அங்கேயும் வந்து ஆட்டையப் போட்டுட்டாங்களான்னு
இங்கே வானம்பாடிகள் பாலா சொல்லி வாய் மூடுவதற்குள் இன்னுமொரு ஏமாற்று வேலை அரங்கேற்றம்.யாரை நொந்து கொள்வதென்றே தெரியவில்லை.திருடனையா அல்லது எங்கிட்ட பணமிருக்கிறதென்று வாலட்டை திருடன் கண்முன்னே காட்டுபவனையா?அல்லது அரசு இயந்திரம் செயல்படுவதையா?இல்லை மனசாட்சிகளையெல்லாம் அடகு இல்ல இல்ல புதைத்து விட்ட,எரித்து விட்ட மனநிலைகளையா? சென்ற பதிவில் இந்திய சுதந்திரங்களை நினைத்து மனதுக்குள் மகிழ்வான ஒரு புன்முறுவல் வந்து போகுமுன் இந்திய நாணயங்கள் ஏலம் போய்விட்டது.
வேளச்சேரி பக்கமெல்லாம் கொஞ்சம் காசு புரளுகிற இடமா?அல்லது ஏமாளிகள் அதிகம் நடமாடும் இடமா?குமாரராஜா,பிரகதீஷ்வரி என்ற தம்பதியினர் ஷேர்மார்க்கெட் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்களாம்.இவர்களிடம் ரூபாய் 40 லட்சம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் கட்டி ஏமாந்தவர்கள் மொத்தம் 500 பேர்.
இவர்களிடம் கட்டும் பணத்துக்கு 10 சதவீதம் வட்டி தருவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் சீட்டு முதிர்வடைந்த 20 பேருக்கு “செக்” தரப்பட்டது.ஆனால், பாங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பிவிட்டது. எனவே, குமாரராஜாவை சந்தித்து இது குறித்து கேட்டதற்கு வேளச்சேரியில் உள்ள வீட்டுக்கு வந்து பணம் வாங்கி செல்லும்படி தெரிவித்தனர்.அதன்படி வீட்டுக்கு சென்றால் வீட்டை பூட்டிவிட்டு கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.இந்த பணத்தை பெற்று தருமாறு போலிஸ் கமிசனரிடம் புகார்.
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் இருக்கின்றன.பிக்சட் டெபாசிட், ATM வசதிகள் இருக்கின்றன.10% சதவீதம் லாப கணக்கு போட்டு இன்னும் இன்னும் எத்தனை முறை இந்த ஏமாற்று வித்தைகள்?திருடன் போலிஸ் விளையாட்டு மட்டும் நமக்கு அலுக்கவே அலுக்காது போல இருக்குதே.
இந்த விளையாட்டுக்கள் எல்லாம் இங்கே இல்லீங்க.ஒரே ஒரு மத்திய வங்கி நம்ம ரிசர்வ் வங்கி மாதிரி பணத்தை அச்சடிப்பதற்கு.அடுத்து தேசிய வங்கி,வியாபார வங்கி,வீட்டு கடன் வங்கி,பன்னாட்டு பொருளாதார வங்கி,வளைகுடா வங்கி என அனைத்துமே அரசால் அங்கீகரிக்கப் பட்டவையாகவும் எத்தனை வங்கி கிளைகள் தேவையோ அத்தனை அமைத்துக் கொள்ளும் உரிமைகள் கொண்டவை.இவைகள் மட்டுமே பணம் சேமிப்பு மற்றும் வியாபார நோக்கம் கொண்ட அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகள்.
சில தனியார் பணம் கடன் தரும் நிறுவனங்கள் மற்றும் இந்திய மாநிலங்களுக்கும்,இலங்கை,பிலிப்பைன்ஸ்,நேபாளம்,பெங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பணம் மாற்றம் செய்யும் தனியார் நிறுவனங்களும்,டாலர்,யூரோ,பஹ்ரெய்ன் தினார்,எகிப்திய பவுண்ட்,இந்திய ரூபாய்,ரியால்,திர்காம்,சிங்கபூர் டாலர் போன்ற பணங்களை குவைத் தினாருக்கு பதிலாக பணமாகவே தரும் தனியார் பண மாற்று நிறுவனங்களும் செயல்படுகின்றன.இதுவரை ஒரு பணம் ஏமாற்றும் செய்தி கூட நான் கேள்விப்பட்டதில்லை.காரணம் ஏலச்சீட்டு,ஹவாலா போன்றவை அரசால் அங்கீகரிக்கப்படாதவை.சேமிப்பின் பணத்தை ஐம்பது நூறென நண்பர்கள்,அறிந்தவர்கள் வட்டத்துக்குள் மட்டுமே 10 பேர் 12 பேர் என ஒரு வருட கால தவணையாக அதுவும் இந்தியர்கள் மட்டுமே ஏலச்சீட்டு நடத்துகிறார்கள்.இவையும்,தாய்லாந்து லாட்டரி போன்றவை அரசு சட்டப்படி குற்றம் என்பதால் யாரும் போய் காவல்துறையிடம் முறையீடு செய்ய இயலாது.
உள்ளூர்வாசிகள் சில சமயம் செக் கொடுத்து விட்டு பவுன்ஸ் ஆகி விட்டால் பணத்தை திருப்பி தரவோ அல்லது சிறையில் குப்பூஸ் சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளதால் இது போன்ற நிகழ்வுகள் எண்ணிக்கையில் குறைவு.எனவே பணம் விசயத்தில் வளைகுடா செயல்படும் விதம் பாராட்டுக்குரியது.