Followers

Tuesday, November 20, 2012

பால் தாக்கரே

பால் தாக்கரேயை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தேவை அரசியல்,இந்தி திரைப்படம் சார்ந்தவர்களுக்கு இருக்கலாம்.ஆனால் நம்மைப் போன்ற சாதாரண இந்திய குடிமகன்களுக்கு தாக்கரேவும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதோடு விமர்சன பதிவுகள் சில வெளிவந்துள்ளது வரவேற்க தக்கது.

நேற்று சேட்டைக்காரனுக்கு பின்னூட்டம் போடும் போது கூட பம்பாய்,மும்பாய் மீதான பால் தாக்கரேவின் தாக்கங்கள் என்ற அளவிலே கருத்து சொல்லியிருந்தேன்.ஒரு தனி மனிதனாகவும்,அரசியல் பதவிகள் இல்லாமலும் கூட மராட்டிய மக்களை,அதிலும் குறிப்பாக பம்பாய்-மும்பாய் மராட்டிய மக்களை தன்பால் ஈர்த்த வசீகர வலிமை தவிர ஒரு காட்பாதர்க்கான பயம் மட்டுமே தாக்கரேயின் பலம் எனலாம்.

 கால வெள்ளத்தில் தென்னிந்தியர்களுக்கு எதிராக மதராசி வெளியே போ என பம்பாய் மராட்டியர்களை ஒன்று திரட்டிய கலவரத்தில் தாராவி வர்தா பாய்,இன்னும் கேரளத்து சேட்டன்களின் எதிர் தாக்குதலில் பால் தாக்கரேயின் கோசம் வெற்றி பெறாமல் இன்றும் தாராவி தென்னிந்தியர்களில் குறிப்பாக தமிழர்களின் வாழ்விடமாகவும்,இந்தியாவின் மிகப்பெரிய சேரியாகவும் விளங்குகிறது.சேரியாக இருந்தாலும் மும்பாய்க்குள் நிகழும் மைக்ரோ பொருளாதார வளம் கொண்டது தாராவி.1960-70 பதுகளில் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட பம்பாயின் மில் தொழிலாளிகளின் போராட்ட பின்னடைவுக்கும்,கேரளா,வங்காளம் போல் கம்யூனிசம் வளர்வதற்கான அத்தனை கூறுகள் இருந்தும் கூட கம்யூனிசத்தை பின் தள்ளி சிவசேனா வளர்ந்ததற்கு தாக்கரே என்ற பெயர் சொல்லே காரணம்.

பிஜேபியின் இந்துத்வா வளர்ந்த காலத்தில் இந்து முஸ்லீம் பிரிவினையை பாம்பேயில் தூண்டியதற்கு சிவசேனா ஒரு முக்கிய காரணம்.வர்தா பாயை வேலு நாயக்கர் என  நாயகனில் பெயர் மாற்றம் செய்த இயக்குநர் மணிரத்னம் சூழல்கள் அறிந்து பம்பாயின் முதல் கலவரத்தை தொடாமல் போனாலும் கூட பம்பாய் படத்தில் தாக்கரேயை மெல்லியதாய் தொட்டதில் இயக்குநர் மணிரத்னத்துக்கு பயமுறுத்தல் வந்ததாக செய்திகள் கசிந்தன.கசிந்த செய்தியை விடவும் தமிழக இஸ்லாமிய சகோக்கள் கதாநாயகி மனிஷா கொய்ராலாவை முஸ்லீம் பெண்ணாக உருவகப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மணிரத்னம் வீட்டில் கல்லெறிந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.கல்லெறிந்து எதிர்ப்பு காட்டுவதிலிருந்து இப்பொழுது துப்பாக்கி சென்சார் போர்டாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்.உண்மைகளை அப்படியே முன்வைப்பது மட்டுமே இந்த பதிவின் நோக்கமென்பதோடு மீண்டும் தாக்கரே பக்கம் திரும்புவோம்.

