Followers

Thursday, December 31, 2009

புத்தாண்டு நலம் வாழ்த்துக்கள்

2010 வருடம் அவதாரின் ஐமேக்ஸ் அதிசயங்களுடன் துவங்குகிறது.அதற்கு முன் திரும்பிப் பார்க்கும் போது வருடத்தின் 2009ன் துவக்கம் ஈழம் குறித்த குரல்கள்,போராட்டங்களுடனும் கூடவே கருணாக்கள் வரலாற்றை மாற்றி எழுத துணை போனதின் சோகத்துடன் இலங்கை அரசின் ரத்த வெற்றிகள் உறுதி செய்யப்பட்டு விட்டது.

பின்னோக்கி நினைத்துப் பார்த்தால் தமிழகத்தைப் பொறுத்த வரை இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் மொழி என்ற கோட்டைத் தாண்டி தமிழ் இனம் என்ற வட்டத்துக்குள் தேசங்களின் பலத்தால்,ஐ.நா என்ற ஒப்புக்குச் சப்பாணியால் தமிழன் என்ற மனித இனம்,அதன் பூர்வீக மண் ரத்தபூமியாகி விட்டது.உரிமைக்காக எழும்பிய குரல்கள் இப்பொழுது ஈனஸ்வரத்தில் முகாரி மட்டுமே பாடுகிறது.

மிதமிஞ்சி பருகிய அரசியல் சோமபானம் குழு குழுவாய் பிதற்றல்காரர்களாக தெளிவில்லா மயக்க போதையில் தள்ளி விட்டது.பல பரிமாண போராட்டத்தில் அவரவர் மங்கிய கண்ணுக்கும் வாய்ப் பிதற்றலுக்கும் தோன்றியதை பரிமாறிக் கொண்டோம்.சோகங்கள் குறைந்தபாடில்லை.ஆனாலும் எழுதப்படா தீர்ப்புக்களின் பாதையில் இனி நடந்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில்,எதிர்காலத்தில் ஏதாவது வாழ்வாதாரத்தைப் பற்றிக் கொண்டே பயணித்தே ஆகவேண்டிய வாழ்வியலில்,மாறுதல்களை மாற்ற இயலாத வலிமையின்மையில்,இருப்புக்களை வைத்தே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய சூழலில் ஆஹா!அவனில்லாத வாழ்வில் இதோ பார் கிழக்கே உதயம்!வடக்கே வசந்தம் என்ற குரல்களும் எழத்தான் போகிறது.

எதை இழந்தோம் என்ற சோகங்களை ஜீரணித்துக் கொள்ள இன்னும் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.இதோ!இப்பொழுதே நானும் குரல் கொடுத்தேன் என்று பதிவு செய்து விட்டு அவரவர் அன்றாடங்களை நோக்கி நகர்ந்து விட்டோம்.தேச வல்லூறுகளின் பிடியில் யாவரும் திணறிக் கொண்டிருக்கிறோம்.உலகளாவிய மனிதர்களாய் பரந்து இருந்தும்,கொடிகளை தூக்கி குரல் கொடுத்தும்,உயிர் கொடுத்தும் சாத்வீகப் போராட்டங்கள் தோற்றுப் போனதன் காரணம் என்ன?

இலண்டனில் நிகழ்ந்த மனித போராட்டங்கள் வெற்றியைத் தராது என்ற தீர்ப்பை முன்பே ஜார்ஜ் புஷ் பெரும்பான்மை குரல்களையும் மீறி ஈராக் மீது படையெடுத்ததன் மூலம் எழுதியது 2003ல்.இப்பொழுது யோசிக்கும் போது மனதுக்குப் படுவது அரசு என்ற அமைப்பில் மனிதப் போராட்டங்களை அடக்க நினைத்தால் அவை வன்முறைகளை விதைக்கின்றன.அடக்காதே!குரல் கொடுத்து சோரட்டும் என்று அரசமைப்பு நினைப்பது இன்னொரு நுட்பம்.குரல் கொடுப்பவனை இரு பகுதியாக்கி மோத விடு என்பது இப்போதைய புதுநுட்பம்.அதுவும் அரசியல் கற்றுத் தேர்ந்த சாணக்கியர்களுக்கு இதுபற்றியெல்லாம் சொல்லித் தரவேண்டுமா என்ன?

முந்தைய கால கட்டங்களுடன் ஒப்பிடும் போது ஓரளவுக்கு பட்டினியில்லா வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுவிட்டோம்.தொடர்ந்த தொட்ட தொண்ணூறு போராட்டங்களிலும் சோர்வடைந்த காரணத்தாலும் இப்பொழுது நுகர்வு கலாச்சாரம் இனிப்பதாலும் சராசரி வாழ்க்கையில் எந்தப் போராட்டமும் வெற்றி பெறுவதில்லை.ஒரு நாள் போராட்டம்,மூன்று நாள் உண்ணாவிரதம்(கூடவே மூன்று மணி நேர உண்ணாவிரதம்)பின் சமரசப் பேச்சு கொடுக்கல் வாங்கல் எனவும் போராட்டங்கள் ஓய்ந்து போய் விடுகின்றன.

ஆனால் சகாப்தங்களை தொட்ட போராட்டமாக விளைவுகள் எப்படியாகிப் போயிருந்த போதிலும் இதோ நமது வாழ்நாளின் கண்முன்னே.அதன் வளைவு நெளிவுகள்,ஏற்ற இறக்கங்கள்,நன்மை தீமை,மகிழ்ச்சி அழுகை,பன்னாட்டுப் பார்வையின் கோப நட்புக் கரங்கள்,ஐ.நாவின் இயலாமை அயோக்கியத்தனம் எனவும்,தேசங்களின் நலன்கள் என்ற பேராசைகளும்,உயிர் மண்ணுக்கு என்ற மந்திரமும் கூடவே ரத்தவெறி விமர்சனமும்,இரு இனங்களின் தம் இருப்பை நிலைநாட்டிக் கொள்ளும் கட்டாயமாய்ப் போய் விட்ட போர்,தியாகங்கள்,மனித இழப்புக்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் என புதிய வால்மீகியோ,கம்பனோ,பாரதியோ,கண்ணதாசனோ எழுதி வைப்பதற்கு காவியம்,வரலாறு எழுதி வைப்பதற்கான அத்தனை கூறுகளும் கொண்ட நிதர்சனமாய் மண்ணும் அதன் மைந்தர்களும் இந்த காலகட்டத்தில்.கால ஓட்டத்தில் பெரும்பான்மை மறைந்து விடும்.ஆனால் ஈழம் தமது வரலாற்றை இலங்கையில் ஏதாவது ஒரு விதத்தில் சொல்லிக்கொண்டே இருக்கும்.குடுகுடுப்பை ஜக்கம்மா ஒரு முறை சொன்ன மாதிரி நிறைய பெத்துக்கங்க!இழப்புக்களை சரிசெய்ய இதுவே மருந்து.

எப்பொழுதோ போட்ட விதையாக இப்பொழுது விருட்சம் கொண்டு திரிகிறது பொருளாதாரச் சரிவு.அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் கண்டால் அத்தனை நாடுகளும் ஆட்டம் காண வைக்கும் சீட்டுக்கட்டு வித்தையை கொண்டிருக்கிறது உலகமயமாக்கல்.வளைகுடாக்களில் பல கட்ட(ட)மைப்புக்களில் அகல கால் வைத்த துபாய் மட்டுமே கடன் கேட்டு கையை நீட்டுகிறது.குவைத்தில் ஒரே ஒரு வங்கி இரண்டு நாள் கதவைச் சாத்திக் கொண்டது.அரசு பெயில் எடுத்து விடுவித்தது தவிர ஏனையவர்கள் அவரவர் நிலையை ஓரளவுக்கு தக்கவைத்துக் கொண்டே உள்ளனர்.சராசரி மனிதர்களின் சராசரி வாழ்க்கை வித்தியாசமின்றி விலைவாசிகள் அதிகரிப்பையும் தாங்கிக் கொண்டே நகர்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் அடிவாங்கினாலும் ஒபாமா அதிர்வுகளை ஓரளவுக்கு உலக நிகழ்வுகளை சமாளித்து செல்வது வரவேற்கத் தக்கதே.அப்படியிருந்தும் மனித இன வெறுப்பாளர்களாய் விமானம் கடத்துவது,ஜட்டிக்குள்ளும் குண்டுப் பொடி தூவி கொல்வதே எமது குறிக்கோள் என்ற மறை கழன்ற மனிதர்களும் சுற்றித் திரிகிறார்கள்.நேற்றைய பத்திரிகையில் ஒரு ஜட்டியும், ஜட்டிக்குள் தூவிய குண்டுவெடிப்பு பவுடரும் படமும்,செய்தியும் போட்டிருந்தார்கள்.படச்செய்தி பார்த்த அந்தக் கணத்தில் தோன்றியது அடப்பாவிகளா!இனி அங்கேயும் ஸ்கேன் தானா போ.இன்றைக்கு செய்தியில் டச்சுக்காரர்கள் இனி முழு உடலும் ஸ்கேன்தாண்டி ன்னு விளம்பரப் படுத்திட்டாங்க.(எனக்கெல்லாம் கோவா பீச்சுல குளியல்(குளியல்ன்னே போட்டுக்கறேன்,பின்ன அதுக்கு வேற யாராவது சீ!நிர்வாணமான்னு விவகாரம் கிளப்பிட்டா),ஹாஸ்டலில் ராகிங்க்ல ரயில் விட்ட பழக்கமெல்லாம் இருக்குது.கவலைப்பட வேண்டியவர்கள் ஜட்டியோட நிற்பது பத்தி கவலைப் படும் கோவி.கண்ணன் போன்ற அந்நிய நாட்டுக்காரர்களே:)கோவி!சும்மா!லூலாயி!இன்றைக்கு உங்க பதிவு பார்த்த ஞாபகத்துல).

இந்த சுதந்திரமிழப்பிற்கெல்லாம் அடிப்படை தேடினால் மதம் என்ற மதம் என்ற அகண்ட உலகளாவிய காரணம் மதம் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் காலகட்டத்திற்கு மனித இனம் வந்து விட்டது என்பது தெளிவாகிறது.தமிழ் இணைய நண்பர்களுக்கு நற்குடியும்,கவிதைகளும் விவாத களமாய் வருட இறுதியாகிவிட்டது.மாதக் காளான்களாய் எத்தனை விவாதங்கள் சூடாகிப் பின் தணிந்து போனது.இதுவும் குளிரும்.இந்தச் சுற்றில் மாட்டிக் கொண்டவர்கள் பெண்களாய் இருக்கும் காரணம் கொண்டும்,மௌனமாய் கவனித்த காலங்களில் மனதாலே துரத்தப்பட்டவர்களும் நிறைய பேர். வீடு,அதன் சூழல்,அலுவலாக உழைக்க வேண்டிய கட்டாயம் அனைத்தையும் கடந்து பெண்கள் சமூக அக்கறை கொள்வதென்பதே பெரிய விசயம்.அப்படியும் கருத்துப் பரிமாறல்களுக்கு சிலர் துணிந்து வரும்போது துரத்தியடிக்காமல் வரவேற்கட்டும் ஆணாதிக்கம்.ஒரு இடுகையின் பொருள் அதன் பின்னூட்ட பரிமாணங்கள் என்று எவ்வளவு ஆழப்படுகின்றன? விவாதத்துக்கு வித்தாகும் இடுகையில் சொல்ல வந்த கருத்தை விட தூண்டி விடும் பின்னூட்டங்களே ஒரு இடுகையின் பலமும் பலவீனமும்.இங்கே தீ வைத்து பலவீனம் கொள்ளச் செய்தது ஒரு பின்னூட்டமே எனபது அதுசரியின் இடுகை நோக்கும் போது புரிகிறது.

அனுபவமாய் இந்த வருடம் எனக்கு வாய்த்தது மிக நெருக்கமாய்த் தெரிந்த மூன்று பேர் எந்த வட்டத்துக்குள் சிக்காமல் கூட கிறுஸ்தவனாய் மனம் திரிந்து போனது.சுயபுத்தியாலும்,பைபிளைப் படித்தேன்....இனித்தது அதனால் நான் மதம் மாறிவிட்டேன் என்று சொல்லியிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன்.ஆனால் மதமாற்றம் ஒன்றே தொழிலாய் மனதர்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு அதற்காய் வலைவீசித் திரிகிறார்கள் சில இந்தியர்கள்.அதில் மாட்டிக்கொண்ட மின்மினிப் பூச்சிகளாய் இவர்கள் மாறிப்போனது கவலையை மட்டுமே தருகிறது.நேற்று வரை எந்த வித அடையாளங்களுமில்லாமல் மனிதர்களாய் அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகளை மட்டுமே நோக்கி நடைபோட்ட இவர்களுக்கு திடிரென்று அங்க அடையாளங்கள் தோன்றி விட்டன.இவர்களுக்கான சட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசாங்கமோ அதன் தூணான தூதரகமோ எந்த உதவியும் செய்யவில்லை.தூதரக உதவியில் பலனில்லாமல் மனம் சோர்ந்த நிலையில் கடவுளைத் தேடினவர்கள் இவர்கள்.குடும்பத்துடன் இங்கேயே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன காரணம் கொண்டும் விசாவின் காலம் முடிந்து போனது தவிர இவர்கள் மீது குற்றமேதுமில்லை.பிரார்த்தனை என்ற கூட்டு மந்திரத்தில் இவர்கள் தம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.எனது கவலையெல்லாம் இவர்களின் குழந்தைகள் மதம் என்ற மாயையில் நிலை தடுமாறிப் போகும் எதிர்காலம்தான்.இப்படி ஏதாவது ஒரு கோட்டில் ஒரு கால கட்டத்தில் இடம் மாறுதல், பழக்க வழக்கங்கள்,படையெடுப்புக்களின் ஆதிக்கம் என எல்லோரும் மதம் என்ற வலைக்குள் சிக்கியே விடுகிறோம்.ஜேம்ஸ் கேமரானின் அவதார் ஐமேக்ஸ் 3D ஜாலங்களுடன் ஃபெண்டசி,தொழில் நுட்ப பரிசோதனைகளை செய்து கொண்டாலும் கதையின் கருவாக போர் என்ற அழிவில் இனம் எப்படி மாற்றப்படும் ஒரு மெல்லிய இழை ஓடிக்கொண்டிருக்கிறது.

இணையம் வரமா?சாபமா என்ற குழப்பமாக வலை தவிர கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசான் இல்லை என்ற மகிழ்வும்,எத்தனை எத்தனை மூளைகளின் பின்னல் எனும்போது பிரமிப்பு ஒரு பக்கமும்,பிரமிப்பை காலை வாரிவிடவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வுகள் நிகழவே செய்கிறது.ஒன்றுமே அறியாமல் கண்ணை மூடிக்கொண்டால் பூனைச் சந்தோசமாய் உலகம் இருண்டு அறியாமையே சந்தோசம் என்ற ஆங்கில வார்த்தைகளின் அர்த்தமும் உண்மையாகிப் போய் விடுகிறது.ஆனால் தேடல் என்ற தாகம் மட்டும் இணையம் சுற்றியும் சுற்றாமலும் வருவதை தவிர்க்க இயலவில்லை.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Monday, December 28, 2009

அவதார்க்குப் போட்டி

எல்லோரும் அவதார் பற்றி பேசிகிட்டு இருக்கையில் முக்கியமா ஹாலிவுட் பாலா அசத்தும் எழுத்து நடையில் படத்துல என்னமோ இருக்கும் போலதான் தோணுது.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.அதற்கு பதிலா ரோட்டோரமா வித்துகிட்டிருந்த To catch a Thief ன்னு Alfred Hitchcock டி.வி.டி மாட்டுச்சு.ஆல்ஃபிரட் ஹிட்சாக் பெயர்க் காரணம் ஒன்று போதுமே படம் பார்க்க.படம் பழைய அரத புராண 1955 வருடத்தையது.போலிஸ் திருடன் ஓடிப் பிடித்து விளையாடற கதையுடன் ஆங்கில டயலாக் விரும்பினால் மட்டுமே பார்க்கக் கூடிய படம்.எனவே சொல்ல வந்தது கதை பற்றியல்ல.

தொழில் நுட்ப ரீதியாக மாற்றங்கள் வருவது வரவேற்கப் படவேண்டிய ஒன்று என்றாலும் சில தொழில் நுட்பங்கள் முன்பே சிறப்பாகத்தானே இருந்துள்ளது.கால ஓட்டத்தில் அவையும் ஏன் அடித்துக் கொண்டு போய் விடுகிறது என்று தெரியவில்லை.டெக்னிக் கலரில் முன்பே படம் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தை Vistavision என்ற தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போது ஆல்ஃபிரட் ஹிட்சாக்கின் கதை சொல்லும் நேர்த்தி,ஐம்பதுகளில் இருந்த கார்களின் அழகு,இப்போதைக்கும் அசத்தும் உடையலங்காரம்,மெல்லிய இசை,கருப்புக்குள் வண்ணங்களைத் தேய்த்தால் ஒளிரும் அழகு,சில நிமிடங்களே தோன்றி மறையும் வானவேடிக்கையின் வித்தியாசமான வண்ண வேடிக்கை என படம் டெக்னிக் கலரில் விஸ்டாவிசனில் அழகு கொஞ்சுகிறது.

பழைய படங்களின் அழகு எப்படி அதிகரிக்கிறது என்ற வித்தையையும் இப்பத்தான் கண்டு பிடிச்சேன்.முன்பெல்லாம் மொட்டை மாடில வட்டமான சாட்டிலைட் சட்டியை வச்சிட்டு யாரையாவது கூப்பிட்டு ட்யூன் பண்ணச் சொல்லி வயரை வீட்டுக்குள்ள கொண்டு வந்து எஸ்.டி.பில சொருகிட்டு 21 இன்ஞ் தொலைக்காட்சிப் பொட்டிய பார்த்தா முடிஞ்சது பிரச்சினை.கிடைக்கிற அத்தனை தொலைக்காட்சியையும் ரிமோட்ல உருட்டிகிட்டே இருக்க வேண்டியது.இல்லைன்னா திருட்டு வி.சி.டில எதையாவது தமிழ்ப் படத்தைப் போட்டு காலம் போய்கிட்டிருந்தது.

ஒரு நாள் தெரியாம ஹாலிவுட் பாலா ஊட்டுக்குள்ள கண் சுழட்டுனதுல வந்தது மாற்றங்கள் எல்லாம்.இதுக்குப் பேரு பிளாஸ்மா,இதுக்குப் பேரு எல்.சி.டி!இதெல்லாம் இன்னும் இரண்டு வருசத்துக்குத்தான்,அப்புறமா இன்னும் இரண்டு மூணூ டெக்னாலஜி புதுசா வரப்போகுதுன்னு சொல்ல கடைகளை ஏறி இறங்குனா பிளாஸ்மா டெக்னாலஜிக்கு வயசாயிடுச்சு.அதனால குறைஞ்ச விலை.எல்.சி.டி 32 இன்ஞ்சா அதுக்கு பழைய CRT பரவாயில்லை போல தெரியுது.40 ல துவங்கி 52 வரைக்கும்தான் ரெசல்யூசனோட அதிர்வுகள் கண்ணுக்கு தெரியுது.பாலா சொல்ற புதுசு கண்ணா புதுசு டெக்னாலஜியெல்லாம் இப்போதைக்கு விபரம் தெரிஞ்சுகிட்டு எதிர்காலத்துக்கு தயாராக மட்டுமே.

