இந்தியாவே எதிர்பார்க்கும் நீதிமன்றத் தீர்ப்பை பெரும்பாலும் அதன் சூட்டைத் தணிக்க வேண்டியும் வேறு பல காரணங்களுக்காக வேண்டியும் தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தினத்திலிருந்து வேறு ஒரு தினத்திற்கு மாற்றி வைத்துள்ளது முன்பும் நிகழ்ந்த நிகழ்வுகள்தான்.உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமென்றால் அயோத்தியா ராமர்,பாபர் மசூதி தீர்ப்பு.நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் முடிவு பற்றிய சலசலப்புக்களும்,பொது விமர்சனங்களும்,பதிவுலக விவாதங்களும் கூட நிகழ்ந்தன.
அதே மாதிரியான ஒரு சூழலை கனிமொழி கைது ஆவாரா என்ற எதிர்பார்ப்பை இந்திய ஊடகத்துறை அனைத்தும் கேள்வியை எழுப்பி வந்தது.கலைஞர் டி.வியின் பண பரிமாற்றத்தில் ஆ.ராசா,தயாளு அம்மாள்,கனிமொழி,சரத்குமார்,சினியுக் படத் தயாரிப்பாளர் கரிம் முரானி என்ற பெயர்கள் ஊடகங்களில் பிரபலம் ஆனாலும் ராசா கைது வரை ராசாவை முன்னிலைப்படுத்திய ஊடகங்கள் அவர் சிறை சென்று மறுபடியும் கனிமொழியின் முன் ஜாமின் வழக்குக்காக வரவழைக்கப்பட்டு நீதி மன்றத்துக்கு வந்த பின்பும் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.மாறாக மொத்த ஊடகங்களின் பார்வையும் கனிமொழி மீதே பாய்ந்திருக்கிறது.
இந்த வழக்கில் நீதிமன்றம் வராத கரிம் முரானி பற்றியோ கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட அலுவலக முடிவுகளில் கையெழுத்துப் போடுபவராக இருக்கும் சரத்குமார் பற்றியோ யாரும் அலட்டிக் கொள்வதாக காணோம்.2Gயில் கனிமொழியின் பங்கு என்ற மொத்த பார்வையும் கனிமொழியின் மீது பாய்வதில் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டுமென்ற அக்கறை இருக்கிறதோ இல்லையோ கனிமொழி சிறைக்குள் போகவேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலோருக்கு இருப்பதைக் கணிக்க இயலுகிறது.கூடவே இப்போதைய நீதிமன்ற நுழைவு கனிமொழிக்கு அரசியல் ரீதியான மறைமுக விளம்பரமாகக் கூட எதிர்காலத்தில் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.காரணம் சும்மா கிடந்த ஜெயலலிதாவையும் இப்படித்தானே ஊதிப் பெருக்கி இப்பொழுது ஜெயலலிதா மூச்சு விட்ட அடுத்த கணமே கருணாநிதி மறு அறிக்கையும் தானே கேள்வி தானே பதில் சொல்லும் நிலைமை தமிழகத்துக்கு வந்துள்ளது.இந்தியாவிலே பைத்தியக்காரத்தனமான அரசியல் களங்கள் என்றால் ஒன்று தமிழகம்,மற்றொன்று ஆந்திரா எனலாம்.
2G ஊடகத்துறைக்கு தீனி போடும் நிலைக்கு வந்த பின் எதிர்க்கட்சியாக இருக்கும் பி.ஜே.பி பீத்திகிட்ட ஒன்று நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்றது.மாட்டுனா மாப்ள நீயும் தாண்டின்னு காங்கிரஸ் உசார் படுத்திச்சோ இல்லை கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் என்ற அமுங்கியதோ JPC கோரிக்கை ஒன்றைத் தவிர உருப்படியாக எதனையும் செய்யவில்லை.தொழில் வேறு அரசியல் வேறு என்ற இரட்டை வேடத்துக்கு சிறந்த உதாரணமாக தற்போது பி.ஜி.பியின் நிலைப்பாடும், ஜெத்மலானியின் கனிமொழிக்காக காசுக்கு மாறடிக்கும் வாதாடும் திறமையும். சென்ற பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அழகிரி அன்புமணியைப் பார்த்து உங்கப்பன் அரசியல் விபச்சாரின்னு சொன்னது மாதிரி காசு கொடுத்தா ஹவலாக்காரன், கொள்ளைக்காரன், கொலைகாரன், லஞ்சம், ஊழல்பேர்வழின்னு உன்னோட பெயர் பிரபலமானதா இருந்தா யாருக்கு வேண்டுமென்றாலும் வாதாடுவேன் எனும் ஜெத்மலானியின் நிலைப்பாட்டை கிரிமினல் விபச்சாரித்தனம் எனலாம்.நல்ல மூளையை தவறான வழிக்கு வழிகாட்டுதல் எனபது எப்படியென்பதை ராம் ஜெத்மலானியிடம் கற்றுக்கொள்ளலாம்.
