ்வின் பல அங்கங்களைச் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் வந்து சிம்மாசனம் போட்டுக்கொண்டது. இதனூடே சின்னத்திரைகள் நமது வாழ்வைப் பிரதிபலிக்கின்றனவா அல்லது அதனது லயத்திற்கு நம்மை இட்டுச்செல்கின்றனவா எனத்தெரியவில்லை.காரணம் சின்னத்திரையின் தாக்கம் இன்று நம்மிடம் அதிகமாகவே உள்ளது.தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் பேசும் முறைகள் நம்முடைய மொழி பேசும் முறையை ஏளனம் செய்கிறது.
இரண்டு சகாப்தங்களையும் கடந்தும் ஈழத்துப்பிரச்சினை முடிந்தபாடில்லை.அதற்கான நமது தார்மீக உணர்வுகளையும் எழுத்துக்களாய் நாம் வெளிப்படுத்த வேண்டும்.உணர்ச்சிகளுக்கும் மேலாய் மனிதம் வெளிப்படவேண்டும்.விடியலுக்குக் காத்திருப்போம்.