சரின்னு சொல்லி ஒரு சோனிப் பய பெட்டிய வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டுப் போக முடிஞ்சது தலைவலின்னு நினைச்சு ரிமோட்ட உருட்டுனா CRT பழைய ஜப்பான் பொட்டியோட சவுண்டும்,படத்தோட ரெசல்யூசன் மாதிரி இல்லையேன்னு மனசு ஓரத்துல சந்தேகம்.அதுலேயும் திருட்டு வி.சி.டில படத்தைப் பார்த்தா ஏதோ பாதி புரிஞ்சும் பாதி புரியாமலும் வசனங்கள்.(ஆனா நம்ம ஊர் ஏய்!ஏய்ங்கிற கதாநாயகன்,வில்லன் சத்தம் மட்டும் தெளிவா கேட்குது).ஹாலிவுட் பாலாவோ புதுசு புதுசா படமா ரிலிஸ் பண்ணிகிட்டுருக்கார்.பின்னூட்டமின்னா இரண்டு வரி எழுதிப் போடலாம்.எல்.சி.டி சரியில்லைங்கற விபரத்தை சொல்லவும் தயக்கம்.சரின்னு யார் சவுண்டு விடறப் பார்ட்டி,சவுண்ட சரி செய்யற பார்ட்டின்னு இணையத்துல தேடுனா வந்து சேர்ந்த தளம் hifivision.com.(பெரும்பாலோர் பெங்களூர்,சென்னைன்னு சரியான சவுண்டு பொட்டிப் பிரியர்கள் போல இருக்குது.ஊர் ஊருக்கு பதிவர் கூட்டம் போடற மாதிரி இவர்களும் இந்த மாதம் சென்னையில் சவுண்டுப் பொட்டி கூட்டம் போட்டிருக்காங்க போல தெரியுது.)

எங்காவது கடைல, வீட்டுக்குள்ள சினிமா (Home theatre)ன்னு பார்த்தா ஒரு அஞ்சு ஸ்பீக்கர் பெட்டி சின்னதாவும் அதுக்குப் பக்கத்துல ஒரு பெரிய பெட்டி (5.1)கண்ண முழிச்சுகிட்டு உட்கார்ந்திருக்கும்.அத வெச்சிகிட்டே விற்பனையாளர் காட்டும் அலம்பல் சொல்ல இயலாது.ஆனா இந்த ஹைபை விசன் ஆட்கள் சொல்றதெல்லாம் "யோவ்!யானை பிளிறதுக்கும் தூக்கணாங்குருவி கூவறதுக்கும் வித்தியாசமில்லையான்னு யானைக்கால் மாதிரி பொட்டிகளைப் பற்றி ஆணி பிடுங்கிட்டுருக்காங்க.இதையும் இன்னும் பல சவுண்டு பார்ட்டிகளை கேள்விப் பட்டு முதல்ல தெரிஞ்ச பேர்ன்னு யமாஹா கடைக்குப் போனா கபாயன் பிலிப்பைன்ஸ்காரன் சின்னதா அஞ்சு போஸ் ஸ்பீக்கர்ஸ்,கூடவே அக்கஸ்டிமஸ்ங்கிற ஒரு பெரிய பெட்டிய இதுதான் சஃப் வூபர்ங்கிறான்.இது மட்டும் பத்தாது இதுக கத்தறதுக்கு ஒரு வாத்தியார் சொல்லிக் கொடுக்கனுமின்னு ِA/V ங்கிற Audio/Video Receiver கூட தேவைங்கிறான்.இதென்ன அங்குசம் வாங்கப் போய யானையே வாங்க வேண்டியிருக்கும் போலன்னு நினச்சு சரி வாங்கலாமா வேண்டாமான்னு குழப்பத்துல நாளைக்கு வாரேன்ன்னு வந்து இணையம் மேஞ்சா,ஏன் நாங்கல்லாம் இருக்குறது உனக்கு கண்ணுக்குத் தெரியலையான்னு Denon,Onkyo,Kef,Infinity,Paradigm,Flaunce,Boston,Pioneer இன்னும் பல கண்ணை சிமிட்டுது.எனக்கோ தலை சுத்துது.

சுயதேடலில் சுற்றி வந்து நின்ற இடம் Sony LCD TV,Onkyo A/V, PolkAudio Speakers.இப்ப மேலே சொன்ன டெக்னிக் கலர்,விஸ்டா விசன் பழைய தொழில் நுட்பம் நல்லாவே படம் காட்டுது.

டிஸ்கி: சென்னை மட்டும் தமிழக நகர வாசிகளுக்கு சினிமா தியேட்டரே நல்லது.எப்பவாவது தியேட்டருக்குப் போனோமா பாப் கார்ன் கொரிச்சோமான்னு இருந்துக்கலாம்.இல்லைன்னா கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் தீட்டிரும்.(Unless you are a hardcore music lover then there are good models available both new and old systems to enjoy your favourite music)

வளைகுடா,அமெரிக்க,ஐரோப்பாங்காரங்களுக்கு ஆங்கிலப் படமாகட்டும்,அய்ங்கரனாகட்டும் HT சினிமாவே சிறந்த வழி.

(நான் தினமும் தமிழ்மணத்துல சுத்திகிட்டுத்தான் இருக்கேன்.ஈழம் சென்ற விதம்,செல்லும் விதம் மனதை நிறையவே பாதித்தது.பாதிக்கிறது.நிகழ்வுகள் யாவும் எழுத்துக்கு கூட தடையே.எனவே பெரிதாக எழுதும் எண்ணமெல்லாம் இல்லை.எழுத்தில் கூடவே பயணித்த ஏனைய நண்பர்கள் பலரும் அக புற காரணங்களுக்காக அதிகம் கண்ணில் தென்படுவதில்லை.இப்போதைக்கு தொடர்ந்து வலம் வரும் இரு வீடுகள் வானம்பாடிகள் பாலா மற்றும் ஹாலிவுட் பாலா மட்டுமே.அவ்வப்போது வருவேன்.ஆனால் எப்பொழுது வருவேன் என்பது எனக்கே தெரியாது.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சில தினங்களுக்கு முன்னதாகவே.

Thursday, October 1, 2009

மருத்துவம் பார்க்கலையோ மருத்துவம்!

வளைகுடா சீதோஷ்ண நிலையில் உணவா , சுவாசிக்கும் உஷ்ண,குளிர்சாதனக் காற்றா எதுவோ மனுசங்களை குண்டு பண்ணியே தீருவேன்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறது.இங்கிருந்து மீனு மாதிரி கொஞ்சம் தள தளன்னு இந்தியாவுக்குப் போனா ஒரு மாசத்துல திரும்ப வரும்போது காஞ்ச கருவாடு மாதிரி எல்லோரும் திரும்ப வர்றாங்க.அது இந்தியாவில் சுற்றும் அலைச்சலா,உணவா,நீரா,காற்றா எனத் தெரியவில்லை.எப்படியோ பெரும்பாலான இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சிகளை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைத்துக் கொள்வதில்லை பணம் என்ற பொருளாதார தேவை ஓரளவுக்குப் பூர்த்தியானாலும் கூட.

இந்தியாவில் இதய நோய்கள் அதிகரிக்கின்றன என்ற சமீபத்து செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது.அதெப்படி அத்தனை வெயிலில் வேர்த்து விறு விறுத்து பஸ் ஏனைய பயணங்கள் செய்து உழைத்து அலுத்தும் நோய்கள் அதிகரிக்கின்றன.காரணம் இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்காமல் போவதாலா?பல் துலக்குவது,குளிப்பது மாதிரியான அன்றாட அலுவல்களில் ஒன்றாக கட்டாயம் காலையில் செய்ய வேண்டிய பணி உடற்பயிற்சி.முந்தைய நாளின் சோர்வான மனநிலையையும் உற்சாக கட்டுக்குள் கொண்டு வரும் உடற்பயிற்சி.அதிக நாள் உடற்பயிற்சி செய்யாமல் துவக்கமாக முதல் நாள் ஆரம்பித்தால் அடுத்த நாள் உடல் வலிக்கும்.உடல் வலியையும் பாராது இரண்டாம் நாள் தொடர்ந்தால் மூணாவது நாள் வலி தெரியாது.மூணாவது நாளிலிருந்து இரண்டு வாரம் தொடர்ந்து விட்டால் பயிற்சி பழக்கம் விடாது தொடரும்.

எனக்கு சரக்கு கிடைக்காத ஊர் காரணத்தாலும் அதன் காரணம் கொண்டே மது மீது ஈடுபாடு இல்லாத காரணத்தாலும் மது அருந்துவதில்லை.இருந்தாலும் துறவறம் பூண்டு இல்லறம் பற்றியெல்லாம் சிலப்பதிகாரம் எழுதின இளங்கோ மாதிரி நானும் சில சரக்கு குறிப்புகளை சொல்கிறேன்.பின்னூட்டத்தில் இதுபற்றியெல்லாம் நோண்டக்கூடாது என்ற அன்பு எச்சரிக்கையுடன் சில குறிப்புகள்.

அடப்போய்யா!நானெல்லாம் மட்டை போடற பார்ட்டி.இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு யாராவது நினைக்கிறவங்களுக்கு அதிகமான உடலுக்கு தேவையில்லாத ஆல்ஹகாலை உடற்பயிற்சி உள் இழுக்கும் காற்று வெளியேற்றும்.சரக்கடிச்சாலும் தவறில்லை உடற்பயிற்சி செய்யுங்கள்.

எனது மதிப்பீட்டில் சரக்கடிப்பது ஒரு கலை.ஆனால் அதனைக் கற்றுத் தேர்ந்தவர்களாய் பெரும்பாலோர் இல்லை.தண்ணி போடற மச்சிக சாராயம்,கள்ள சாராயம்ன்னுதான் கேட்டிருப்பீங்க.இது ரெண்டையும் விட சொந்த சாராயம்ன்னு ஒண்ணு இருக்கறது யாருக்காவது தெரியுமா?தெரியாட்டி தெரியாமலே இருப்பது நல்லது:)

எது சரியான தண்ணி போடற முறைன்னு தெரியல.பிலிப்பைன்ஸ்காரங்க நல்லா சாப்பிட்டு விட்டு சின்ன சின்னதா கல்ப் அடிக்கிறாங்க. நாம் தண்ணி போட்டு முடிஞ்சு அப்புறமா சாப்பிடறோம்.எப்படியோ சரக்கடிச்ச பிறகு வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்ப்போம்ன்னு சொல்றதுக்குப் பதிலா ரிலாக்ஸா ஒரு கருப்பு காபி குடிப்பது தலைவலி வராம தடுக்கும்.(உனக்கெப்படி தெரியும்?F&Bல படிச்சது)ஒரு டுனீசியாக்காரன் பழம் சாப்பிட்டு விட்டு உணவருந்துவது விஞ்ஞான பூர்வமா உடலுக்கு நல்லதென்றான்.நாம் சாப்பிட்டு விட்டு பழங்கள் அருந்துகிறோம்.எது சரியான முறை?தெரிந்தவர்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்.

கல்லூரிப் பெண்கள் KFC, பிஸாக்களை தவிர்ப்பது நல்லது.அம்மாக்கள் தரும் இட்லி,தோசை,உப்புமா நல்லது.கூட மாட அம்மாக்களுடன் அடுப்பறையில் உதவுவது உடல்,மனரீதியாக உதவும்.

முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் பார்த்துகிட்டு இருந்தாங்க.இப்ப அந்தப் பளுவோடு அலுவல் வேலைக்குமான பளுவும் வந்து சேர்ந்து பெண்களை யந்திரங்களாகவே மாற்றிய பெருமை ஆண்குலத்துக்கு சேரும்.30 வயதுக்கு மேல் சதை போடுதல்,அப்புறம் சர்க்கரை,அழுத்தம் போன்ற நோய்களை பெண்களும் தவிர்க்க உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.குழந்தைப் பேறு காலம் கூட நடை,சின்ன சின்ன வேலைகள் செய்வது அவசியம்.

புள்ளத்தாச்சிங்கிற கரிசனத்துலயும் மருத்துவர்கள் உதவியாலும் சுகப்பிரசவம் வரை எல்லோரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.ஆனால் அதற்குப் பிறகான பெண்களுக்கான தாய்மை வாழ்க்கை மாறுபாடும் உடற்பயிற்சிக்கு நிரந்தர ஓய்வைக் கொடுத்துவிடும்.பிரசவத்திற்கு பின்னான அடிவயிற்று சதை தொப்பையை உருவாக்கும் பிரச்சினைகளை பெண்கள் தவறவிட்டு விடுகிறார்கள்.ஒரு மாதம் வயிற்றுப் பகுதிகளுக்கான மஜாஜ்,மற்றும் சுடு நீர் குளியல் அவசியம்.இங்கே ஒரு கேரளத்துப் பெண் புள்ளத்தாச்சிக்கு தண்ணி ஊத்துறேன்ன்னு சொல்லியே ஒரு மாத அட்வான்ஸ் புக்கிங்க் செய்யுது.இந்த தண்ணி ஊத்துற விசயத்தில் பெண்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

அதென்னமோ தெரியல அத்தை,சித்தின்னு அம்மா ஒரு கிலோ,ரெண்டு கிலோ கருப்பட்டியும் அதுல கால்பாதி குருமிளகும் சேர்த்து அரிசு குத்துற கல்லுல உலக்கையால உஸ்,உஸ்ன்னு சத்தம் போட்டுகிட்டே கருப்பட்டியையும்,குருமிளகையும் மாவு பண்ணி உருண்டை செஞ்சு அத்தை,சித்தி,அக்காமார்களுக்கு பிரசவ சமயம் கொடுப்பாங்க.உர்ருன்னு பக்கத்துல நின்னு பார்த்துகிட்டு இருக்கும் எனக்கும் ஒரு விழுது கருப்பட்டி சொரக்குன்னு ருசியா கிடைக்கும்.பிரசவம் சமயத்தில இதைத் தின்னுட்டு அத்தை,சித்திகள்,அக்கம் பக்கத்து அக்கா மார்கள் பத்து நாளோ இல்லை பதினைந்து நாளோ காலத்துக்குள் தண்ணிக் குடத்த எடுத்து இடுப்புல வச்சிக்கிட்டு தண்ணி சுமக்கிற தைரியம் வந்துரும்.இப்ப அரசல்,புரசலா அம்மணி மூலமா சில தாய்மார்கள் குறைகள் கேட்க நேர்ந்தது.தற்காலப் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும் கூட திராணியில்லாமல் போய்விடுகிறார்கள்(This is irrelevent of nationality).இந்தப் பெண்கள் எல்லாம் இந்தியா,இலங்கை,பிலிப்பைன்ஸ் ஆசிய நாட்டு வட்டத்துக்குள் வருபவர்கள்.

பரட்டை தலை ஸ்டைல் எல்லாம் முடி உதிர்தலில் கொண்டு வந்து விட்டு விடும்.நல்ல பிள்ளையா தேங்காய் எண்ணெய் தேய்த்து பக்க,நடு வகிடு எடுத்து பள்ளிக்கு,பின்னாடி டை கட்டுற வயசு வரைக்கும் செய்தால் தலை முடி கொட்டுதல்,நரை போன்றவைகளை தள்ளிப் போட முடியும்.கேரளத்துப் பெண்களின் நீண்ட முடிக்கு தேங்காய் எண்ணெய் காரணமென நினைக்கிறேன்.ஷாம்பு குளியல் மாதம் ஒரு முறை வைத்துக் கொள்ளலாம்.நல்லெண்ணெய் குளியல் வாரம் ஒரு முறையும் அதுவே உச்சந்தலைக்கு தினமும் தேய்த்துக் குளிப்பது சூடு குறைக்கும்.கண்ணுக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணை தினமும் விட்டுக் கொண்டு பள்ளி,அலுவல் செல்லலாம்.

நிறையப் பேர் மினரல் வாட்டர் அருந்துவது உடலுக்கு நல்லதென்று நினைக்கிறார்கள்.ஆனால் தொடர்ந்து குடிக்கும் மினரல் வாட்டர் கிட்னியில் கல்லைச் சேர்க்கும்.பதிலாக நீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.

இதெல்லாம் செய்தும் சில சமயம் இருமல்,சளி போன்ற வைரஸ் வைராக்கியர்கள் வந்து விடுவார்கள்.ஒரு முறை இப்படி தொடர் இருமலில் 3 நாட்கள் அவதிப்பட்டு அலோபதி அண்ணன்கள் எதையெல்லாமோ எழுதிக் கொடுத்தும் பலனில்லாமல் நம்ம கிட்னி உபயோகிச்சதுல நல்ல பலன் கிடைத்தது.

தேவையான பொருட்கள்:

பசும்பால் - 250 மில்லி
தேன் - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 25 மில்லி
குங்குமப் பூ- சிட்டிகை தூவற மாதிரி
இஞ்சி - பெரும் விரல் அளவு
குருமிளகு-இடிச்சா பெரும்விரல்,ஆள் காட்டி விரலில் சிக்குமளவு
மஞ்சள்- கொஞ்சமோ கொஞ்சம்

முதலில் தண்ணீரில் வெட்டிய இஞ்சி,மஞ்சளை இட்டு கொதி வந்ததும் பாலை ஊத்தி குருமிளகை தூவவும்.சில நிமிடங்களில் பால் கொதித்து வரும்போது இறக்கி வைத்து ஒரு கப்பில் ஒரு தேக்கரண்டி தேன்,குங்குமம் சிறிது தூவி சூடான பாலை ஊற்றி கலக்கவும்.இருமல்,சளி மருந்து தயார்.

( இதில் இஞ்சி,குருமிளகு,மஞ்சளைத் தவிர்த்தால் இது வயாகராவின் அல்லக்கை)

இறுதியாக ஜன்னல் பக்கத்தில் நின்னுகிட்டு சைட் அடிக்கப் பிடிக்குமா இல்லை ஒரே கடி கடித்த ஆப்பிள் பிடிக்குமான்னு என்னைக் கேட்டால் ஜன்னல் என்றே சொல்வேன்.ஆமா!நம்ம பில்கேட்ஸ் என்ன செஞ்சுகிட்டு இருக்காரு?யாராவது பார்த்தீங்கன்னா ஒரு ஹலோ எனது சார்பா சொல்லுங்க!

