Followers

Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Wednesday, December 2, 2015

வாழ்வை பிரதிபலிக்காத இலக்கியவாதிகள்.

இந்த பதிவின் தலைப்பை 2009ம் வாக்கில் எழுதியிருக்க வேண்டும்.எழுதும் நேரமும்,வாசிப்பின் காலமும் இன்னும் சொல்லபோனால் ஒரு நேரப் பசியையாவது காசாக எழுத்தால் பார்க்கும் தமிழ் இலக்கியவாதிகள் என்று அக்மார்க் ஒட்டிக்கொண்ட பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் முள்ளி வாய்க்கால் கால கட்டத்தில் மூடிக்கொண்டே இருந்தார்கள்.

சரி அதுதான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டு விவகாரம்...வழியில் எவனோ படுத்துக் கிடந்தாலோ,இருவர் சண்டையிட்டுக்கொண்டாலோ வேடிக்கை பார்க்கும் சென்னை கலாச்சாரத்தில் ஊறிய பழக்க தோசம் என்றாலும் தன் வீட்டுக்கும்,தான் நடக்கும்,பிரயாணம் செய்யும் ரோட்டில் அடை மழை அடித்து துவைத்து விட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு எழுத்தாளர் ருமாலி ரொட்டி எப்படி செய்வது என்று பாடம் எடுக்கிறார்.

ருமாலி ரொட்டி என்பது தட்டையான ருமாலியை இரு கைகளிலும் பரப்பி தலைக்கு மேல் விசிறி ருமாலி கவிழ்த்துப் போட்ட வடச்சட்டி மேல் வந்து உட்காரும்ங்கிற தொழில் நிபுணத்துவம் கூட தெரியாமல் ருமாலி பற்றி என்ன கட்டுரை வேண்டிக்கிடக்குது?

எதிர் கோஷ்டியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் புர எழுத்தாளரோ தமிழ் ஹிந்துவில் கண்ட பயணிகள் ஊர்தியின் படம் போட்டு புலம்பிக்கொண்டுள்ளார்.தன்னைச் சுற்றிய நிகழ்வுகள் கூட பாதிக்காமல் என்ன எழுத்தோ கட்டுரையோ! தூரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் எனக்கே  சென்னை வெள்ளம் மனம் பகீர் என்கிறது.

ஒரு புறம் சகிப்புத்தன்மை விவாதம் பாரளுமன்றத்தில் நிகழ்ந்தாலும் சிரமங்களுக்கு இடையிலும் வாழும் சென்னை வாழ் மக்கள் சகிப்புத்தன்மையின் வெளிப்பாட்டின் அடையாளம்.

பெயர் சொல்லிக்கொள்ளூம் படியான டாட்டா,அம்பானி,மிட்டல்களின் இந்திய பொருளாதார மேம்பாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டிக்காப்பவர்கள் கையேந்தி பவன் துவங்கி,உணவு விடுதிகள்,சிறு தொழில்கள்,மிதமான பணக்காரர்கள்,பணத்தோடு கொஞ்சம் மனித நேயத்தையும் அன்பளிப்பவர்கள் என்பவர்களின் சராசரியில் இந்திய பொருளாதாரம் இன்னும் சுழல்கிறது.

 பிளாஸ்டிக் போடுற, அதனால்தான் மழை வந்து உன்னை அடிச்சுப்போட்டுச்சுன்னு எதிர் லாஜிக் கருத்துக்கள் தென்படுகின்றன. பிளாஸ்டிக் போட்ட, அடைச்சு வீடு கட்டிகிட்ட இதெல்லாம் பிளாஸ்டிக் போட்டவன்,வீடு கட்டிகிட்டவன் குத்தமா? காசுன்னா எதுவுமே தப்பில்லைங்கிற இந்திரா காந்தி காலம் தொட்டு இப்ப ஜெயலலிதா ஆட்சி வரைன்னு தொடரும் சுய மரியாதையின்மை அது.ஆக்டோபஸ்களாக விஸ்வரூபமாய் எங்கும் பரவியிருக்கிறது. 