முந்தைய காலகட்டத்தில் கிரிக்கெட் மீதான வெறித்தனமென்பது இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் போது மட்டுமே என்பதை சொல்லித் தெரிவதில்லை.முன்பு போல் கிரிக்கெட் பார்ப்பதில் மஜா இல்லையென போன மாதம் ஒரு பாகிஸ்தானிய நண்பர் புலம்பிக் கொண்டார்.இரு நாட்டு அரசியல் செயல்பாடுகள் சாதாரண மனிதர்களை எப்படி பாதிக்குமென்பத//ற்கு முந்தைய இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தாக்கமும்,வாஜ்பாய் அரசு ரயிலு விட்டும்,முஷ்ரப் டெல்லி வந்தும்,காஷ்மீர் பிரச்சினை கொஞ்சம் பிசுபிசுத்த பின் இப்பொழுது thaw (பனிக்கட்டியிலிருந்து உருகிய நிலை) ஆகிப் போனதால் கிரிக்கெட்டின் முந்தைய நிலை இப்பொழுது இல்லை.தாக்கரே மும்பாய்க்குள் பாகிஸ்தானியரை விளையாட விட மாட்டோம் என்ற அறைகூவல் சரியானதா தவறானதா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்ற போதிலும் முந்தைய சூழலில் தாக்கரேவுக்கான துணிச்சல் என்பதோடு கிரிக்கெட் சார்ந்து பெரிதாக எதுவும் பிரச்சினை வளரவில்லையென்பது பாராட்ட தக்கது.

இன்றைக்கு சமாதி புகழாரம் அரசியல்வாதிகள் பலர் பாடினாலும் கூட தாக்கரேவின் நீதிமன்ற வாரண்டு புறக்கணிப்பெல்லாம்  இந்திய இறையாண்மையை கேலி செய்வதாகவே இருந்தது.சத்ரபதி சிவாஜி, விடுதலைப்புலிகள் ஆதரவு,ஹிட்லர் பற்றிய புகழாரம் போன்றவை பல விமர்சனங்களுக்குட் பட்டதாயினும் வலிமையான ஆளுமையை தாக்கரே விரும்புகிறார் என்பது மட்டும் புரிகிறது.

இதுவரை சொல்லி வந்தவை முன்கதை சுருக்கம் மட்டுமே.மெயின் கதை என்னன்னா மும்பாய் பெண்களின் பேஸ்புக் கருத்து துணிவு.உண்மையான பெண் கல்வியென்ற வெளிப்பாடு இதுவே.அதிலும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து கொண்டு ஒரு பெண்ணின் கருத்து வெளிப்பாடு சுற்றுசூழலில் பாதிக்கப்பட்டோ அல்லது கேள்வி ஞானத்தாலோ இப்படியானதாகத்தான் இருக்க முடியும்.இஸ்லாமிய குண்டு வெடிப்பு தீவிரவாதங்கள் எப்படி இந்திய இறையாண்மைக்கு தீங்கானதோ அதுபோலவே சிவசேனாவின் இந்து இஸ்லாமிய பிரிவினையும். நம்ம பதிவுலக சகோக்கள் போல் பெயர்சொல் காரணமான ஆதரவும்,எதிர்ப்புமென்பதல்ல,.சரியானது எதுவாக இருக்க முடியும் என்பதே நமது நிலைப்பாடு.அந்த விதத்தில் அனைவருக்குமான கருத்துரிமை பேஸ்புக் கருத்து தெரிவித்த பெண்ணுக்குமுண்டு..கருத்து தெரிவிப்பது பொது வெளியில் நடமாடுபவர்களுக்கு எதிரானது என்றால் இணைய வளர்ச்சியை இந்தியாவில் முடக்கி விடலாம்.இல்லையென்றால் சுதந்திரமான கருத்துக்கள் வெளிவரவேண்டும்.

Tuesday, November 6, 2012

Me oppose present I-T Act 66A, Demanding change on it

ஒவ்வொருவரின் எண்ண வெளிப்பாட்டின் விகிதம் வித்தியாசப்படுகிறது.அதன் காரணமாகவே சார்ந்தும்,சாராத பதிவுகளும்,பின்னூட்டங்களும் இணையதள பகிர்வாக அமைகின்றது.என்னைப்பொறுத்த வரையில் எனது கருத்து வெளிப்பாடுகளை விட யார் என்ன சொல்கின்றார்கள் என்பதை உள்வாங்கிக் கொள்ளுவதையே முதன்மை படுத்துகிறேன்.தற்போதைய பதிவுலக விவாதங்கள் பலரின் மனதிலும் ஒரு திருப்பத்தையும், வேண்டாம் ஆணி என்ற சிந்தனையையும் தோற்றுவித்திருக்கும்.பணி,குடும்பம்,பதிவுகள் என்ற முக்கோணத்தில் பதிவுகளுக்கான கால நேரத்தை அதிகம் ஒதுக்க முடியாத முந்தைய தருணங்களில் வெறுமனே பார்வையாளனாக மட்டும் இருந்து விடலாமே என்று தோன்றியதுண்டு.