Tuesday, September 29, 2009

உன்னைப் போல் ஒருவன்,தி வென்ஸ்டே- ஒரு ஒப்பீடு

பொதுவாக ஒரு மொழி திரைப்படத்தை மற்ற மொழிக்கு மாற்றும் போது முந்தைய மொழியின் நிறைகளை தக்க வைத்துக் கொண்டு விட்டுப்போன குறைகளை மாற்றம் செய்வது வியாபார நலன் கருதி செய்யும் தொழில் தந்திரங்கள்.அந்த வகையில் தமிழ் கஜனி இந்தி கஜனி ஆகும்போது இந்தி கஜனி நன்றாக மொட்டை போட்டு,சிக்ஸ் பிக்கெல்லாம் வைத்து நன்றாகவே சண்டை போட்டான்.அதே மாதிரி இந்தி வென்ஸ்ட்டே மூலம், தமிழுக்கு உன்னைப் போல் ஒருவனாகும் போது கதை மாற்றம் இல்லாமல் இருந்தாலும் நடிகர் தேர்வு,இசை,வசனம்,ஒளிப்பதிவு,இயக்கம் என தமிழ் நன்றாகவே இருந்தது.

படம் சார்ந்த இணைய இடுகைகளில் தெரிந்த நுண்ணரசியல்கள் தமிழை விட இந்தியில் அதிகமாகவே பட்டது.ஆனால் அதையெல்லாம் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவில்லை.உதாரணத்திற்கு காவல்நிலையத்தில் உட்கார்ந்து இருக்கும் நசுருதீன் ஷா வைத்திருக்கும் பையின் J&K எழுத்தைப் பார்த்து விட்டு காவல்துறை FIR எழுதுபவர் விளிக்கும் ஹலோ ஜம்மு & காஷ்மீர்!இந்தியில் வேகாத இந்துத்வா பருப்பெல்லாம் தமிழகத்தின் சூட்டில் நன்றாகவே வேகிறது.இந்தியில் படம் வந்ததும் தெரியவில்லை.போனதும் தெரியவில்லை.இந்தியில் படம் பார்ப்பது என்பது சமூகம் சாராத ஒரு பொழுது போக்கு.ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் எழும் விவாதங்கள் நம்மை பல்வேறு திசைகளுக்கு கொண்டு செல்கின்றன.காரணம் நமது திரைப்படம்,அரசியலின் அன்றாட வாழ்க்கையின் ஆளுமைகள். உன்னைப் போல் ஒருவன் தான் திரைப்படம் என்ற பார்வையில் தி வென்ஸ்டேவை விட சிறந்த படம்.ஆனால் நசுருதீன் ஷா,கமல் இருவரின் நடிப்பில் மட்டும், யார் எனக் கேட்கும் அனுபம் கேரின் கேள்விக்கு பதில் அளிக்கும் நசுருதீன் ஷாவின் சமூகக் கோபங்களுக்கான வார்த்தைகளில் வென்ஸ்டேவின் இறுதி நீண்ட வசனங்கள்,நசுருதீன் ஷாவின் நடிப்பை வெற்றியடையச் செய்து விடுகிறது.வசனத்தின் புரிதலின் சமூக கோபங்களில் சில இங்கே:-

அனுபம் கேர்: யார் நீ?

நசுருதீன் ஷா: நான் பஸ்,ரயிலின் படிக்கட்டில் ஏறுவதற்கு பயப்படுகிறவன்.நான் வேலைக்குப் போகிறவன்,சரியாகப் போய் சேர்ந்து விட்டேனா என்று அரைமணி,ஒரு மணி நேரத்துக்கு மனைவியால் விசாரிக்கப் படுபவன்.டீ குடித்தாயா?சாப்பிட்டாயா?நான் உயிரோடிருக்கிறேனா என விசாரிக்கப் படுபவன்.

நான் சில சமயம் மழையில் சிக்கிக் கொள்பவன்,சில சமயம் வெடிகுண்டுக்குள் மாட்டிக்கொள்பவன்.நான் தாடி வைப்பவனை,தொப்பி வைப்பவனைப் பார்த்து பயப்படுகிறவன்.(ஏன் இந்தி பாராட்டும் விமர்சனங்கள் இந்த நுண்ணரசியல் இடைச் செறுகலை நசுருதீன் ஷா மேலோ இந்தி இயக்குநர் மேலோ சுமத்தவில்லை?)வியாபாரத்துக்கு கடை பார்த்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பவன்.சண்டை யாருக்கோ இருக்கட்டும்.சாகிறவன் நான்.I am just a stupid common man.தினமும் ரொட்டிக்கான கவனத்தில் இந்த வேலை தாமதமாகி விட்டது.உங்களுக்குத் தெரியுமா?துணி துவைக்கும் சோப்பு கூட குண்டு தயாரிக்கப் பயன்படுகிறதென்று!சாதாரண மனிதனுக்கு இதை விட உபயோகமான பொருள் இதுவரை தயாரிக்கப் படவில்லை.

தவறு நம்முடையது.மிக சீக்கிரம் நிகழ்வுகளைப் பழக்கப் படுத்திக் கொள்கிறோம்.குண்டு வெடிப்பு மாதிரி ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தால் சேனல் மாற்றி சேனல் பார்த்து விட்டு,SMS அனுப்பினோமா,போன் செய்தோமா,பின் எனக்கு ஒன்றும் ஆகவில்லையென்று அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.அரசாங்கம்,காவல்துறை,உளவுத்துறை என பூச்சிக் கொல்லிகள்(Pest controllers) நிறைய இருக்கிறீர்கள்.Why are you not nibbing them in the bud?

All this system is flawed.நாங்கள் இப்படித்தான் உங்களைக் கொல்வோம்.உங்களால் என்ன செய்ய முடியும்? Yes!they asked this question on a Friday and repeated it on a Tuesday and now I am replying back on Wednesday.

Wednesday, September 23, 2009

உன்னைப் போல் ஒருவன்-திரை,சமூக விமர்சனம்

உன்னைப் போல் ஒருவன் படம் எப்ப வெளியீடுன்னு தெரியாம தமிழ்மணம் பக்கம் வந்தா பதிவர்கள் ஆளாளுக்கு விமர்சனம் போட்டுத் தள்ளுறாங்க.கோணங்கள்,பார்வைகள் பலவாக இருந்தாலும் இதுவே படத்தின் வெற்றிக்கான இணையம் சார்ந்த படவிமர்சன வெற்றி எனலாம்.

இது பத்தாதுன்னு உண்மைத் தமிழன் அனைத்து விமர்சனங்களையும் தொகுத்து வழங்கிட்டாரு.நேற்று 30 நிமிட நெடுஞ்சாலை வாகனப் பயணத்துல படத்தையும் பார்த்துட்டு வந்தாச்சு.சரி மக்கள் என்னதான் சொல்றாங்கன்னு அங்கே இங்கேன்னு போய் பார்த்தா படம் ரசிகத்தன்மைக்கும் அப்பால் புலப்படும் இரண்டு விசயங்கள்.ஒன்று யானை தொட்ட பதிவு விமர்சனங்கள்.இரண்டு கமலஹாசன் என்ற பெயர் காரணம் மட்டுமே பட உணர்வுகளுக்கு அப்பால் எழும் வர்ண முலாம் பூசும் விமர்சனங்கள்.ஒரு வட்டத்துக்குள்ளோ அல்லது ஒரு வட்டத்தை சுற்றி வெளியே வர முயற்சிக்கும் திரைப்பட இயக்கங்களுக்கும் அப்பால் கமல் புத்திசாலித்தனமாக பரிட்சித்துப் பார்த்து விடக் கூடாதே:)

படம் ஊத்திக்கணுமுன்னு வேண்டுதலோ அல்லது நாங்கள் சொல்வது என்னவென்று அறிந்தும் அறியாமலிருக்கிறோம் என்ற எண்ணமோ அல்லது மாற்றுக்கருத்துக்கள் என்ற பெயரில் எழும் நுண்ணரசியல் எழுத்தோ அத்தனைக்குமாய் வந்து விழும் விமர்சனங்களையும் மீறி வியாபார ரீதியாக மற்றும் தற்கால சிந்தனை ரீதியாக உன்னைப்போல் ஒருவன் வெற்றி பெறும் என நம்புகிறேன்.

இந்தி பிடிக்காத தமிழக எழுத்துக்களுக்கும் கூட இந்தி வெட்னஸ்டேதான் டாப் என்ற சொல்லாடல்களும் கூட புதன்கிழமைதான் எப்படியிருக்குமென்ற டி.வி.டி ஆவலை தூண்டுகிறது.இருந்தும் மொழிக்கென்று புரிதல் ஒன்று உண்டு.முகம் காட்டாத முதல்வரின் குரல்,செயலாளருடன் கைபேசியில் பேசும் வார்த்தை நுணுக்கங்களை,அரசியிலை இந்தி மூலம் கொண்டுவந்துவிடுமா என்ன?முதல்வரின் செயலாளர் ராகவன் மராருடன் பேசும் வசனங்களின் வீரியம் - முதல்வர் தொட்டு முதல்வரின் செயலாளர் வரை பிரச்சினையிலிருந்து நழுவ முயலும் மனப்பான்மை,சுமையை காவல்துறையிடம் சுமத்தும் அரசியல், அரசுத்துறை (பீரோகிராட்டிக்) மனோபாவம் என்ற மூலப் பிரச்சினைகளை கேமிராவும் வசனமும் பேசுவதை விட்டு விட்டு காமிரா முகப்பூச்சுக்கும் அப்பால் தெரியும் லட்சுமியின் முதுமையை படம் பிடிப்பதில் சிலருக்கு வருத்தம்:)

படம் துவங்கி குண்டு செய்வது எப்படி என்ற சோல்டரிங் நுணுக்கங்களையெல்லாம் காண்பிச்சுட்டு பஸ்,ரயில்,காய்கறி மார்க்கெட்,காவல்நிலையம் தண்ணி வராத ரெஸ்ட்ரூம்ன்னு பல இடத்துலயும் I love India தோள்பையை அங்கங்கே விட்டு விட்டு தக்காளியெல்லாம் வாங்கி,விழுந்த தக்காளிய பொறுக்கி எடுத்துகிட்டு பழைய காலத்து ரயில்வே படுக்கை,ரவுட்டர்,பன்னாட்டுக்கும் சுத்திவரும் சிம்கார்டு,கணினிகள்,துப்பாக்கின்னு கடையப் பரப்பி வியாபாரத்தை ஆரம்பிக்கிறார் கமல்.முதல் போணி ராகவன் மரார் மலையாளத்தமிழும் ரசிக்கும்படியாக உள்ளது.அதுக்குள்ள காவல்துறை அதிகாரிகள்ன்னா இப்படித்தான் இருக்கணும் மாதிரி சேது,ஆரிஃப்ன்னு ரெண்டு பேரு.முயற்சி பண்ணுங்கய்யா!பதவி உயர்வுக்கும்,முன்னுக்கு வருவதற்கும் அறிகுறிகள் நிறையவே தெரிகிறது.TV1 தொலைக்காட்சி பரபரப்பு செய்தியில்லாம அலுவலகத்துல ஹாயா கணினியப் பார்த்துகிட்டு இருக்கும் பெண்செய்தியாளரை பரபரப்பா செய்தி இருக்குது,பொட்டியக் கட்டிகிட்டு சொன்ன இடத்துக்கு வான்னு சொல்லி செய்தியெல்லாம் அலைபரப்பி மோகன்லால் மராரிடம் Can I smoke ன்னு கேட்டு தம் பத்த வைக்கும் நேரம் பார்த்து தம் அடிக்கப் போங்கய்யான்னு துரத்தி விட்டுட்டாரு தியேட்டர்ல பிலிம் காட்டுறவரு!

வாழ்க்கையிலேயே படம் துவங்கி அரைமணி நேரத்துல இடைவெளி விட்ட ஒரே படம் இதுதான்.சரின்னு வெளிய போனா பாப்கார்ன்னுக்கும் பெப்சிக்கும் அலைமோதுற குவைத்தி சின்னபசங்க கூட்டம் தாங்கமுடியாம இரண்டே நிமிடத்தில் திரும்ப இருக்கைக்கு வந்தா படத்தை மறுபடியும் ஆரம்பிச்சுட்டுடாங்க.(நல்லா படம் காட்டுறாங்கய்யா)அப்புறமென்ன வந்து உட்கார்ந்தா அரங்கில் அத்தனை நிசப்தம்.கதை சொல்லும் விதமா?கதையின் கருத்தா?கதாபாத்திரங்களின் ஆளுமையா?எது அரங்கை மவுனிக்க வைக்கிறது?தமிழகத்தைப் போல் வட்டார வழக்குகளுக்கான இடமாக இல்லாமல் வருத்தப்படாத வாலிபர் சங்க மெம்பர்கள்,இலங்கைத் தமிழர்கள்,மோகன்லால் நடிப்பைக் காண வந்திருக்கும் கேரளத்துக்காரர்கள்,தமிழக கலப்பென ஒரு கூட்டமாக இருந்தும் நேரடியாகவோ அல்லது படத்தின் தொலைக்காட்சி மாதிரியான செய்தி அனுபவங்களோ கதையின் மையக்கருவுக்குள் அனைவரையும் கட்டிப் போடுகிறதென்று நினைக்கிறேன்.

திரைக்கதை சொல்லும் முறை,நடிகர்களின் ஆளுமை,வசனம்,காமிரா கோணங்கள் என படத்தை நன்றாகவே நகர்த்தி செல்கிறது இயக்கம்.யதார்த்தங்களை மட்டுமே சொல்வது என்று கதை நகர்வதால் பெஸ்ட் பேக்கரி,மோதி,குஜராத்,கோவை குண்டுவெடிப்பு போன்றவை கதைக்குள் வந்து விடுகின்றது.

சாதாரண மனித வாழ்க்கைக்கும் தீவிரவாதத்திற்குமிடையில் கண்ணுக்குத் தெரியாமல் ஆட்டுவிக்கும் மந்திரவாதிகள் சிலர் பொருளாதாரம்,அரசு பலம்,தொழில் நுணுக்கம்,பொருட்களை கடத்தும் லாஜிஸ்டிக்ஸ்,மதம்,இனவாதம், என்ற குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.தீவிரவாதத்தின் தொட்டில் எனப்படும் பாகிஸ்தானிய நாட்டிலிருந்து வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பாகிஸ்தானியர்கள் தையல்காரர்,காருக்கு வர்ணம் அடிப்பவர்,கார் மெக்கானிக்,மரவேலைப்பாடுகள்,எலக்ட்ரிகல்,முடி சீர்திருத்துபவர்,பாகிஸ்தானிய உணவு விடுதி என ஏதோ ஒரு நிலையில் தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள்.ஆனால் விமான நிலையத்தில் போதைப் பொருட்களை கடத்தி மாட்டிக்கொள்பவரும் ஒரு பாகிஸ்தானியராகவே இருக்கிறார்.

நேரில் பேசும் போதும் இந்தியனுக்கும் பாகிஸ்தானியனுக்கும் வித்தியாசம் ஒன்றும் இருப்பதில்லை.இடைச்செருகல்களாக இந்தியனுக்கும் பாகிஸ்தானியனுக்கும் பகை எங்கிருந்து வருகிறது?1947ன் காலகட்ட அரசியல் நிலைகள் அரசாங்க கட்டமைப்புக்குள் இன்னும் ஊட்டி வளர்க்கப்படுகிறதா?இந்தியனுக்கு தேசியவாதம்.பாகிஸ்தானியனுக்கு மதம்.இதில் மதத்தை மட்டுமே பள்ளியில் கற்றுவித்த கோளாறு,அதற்கான அரபு நாடுகளின் பண உதவி,ரஷ்யா,ஈரான்,இந்தியா,சீனா என அனைவரையும் கண்காணிக்க சிறந்த இடம் பாகிஸ்தான் என்ற அமெரிக்காவின் 9/11க்கு முந்தைய திட்டமிடல்(இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடல) என்று பரந்து விரிகிறது தீவிரவாதம்.இதுல நம்மூரு இந்துத்வா கட்சி இந்துக்களின் பாரம்பரியம் சொல்வதற்கு கோயில்,குளம்,மட்டை,குட்டை,கட்டிட பிரமிப்புக்கள்,கலாச்சாரம்,வாழ்க்கை முறைன்னு ஆயிரம் இருக்கும் போது நாற்காலி பிடிக்க குறுக்கு வழியா வழியில போற ஓணாணை வலுக்கட்டாயமா பிடிச்சி சட்டைக்குள்ள விட்டுகிட்ட மாதிரி பாபர்மசூதி,குஜராத் சம்பவங்களை முன்னிறுத்தி அதில் குறுக்கு வழியும் தேடிகிட்டு இப்ப நொண்டிகிட்டு நடக்குது.தேறுமா இல்லையா என்பதை எதிர்காலம் கணிக்கும்.இது ஒரு புறம் இருக்க இந்துத்வா பற்றியும் அதன் தீவிரவாதம் பற்றியும் விமர்சனங்கள்,வெறுப்புக்கள் எல்லாம் முன்வைக்கும் போது இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி குரல்கள் எழுவது குறைவாக இருக்கிறது.நோன்பும்,தொழுகையும்,ஈகையும்,மானுடத்தின் இறுதியின் எளிமையும் எவ்வளவு சிறந்தவை.இவற்றையெல்லாம் குறுகிய எண்ணிக்கை கொண்ட ஆனால் தீவிர உணர்வு கொண்ட சிலர் ஒரு மதத்தையே ஹைஜாக் செய்து விட்டது வருத்தம் கொள்ள வேண்டிய விசயம்.

இந்தியாக்காரன் திரும்ப திரும்ப உலகத்துகிட்ட முக்கியமா அமெரிக்காகாரங்கிட்ட சொன்னானே-பாகிஸ்தான்காரன் திரும்ப திரும்ப அடிக்கிறான்.ரொம்பவே வலிக்குதுன்னு.படத்துல முஷ்ரஃப்,புஷ் பொம்மைக மாதிரி சிரிச்சுகிட்டேயிருந்தாயே!இப்ப உனக்கு வலிக்கும் போது எல்லாமே மாறிப் போச்சு.ஆனாலும் மானுடத்தின் வலியறிந்த காரணத்தால் 9/11ன் துக்கமும் எங்களது துக்கமானது.தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் வெற்றி கொள்ள முடியுமா?படத்தின் கேள்வி.அப்ப அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் திட்டம் ஜெயித்திருக்கணுமே!படத்தில் லட்சுமி சொல்லும் வசனம் மாதிரி திட்டமிடுதல்,செயல்படுதல் (Planning and Execution) இரண்டையுமே தீவிரவாதிகள் நன்றாகவே செயல்படுத்துகிறார்கள்.மேலும் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஜெயிப்பதென்பது ஒரு தொடர்நிகழ்வாக ரணமாகிப் போவதற்கான அறிகுறியே அதிகம்,மனிதம் என்ற மருத்துவம் பார்க்காத வரையில்.