தமிழக முதல்வர் கருணாநிதி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்தாலும் தமிழகத்தைப் பொறுத்த வரையில் சாதாரண குடிமகனுக்கு இந்த தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நல்லதாகவே இதுவரை நிகழ்ந்திருக்கிறது.அதே மாதிரி 2Gயை உச்சநீதிமன்றம் தனது நேரடிப்பார்வைக்கு எடுத்துக்கொண்ட பின் கனிமொழியின் பிணை வழக்கு நிகழும் நேற்றைய வரை நீதிமன்றத் தீர்ப்பின் மீதான நம்பிக்கையை பாதுகாத்தே வந்தது.நேற்றைய ஜெத்மலானியின் வாதமான முன்னாடியே திருடாமல் இருந்ததாலும், பெண் என்பதாலும், எங்கேயும் ஓடிப்போக மாட்டார் என்ற சப்பைக்கட்டு வாதம் வைக்கும் போதே இந்தாளு எப்படி கிரிமினல் மூளைக்காரன் என்ற முந்தைய சரித்திரித்தை கொஞ்சம் புரட்டிப்பார்க்கத் தோன்றியது.கூடவே கொடுத்த காசுக்கு சரியாவே கூவுறாரோ என்றும் நினைக்கத் தோன்றியது.ஆனானப் பட்ட கொலைகாரன் கசாப்புக்கே வழக்கறிஞர் வைத்துக்கொள்ளலாம் என்ற இந்திய சட்டம் சொல்லும் போது தமிழகத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் ஒரு பெண்ணாகவே கனிமொழியின் வாழ்க்கையும் இருந்திருக்கும் என்ற அவரது உடல்மொழி பேச்சுக்கள் சொல்லும்போது அப்பன் தவறுகளுக்கு மகள் பாரம் சுமக்கும் பாவத்திற்கு ராம் ஜெத்மலானி வாதிடுவதிலும் தவறில்லை.
ஆனால் நீதிமன்றம் நேற்றைய வழக்கின் முடிவை மீண்டும் ஒரு நாள் தள்ளி வைத்ததில் இது வரையில் நிகழ்ந்த 2G யின் நீதிமன்ற நடைமுறை சின்ன சறுக்கலை கொண்ட மாதிரி உணர்வை ஏற்படுத்தினாலும் இன்றைய தினத்துக்கு சி.பி.ஐ சார்பாக லலித் வாதாடும் கருத்தான Brain behind the decision making என்ற வாதத்தையும் கேட்க வேண்டிய சூழலில் தீர்ப்புக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் 9ம் தேதி திங்கட் கிழமை துவங்கி 12ம் தேதி வியாழன் வரையிலுமான காலவரைக்குள் தீர்ப்பை சொல்வது மட்டுமே நீதிமன்றம் தனது பாதையில் பயணிக்கிறது என்பதற்கான நம்பகத்தன்மையை தீர்மானிக்கும்.இதனைக் கடந்து 13ம் தேதி வெள்ளி தேர்தல் முடிவுகள் வந்து 14ம் தேதி சனிக்கிழமை நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல வர்ணங்கள் பூசப்படும் என்பதோடு இப்போதைய காலகட்டத்திலே அரசியல் அழுத்தங்கள் போன்றவை 2Gயை நெருக்குகின்றன என்ற சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது.
Not only the Indian political system but also the judiciary is a flexible one?
