Followers

Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

Tuesday, May 10, 2011

பிளாக்குவதின் மகத்துவம்

நாம் ஒவ்வொருவரும் பலவேறு பட்ட காரணங்களுக்காக பதிவிடுகிறோம்.மூளை குறு குறுப்பதை பதிவு செய்வதை தவிர வேறு ஆதாயமில்லாமல் நான் கிறுக்குவதைப் போலவே பெரும்பாலும் சக பதிவர்களும் என்னோடு கூட சக பயணம் செய்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

கனடாவில் கான்சரில் இறந்தவரின் இறுதி பதிவு என்ற தலைப்பை படித்து விட்டு உள்ளே சென்றால் டெரிக் மில்லர் என்பவரின் இறுதி பதிவு மில்லியன் கணக்கில் ஹிட் வாங்கியதென செய்தி.

41 வயதுடைய டெரிக் மில்லர் என்பவர் 16 வருடம் தன்னுடன் வாழ்ந்த மனைவிக்கு சொன்னது ”நாம் ஒருவருக்கொருவர் என்ற உறவு இல்லாமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படியிருந்திக்குமென தெரியவில்லை.ஆனால் அது மிக மோசமான ஒன்றாக இருந்திருக்கும்.உன்னை நான் ஆழமாக நேசித்தேன்...நேசித்தேன்...நேசித்தேன்.”

சென்ற புதன்கிழமை டெரிக் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இறப்பதற்கும் முந்தைய ஒரு தினத்தில்  www.penmachine.com என்ற அவரது தளத்தில் பதிவு செய்யப் பட்ட பதிவு.

நம்ம ஊர் பழபெரும் பதிவர்கள் மாதிரி பிரிட்டிஷ் கொலம்பியாவில் 10 வருடத்திற்கும் மேலாக புகழ் பெற்ற பதிவர். கான்சரில் நான்காம் நிலையெனப்படும் மெட்டாஸ்டேடிக் கலரெக்டல் கேன்சர் இருக்கும் அறிகுறிகள் 2007ல் தெரிந்தது.டெரிக் இறந்த பின் மே நான்காம் தேதி 143 பின்னூட்டங்கள் நண்பர்களும்,முகமறியாதவர்களும் போட்டதில் அதிக தள நெரிசலில் மூச்சுத் திணற நண்பர் ஒருவரின் உதவியால் வேறு ஒரு சர்வருக்கு டெரிக்கின் தளம் மாற்றப்பட்டது.

”இதோ இங்கே நான்!நான் இறக்கப் போகிறேன்.இதுவே எனது தளத்தின் கடைசி பதிவு.அதற்கு முன் எனது கான்சரின் தண்டனையால் எனது உடலவயங்கள் மூடிக்கொள்ளும் போது என் குடும்பத்தாலும்,நண்பர்களாலும் இதனை வெளியிட வேண்டுகிறேன்.இயங்கும் தளமாக இருந்த ஒன்று இனி வரலாறாகப் போகிறது.”

நமது வாழ்க்கையில் என்ன நிகழும் என்பதை யாரும் கற்பனை செய்து விடமுடியாது.நாம் என்ன செய்கிறோமோ அது பற்றி மகிழ்ச்சியடையலாம்.நாம் திட்டமிடலாம்,ஆனால் அது செயல்படுமா என்பதனை சொல்ல இயலாது.எனது நோயிலும்,இறப்பிலும் இதனையே எனது மகள்கள் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்...நம்புகிறேன்.எனது அன்பான வியப்புக்குரிய மனைவி ஆர்ட்ரியும் இதனையே காண இயலும்.இவர்களும் ஒரு நாள் இறப்பார்கள் என்றாலும்,தாம் செய்பவைகள் குறித்து மகிழ வேண்டும்.மூளையின் திசுக்களை உற்சாகப்படுத்த வேண்டும்.முடிந்த வரை சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்க வேண்டும்.அதே சமயத்தில் தாங்கள் நினைத்தபடி நிகழாமல் போவதால்,அப்படி நிகழும் பட்சத்தில் ஏமாற்றமடைந்து விடக் கூடாது.

டெரிக் மில்லரின் தளம் மூன்று மில்லியன் ஹிட்களுக்கும் மேல் சென்றதாக அவரது மனைவி ஆர்ட்ரிக் மில்லர் கூறுகிறார்.டெரிக் மில்லரின் நண்பர்,ஆலிஸ்டர் கால்டர் வேறு பெரும் இணையத்திற்கு மாற்றிய பின் சொன்னது”மில்லரின் தளம் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் ஹிட்களாவது அடைந்திருக்கும்.ஆனால் அவரது தளம் க்ராஷ் ஆனதால் கணக்கை கணிப்பது கடினமாகிவிட்டதென்கிறார்.

ஆர்ட்ரிமில்லரும் வலைப்பதிவரே.அவரது கணவரின் கேன்சர் அனுபவங்களை www.talkingtoair.com என்ற தளத்தில் குறிப்பிடும் போது அவரது கணவர் கடந்த இரு மாதங்களாக பேச இயலாமல் போன போது மில்லரின் வலைத்தளமே உதவியாக இருந்தது.மில்லரால் பேச இயலாவிட்டாலும் மூளை நன்றாகவே செயல்பட்டுக்கொண்டிருந்தது.