கருவறுத்தல் என்ற சொல்லாடல் ஒன்றும் படத்தில் கேட்க நேர்ந்தது.ஒரு இனத்தின் கருவறுத்தல் சோகங்களையும் கமல் வெளிக்கொண்டு வர முயல வேண்டும்.அது ஒரு திரைப்பட ஆவணம் என்ற முறையிலும் உங்கள் கருத்தின் வீச்சின் தூரம் கருதியும் ஒரு சமூக அவலங்களை எதிர்கால சந்ததியை சிந்திக்க வைக்க உதவியாக இருக்கும்.

Thursday, September 17, 2009

ஓம் என்பது சொல்லா?மொழியா?

ரொம்ப நாளா பதிவுலகம் வந்து தலைப்புச் செய்தி மட்டும் பார்த்து விட்டு ஓடிப் போக மட்டுமே உள்ள நேரம் காரணமாக யாருக்கும் அதிகம் பின்னூடமிடவில்லை.அப்புறம் எங்கே பதியறது:)

நேற்றைக்கு அதுசரி,நசரயேன் வீட்டுக்குப் போன மப்பு இன்றைக்கும் தொடர்ந்த காரணத்தால் சரி மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கப் போனா கிரி வீட்டுல சன் டிவி ஓடுது:) அப்படியே ஒவ்வொருத்தரையும் 'லுக்' விட்டா வந்து மாட்டினவர் வால்பையன்.என்னதான் சொல்றார்ன்னு பார்க்கப் போய் வந்த வினை இந்த இடுகை.

சாதியம்,மொழி,அரபி,உருதுன்னு தொட்டு இப்படி வந்து முடிச்சார்.

\\ தஞ்சாவூர் பொம்மையாவது ஆட்டிவிட்டால் தான் மண்டையை ஆட்டுகிறது! நம் ஆட்கள் மட்டும் ஏன் எதை சொன்னாலும் மண்டையை ஆட்டுகிறார்கள்!, மொழி எப்படிடா மருத்துவமாகும், ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது! அப்படியே இருந்தாலும் தமிழ் பேசும் போது உள் செல்லும் காற்று மருத்துவ வேலைகள் செய்யாதா!?, என்னத்த சொல்ல, என்னயிருந்தாலும் ரோட்டில் வித்தை காட்டுபவன் ”ரத்தம் கக்குவ” என்று சொன்னது பாக்கெடில் இருப்பதை அள்ளி கொடுத்து வரும் மனிதர்கள் தாமே இங்கிருப்பவர்கள்! \\


இதென்ன நாம முன்பு விட்டுப் போன இடுகையான ஓம் என்ற மந்திரமும் ஹங்கேரி மருத்துவமும் வாடை வீசுகிறேதே என்று பின்னூட்டமிடலாமின்னு நினைச்சா பின்னூட்டம் இடுகையளவு வரும் என்பதால் அடைப்பானின் ஓம் என்பதற்கும் பூம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல இந்த இடுகை.

முதலாவது ஓம் என்பது ஒரு மொழிக்கான வார்த்தையல்ல.அது ஒரு ஓசை.இல்லை இல்லை அது ஓசை கூட கிடையாது.உள் வெளி மூச்சின் நேரக் கணிப்பு.முந்தைய நாட்களில் தியானம் மனித வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்ட கால கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓசையாக இருக்கலாம்.மனதை ஒரு நிலைப் படுத்தவும் மன அலை வரிசை குரங்கு மாதிரி (சும்மா இருந்தாலாவது மனசு நிதானமாத்தான் அங்கே இங்கே தாண்டும்.மனதை ஒரு நிலைப் படுத்த கண்ணை மூடினால் மனம் வினாடிக்கு வினாடி அங்கே இங்கே தாண்டும்) தில்லாலங்கடி செய்யும் (உங்க மொழிதானுங்கோ:)

ஓம் என்பதை சப்தப் படுத்த வேண்டிய அவசியமில்லை.ஓம் என்ற சொல்லின் முதல் எழுத்துக்கு உள்மூச்சு எவ்வளவு கணம் செல்கிறதோ அதே மாதிரி இரண்டாம் எழுத்துக்கு வெளி மூச்சு விடும் நுணுக்கம்.இந்த அளவீடு பூம் க்கு வராது.காரணம் பூ ஒலியும் ம் ஒலியும் மூச்சை வெளியே விடுவதற்கான ஒலியாக எனக்குத் தெரிகிறது.அதென்னமோ தெரியல ஒரு நாள் தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க இயலுமா என்று முயற்சி செய்து பார்த்தேன்.ரிதம் சரிப்படவில்லை.இட்லிக்கு சட்னிதான் சரியான ஜோடி.இல்ல பொடிதான் சரிப்படும்ன்னு சொன்னா சரிப்படும்!ஆனா சரிப்படாது:)

மற்றபடி இடுகையில் நிறைய பொருள் குற்றம்.அதனைப் பின்னூட்டமிட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.இருந்தும் வளைகுடாவில் வசிப்பதால் அரபி பற்றி சின்ன விளக்கம்.உச்சரிப்பு தமிழ் வித்தியாசப் படறமாதிரி மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சு வழக்கில் வித்தியாசம் இருக்கிறது.ஒருவன் அரபியில் பேசினால் இந்த நாட்டுக்காரன் அவன் எந்த தேசத்தை சார்ந்த அரபியன் என்று கண்டு பிடித்து விடுவான்.ஆனால் குரான் என்ற எழுத்து மத்திய கிழக்கு நாட்டு மக்களின் ஏகபோக சொந்தம்.அரபிய,பாரசீக,ஹிந்துஸ்தானி,மங்கோலிய மொழிகளின் கலவையாக உருது பிறந்திருக்கலாம். அவை இந்திய படையெடுப்புக்களின் பிள்ளையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.ஹீப்ரு மீண்டும் புதுப்பிக்கப் படும் சாத்தியங்கள் இருக்கிறது.

தமிழ்?

Wednesday, July 8, 2009

ஓம் என்ற மந்திரமும் ஹங்கேரி நாட்டு மருத்துவமும்.

ஓம் என்ற பிரணாயமம் செய்யும் போது ஓ என்ற எழுத்தினை உச்சரிக்கும் போது இதயம்,நுரையீரல் துவங்கி ஒலி புறப்படவேண்டுமாம்.'ம்' என்ற ஒலி எழுப்பும் போது கண்,மூக்கு,தொண்டையில் ஒலி அதிர்வுகள் ஏற்படவேண்டுமாம். அதிர்வுகளின் மூலமாக காது,மூக்கு,தொண்டை போன்ற பகுதிகளில் உருவாகும் நோய்களை குணப்படுத்த ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஒரு மருத்துவமனை இயங்குகிறதாம்.உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல மருத்துவர்கள் வந்து பாடம் கற்றுச் சென்று தங்கள் நாட்டில் இந்த ஒலி மருத்துவத்தை பரப்புகிறார்கள்.(குறட்டைக்காக விவாகரத்து வரை வந்து விடுவதால் இந்த மருத்துவத்தை மேலைநாடுகள் அலட்சியப்படுத்தி விடமுடியாது).

அதே மாதிரி தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு ENT மருத்துவ நிபுணர் இதனைக் கற்றுக் கொள்ள சென்றுள்ளார்.ஹங்கேரியில் சொல்லிக் கொடுத்த பாடம் இரு உதடுகளையும் இணைத்து "ப்" என்ற ஒலி வரவும் உதடுகள் இரண்டும் அதிரும்படியும் ஒலி எழுப்புவது.மருத்துவ நிபுணர் இந்த ஒலி மருத்துவத்தை எல்லா நாட்டிற்கும் சொல்லிக் கொடுக்கிறீர்களா என்ற கேட்டதற்கு இந்தப் பாடமே எல்லா நாட்டு வருகையாளர்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்ற பதில் வந்ததாம்.

மருத்துவ நிபுணர் மிகவும் ஆச்சரியப்பட்டு இந்த ஒலி மருத்துவம் நம்ம கிராமத்துப் பசங்க பனங்காய்களை சக்கரமாகக் கட்டிக்கொண்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ப்..ப்..ர்..ர்.ர் என்று பனங்காய் வண்டி ஓட்டும் மருத்துவமாச்சே என்று ஆச்சரியப்பட்டுப் போனார்.இதில் இன்னொரு ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் உலகம் முழுதும் பள்ளிப்பருவ குழந்தைகள் இந்த ஒலியை இயற்கையாகவே கையாளுகிறார்களாம்.(வளைகுடா குழந்தைகள் பள்ளி நேரம் போக,வார இறுதி நாட்கள் தவிர கூட்டில் அடைத்த கோழிகளாய்த்தான் வளர்கிறார்கள்)எனக்கும் நண்பர்களுக்கும் பனங்காய் கிடைக்காததால் ஆமணக்கு மர விசிறிப் பட்டம் மட்டுமே விட்டு டுர்ன்னு வண்டி ஒட்டிய பழைய நினைவுகள் திரும்புகின்றது.

நேச்சுராபதி மருத்துவம் அதிகம் உண்டதாலோ என்னவோ சில சமயம் பாலைவனமெல்லாம் கோபப்பட்டுகிட்டு சகாராப் பாலைவனம் மாதிரி,இல்ல...இல்ல... நம்ம ஊர் கதாநாயகன்,நாயகி கட்டிப் புரளும் ராஜஸ்தான் பாலைவன மண்ணு,தூசியெல்லாம் ஒரேயடியா கோபிச்சிகிட்டு மனுசங்கூட சண்டைக்கு வந்தா எப்படியிருக்குமோ அந்தமாதிரி பாலைதேசத்து மண்தூசிகள் மூக்கைத் துளைத்தாலும் முகமூடியெல்லாம் போடாம அன்றைய தேச இயற்கை மருத்துவம் இன்று வரை தூசர்களிடமிருந்து காக்கிறது.

பனம்பழமே,ஆமணக்கே,வேரில் மணக்கும் மஞ்சளே இன்னும் கண்ணுக்கு முன்னால் வலம் வரும் தேவமருந்துகளே வாழ்க!வாழ்க!கூடவே உச்சரிக்க மறந்த ஓம் என்ற மந்திரமும்.

Wednesday, June 10, 2009

பத்திரிகை ஆசிரியர் அய்யநாதன்

எத்தனை நாட்களுக்குத்தான் கருணாநிதி,ஜெயலலிதா,வைகோ,ராமதாஸ்ன்னே பேசுக்கொண்டு இருப்பது?மாறுதலுக்காக சில தமிழ் அறிவுஜீவிகளையும் முன்னிலைப் படுத்துவோம்.


பத்திரிகையாசிரியர் அய்யநாதனை முதலில் பார்த்தது மக்கள் தொலைக்காட்சியின் பார்வைகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக.நிகழ்ச்சி தொகுப்பாளர் முத்துக்குமாரின் கேள்விக்கு நல்ல விளக்கங்களோடு பார்ப்பவரை சொல்வது சரிதான் என நினைக்கவைக்கும் அன்றாட பொது நிகழ்வுகளின் தொகுப்பே பார்வைகள் நிகழ்ச்சியாகும்.இதற்கு எத்தனை பார்வையாளர்கள் என்பது மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.ஆனால் உலகநிகழ்வுகளின் அலசலுக்கு ஒரு சிறந்த உரையாடல் இது.

இவரும் இணையம் சார்ந்தவர் (தமிழ் வெப்துனியா)என்பதாலோ என்னவோ இணையங்களில் அடிபடும் பொதுக்கருத்துக்களும் இவரது பேச்சில் அடிபடும்.போருக்குப் பின் சோர்ந்து போய் இருந்த ஈழ உணர்வை கணினி தொழில் நுட்பம் சார்ந்தவர்களோடு இணைந்து நிகழ்த்திய அமைதிப் போராட்டம் விரக்தியான மனநிலையில் இருந்தவர்களுக்கு மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு தமிழன் என்ற முறையில் என்பதை விட மனிதாபிமானம் உள்ளவர்கள் என்ற நிலையிலிருந்து ஏதாவது நல்லது செய்து விட முடியாதா என்ற உணர்வை மீண்டும் வெளியே கொண்டு வந்திருக்கிறது.

தமிழ் உணர்வு கொண்ட அரசியல்வாதிகளை பின்னுக்கு உட்கார வைத்து ஆலோசனைகளை மட்டும் கேட்டுக் கொண்டு இப்படி தொழில் நுட்பம் சார்ந்தவர்கள்,மாணவர்கள் என அணி திரண்டு ஏனைய பல்துறைகளிலும் இருப்பவர்களை துணைக்கழைத்துக் கொண்டு விவேகமான முறையில் கல்லெறிதல்,தீவைத்தல்,பஸ் எரிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடக்கா வண்ணம் அமைதி முறையில் உலகத்தின் கண்களுக்கு இந்தப் போராட்டம் முடியவில்லை என்பதை கண்முன் நிறுத்துவது அவசியம்.

இந்தக் கலவரங்கள் பற்றிச் சொல்லும் போது கூட்டம் கூடுமிடத்தில் தான் பலசாலி என்ற உணர்வு ஒரு தனி மனிதனுக்கு வருவதுடன் கலவரத்தின் தாக்கங்கள் என்னவென்று தெரியாமலும் சிலர் கல்வரங்களைத் தூண்டுவதுண்டு.இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் கூட்டத்தில் கலவரங்கள் நிகழ்வதற்கு முக்கியமான காரணி காவல்துறை.காவல்துறைன்னு சொன்னவுடன் நம்ம ஊர் காவல்துறை மட்டும் என்ற கணிப்புக்கு யாரும் வந்து விடவேண்டாம்.உலகளாவிய காவல்துறையினரே போராட்டங்களில் கலவரம் வெடிப்பதற்கு முதல் நிலையில் இருப்பார்கள் என்று ஒரு விவாதக் களத்தில் கேட்டது.காவல்துறை சார்ந்தவர்களின் கருத்து இதற்கு மாறுபட்டும் கூட இருக்கலாம்.இன்னுமொரு நிலையில் காவல்துறையை நோக்கினால் இவர்களுக்கு வேலைப்பணியின் நேரம்,மனஅழுத்தங்கள், மேலிடத்து அழுத்தங்கள் அதிகம்.எனவே இதன் காரணம் கொண்டும் கூட்டத்தின் வலுவுக்கு ஏற்றாற்போல் பிரச்சினையை ஊதிவிடும் சாத்தியங்கள் உண்டு.இவைகளையும் அடுத்து ஒரு கலவரக் கலாச்சாரத்தை தமிழகம் கற்று வைத்திருக்கிறது.அது என்னவென்றால் எதிர்க்கட்சி சார்ந்த அணிவகுப்பா அடியாட்களுக்கு காசு கொடுத்து கலாட்டாவை உருவாக்குவது.அப்புறம் பழியை அணிவகுப்பு நடத்தினவர்கள் மேலேயே போட்டு விடுவது என்ற குறுக்குப்புத்தித்தனம்.முன்பு பொராட்டா,கள்ளச்சாராயம்ன்னு மட்டும் கட்சி சார்பா வளர்ந்த கலாச்சாரம் இப்ப எங்க வந்து நிற்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இப்படி வளர்ந்த எதிர்விளைவுகள் இப்பொழுது கட்சிகளின் ஒரு அங்கீகரகமாக மாறிவிட்டது.எனவே இவைகளையெல்லாம் சமாளித்து வரும் ஆற்றலை அணிவகுப்பாளர்களின் பொறுப்பாளிகள் கவனிப்பது அவசியம்.உலகம் தொழில் நுட்பம்,காணொளி,செல்போனில் காமிரா என்று மிகவும் வளர்ந்து வருகிறது.எனவே இந்தக் கலாச்சாரங்களின் முகமூடிகளை கிளித்தெறிய வேண்டியது அணி வகுப்பாளர்களின் பொறுப்பாகும்.

கார்கில் யுத்த காலத்தில் கே.சுப்ரமணியம் என்ற பாதுகாப்பு ஆலோசகர் இருந்தார்.CNN போன்ற விவாதக் களங்களில் பாகிஸ்தானுக்கு எதிர்க்கேள்வி கணை விடுப்பதில் வல்லவர்.அந்த மாதிரி உள்ளூர் தொலைக்காட்சி ஊடகமான வின் தொலைக்காட்சியில் நிகழும் விவாதத்திற்கும் பத்திரிகை ஆசிரியர் உலகநாதன் கருத்துக்கள் ஆழமானவையாக இருக்கும்.அவருடைய சமூக உணர்வுக்கும் கீழே உள்ள படத்தை பிரசுரிக்க அனுமதிக்கவும்,இந்த இடுகைக்கான தூண்டுதலாகவும் இருந்த கரையோரம் தளத்தின் பதிவர் செல்லமுத்து குப்புசாமிக்கும்,அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட தொழில் நுட்ப வட்டத்து சகோதர சகோதரிகளுக்கும் இந்த இடுகை தன் புன்முறுவலை சமர்ப்பணம் செய்கிறது.

கரையோரம் தளத்தின் முழுப் படங்களுக்கு
http://karaiyoram.blogspot.com/2009/06/blog-post.html

Monday, June 8, 2009

தமிழ் தொலைக்காட்சிகள் ஓர் பார்வை-பகுதி 2

சென்ற இடுகை போதுமென்று கை கட்டளையிட்டு விட்டதால் மூளையின் அங்கீகாரமில்லாமல் சார் போஸ்ட் சொல்லி விட்டது.சொல்ல வந்த கருத்து முற்றுப்பெறாத மாதிரி தோன்றிய காரணத்தால் பகுதி 2 தொடர்கிறது.

வாழ்வின் பல குழப்பமான விசயங்களில் தினமும் முக்கியமாக வேலை,தொழில் என்ற பணம் தேடுதலில் சிக்கித் தவிக்கும் காரணத்தாலும்,இளமை,கல்லூரிக்காலம்,வீட்டு நிர்வாகம்,பள்ளி செல்லுவது,பயணம் என்ற பல நிலைகளில் அனைவரும் வலம் வருவதாலும் அக்கடா என்று வீட்டில் அமரும் சமயம் கணினியை விட தொலைக்காட்சி அனைவருக்கும் எளிதான நுகர்வோர் பொருளாகி விடுகிறது.

இனி இணையம் என்ற பெருங்கடலில் மீன் பிடிக்கச் சென்றால் அது பல வகை மீன்களை இனம் காட்டி எங்காவது ஒரு இடத்தில் வலையை வீசச் செய்கிறது.சில மானுட உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் வாழ்க்கையின் கோரத்தை தோலுரித்துக் காட்டவும் செய்கிறது.ஆனால் தொலைக்காட்சி என்பது சமைத்த பண்டம்.இங்கே இதுதான் கிடைக்கும்,வேணுமுன்னா வாங்கிட்டுப் போ கதைதான்.இந்த தனி உரிமையின் காரணம் கொண்டு எது கிடைக்கிறதோ அதனை நுகர வேண்டிய சூழல் நுகர்வோருக்கு.