எனது அப்பாவித்தனத்தால் இந்தியன் படம் வரும் போது அரசாங்க பணியாளர்கள் ஒரு சிலராவது திருந்தி விடுவார்கள் என நினைத்தேன். நற்குணங்கள் ஜீனில் உருவாகுவதோடு வாழ்க்கையின் அனுபவங்களோடு, சூழல்களோடு சார்ந்தது என மெல்ல இப்பொழுது புரிகிறது.

ஒரு உணவு நிறுவனத்தில் முன்பு பணியாற்றும் போது 150கிலோ எறா மீன் தேவைப்படும்ங்கிற கணக்கில் நீ 350 கிலோவுக்கு கணக்கு போடுன்னு அரபிக்காரனும்,எகிப்தியனும் சொன்ன கூட்டுக்களவானித்தனத்துக்கு நான் உடன்படாததால் என் வேலை போனது.பொழக்கத் தெரியாதவன் என்ற கிண்டல் அவர்களிடமிருந்து அப்பொழுது வந்தாலும் இப்பொழுது நினைப்பதற்கு மனம் நிறைவாகவே இருக்கிறது.

பொருளாதாரம்,உற்பத்தி,தொழில் என உலக மொத்த சூட்டுக்கு முக்கிய காரணிகளாக இப்பொழுது அமெரிக்கா முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் சீனாவும்,மூன்றால் நிலையில் இந்தியாவும் என திங்கட்கிழமை பஞ்சாயத்து பேசின உலக தலைவர்கள் ஒபாமா உட்பட புலம்பியிருக்கிறார்கள். 

இந்திய வாழ்க்கை முறை சுகாதார முன்னுரிமைமையற்றது  என்ற போதிலும்,மலை,மேகங்கள்,மரங்கள்,செடி கொடிகள்,ஏரி,குளம்,ஆறு,கடல் என இயற்கையின் நன்கொடையோடு வாழும் நமக்கு வானிலை அறிக்கை ரமணன் சொல்லாமல் போனாலும் நமக்கு பூகோள புவிச்சூட்டில் அடை மழை வரும்.50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் கொண்டு வரும்.

அங்குமிங்கும் மனித நேயங்கள் சில அவ்வபோது வெளிப்படத்தான் செய்கின்றது. ஹேப்பி கிறுஸ்மஸ் சொல்லும் நடுராத்திரி 12 மணிக்கு நான் எனது சகோதரியின் மகனோடு ஆட்டோவில் சென்னையில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒரு புறம் பெரிய லாரி பாரம் சுமந்து கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. லாரிக்கும், ஆட்டோவுக்கு மிடையில் மோட்டர் பைக்கில் பயணித்த ஒருவர் திடீரென லாரிக்குள் சறுக்கி விட்டார். 

தங்கை பையனோடு பேசிக்கொண்டிருந்த நான் கவனிக்கவில்லை.ஆனால் தங்கை பையன் ஆட்டோக்காரரை திடிரென பிரேக் போட வைத்து மோட்டார் பைக் காரரை நோக்கி ஓடி சக்கரத்துக்கு வெளியே இழுத்து விட்டான்.பார்த்தால் மோட்டார் பைக்காரர் மப்பு. உதவும் இந்த பழக்க தோசத்தில் இன்னொரு முறை விபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரை காப்பாற்றினான்.இப்பொழுதும் அவர்கள் நட்பு தொடர்கிறது.

பிரதி உபகாரம் நோக்காமல் சென்னை மழையில் யாராவது யாருக்காவது உதவும் முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் இருக்கலாம்.உங்கள் நல்ல மனித நேய உள்ளங்களுக்கும் உதவும் கரங்களுக்கும் ,சென்னை மழையின் அவதிக்கு அக்கறையோடு கருத்து வெளிப்படுத்தும் பதிவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.