"மில்லர் பேச இயலாத போதே அவரது தளத்தை முழுவதுமாக படிக்க ஆரம்பித்தேன்...அப்பொழுதுதான் மில்லரின் மூளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது.மில்லரின் பிளாக் எனக்கு நினைவுப் பரிசாக அமைந்தது” என்கிறார் ஆர்ட்ரிக் மில்லர்.

இன்னும் கொஞ்சம் ஆங்கில தகவல்களுக்கு NDTV யின் இந்த செய்திக்கும்  மற்றும் டெரிக்,ஆர்ட்ரி மில்லரின் தளங்களுக்கு செல்லுங்கள்.

Monday, June 30, 2008

வெயில் காலத்து கிறுக்கல்கள்

இன்று காலை அலுவலகம் போகலாம் என்று கிராண்ட் சிறுக்கியை தொட்டால் கிர்.கிர் என்ற சத்தத்துடன் தடைமிதிப் பலகை (நம்ம ஊரு பிரேக்)யைத் தொடும்பொதெல்லாம் சத்தமிட்டுக் கொண்டு என்னையும் கலவரப் படுத்திக் கொண்டே வந்தது.அலுவலகத்தில் தலையைக் காட்டிவிட்டு பழுதுபார்க்கலாம் என்று போனேன்.

குளிர்சாதன அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது சில சமயம் எரிச்சல் ஊட்டும் விசயம்.அதனால் சில சமயம் மதிய வெயிலில் கடற்கரையை சீப்பு போடும் நோக்கத்தில் போகும்போது கூட வெயிலின் உக்கிரம் தெரிவதில்லை.காரணம் அனல் கக்கும் மணல் ஒருபுறமும் கடல் அலைகளின் மெல்லிய சத்தம் ஒருபுறமும் இடையில் ஈரமான மணலில் நீர் காலைத் தொடாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் நடப்பது கூட ஓர் சுகமான அனுபவம்.கூடவே வெயிலின் உஷ்ணத்தால் வெளியே மதியம் கடலை அண்டாத மக்கள் கூட்டமில்லாத தனிமையும் ஓர் அலாதி சுகமே.

ஆனால் வண்டியை இயந்திரம் சீர்திருத்துமிடத்துக்கு கொண்டு சென்றதில் அந்த சுகமில்லை.கண்விழி புருவம் வரை முத்துக்களாய் வியர்வை.நாக்கு வரட்சி.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெயிலின் நிழலில் உட்காரவேண்டிய நிர்பந்தம்.குஜராத் மாநிலத்து 20 மதிக்கத்தக்க எளந்தாரி(வார்த்தைத் திருடல் லதானந்த் ஆபிசரிடமிருந்து) வெயிலில் டிஸ்க் எனும் இரும்பு வளையத்துடன் தடைமிதி அரைச் சந்திர வட்டம் போன்ற உருளையை இணைக்க முயன்று கொண்டிருந்தார்.

என்னால் வெயிலின் நிழலில் ஒருமணி நேரத்துக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.இந்த மாதிரி உழைப்பாளிகள் சாலைப்பணி செய்யும் பன்நாட்டு தொழிலாளிகள்,நகர் சுத்திகரிப்பு வேலை செய்யும் பங்களாதேஷ் மற்றும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியது.மிக அதிகக் குளிர்,உஷ்ணம்,குறைந்த சம்பளம் என்று இத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொள்ளும்படியான தேச,காலச் சூழ்நிலைகள்.சுதந்திரக் காற்றை சுவாசித்த பங்களாதேஷ் இயற்கையின் தொடர் சீற்றங்களுடன் மதப் படுகுழிக்குள் விழுந்துவிட்டது பரிதாபத்திற்குரிய விசயம்.

கிருஸ்மஸ்,புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டாய மரபுகளாய் பாவிக்கும் சென்னை நண்பரின் வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டதால் இந்தியா,இலங்கை,நேபாளம்,பிலிப்பைன்ஸ்,இங்கிலாந்து,அமெரிக்கா (உபயம் சென்னை மொழி பேசும் தமிழ் பேச மட்டுமே தெரிந்த நண்பர்கள்)லெபனான்,எகிப்தியர் என்று தேசத்துறவித்தனம் கொண்ட இந்த வாழ்க்கையில் அத்தனை தேசத்து மனிதர்களுடனும் நட்பு கொண்டாகிவிட்டது.

உலக மயமாக்கலையும் உலகம் ஒரு சிறிய கிராமம் என்ற சொல்லை நடைமுறைப் படுத்தலையும் முன்னெடுத்துச் செல்லும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது எனலாம்.இஸ்லாமிய மார்க்கத்தின் மெல்லிய பண்புகளை புறம் தள்ளிவிட்டு அடிப்படை வாதம் உலகளாவியதும் மனித மேம்பாட்டின் ஓர் சரிவே எனக் கொள்ளலாம்.ஆனாலும் இந்த அடிப்படை வாதம் உலக மயமாக்கலுக்கு மேலும் துணை புரிகின்றது என்றே தோன்றுகிறது.

தன் நாட்டின் வேர்களுடன் மேலை நாட்டின் விழுதுகளை இணைத்துக் கொண்டே இங்கே பெரும்பாலோனோர் வாழ்வின் ஓட்டம் நகருகிறது. இன்றைய கால கட்டத்தில் நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.எரிபொருளின் அத்தியாவசியத் தேவையில் நாளையும்,வரும் நாட்களும் எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்று உற்று நோக்க வேண்டிய கால கட்டாயத்தில் உள்ளது மனித இனம்.