ஆறு மாதங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் இணையத்தில் மிகத்தெளிவாகத் தெரிந்தும் அதனை மக்கள் பக்கம் கொண்டு செல்வதில் ஓரளவுக்கு மானிட உணர்வு கொண்டவர்கள் வெற்றியடைந்தும் கூட அன்றாட வாழ்வில் உழலும் மக்களுக்கு கொண்டு செல்ல முடியாத படி பங்கு வகித்ததில் தொலைக்காட்சிகளில் சன் குழுமத்திற்கு பெரும் பங்கு உண்டு.அதெப்படிங்க ஒரு நாள் முழுதும் சினிமா என்ற மயக்கத்திலேயே ஒரு தனி மனிதனை மூழ்கடிக்க முடிகிறது?இந்த மயக்கம் கூட தேர்தல் வெற்றியின் பணம்,ஓட்டுப் பிரித்தலுடன் ஒரு காரணியாக இருந்திருக்குமோ?டாஸ்மார்க் பார்ட்டிகள் கூட ராத்திரி அடிச்சா காலையில் தெளிந்து விடுகிறார்களே.ஆனால் தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம் என்பதன் காரணம் கொண்டும் பகுத்தறிந்து சமூகத்தின் வெற்றி தோல்விகளின் முழுப் பொறுப்புக்கும் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கும் சறுக்கலுக்கும் மக்களே சொந்தக்காரர்களாகிறார்கள்.

எனவே தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளும் மாற்று முகமாகவும் மாற்றுப் பார்வைக்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுவதாலும் இணையதளம் புழக்கம் அவசியம் தேவை.வரும் சட்டமன்ற தேர்தலில் கணினி இலவசம்(தனிப்பட்ட முறையில் இலவசம் என்பது நிராகரிக்கப்படவேண்டியது என்றாலும் கூட) என்ற அறிக்கையை ஜெயலலிதா மீண்டும் அறிவிக்கலாம்.அல்லது அதனையும் தன் உரிமைப் படுத்தும் நோக்கில் தி.மு.கவும் கூட முந்திக்கலாம்.எப்படியோ தொலைக்காட்சிக்கு மாற்றுதளம் அவசியம்.மாணவர்களுக்கும் கூட கணினி வழிப்பாடம் மிக எளிது.Flash drive போன்ற எளிய முறைகள் வீட்டுப்பாடங்களைக் வீட்டில் கற்கவும் மீண்டும் பள்ளியில் சமர்ப்பிக்கவும் எளிது.(By the way desktop computers are going to be obsolete.)அத்தனை நோட்டுப் புத்தகங்களையும் சுமக்க வேண்டிய அவசியம் இருக்காது நோட்டுப்புத்தக கணினிகளை உபயோகிக்கும் பட்சத்தில்.(மின்சாரமும்,கட்டணமும் என்ற தடங்கல்களையும் கடந்தாக வேண்டும்).

அதென்னமோ தெரியல எங்கே எண்ணங்களை அழைத்துச் சென்றாலும் இறுதியில் ஈழம் என்ற கோட்டில் வந்து மனம் நின்று விடுகிறது.எனவே தொலைக்காட்சியை விட்டு அரசியல் பக்கம் நோக்கினால் சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது வரை அனைத்துக் கட்சிகளின் பங்கு பாராட்ட வேண்டியதே.ஆனால் அதற்கு பின் துவங்கிய அரசியல் குளிர்ப்போரில் குளித்தவர்கள் அனைத்துக் கட்சிகளுமே.
எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் குறுகிய கால தினங்களில் நடைபெற்று விட்டது.தமிழகத்தில் யாருக்கும் இன்று வரை தெளிவான முடிவில்லா சூழல்.யாருக்கும் பூமிப் பந்தில் இந்தியாவின் தென்கோடியாய் தமிழ்நாட்டை நெம்பிப் போடும் சக்தி இல்லாமல் போய் விட்டது.யாருக்கு எவ்வளவு ஆன்மீக பலமும் லௌகீக பலமும் உள்ளது என்ற புரிதல் மட்டும் நம்மில் சிலருக்கு கிடைத்திருக்கிறது.முன்பு நெஞ்சை பகீர் கொள்ளச் செய்யும் இந்திய நிகழ்வுகள் இப்பொழுது மரத்துப் போய் மட்டுமே பார்வையாளனாக்கியிருக்கிறது.உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் நிலை.

எப்படியிருந்த போதிலும் மானாட மயிலாட,அசத்தப் போவது யாரு,உலக திரைப்படங்கள்,மெகா சீரியல்கள் என்ற மக்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள்,அன்றாட வாழ்க்கைப் பயணம் என அன்றாட நிகழ்வுகள் அப்படியே வலம் வருகின்றன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் சிலருக்கு வேலை வாய்ப்பும் வயிற்றுக்கும் சிறிது ஊட்டப்படுகிறது என்ற சந்தோசத்தோடு சிலரை மக்கள் முன் அறிமுகப்படுத்துகிறது என்ற சமாதானத்தோடு் தொலைக்காட்சிகளை மக்கள் காண்பது தவிர வேறு வழியில்லை.நானும் இந்தப் பெட்டியின் கதவை சாத்திக் கொண்டு தொலைக்காட்சியாளர்களின் தொழில் சிரமங்கள்,அரசியல் விளையாட்டுக்கள்,மூலதனம்,தொழில்நுட்ப பங்களிப்பு,நிகழ்ச்சிகளை உருவாக்குதல் போன்ற உயர் ரகசியங்கள் தெரியாது சொல்வதற்கு எல்லோருக்கும் எளிதாம் என்ற ஞானோதயத்திலும் ஊடகங்கள் சமுதாயத்திற்கு இன்னும் நிறைய பங்காற்ற இயலும் என்ற ஆற்றாமையிலும் நிறைவு செய்கிறேன்.

தமிழ் தொலைக்காட்சிகள் ஓர் பார்வை

தொலைக்காட்சிகள் மக்களின் மன இயல்பை,உளவியலை பிரதிபலிக்கக் கூடும்.பல தொலைக்காட்சிகள் தமிழகத்தில் வலம் வந்தாலும் சன் குழுமம் மட்டும் முன்னிலை வகிப்பதேன்?அரசியல் ஆதரவு இருந்தாலும் கூட கலைஞர் தொலைக்காட்சி வந்த பிறகும் தனது முதன்மையை தக்கவைத்துக் கொண்டதற்கு அதன் தொழில் அணுகுமுறையும் மக்களின் விருப்பம் எதுவென்று அறிந்து கொண்டு செயல்படுவது காரணமாக இருக்கக் கூடும்.

தனிப்பட்ட முறையில் ஈழம் குறித்த செய்திகளை கொண்டு செல்லாததும் வியாபார நோக்கிலே பயணம் செய்ததும் வருத்தத்தை உருவாக்கினாலும் சன் குழுமத்தை மட்டும் குறை சொல்ல இயலுமா என்ற கேள்வியை கேட்க வேண்டியதாக இருக்கிறது.காரணம்,சன் குழுமம் செய்யாததை செய்யத் தவறியதை மக்கள் தொலைக்காட்சி நிறையவே வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.ஆனால் ஈழ நிகழ்வுகள் என்ற ஒன்றை விடுத்தும்,தமிழ் என்ற சொல்லையும் விடுத்தும் ஏனையவை ஒரு தொலைகாட்சி பார்வையாளனை திருப்தி படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னும் சொல்லப் போனால் இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டதும் தமிழகத்தில் அதற்கு சாதகமாகவே அமைந்திருக்க வேண்டும்.ஆனால் எதிர் விளம்பரத்தில் வியாபாரம் ஆகாததை யாரும் கவனிக்கவில்லை.ரஜனி எதிர்ப்பு என்ற காரணியும்,சினிமான்னாலே உவ்வே சொன்னதும் கூட மக்கள் தொலைக்காட்சி சிறப்படையாமல் போனதுக்கு காரணமாயிருக்கக் கூடும்.

கலைஞர் தொலைகாட்சி பக்கம் வந்தால் கட்டுமரக் கதையெல்லாம் இணையத்தில் மட்டுமே பவனி வரும் விசயம்.மானாட மயிலாட அடிச்சு ஆடுகிறது என்பது அதன் நடன அசைவுகளிலும்,வண்ண மயமான செட் அலங்கரிப்புகளிலும்,மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்யத் துணியாத காட்சி அமைப்புகளிலும் தெரிகிறது.இணைய தள களத்தின் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் இயல்பிற்கும் தொலைக்காட்சியின் வெளிப்படுத்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் டொக்,டொக்குன்னு பெட்டி தட்டும் ஒத்தை ஆளு விளையாட்டை விட ரிமோட் விசையத் தட்டுனோமா ஒரு காட்சியப் பார்த்தோமா விளம்பரம் பிடிக்கலையா இன்னொரு அமுக்கு அடுத்த சேனலுக்கு கூடு விட்டு கூடு பாஞ்சோமான்னு வீட்டின் ஹாலில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களையும் கூட்டு சேர்ப்பதில் தொலைக்காட்சி வெற்றி பெற்று விடுகிறது.

இன்னும் சொல்லனுமுன்னு வந்த எண்ண அலை இப்போதைக்கு முற்றுப் பெறுகிறது.

Sunday, June 7, 2009

க.தங்கமணி பிரபு

சிந்தனி என்ற களத்தின் சொந்தக்காரர் க.தங்கமணி பிரபு வின் எழுத்துக்களை முன்பு பார்க்க கிடைக்கவில்லை.சிலரைக் கண்டவுடன் பிடித்துப் போவது போல் இவருடைய எழுத்துக்களை இன்று பார்வையிட்டவுடன் பிடித்துப் போயிற்று. இன்று அவரிட்ட வயசுப்பெண்ணின் இடுப்பு என்ற தலைப்பில் சொன்ன ஒரு கவிதையைப் பார்வையிடப் போய் மற்ற பேச்சு வழக்கின் எழுத்தின் கருத்துக்களில் மூழ்கிப் போய் நல்ல எழுத்துக்கள் ஏன் ஒளிந்து நிற்கின்றன என்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை இது.

ஈழப் போரினை அலசும்,விமர்சிக்கும்,குறை சொல்லும் அத்தனை எழுத்துக்களிலும் வித்தியாசம் கொண்ட எழுத்து இவருடையது.கூடவே உணர்வு பூர்வமானதும்.மானுடம் என்ற அடிப்படையைத் தள்ளி விட்டு நவீனத்தின் பக்கங்களை மட்டுமே எழுதுவது என்பது இயல்பாகிப் போன விசயமாகி விடுகிறது சிலருக்கு.அவர்களில் இருந்து தனித்து நிற்கும் எழுத்துக்கு ஊக்கம் தரும் வண்ணம் சிந்தனிப் பதிவர் க.தங்கமணி பிரபுவின் எழுத்துக்கள் இங்கே உங்களுக்கு அறிமுகம்.

எனக்கு இவரின் முன் அறிமுகம் கிடையாது.படித்த இந்த கணத்தில் குறிப்பிட வேண்டும் என்று மனதுக்கு தோன்றியதால் அவரின் இடுகையில் ஒன்று கீழே.

http://chinthani.blogspot.com/2009/06/blog-post.html

மிச்சம் மீதியும் உங்களுக்குப் பிடித்துப் போகும் என நினைக்கிறேன்.

வாங்க தங்கமணி!நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாயிடுங்க:)

கேள்விக்கு என்ன பதில்?

ரொம்ப நாளா பரிட்சை எழுதணும் பாஸாகணும் என்கிற கவலையில்லாம இருந்தவனை பழமையண்ணன் இந்த தொடர் விளையாட்டில் மாட்டி விட்டு விட்டார்.கூப்பிட்ட மரியாதைக்கு கேள்விகளுக்கு பதில்.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அப்பாவின் பெயரும் என் பெயரும் இணைந்தது ராஜ நடராஜன்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்பத்தான் சமீபத்தில். பதிவர் ஷண்முகப்ரியன் மற்றும் ஏனைய பதிவர்களும் சுட்டிய இலங்கை சகோதரனின் நடன காணொளி கண்டதும்.காப்பத்துங்கன்னு சொன்ன அழுகைகளையும்,காப்பாற்ற இயலா அரசியல் சுயநலத்தில் சிக்குண்டு போரில் சிக்கிய மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தமிழர்களாகிய நாம் காப்பாற்ற தவறவிட்டு விட்டோம்:( தேர்தல் முடிவுகளால் துவண்டோ போரின் தோல்வியால் விரக்தியடைந்தோ ஈழம் குறித்த இடுகைகள் குறைவாகப் போனது வருத்தத்தைத் தருகிறது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பெயரை எழுதுவதை விட அனைத்தும் கணினி மயமாகி விட்டதால் கையெழுத்து எப்படியென்று ஒரு முறை பரிட்சித்துப் பார்க்க வேண்டும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
சாதம்,சாம்பார்,பொறியல்,அப்பளம்,ரசம்,மோர் ஊறுகாய்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
சில சந்திப்புக்கள் ஹலோவுடன் முடிந்து விடும். சில புன்முறுவல்களுடன் கூடவரும்.இன்னும் சில அடுத்த முறை புன்முறுவலுடன் குசலம் விசாரித்து ஒட்டிக்கொள்ளும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இந்தியாவில் அருவி.இங்கே கடல்தான் அருகில்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம் பார்த்துப் பேசுவது.பேச்சு நீளும் பட்சத்தில் முகபாவங்கள்.

8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
இன்றுவரை நேர்மை.வார இறுதியில் விடும் நீண்ட குறட்டை.

9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?
எனக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக்கொள்வது.பிடிக்காதது உப்பு,காரம் சமையலில் குறைக்கச் சொன்னாலும் அதே அளவில் நிற்பதும் வந்து நீங்களே சமையுங்க என்பதும்.

10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
நிச்சயமாக அப்பா,அம்மா.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை முழுக்கை,கருப்பு பேண்ட்,அதற்கு மேட்சாக கருப்பில் வெள்ளைக் கோடுகளால் டை.

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
அலுவலில் பாடல்கள் தடா.

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு.

14.பிடித்த மணம்?
மல்லிகை மற்றும் தாளிக்கும் மணம்.கூடவே பெர்ஃப்யூம்.முன்பு Brut Cologne by Faberge நன்றாக இருந்தது.இப்ப அதிலும் டூப்ளிகேட்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

நடிகைகிட்ட எந்த நடிகரைப் பிடிக்கும்ன்னு கேள்வி கேட்கிற மாதிரி இருக்குது இந்தக் கேள்வி.எல்லாருடைய வீட்டுக்கும் நான் போகிறேன் அதனால் யாரைக்கூப்பிடுவது? அதுசரி,குடுகுடுப்பையார்,நசரேயன்,ச்சின்னப்பையன் யாராவது வந்து காப்பாத்துங்க.(பிடித்த காரணம், அதுசரியின் முரண்தொடை படித்தவுடன் போலித்தனமில்லாத எழுத்து.குடுகுடுப்பையார்,நசரேயன்,ச்சின்னப்பையன் நகைச்சுவைகள்)இல்ல இவங்க யாராவது முந்திகிட்டோ அல்லது வேலை நிமித்தம் இடுகைகள் இடாமல் இருந்தால் நான் யார் யார் வீட்டுக்கு இதுவரை பின்னூட்டம் போட்டிருக்கேனோ அவர்களில் முந்திக்காதவங்க யாராவது வந்து தொடரும்படி வேண்டுகிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பழமையண்ணன் விடாம அடிச்சு ஆடுறார்.எதைச் சொல்வது?இருந்தாலும் தனக்குன்னு ஒரு பாணியாக காளமேகப் புலவர் கனவுல வந்து கதை சொல்லுவது பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?
உலக கால்பந்து விளையாட்டு.

18. கண்ணாடி அணிபவரா?
கணினித் திரைக்கு மட்டும்.காருக்கு கறுப்புக் கண்ணாடி.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மூளைக்கு வேலை கொடுக்கும் எல்லா திரைப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
டி.வி.டியில் Paradise now. இந்தப் படம் இரு பாலஸ்தீனிய நண்பர்கள் எப்படி பஸ்ஸில் பயணம் செய்யும் இஸ்ரேல் மக்கள் மீதான தற்கொலைப் படைக்கு தயாராகிறார்கள் என்பது பற்றிய ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய பாலஸ்தீனிய அரபி மொழிப் படம்.படத்தை தயாரித்தவர் இஸ்ரேலியர் என நினைக்கிறேன். முன்பு ஆஸ்கருக்கு சென்ற ஒரே பாலஸ்தீனியப் படம்.சென்னைப் பதிவர்கள் கூடும் உலகத்திரைப் படங்கள் வரிசைக்கு இந்தப் படத்தை சிபாரிசு செய்கிறேன்.

21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
Exodus. (pdf format.தகவல் உதவி தருமி ஐயா)

22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
மழலைச் சத்தம் பிடித்தது.பிடிக்காதது பாதையில் விலக இடமில்லாமல் இருந்தாலும் சைடு கேப்ல நுழைய முயன்று கொய்ங்,கொய்ங்ன்னு ஹார்ன் செய்வது.

23.பிடித்த பருவ காலம் எது?
கல்லூரிப் பருவம்.

24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இந்த வேலையெல்லாம் கூட நடக்குதா:)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?
இந்தியாவில் டெல்லி,கல்கத்தா-இந்தியாவுக்கு வெளியே குவைத்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சின்னப்பையன்ல சீசன் சீசனுக்கு விளையாட்டு மாறுகிற மாதிரி இப்பவும் சீசன் சீசனுக்கு காமிரா,மீன்பிடித்தல்ன்னு மாறும்.ஒரு மொட்டை கிரவுண்ட்ல காரை வைச்சு கியர் எது,பிரேக் எது,சாவி கொடுப்பது எப்படின்னு எனக்கு நானே கார் ஓட்டக் கத்துகிட்டதும் லைசென்ஸ் வாங்கியதும்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேள்வி.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படியெல்லாம் ஒருத்தனும் கிடையாதுங்க.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
தஞ்சை பெரிய கோயில்,திருச்சி மலைக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி கடந்து புளிய மரங்களைப் பார்த்துகிட்டே ஆழியார் அணை துவங்கி,அட்டைகட்டி,தேயிலைக் காடுகள்,வால்பாறை,சோலையார்,அப்படியே கேரளாவுக்குள்,குருவாயூர்,திருச்சூர் புகுந்து கொச்சின் வாஸ்கோடா காமா வந்த இடம்,இந்திய யூதர்களின் கோயில்,மட்டாஞ்சேரின்னு நீண்ட பயணம்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.இதுவரைக்கும் நோய் நொடிகளுக்குள் மாட்டிக்கொள்ளவில்லை.இனியும் அப்படியே இருக்க.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
கடற்கரையில் தனிமையில் சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு கடலைப் பார்ப்பது,இல்லைன்னா மீன் பிடிப்பது.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
போரில்லா உலகம் வேண்டும்.காதுல கேட்க மட்டுமே நன்றாக இருக்கிறது.நடைமுறையில் கார்கில்,வளைகுடா யுத்தம்,ஈழ இலங்கைப் போர் மனதை நிறைய பாதித்தவை.