ஆனால் தற்போதைய சூழலில் ஒதுங்கி கொள்ளலாமே என்ற யோசனையை விட இது எதுவரை போகும் தூரம் என்ற எண்ணமே வலுவாக நிற்கிறது.பதிவுலகில் முதல் அடி எடுத்து வைக்கும் போது விட்டுப்போன தமிழை தொட்டுப்பார்க்கலாமே என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.அடுத்து பின்னூட்டங்களின் பல பரிமாண கவர்ச்சி பதிவுலகில்  சிக்க வைத்தாலும் கூட  தொடர் நடையில் சமூக ரீதியாக என்னை பாதித்த விசயங்கள் இரண்டு.ஒன்று ஈழப்போராட்டமும்,அதனோடு தொடர்புடைய தி.மு.கவின் ஆட்சி முறையும்.தி.மு.க பற்றி சொல்வதாலேயே தற்போதைய அ.தி.மு.கவுக்கான அங்கீகாரமென்று பொருளில்லை.இப்போதைய ஆட்சி சூழலை திருப்பி போடும் வலு ஜனநாயக தேர்தல் என்ற ஆயுதத்திலும் மக்கள் மறதி என்ற குணத்தாலும் மாறிப்போகலாம்.ஆனால் வரலாற்றை திருப்பி போட முடியாத நிகழ்வின் ரணங்களை மாற்றும் சக்தி ஒட்டு மொத்த தமிழர்களுக்குமில்லாத சோகத்தை எங்கே புலம்புவது?

இன்னொரு புறம் இந்திய அரசியல் கோமாளித்தனங்களும்  அதனால் வருங்கால சந்ததிகளின் பாதிப்புக்கான கவலையும்,உலக நாடுகளின் சுயநலங்கள் மட்டுமே கலந்த வியாபாரத்தனமும் நோக்கும் போது எவையும் என்னோடு சக்திக்கு அப்பாற்பட்ட விசயமே என்ற போதிலும் மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த கிடைத்த ஒரே ஆயுதம் பதிவுகள் மட்டுமே.சமூகம் எப்படியோ நாசமாகப் போகட்டும் என்று ஒதுங்கிக் கொண்டால் நுகர்வு கலாச்சாரத்துக்கென பலவழிகள் இருக்கின்றன.ஆனால் கருத்து வெளிப்பாடுகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பொருள் இருக்கிறது.குறைந்த பட்சம் பின்னாளில் சொன்னதை எடை போடும்,அசை போடும் அனுபவமிருக்கிறது.

மேலே சொன்னது போல் விட்டுப்போன பழக்கமான வாசிப்பே முதன்மையென்பதாலும் தினத்தந்தி,குமுதம் என்ற அரிச்சுவடிகளிலிருந்து இலக்கிய வாசம் வரை கொஞ்சமோ கொஞ்சம் முதிர்ச்சியடைந்து இப்போதைய இணையகாலத்தில் பொது ஊடகங்களை நோக்கும் போது வியாபாரமும்,சார்பு நிலையும் மட்டுமே முதன்மையாக நிற்பதால் நீ சொல்!நான் கேட்கிறேன் என்றும் சமரசம் செய்ய முடியாத சூழலில் ஜார்ஜ் புஷ் சொன்னமாதிரி இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால்.....
பதிவுலக இரண்டு பெருசுக பதிவை அப்படியே ஒத்தி எடுத்து  ஒட்டவெச்சுடலாமென்றுதான் பார்த்தேன்.அப்புறம் தட்டச்சு செய்தவுடன் பதிவு இப்படி பிரசவமாகி விட்டது.அதனால் பெருசுகளை இணைப்பில் கட்டிப்போட்டுவிட்டேன்.


பெருசு 2: http://vovalpaarvai.blogspot.com/

சுருக்கமாக ரவி சீனிவாசன் என்ற அறிமுகமேயில்லாத அடக்கி வாசித்த பதிவருக்கும் குரல் கொடுக்க வேண்டிய அவசியமிருப்பதால்

நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.