Saturday, June 6, 2009

மருத்துவத்தின் தண்டனை

பிறப்பின் துவக்கம் தொட்டும் நோய்க்கால இடைவெளியிலும் வாழ்வின் இறுதிச் சான்றிதழ் வரை மருத்துவர்களும் மருத்துவத்துறையும் நம்மோடு ஒட்டிக்கொண்டே வரும் பயணங்கள்.

பொதுவாக உங்கள் எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டால் பள்ளிக் குழந்தைகள் சொல்லும் வார்த்தை டாக்டர்.வாழ்வின் சூழலில் திசைகள் மாறிப்போனாலும் சிலருக்கு அந்த வரம் தானகவே அமைந்து விடுகிறது.எல்லாக் கல்லூரிகளும் ஸ்ட்ரைக் என்ற ஆயுதத்தை தொட்ட காலத்திலும் கூட படிப்பும்,கடமையே உணர்வாக வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ் என்றும் வலம் வந்த தேவதூதர்கள். வாழ்வோட்டத்தில் இங்கும் அங்கும் சில எதிர் விளைவுகள்,மனிதர்கள் இருந்தாலும் கூட மருத்துவத்துறையின் மகத்துவம் சிறப்பானது.

உலக யுத்தங்களிலும் மருத்துவர்களின் பணி மகத்தானது.அதே மாதிரியான ஒரு சூழலில் பணிபுரிந்த மூன்று மருத்துவர்கள் இலங்கையின் போர்க் குற்றவாளிகள்.இவர்கள் செய்த தவறு என்ன?உலக ஊடகவியளாலர்கள் செல்ல முடியாத சூழலில் மண்ணின் மைந்தர்களாய் போர்க்களத்தில் பணிபுரிந்ததும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை புகைப்பட ஆதாரங்களோடு உலகின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதும்.வெறும் புகைப்படங்கள்,ஒளிகாணலைக் காணும் மானுட உணர்வு கொண்ட எவருக்குமே போரின் பயங்கரங்கள் புரியும் போது களத்தில் நின்று பணிபுரியும் இந்த மாமனிதர்களுக்கு நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் எண்ணமும் துணிச்சலும் வந்ததில் என்ன தவறு இருக்க முடியும்?

போரில் உயிர் இழந்தவர்கள் பற்றியும் எஞ்சியிருப்பவர்கள் பற்றியும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டுக் கொண்டும் நடுநிலை ஊடகவியளாலர்களை அனுமதிக்காமலும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அழிப்பதில் மட்டுமே தனது நாட்களை நகர்த்துகின்றது இலங்கை அரசு.

இதனிடையே ஒரு செயலின் முடிவு இன்னொரு செயலின் துவக்கமாய் உலக அதிகாரங்களின் கரங்களில் இலங்கை வந்து விட்டது.இதில் இலங்கை பூகோளப் போரின் வெறும் பகடைக் காயே.தமது நலன்களைப் பாதுகாப்பதில் தெற்காசிய நாடுகள் என்றும் மேற்கத்திய நாடுகள் என்றும் இரு அணிகளாய் மாறிவிட்டது. மே 18ம் தேதிக்கு அப்பால் மெல்லக் கிளம்பும் அறிக்கைகள் இதனை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.

மானிட வார்த்தைகள் எல்லாம் தமிழன் உணர்வு என்ற வட்டத்துக்குள் மட்டுமே பார்க்கப்படுகிறது . இலங்கை அரசின் முன்னணி அரசியல் விளையாட்டுக்காரர்களின் அறிக்கைகள் இந்தியாவுக்கு எதிராகவே வருகிறது.இதற்கான துணிச்சலாக பாகிஸ்தானும்,சீனாவும் தமக்குத் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தனது விசயங்களில் தலையிட வேண்டாம் என இந்தியாவுக்கு செக் வைக்கிறது.இனி வரும் காலங்களில் கடல்வழிப் பொருளாதாரப் போரில் நீயா நானா எனும் நிலை வரும் சாத்தியங்களுக்கான முன்னுரையாக மட்டுமே இப்பொழுது பல தரப்புக்களிலிருந்தும் வரும் அறிக்கைகள்.

இவை ஒரு புறமிருக்க கூட்டமாய் கம்பிவலை வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கே குரல் கொடுக்க ஆட்கள் இல்லாத போது மருத்துவம் கற்றதிற்கு தண்டனையாகவும் மனித அவலங்களை வெளிப்படுத்தியதற்காகவும் மருத்துவர்கள் போர்க் குற்றவாளிகளாக்கப் படுகிறார்கள் இலங்கை அரசால்.வாழ்க இலங்கை இறையாண்மை.

மேலதிக தகவல்களுக்கு:

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8083505.stm

Tuesday, June 2, 2009

ஒரு மொக்கை அறிக்கை

இங்கே வால்பையன் போன்ற Self proclaimed யாருக்கும் அனானி பின்னோட்டம் இடுவதில்லையென்ற குழுவில் நானும் அங்கத்தினன்.கடை திறந்த நாள் முதல் இன்று இந்த கணம் வரை நான் யாருக்கும் அனானிப் பின்னூட்டம் இட்டதில்லை. இனிமேலும் இடமாட்டேன்.சிலர் நிரந்தரமா கடை போடாம கருத்து சொல்வதற்கு வேண்டியும் கூட அனானி வசதியை உபயோகிக்கக் கூடும்.ஆனால் விளையாட்டாகவோ சிலர் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ அனானிப் பகுதியை உபயோகிக்கிறார்கள்.அனானி என்றாலே திட்டுபவன் என்ற முத்திரை விழுந்து விட்டதால் அனானிப் பகுதி எனக்குப் பிடிப்பதில்லை.எனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு மொக்கையாகவோ,சிரிப்பாகவோ,கருத்தின் களம் கொண்டு அதில் மூழ்கியுமே பின்னூட்டங்கள் இட்டுள்ளேன்,இனியும் இடுவேன் .

ஆனால் முந்தைய பதிவான நானும் பின்னூட்ட வாத்தியார்தான் பின்னூட்டத்தில் ஒரு அனானி இட்ட பின்னூட்டம் இங்கே:

//அப்படியே திவ்யான்ற பேர்ல நீங்க எழுதற இன்னொரு டுபாக்கூர் ப்ளாக்லையும் பண்ணலாமே?//

யாருப்பா இந்த திவ்யா?அனானி!அது நான் இல்ல கண்ணு!திவ்யாங்கிற பேர்ல நான் ஒரு இடுகையைப் பார்த்ததாகக் கூட நினைவில்லை.எனக்கு இடுகை எண்ணிக்கை கூட்டறது,டுபாக்கூர் ப்ளாக்ல எழுதுவதில் ஆர்வமில்லை.சொல்லப்போனா நான் 100வது பதிவை எப்ப கடந்தேன் என்று கூட கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.பதிவுகள் பல பரிமாணங்களில் இருந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக என்னை மனதால் ஆக்கிரமித்துக் கொண்ட ஒரே விசயம் ஈழமும் ஈழம் சார்ந்த இடுகைகளும்,பதிவர்களும். தமிலிஷ் இணைக்கறதுல கூட சோம்பேறி பட்டுகிட்டு இன்னைக்கு நாளைக்கின்னு நாட்களை தள்ளிப் போட்டு அண்ணன் நசரேயன் இன்றைக்கு நினைவூட்டி அதை ஒட்ட வச்சிருக்கேன்.

So my dear friends! Anony is not my cup of tea and I will remain as gentleman as far as this blog exist.Thank you.

Monday, June 1, 2009

நானும் பின்னூட்ட வாத்தியார்தான்

நானும் ரவுடிதான் பேட்டைல நிறைய பேரு திரியறதால நானும் வாத்தியார்தான் பேட்டைக்கு முண்டாசு கட்டிகிட்டு வந்திருக்கேன்:).இது எங்க ஏரியா!யாரும் உள்ளே வரலாம்.

விசயம் என்னன்னா இந்த பதிவு(இடுகைன்னு சொல்லணுமாம்!தமிழ் அண்ணா பழமை சொல்லிக் கொடுத்தாரு) எழுதறதெல்லாம் நமக்கு சைடு பிசினஸ்ங்க.இடுகை வாசிப்பதும் மனசுக்குள்ள குதிச்சுகிட்ட வர்ற வார்த்தைகளுக்கு பின்னூட்ட உருவம் கொடுக்கறதுதான் மெயின் பிசினஸ்ங்க.இடுகையெல்லாம் நல்லாத்தான் சொல்றாங்க.ஆனா பின்னூட்டம் பக்கம் போனா சில உஸ்தாதுகள் ஆங்கிலம் சொல்லுன்னு(word verification) பேஜார் செய்யுறாங்கோ.

மொக்கை போடணுமின்னா comment moderation எடுத்துறுங்கன்னு ஒரு தபா வருங்கால முதல்வர் குடு குடுப்பையார் சொல்லப் போக உள்ளே நுழைஞ்சப்பத்தான் ஆங்கிலம் சொல்லு கண்ணுல பட்டுச்சு.அதே மாதிரி சில வூட்டுக்குப் போனாலும் இந்த word verification கேட்கிறாங்க.அதனால இங்கே coding kings & queens ஆணி கட்டமைப்பாளர்கள்,பழம் தின்னு கொட்டை போட்ட பதிவுப் பெருசுகள்,customization அப் புடிச்சு நோண்டிகிட்டு இருக்குறவங்களைத் தவிர புதுசா ஜோதில கலந்துகிட்ட அண்ணாத்த யாராவது இருந்தீங்கன்னா word verification எடுக்கணுமுன்னு ஆசைப்படறவங்களுக்கும் அது எங்க உட்கார்ந்துகிட்டு இருக்குன்னு கண்ண உருட்டாம இடுகையே கண் என நினைப்பவர்களுக்கும் இன்னைலருந்து நான் தான் வாத்தியார்.(அதுக்குன்னு அதிகமா சந்தேகமெல்லாம் கேக்கப்படாது!வாத்தியார் முண்டாசெல்லாம் சும்மா ஒரு பந்தா)

இனி பாடத்துக்குப் போவோமா? log in செஞ்சதும் காஞ்ச மாடு கம்புல பூந்தமாதிரி நேரே new post ல போய் உட்கார்ந்துக்காம அதுக்கு பக்கத்தில customize இருக்கும்.அங்க இருந்துதான் ஆங்கிலத்துக்கு நோ சொல்றது எப்படின்னு ஆரம்பம்.

1.)Customize
2.)Settings
3.)Comments
4.)Show word verification for comments - No

டிஸ்கி: வீடு வீடா போய் மாஞ்சு மாஞ்சு வோர்ட் வெரிபிகேசன் எடுத்துறுங்க,எடுத்துறுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.அதுக்கான குறுக்கு வழிதான் இந்த பதிவு.

Sunday, May 31, 2009

கமலா தாஸ்

கமலா தாஸ் என்ற கவிதாயினியும் எழுத்தாளரும் கமலா சுரய்யா ஆனது எப்படி என்பதற்கான கேள்வியும் வாழ்வியல் அழகின் உச்சத்தை தொட்ட பல பிரபலங்களும் இஸ்லாமிய மதத்தை தழுவுவதற்கான காரணம் என்ன என்பதும் ஆராய வேண்டியவை.ஆனால் பதிவு அதைப் பற்றியது அல்ல.தொலைகாட்சி பெட்டி ரிமோட்டை கிள்ளிய போது கமலாதாஸின் நேர்காணல் மலையாள மக்கள் தொலைக்காட்சியில் (People) நிகழ்ந்து கொண்டிருந்தது.ஓர் பெண் குழந்தையாக,பதின்ம வயதுப் பெண்ணாக ,திருமண வயதுடையவளாக ,வாழ்வியலைப் புரிந்தவளாக,முதுமையின் அழகில் அமர்ந்தவளாக ஒரு முழுப் பெண்ணின் வாழ்க்கையை இல்லறத்தோடும்,இலக்கியத்தோடும் வாழ்ந்து முடித்திருக்கிறார் கமலாதாஸ்.

நான் மலை,ஆறு,குளம்,மரம்,செடி,மலர்கள் என்று கவிதை பாடி சுற்றித்திரிந்த காலம் வசந்தகாலம் என்று நேர்காணலில் குறிப்பிட்டார்.இவரை இந்தியப் பத்திரிகை ஊடகங்களுக்கு புயல் மாதிரி அறிமுகப் படுத்தியது 70பதுகளில் எண்ட கதா என்ற சுய சரிதை.Men are pretend to be shocked when reading என்ற கமலாதாஸ் எனது சுய சரிதையில் எனது ஆத்மாவை தேடாமல் எனது உடலின் மொழிகளை மட்டுமே வாசிப்பாளர்கள் தேடினார்கள் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.அனைத்துப் பெண்களும் கதைகள்,கட்டுரைகள் மட்டுமே எழுதிய காலத்தில் கவிதையை காதலித்த ஒரே பெண் கமலாதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப கட்டுக்கும் அப்பாற்பட்டு தான் காதற் வயப்பட்ட ஆண்களை பெயர்கள் கூறாமல் விவரித்தார்.உதாரணத்திற்கு, தனக்கு சமஸ்கிருதம் தெரியாமல் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தவர் மீது ஈர்ப்பு வந்தது என்றார்.(Kate winslet நடித்த 2008 ன் ஆஸ்கார் சிறந்த நடிகைக்கான பரிசாக The Reader என்ற திரைப்படம் மனதில் வந்து போனது).

தனக்கு எப்பொழுதும் உயரமான ஆண்களையே பிடிக்குமென்றும் ஒரு முறை கலந்து கொண்ட விருந்தில் குள்ளமாக ஒருவர் வந்து தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டு பேச்சின் இடையில் சொன்ன சரமாரியான கவிதைகளால் அவர் மீது அன்பு கொண்டதும் குறிப்பிட்டார்.அவரது கணவர் தாஸ் "Meet my wife Poet Kamala Das" என்று நண்பர்களுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்ததை பெருமிதத்தோடும் குறிப்பிட்டார்.

விருந்துகள் பற்றியும் மது அருந்துதல் பற்றியும் குறிப்பிடும் போது தான் ஏன் மது அருந்துகிறேன் என்றும் விருந்துகளில் மது அருந்துவது எப்படி என்பதற்காகவுமே அருந்துவதாகவும் ஜெயகாந்தன் எங்கோ குறிப்பிட்டது நினைவுக்கு வந்து போனது.மது அருந்துவதை மேற்கத்தியவர்களிடம் கற்றுக் கொண்டதாகவும் 1 பெக் அல்லது 2 பெக் மட்டுமே அளவு என்றும் இந்தியர்கள் பாட்டிலின் இறுதி சொட்டு வரை குடிப்பதை நிறுத்துவதுமில்லையென்றும் சொன்னார்.

தனக்கு அறிமுகமான பரந்த நட்பு வட்டாரத்தையும் எழுத்தாளர்கள்,நாடகவியளர்,மார்க்சீய சிந்தனைவாதிகள்,கவிஞர்கள் என்று அனைவரையும் நினைவு கூர்ந்தார்.வீட்டில் நாடகக்குழுக்களாய் 100 பேருக்கு மேல் கலந்து உரையாடித் திரிந்ததை நினைவு கூர்ந்தார்.தனது கணவரின் வங்கி பதவிக்கான காலம் முடிந்து வருமானத்திற்காக வேண்டி columnist ஆக எழுதி குழந்தைகளையும் குடும்பத்தையும் நடத்த வேண்டியது பற்றி சொன்னார்.

ஒரு பெண்ணாக எழுத்தாளராக ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவும் தனது இறுதி நாட்களை தன்னை எப்படி அடக்கம் செய்யவேண்டும் என எழுதி வைத்திருப்பதாகவும் கிருஷ்ணனைப் பற்றிக் கவிதை எழுதிக் கொண்டே இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா எழுத்தாளர் போலி சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெண்ணியம் பற்றிய ஆண் வர்க்கத்துப் பார்வையை புரட்டிப் போட்டு வாழ்வியலை நிறைவு செய்துள்ளார்.

நேர்காணலை நிறைவு செய்யும் போது நேர்காணல் என்பதை மறந்த அவரது நினைவுகளின் நாட்களில் மூழ்கியிருந்தது நீண்ட பேச்சின் தொனியில் தெரிந்தது.

இந்தப் பதிவு அவரது எழுத்துக்கும் சமூகத்தில் தனக்குப் பிடித்த கவிதை,எழுத்து,வாழ்க்கை என்று சமரசம் செய்து கொள்ளாத போலியற்ற வாழ்க்கைக்கும் சமர்ப்பணம்.

ஸ்டாலின் vs அழகிரி

நீண்ட காலமாய் தொடர்ந்து அரசியலில் தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்டாலின் தி.மு.க வின் வாரிசு அரசியலுக்கும் சட்ட அமைப்பில் இடம் இருந்தால் கருணாநிதியின் காலத்திலேயே முதல்வராவதற்கும் தி.மு.க சார்பில் முழு தகுதியுடையவரே.அதற்கான வெள்ளோட்டமாக முன்பே இளைஞரணி ஊர்வல மகுடம் சூட்டப்பட்டும் உள்ளது.எனவே கலைஞர் கருணாநிதி தனது வயதின் இயலாமையால் ஓய்வெடுக்க விரும்பினால் ஸ்டாலின் அரியணையேறுவதும் சரியே.

இதுவரை தமிழக வரலாற்றில் துணை முதல்வர் பதவி உருவாகியிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி உருவாகியிருந்தால் அந்த மரபு வழியில் துணைமுதல்வர் பதவியில் தவறில்லை.அப்படியில்லாமல் இது புதுக்கலாச்சாரமாக தமிழகத்தில் முதல்வரின் மகன் என்ற முறையில் உருவாகுகின்றது என்றால் இந்தப் பதவி விமர்சனத்துக்குரியது.அதே வேளையில் கவர்னர் இதனை அங்கீகரித்திருப்பதும் இதில் சட்டத்திற்கு இடமிருக்கிறதென்றும் கருதவேண்டியிருக்கிறது.எனவே ஸ்டாலினின் நீண்ட அரசியல் வாழ்வில் பதவி உயர்வு என்பதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்பதை உங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பயனுடையதாகும்.

கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கும் மதுரை கலாச்சாரத்துக்கு முத்திரையாகவும் பணத்தால் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்து விட முடியும் என்று நிரூபண அரசியலுக்கும் உருவாய் வந்துள்ளார் மத்திய அமைச்சர் அழகிரி.தனிமனிதனாக இவர் நல்லவனாகவும் அதன் காரணமாகக் கூட மதுரை இவர் வசம் வந்திருக்கலாம்.அது ஊடகங்களில் முன்னிறுத்தப் படாமல் போயிருக்கலாம்.ஆனால் அழகிரி என்றவுடன் ஆட்டோ என்ற முத்திரை எப்படி வந்தது எனத் தெரியவில்லை.இது அவரது தனிக் குணநலன்களா அல்லது மதுரை என்றவுடன் நினைவுக்கு வருவது இன்றைய தமிழக சினிமாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பங்கும் கலையின் மேல் உணர்ச்சி வசமான காதலும் அரிவாள் கலாச்சாரத்தின் ஊற்றாக மதுரை விளங்குவதும் அழகிரியின் தனிக்குணமாக மாற்றப்பட்டிருக்கலாம்.

நேற்று அபிஅப்பாவின் விமானத்தை தவறவிட்ட தமிழக மாணவர்களுக்கு அழகிரி உதவியதாக சூடான இடுகை காண நேர்ந்தது.மக்கள் மனோபாவங்கள் ஒருவரின் பொய்த்தோற்றங்கள் எப்படி கட்டமைக்கப் படுகின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அந்த இடுகை.டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் காலம் காலமாக எத்தனையோ தனிமனிதர்களாலும் தமிழக மத்திய அமைச்சர்களாலும் ஊடகத்தின் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம்.ஆனால் பெயர் தெரிந்த ஒரு தனிமனிதனுடைய முகத்துக்குப் பின் இருக்கும் பலவீனங்கள் நிறை குறைகளை எடை போடாமல் துதிபாடும் துவக்க விழா நடத்துவது பலவிதமான பரிமாண எழுத்துக்களை பார்வையிடும் பதிவர்களுக்கு நல்லதா?

இடுகைகளிலும் இணைய திரட்டிகளிலும் பகுத்தறியும் சந்தர்ப்பங்கள் அமைபவர்களே ஓரப்பார்வை பார்க்கும் போது அன்றாட பிரச்சினைகளில் அல்லல் பட்டு வீட்டுக்கு வந்தால் திரைப்படமும் சீரியலும்தான் உலக நிகழ்வுகள் என காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நுகர்வோர்களை குறை சொல்வதிலும் அவர்கள் மீது தேர்தல் தோல்விகளின் கோபங்களை காண்பிப்பதிலும் என்ன நியாயம் இருக்க முடியும்?

அமைச்சர் அழகிரியின் செயல்திறனை விமர்சிப்பதற்கும் ஏனைய தமிழக அமைச்சர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கும் முதல் 100 நாட்கள் என்ற அமரிக்க அரசியலை இந்தியாவும் கடன் வாங்கிய நாட்களுக்குள் கணிக்கலாம்.

டிஸ்கி: எந்த தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட இடுகை.

Friday, May 29, 2009

Modern Holocaust - மே 2009ன் மீள் பதிவு

தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். போரின் இறுதி நாட்களின் அவலங்களையும்,மர்ம முடிச்சுகளின் உண்மைகளையும் தமது காரண காரியங்களுக்காக மறைத்தோ பொய்களினால் நிரப்பி விடும் அபாயம் தொடர்கிறது.இன்னும் உலக ஊடகங்கள் அனுமதிக்காத நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்மை தன்னை முகம் காட்டிக் கொண்டுள்ளது.இதில் சோகம் என்னவென்றால் சில மைல் தூரங்களில் நின்று கொண்டு தமிழகம் உதவ இயலாமல் மௌனம் காப்பது.

உலகப் போரின் ஹிட்லரின் கொடுமைக்கு சாட்சியாய்


இலங்கைப் போரின் ராஜபக்சேவின் கொடுமைக்கு சாட்சியாய்


எல்லாம் முடிந்து விட்டது என்று பறை சாற்றிக் கொள்ளும் இலங்கை அரசு புதிய அரசியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையைத் தராமல் மக்களை முட் வேலிகளுக்குள் அமர்த்தி மனித உரிமை ஓட்டெடுப்பிலும் வெற்றி முகம் காட்டுகிறது.இதுவரை காலனிக்காரனாய் இருந்தவர்கள் ஓரளவுக்காவது மனிதநேயம் பற்றிய அனுதாபம் காட்டுவது தெரிகிறது.சுதந்திரம் பேசிய மார்க்சீய நாடுகள் தங்கள் சுய முகங்களை காட்டியிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளாய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் மெல்ல உண்மைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது.இவை இலங்கை அரசின் சுயமுகத்தை உரித்துக் காட்டும் என நம்புவோம்.இதிலும் Bruce Fein கொண்டு வரும் நீதிமன்ற வழக்கிலும் கூட இலங்கை அரசு ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கலாம்.ஆனால் பூகோளமாய் தனக்குத் தானே தனது இறையாண்மையை பாகிஸ்தான்,சீனா,இந்தியா என்ற மூன்று துருப்புச் சீட்டுகளிலும் போரில் அடகு வைத்து விட்டது.இதிலும் கூட மூன்று சீட்டுக்காரனாய் கால நிலைக்குத் தக்கபடி கண்ணாமூச்சி ஆடலாம்.ஆனால் பக்கத்து கரையாய் தமிழகம் காத்திருக்கிறது இன்று அரசியல் காரணங்களுக்காக தோல்விகளால் துவண்டு போன போதிலும்.இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் காங்கிரஸ் தவிர தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் குறித்த மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளால் பிரிந்து நிற்கும் சோகம் நினைவுக்கு வருவதைத் தவிர. மாநிலப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடும் வெளியுறவு கொள்கையில் ஒருமித்த கருத்தும் என இரு வேறு நிலைபாடுகள் நமக்கு அவசியம்.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகச் சூழல்,தமிழக அரசியல் சூழல் மாறும் காலம் வந்து கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.நிலத்தில் உழைத்தும்,மீன் பிடித்தும் தனது வீட்டை இருக்கும் மரம்,பனைகளை வைத்து மீள் கட்டிக் கொள்வார்கள்.அதற்குப் பின் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதும் இரண்டாம் தரக் குடிமகனாய் மீண்டும் மாற்றுவதும் பற்றி யோசிக்கட்டும்.இவைகள் எல்லாம் நிகழாத பட்சத்தில் மக்களின் எதிர்காலம் குறித்த பார்வையில் ஒருமித்த கருத்துக் கொண்ட புதிய அரசியல் அமைப்பு தோன்றுவது அவசியமாகிறது.அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.

படங்கள் கொண்டு வந்த இடங்கள்

1)http://history1900s.about.com/library/holocaust/blpictures.htm

2) சயந்தனின் துயரப் பதிவு : http://sajeek.com/?p=263

Wednesday, May 27, 2009

செஞ்சிலுவை சங்கம்

குஜராத் பூகம்பத்திற்கு அள்ளிக் கொடுத்த தமிழகம்,கார்கிலுக்கு குரல் கொடுத்த தமிழகம் கடல் எல்லைக்கு சில மைல் தூரத்திலிருக்கும் தமிழனுக்கு குரல் கொடுத்து மட்டும் நின்று விட்டோம்.போரில் அனைத்தும் இழந்த மக்களுக்கு உதவும் விதமாக நம்மால் ஏதாவது செய்யவேண்டும்.உதவிகளை ஏற்றுக் கொள்ள செஞ்சிலுவை சங்கம் தனது கரங்களை நீட்டி வரவேற்க தயாராக உள்ளது.

இப்போதைய தேவை நீர்,உணவு,உடை,இருக்க இடம்,மருந்து,மருத்துவம்.இதற்காக வேண்டி தமிழகம் எப்படியாவது உதவி செய்தாக வேண்டும்.சேர,சோழ,பாண்டியர்களின் பெருமை பேச நிறைய இருந்தாலும் ஒற்றுமையில்லா உறவுகள் மாதிரி இப்போதும் கொள்ளுப்பேரன்களாய் பல கட்சிகளாய் தோன்றி நவீனம் நம்மை சுற்றி இறுக்கும் கயிறுகளின் மென் அழுத்தங்களின் வலிகள் தெரியாமல் பிரிந்து கிடக்கிறோம்.

போரின் அவலங்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக கலைஞர் தலைமையில் கலைஞரின் சுயநல விமர்சனங்களை
தள்ளி வைத்து அணி சேர்வோம்.காரணம் தற்போதைய சூழலில் போரால் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க பூர்வமாகவும்,அங்கீகாரத்துடனும் அதே சமயத்தில் வன்னி மக்களுக்குப் போய்ச் சேர்க்க வேண்டிய சக்தியும் கடமையும் அவரிடம் மட்டுமே உள்ளது. ஹைதர் அலி காலத்து (40 வருடம்) அலி என்னும் கப்பல் உதவிக்கு வர தயாராக இருக்கும் போது கப்பல் ஓட்டிய தமிழன் பேருக்கு தமிழகமும் மனிதாபிமானத்துடனாவது உதவட்டும்.(கடல் என்ற கருவி இதுவரை நமக்கு பாதுகாப்பு என்ற நிலை போய் இப்பொழுது எதிரியா நண்பனா என்ற விவாதத்தை எழுப்புகிறது.)

திரைப்படம் சார்ந்தவர்கள்,நட்பு நிலையில் நிற்கும் திருமா,கனிமொழி போன்றவர்கள் செஞ்சிலுவை முயற்சியாக கலைஞரை அணுகலாம்.

It's a hard nut to crack but can be achieved.Hope helping cannot be visualized as interfering into a country's sovereignty.

Tuesday, May 26, 2009

இனி மனிதம் மட்டுமே பேசுவோம்

போர்களினால் இடம்பெயர்ந்த எந்த மக்களும் பல திசை நோக்கியே பயணித்திருக்கிறார்கள்.ஒரு திசை நோக்கி நகர்ந்த மனித நகர்வுகள் என்று யோசித்தால் எனக்குத் தெரிந்து பைபிளின் மோசஸ் பின்னால் கடலுக்கு அருகே சென்ற இஸ்ரேல் வம்சத்தாரும் பிரபாகரன் பெயரால் நதிக்கரை நகர்ந்த ஈழத்து தமிழ் மக்கள் மட்டுமே.இரண்டுக்குமே கடல்கள் சாட்சி சொன்ன,சொல்லும் நிகழ்வுகள்.முந்தைய சரித்திரத்தை மெய்ப்பிக்கவென்றே இன்றும் பிரமிடுகள் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றன.இப்போதைய சரித்திரத்தையும் சாட்சிக்கு அழைக்கவென்றோ என்னவோ திருவள்ளுவன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான்.

இன்றைய மனிதர்களும் அவர்களைச் சார்ந்த நிகழ்வுகளும் கால ஓட்டத்தில் மறைந்து விடும்.ஆனால் வரலாறு நிகழ்வுகளை தன்னிடத்தே தக்க வைத்துக்கொள்ளும்.மக்கள் வேறு,புலிகள் வேறு என்ற கூற்றுக்கள் எல்லாம் இறுதிப் போரின் அவலங்களில் பொய்யாகிப் போய் இருக்கின்றன.போரின் வெற்றிகள் இலங்கைக்கு பலத்தையும் அதன் தெற்கு திசையில் கொண்டாட்டங்களையும் தருகிறது.சிங்கள மக்களின் கொண்டாட்டங்களை விமர்சிப்பது தவறு.அது இனம் சார்ந்த, மண் சார்ந்த மனித இயல்பு.ஆனால் நாம் விமர்சிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

போருக்கும் அப்பால் தமிழர்களுக்கான தீர்வாக இலங்கை அரசு எந்த தீர்வை உலகின் முன் வைக்கிறது?அப்படி வைக்கும் தீர்வுகள் எல்லாருக்கும் உடன்பாடு உள்ளதாக இருக்குமா?இப்போது நிகழும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன?இவர்களுக்கான எதிர்காலத்தை எப்படி முன்வைக்கப்போகிறது?புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லியே பயங்கரவாதியாகிப் போன இலங்கை அரசு தமிழர் மனதால் பட்ட காயங்களை எப்படி ஆற்றப் போகின்றது?இல்லை இவை காயங்கள் அல்ல வெறும் கீறல்களே என்று கருணா சாட்சியம் சொல்ல வருவாரா?

இலங்கை அரசுக்கு தன்னை நிரூபித்துக் கொள்ளவும் அப்பாவி மக்களின் துயரங்களைப் போக்கவும் உடனே செய்ய வேண்டியது பொதுமக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்துவதே.அது தவிர்த்து ஸ்கிரீனிங்க் என்பது இருக்கும் மனிதர்களை இல்லாமல் செய்வதற்குரிய உள்நோக்கமாகவே இருக்கும்.அமெரிக்கா செய்ததையே நானும் செய்கிறேன் என்று சொல்லும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா மாட்டுக்கொட்டில்களாய் எங்கும் மனிதர்களை முட்கம்பிக்குள்ளும் கூடாரங்களிலும் அடைத்து வைக்கவில்லை.

மடியில் கனமில்லை பயமில்லையென்றால் அனைத்துலக ஊடகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்கட்டும்.முன்புதான் ஊடகவியளாலர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர இயலாது.இப்போதைய தடைக்கான அவசியம் என்ன?உண்மைகள் இலங்கை அரசு சார்பாக இருந்தாலும் உலகின் முன் தெரியட்டும்.

இதுவரை பாலஸ்தீனியன் மாதிரி இருந்த ஈழத்தமிழன் அவனையறியாமலேயே யூதனாகிப் போனான்.ஈழத்தமிழா!மனிதம் பேசு.அறிவும்,திறமையும்,வீரமும்,பொருளும் உனக்குள்ளே நிறைந்து கிடக்கிறது.(இது புகழ்ச்சிக்கான வார்த்தை இல்லை இரு மொழியின் வரலாறுகள் இப்போதே கண்முன்)

ஒன்று சேர்.கட்டமைப்பு நடத்து.கதைகளை,கனவுகளை,புலம்பல்களை அகற்று.உலக நண்பர்களைச் சேர்.நிதர்சனம் காண்.வரும் சந்ததிக்கு நல்வாழ்வினை மாற்று.

(கடலுக்கும் அப்பால் இருக்கும் சகோதரத் தமிழனுக்கு உனக்காக வேண்டி குரல் மட்டுமே எழுப்ப முடியும்.கோஷங்களே வாழ்க்கையாகிப் போன எங்களுக்கு இது மட்டுமே சாத்தியம்.ஆனாலும் இந்த நீண்ட கோஷங்கள் மட்டுமே உனக்கு இழந்த வாழ்க்கையை மீட்டுத்தரும்.)

Thursday, May 14, 2009

போர் நிறுத்தம் செய் - ஒபாமா

பல மக்களின் பட்டினி,மனித உயிர்ப்பலியென இலங்கை அரசின் இனப்படுகொலைகளின் உச்சத்தில் ஈழ மக்களின் அவலங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை எட்டியிருக்கிறது.மாறுதலுக்கான குரலாக வெள்ளை மாளிகைக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் குரல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

தமிழகத்திலிருந்து தமிழனாக நாம் குரல் எழுப்பியும் (எதிர் குரல் எழுப்பியும்) இது வரை ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்ய இயலவில்லை.ஆனாலும் குரல் எழுப்பும் தமிழா!துவண்டு விடாதே!ஈழக் கனவு இப்பொழுதுதான் சரியான பாதையை நோக்கி நடைபோடுகிறது. இந்தியத் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்த போதிலும் ஈழ மக்களின் அவலங்களை நீக்கும் தகுதியையும் ஆளுமையையும் இந்தியா வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து தகுதி இழந்து விட்டது இன்னும் சில நாட்கள் ஆட்சி செய்யும் அரசால். ஈழம் புலம் பெயர் மக்களின் குரலால் மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமானக் குரலுக்கு ஏங்கி நிற்கிறது. ஒபாமா போன்ற மாறுதல் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள மனிதர்களிடமிருந்து நம்பிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவே
யுத்தத்திற்காய் நேற்று ஓர் போய் செய்தாய்
மனிதாபிமானத்திற்கு இன்று ஒரு குரல் கொடு

நேற்று புஷ்க்கு போர் பிடித்தது
இன்று ஒபாமாவுக்கு
மனிதநேயம் பிடிக்கட்டும்.

மனித நேயம் காட்ட எலும்பும் தோலுமாய்
ஈழத்தமிழன் கையேந்துகிறான்.

போர் நிறுத்தம் செய்.

ஒபாவின் குரல் காணொளி தகவலுக்கு
http://enathu-pathivukal.blogspot.com/2009/05/blog-post_13.html#comment-form

இடுகைக்கான ஆக்கத்தை தந்த பதிவுகள் பதிவருக்கு எனது நன்றி.

Wednesday, May 13, 2009

நீங்க மட்டும்தான் யோசிப்பீங்களோ

கூட்டமா கூடிகிட்டேமிங்கிறாங்க!பேசிகிட்டோமிங்கிறாங்க!அதுவும் யோசிக்கிற மாதிரி படமும் புடிச்சிகிட்டேங்கிறாங்க.உங்களுக்கு மட்டும்தான் யோசிக்க (போஸ்) வருமா என்ன:)


இந்திய ஜனநாயகத் தேர்தல்

உலகிலேயே மனித சாதனையாக பல கண்டுபிடிப்புக்களும்,ஏனைய கோளங்களுக்குப் பயணிக்க மனிதன் முயன்றதாக இருந்தாலும் மிக மிகப் பெரிய சாதனையாக மனித சுதந்திரம் என்ற உன்னதமான கோட்பாட்டுக்கும் மனித நலன்களுக்கும் சென்றடையும் வழியாக அமைந்தது ஜனநாயகமும் ஜனநாயகத் தேர்தலுமே.மனிதன் சமமாக வாழ வேண்டும் என்ற மார்க்சீய சித்தாந்தங்கள் எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தபோதும் ஜனநாயக தத்துவங்களுக்கு முன் அவை தோல்வியையே தழுவியுள்ளது.பரிட்சார்த்தம் செய்த ரஷ்யாவும்,சீனாவும் மனித உரிமைகளை உலகிற்கு காண்பிக்காமல் இரும்புத்திரை போட்டு மூடி மறைக்கவே செய்தது.செய்கிறது.எனவே தற்போதைய சூழலில் மனிதன் தன்னைத் தானே நிர்வாகம் செய்து கொள்ளும் ஆட்சி முறைகளில் ஜனநாயகத்தை மிஞ்ச வேறு சித்தாந்தங்களே இல்லை இன்னுமொரு நல்ல புதிய சித்தாந்தம் பிறக்கும் வரை.

இனி பொதுவான இந்திய தேர்தல் பக்கம் தாவினால் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக தேர்தல் ஆணையம் இருப்பதும் அதன் மகத்தான சேவையை தனது அதிரடி நடவடிக்கைகளால் எந்த அரசியல் கட்சிக்கும் கட்டுப்படாமல் பொதுமக்கள் அறியத்தந்ததின் பெருமை முந்தைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனையே சாரும்.இந்திய ஜனநாயகத்தின் பக்கவிளைவுகளாக கள்ள ஓட்டு,தேர்தல் கலவரங்கள்,நக்ஸல் இயக்கம்,போராட்டங்கள்,தகராறுகள் இன்னும் பல இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி இந்தியா ஜனநாயகம்,தேர்தல் என்ற உலகின் மிகப் பெரிய நிகழ்வு மேலாண்மையை (Event management) நிகழ்த்திக் கொண்டிருப்பதில் இந்தியனாக அனைவரும் பெருமைப்படலாம்.தனது கோபங்கள்,இயலாமை போன்றவைகளுக்கும் கருத்து சுதந்திரம் என்ற வடிகாலைத் தந்திருக்கிறது ஜனநாயகம்.

பல்வேறு பரிமாணங்களின் கலவையில் சில தோல்விகள் மாதிரியும் விரக்தியும் கூட தோன்றலாம்.அரை நூற்றாண்டின் ஜனநாயக ஓட்டத்தில் மிகப்பெரிய ஜனத்தொகையின் கலப்பில் மொத்தக் கணிப்பில் நாம் வெற்றியே அடைந்திருக்கிறோம்.சில அரசியல் நிர்வாகத் திறமைகளில் தோல்விகளை அடைந்திருந்தாலும்,மனித மேம்பாட்டின் நலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரவில்லையென்றாலும்,பொருளாதார இருப்புக்கள் பதுக்கப்பட்டுப் போய் இருந்தாலும் ஜனநாயகம் என்ற கோட்பாடு நம்மை இன்னும் முன்னேறும் பாதையிலேயே தள்ளிக் கொண்டிருக்கிறது.

தேர்தலின் இறுதி நாளான இன்று வரையிலும் வாய் திறக்கும் அத்தனை கட்சிகளும் 40ம் எங்களுக்கே என்று சத்தமிடுகின்றன.சமீபத்து பதிவுகள் சில தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு முன்ன பின்ன பாதிக்கு பாதியா இடங்களைப் பிரித்துக் கொடுத்து விட்டார்கள்.இந்தக் கணிப்பு நடுநிலைமையா அல்லது களநிலவரங்களை ஆராய்ந்து எழுதுவதாலா அல்லது கொஞ்சம் கட்சி சார்பு கணக்குகள் போட்டுமா என்று தெரியவில்லை.

தொலைக்காட்சியில் பிரச்சாரக் கூட்டத்தைக் கண்டால் எல்லோரும் கூட்டம் சேர்ப்பதில் வல்லவர்கள் மாதிரியே சீன் காட்டுகிறார்கள்.மக்கள் வேடிக்கை பார்க்கும் கூட்டமோ என்றும் யோசிக்க வைக்கிறது.ஆனால் துண்டை தோளில் போட்டுகிட்டு உற்றுக் கவனிக்கும் மனிதன் அரசியலில் சோடை போனவனில்லை என்றும் கடந்து போன தேர்தல் முடிவுகளில் தெரிகிறது.கடந்த மாதங்கள் மொத்தக் கணிப்பாக பதிவுகளை நோக்கினால் கலைஞர் மேல் உள்ள கோபம் வெளிப்படை.திரைப்பட இயக்குநர்கள் இந்த முறை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக தேர்தல் எதிர்ப்பு உணர்வுகளை நோக்கும் போது காங்கிரஸ் ஒரு இடத்திலும் தேறாது என்பது போலவே இருக்கிறது.ஆனாலும் 4 இடம் காங்கிரசுக்கு நிச்சயம் என்றும் பதிவு வருகிறது. கணிப்புக்களின் உண்மை நிலவரம்தான் என்ன?

தமிழகத்தில் ஈழம் பற்றிக் கொண்டிருக்கையில் தமிழக எல்லையைத் தாண்டி நோக்கினால் பாராளுமன்றம் தொங்குவது நிச்சயமாகிறது.உலக அரங்கில் மன்மோகன் சிங் பிரதமராக செயல்பட்டாலும் சோனியாவே நிழல் பிரதமர் என்பதும் இன்னும் சில மாநிலங்களின் நிலவரம் காங்கிரசுக்கு சாதகமில்லா நிலையிருப்பதாலும் அடுத்த ஆட்சிக்கு தேறுமா என்றும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.ஆனால் கூட்டல் கழித்தல் கூட்டணி முறையில் இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. பி.ஜே.பி அல்லது மூன்றாவது அணி ஆட்சியைக் கைப்பற்றுமா?மூன்றாவது அணி உருவாகினால் ஆதரவு தரும் கட்சி மத்தியில் ஆட்சியைக் காலை வாரி நாற்காலி கனவு காண்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.

அலை ஓட்டு,விலை ஓட்டு,ஜாதி ஓட்டு,காசு ஓட்டு,கட்சிக்கு வாக்கப் பட்ட ஓட்டு,வர்க்க ஓட்டு,புடிச்சிகிட்டு போய் போட வச்ச ஓட்டு,கோப ஓட்டு,போடாத ஓட்டு,கிராம ஓட்டு,டவுன் ஓட்டு,சமய ஓட்டு,சமயம் சாரா ஓட்டு,பாராளும் கனவு ஓட்டு,பாராளுமன்றக் கனவு ஓட்டு,கூட்டணி ஓட்டு,கூட்டணியில்லா ஓட்டு,காரிய ஓட்டு,கள்ள ஓட்டு,நல்ல மனுசன் ஓட்டு,மேடைப்பேச்சு ஓட்டு,ஈழ ஓட்டு,படிச்ச ஓட்டு,படிக்காத ஓட்டு,பிரிக்கும் ஓட்டு,அம்மா ஓட்டு,அய்யா ஓட்டு,கலைஞர் ஓட்டு,கள்வன் ஓட்டு,சினம் ஓட்டு,சின்னம் தெரியா ஓட்டு,49 ஓ என்று எத்தனை வட்டங்களைத் தாண்டி வரவேண்டியிருக்கிறது வேட்பாளனும்,வாக்காளனும்.ஆழமாய் சிந்தித்தால் பிரமிப்பான விசயமே.

கடந்த கால இந்தியப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியதில் கடலோடித் திரவியம் தேடும் இந்தியர்களின் பங்கும் உள்ளது.அதோடு கூட வாழ்க்கைப்பட்ட பூமிகளின் நல்ல பிரதிபலிப்புக்களும் கூட கடலோடிகளிடம் உள்ளது.கடல் கடந்த மனித வளங்களையும் ஓட்டு என்ற உரிமையை விரிவுபடுத்துவதிலும் இந்திய ஜனநாயகத் தேர்தல் இனி முயலவேண்டும்.போஸ்டல் ஓட்டு என்ற முறையிலிருந்து இப்பொழுது தொழில் நுட்ப ஓட்டுக்களாய் இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்தியர்களையும் இணைத்துக் கொள்வது அவசியம்.

இறுதியாக இணையங்களில் ஒலித்த தமீழீழ ஆதரவுக்கான குரல் இணையங்களைத் தொடாத மனங்களில் மொத்த தமிழ்மண்ணில் எப்படி ஒலிக்கும் என்ற ஆவலுடன் நிறைவு செய்கிறேன்.

Sunday, May 3, 2009

ராணுவ வாகன கோபங்கள்

ஆறு மாதங்களுக்கு முன்பே ஈழம் குறித்த தமிழக மாற்றங்கள் வந்து விட்டது.அப்போதைய கால கட்டத்தில் இலங்கை குறித்த இந்திய மாற்றங்களாகவே அவை மாறியிருக்க வேண்டும்.காரணம் இந்திய அரசு அப்போதே ஈழம் குறித்த தனது வெளிநாட்டுக் கொள்கையின் பார்வையை மறுபார்வை செய்திருக்க வேண்டும்.

6 மாத கால கட்டத்திற்குள் ஏற்பட்ட இந்திய இலங்கை நிகழ்வுகளை மறு அசைவு போட்டால் பதிவுகளில் வெளிப்படும் உண்மைகளுக்கும் இந்திய அரசு செயலாற்றும் முறைக்கும் கூடவே பொதுமனிதப் பார்வைக்கும் தூர இடைவெளிகள் அதிகம் என்ற ஐயமும் எழுகிறது.இணையத்தில் உட்காரும் கணங்களில் தோன்றும் உண்மைகள் இருதினங்கள் இணையம் பக்கம் வராமல் இருந்தால் கண்ணைக் காட்டி காட்டுக்குள் விட்டது போன்ற உணர்வையும் தோற்றுவிக்கிறது.கட்சி என்ற வட்டத்துக்குள் நுழைந்து விடுபவர்களுக்கு கட்சித் தலைமையின் செயலே வேத வாக்காகி விடுகிறது.ஆனால் தமிழ் உணர்வு கொண்டு இப்போதைக்கு தமிழகத்தில் நிகழும் போராட்ட உணர்வுகளை மத்திய அரசு கூர்ந்து கவனிக்கத் தவறியதும் பெரும் ஆபத்துக்களை வருங்காலத்தில் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி வழிகோல்கிறதோ என்ற பயத்தையும் இப்போதைக்கு உருவாக்குகிறது.

மதச்சார்புகளை ஓரளவுக்கு சமன் செய்து காங்கிரஸ் ஆட்சி செய்கிறதென்றே இதுநாள் வரையிலான காங்கிரஸின் மதிப்பீடு இருந்தது.பி.ஜே.பி சோனியாவை அந்நிய நாட்டுக்காரி என்று பிரச்சாரம் செய்த கடந்த தேர்தலில் கூட தமிழ்நாட்டில் அப்படியொரு பார்வையோ அதற்கான தாக்கமோ இல்லாமல் இருந்தது.ஆனால் இன்றைய நிலையும் அதற்கான சூழல்களையும் யார் உருவாக்கியது?அரசியல் அனுதாபங்களும்,எதிர்ப்பும் ஜனநாயகத்தில் வரும் போகும்.

கார்கில் காலத்து தமிழக தேசப் பற்று எப்படியிருந்தது என்று எழுதவோ சொல்லவோ தேவையில்லை.பஞ்சாபிலும்,தமிழகத்திலும் ராணுவ வீரன் ஒரு மகத்தான மனிதன்.அந்த தேச உணர்வுகளுக்கும் நேற்று குழி தோண்டப் பட்டு விட்டது இராணுவ வாகனங்களை அடித்து நொறுக்கியும் ராணுவ வீரர்களை விரட்டியதன் மூலமும்.இராணுவ வாகனங்களை வழி மறித்தவர்களின் கூற்று வாகனங்களில் யுத்த தளவாடங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்ப படுகிறதென்று.இல்லை,ராணுவ வீரர்கள் தங்களது ராணுவப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு திரும்பும் போதே இந்த மோதல் நிகழ்வு ஏற்பட்டது என்று மறுசாராரின் கூற்று.

கோவையின் கோபத்தின் மையம் தமிழர்களின் இனப் படுகொலையும்,முன்பு ரயில் வாகனங்களில் டாங்கிகள் வரிசையாக சென்றதும் அவை இந்தியாவிலிருந்து இலங்கை அரசுக்கு செல்கிறதென்ற செய்தியுமே.ஒருவேளை பொதுமக்களின் கோபங்கள்,நிகழ்வுகளின் புரிதல் தவறாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் நலன் கருதி செய்திகளையும்,நிகழ்வுகளின் உண்மைகளையும் மக்களுக்குப் புரிய வைப்பது மாநில,மத்திய அரசின் கடமையாகும்.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு Mr.மேனன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகிறார்.பேச்சு வார்த்தையின் சாரத்தை அவரோ அல்லது அரசாங்கமோ பொதுமக்களுக்கு சொல்வதில்லை.அல்லது சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற Classified கோட்பாடு, இலங்கையில் ஊடக தடையையும் மீறி வெளிச்சத்துக்கு வரும் நிகழும் அவலங்களைக் காணும் தமிழக மக்களுக்கு மேலும் கோபத்தை உண்டுபண்ணுகிறது.

இந்தியாவையும்,தமிழகத்தையும் பொறுத்தவரை நிகழும் அரசியல் நிகழ்வுகள் சுகமாயில்லை.மக்களின் அரசு என்ற பொறுப்பிலிருந்து நிலை தடுமாறும் மாநில,மத்திய அரசுகள் மக்களுடன்,மக்களுக்காக என்ற கோட்பாட்டிலிருந்து பிரள்வது தமிழகத்தில் இன்னும் பல நிகழ்வுகளையும்,விளைவுகளையும் உருவாக்கும். காலம் தாழ்ந்து போய் விட்டாலும் அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.

பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?

திரு.(யோ.திருவள்ளுவர்) சார்லஸ் ஆன்டனிக்கு என்ற இடுகையை ஆங்கிலத்தில் தந்து விட்டு இதனை யாராவது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தால் நல்லது என்று கூறியிருந்தார்.மொழி வல்லுனர்கள் யாராவது ஆங்கிலத்தின் சாரத்தை தமிழில் மொழிபெயர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.இதுவரை யாரும் முன்வராத காரணத்தாலும்,ஆங்கில மூலம் அழகாக இருந்ததாலும் ஆங்கில எழுத்துக்களை எனது புரிதலோடு தமிழ்படுத்துகிறேன்.ஆங்கில மூலம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டியது
http://www.worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.htm

இலங்கையில் ஈழம் தமிழர்களின் சாவும் அவர்களது வாழ்ந்த மண்ணின் அழிவும் கண்டு அதன் தூண்டு கோலாக சீக்கிய எழுத்தாளர் ஜெக்மோகன் சிங் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆன்டனிக்கு ஒரு பகிரங்க கடிதமொன்று எழுத அமைந்தது.நாகரீக சமூகத்தின் அனைத்து நாட்டவர்கள் தமிழ் போராளிகளுக்கும்,மக்களுக்கும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறார் இந்த எழுத்தாளர். அவரது பகிரங்க கடிதம் கீழே:

அன்பின் சார்ல்ஸ் ஆன்டனி,

வாழ்வுக்கான போராட்டம்,தனித்துவம்,சுதந்திரப் போராட்டத்துக்கான எனது பங்களிப்பை தயவு செய்து பெற்றுக் கொள்ளவும்.

பஞ்சாப்புக்கான போராட்டத்தை அருகில் இருந்த பார்த்த சாட்சியின் காரணமாக நீங்களும் உங்கள் மக்களும் எதற்காக வாழ்வுக்கான ஒரு போரை நிகழ்த்துகிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஊடகங்களில் உங்கள் அப்பா-வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பன்,அடுத்த நாள் எதிரி.ஒரு நாள் அவர் பாதுகாக்கப்பட்டார்.இன்று அவர் தேடப்படுகிறார்.சிலருக்கு அவர் தீவிரவாதி.பலருக்கு அவர் பாதுகாவலன்.யார் அவர் என்பதை சரித்திரம் தீர்மானிப்பதற்கு விட்டு விடுவோம்.

நான் ஒரு போராளி இனத்தைச் சார்ந்தவன்.சீக்கியர்கள் போராளிகளை நண்பர்களாக பாவிக்கிறார்கள்.பஞ்சாபில் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாயைத் திறந்து துணிச்சலான அறிக்கைகள் விடாவிட்டாலும்,நம்புங்கள் என்னை,பலர் ஈழ தமிழ் போராளிகளின் போராட்ட உறுதியையும்,உத்வேகத்தையும் வியக்கிறார்கள்.செய்திகளில் காணும் தற்போதைய உங்கள் போராட்டத்துக்கான வீழ்ச்சி பலருக்கும் சோகத்தையே உருவாக்குகிறது இங்கே.

உங்கள் மக்கள் ரசாயன ஆயுதங்களாலும்,விஷ வாயுக்களாலும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருபக்க துப்பாக்கி சூட்டில் அகப்பட்டுக் கொண்டும்,சில மணி நேரங்களே தப்பிக்க இருக்கும் கணத்தில் இந்த கடிதம் எனது தார்மீக ஆதரவை உங்களுக்கு அளிக்கிறது,

தமிழ் ஈழம் மக்களின் அவலங்களால் நான் சோகம் கொள்கிறேன்.பெண்கள்,குழந்தைகளின் துயரப் புகைப்படங்கள் மலையையும் அசைய வைக்கும். சோகத்துடன், ஆனால் அப்படி ஆகவில்லை.அனைத்து உலகமும்,24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களும் வலி,வேதனைகளை தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போய் விட்டது.

தங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு ஓடுவதற்கு பலாத்காரமான அனைத்து ஆண்,பெண்,குழந்தைகளுக்கும் எனது இதயம் புலம்புகிறது முக்கியமாக தமிழீழம் போராளிகளுக்காக.இப்படி எழுதுவதால்,எனது எழுத்துக்கள் எனது உள்மனதின் உணர்வுகள் மட்டுமே என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது.ஒரு சீக்கியனாக நான் உங்களது போராட்டத்தில் கலந்திருக்கவேண்டும்.எனது வேண்டுதலும் நல்வாழ்த்துக்களும் உங்களுடன் இருக்கட்டும்.தமிழீழத்தைப் பொறுத்த வரையில் காலத்துக்கேற்ற மிகச் சிறந்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் இருந்தபோதிலும்,உலக நிறுவனங்களும்,உலக சமுதாயமும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரங்களையும்,அவலங்களையும் துடைப்பதற்கான செயலில் தவறிவிட்டார்கள்.சீக்கியர்கள்,காஷ்மீரியர்கள்,வடகிழக்கு மக்களை கீழ்மைப் படுத்தியது போல் இலங்கை அரசாங்கமும் பகல்வெளிச்சத்து கொலையிலும்,சூறையாடலிலுமிருந்து தப்பித்துக் கொள்கிறது.

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தெருக்களில் போராடி ஐரோப்பிய தலைநகரங்களை பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துவது காண மகிழ்ச்சியாக இருக்கிறது.முக்கியமாக நார்வே தலைமையிடம் குரல் எழுப்பியதில் மனக்கிளர்ச்சியுறுகிறேன்.நார்வே புலம்பெயர் தமிழ் மக்கள் ஓஸ்லோவில் நார்வே பிரதம மந்திரியை முற்றுகையிட்டதை செய்திகளில் படித்தேன்.உலகநாடுகளின் வளர்ச்சிக்கான நார்வே மந்திரி எரிக் சொல்ஹைய்ம் " நார்வேயில் வாழும் தமிழர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் என்னால் அற்புதங்களை ஏற்படுத்த முடியாது" என்று சொன்னதாக அறிந்தேன்.

எரிக்சொல்ஹைய்ம் நார்வே நாட்டு அரசாங்கத்திற்கான NRK தொலைக்காட்சி ஊடகத்திற்கான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது " என்னால் குரல் எழுப்பும் தமிழர்களிடம் பேச முடிகிறது.நான் மீண்டும் ஒரு முறை அமெரிக்கா,ஜப்பான்,ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைகளிடம் இலங்கையில் போரை நிறுத்த இயலுமா என பேசி பார்க்கிறேன்" என்றார்.இதற்கு தமிழ் எழுத்தாளர் K.P. அரவிந்தம் பதில் மிகப் பொருத்தமானதும்,கலைசார் மேம்பாடுடையதாகும்."ஒருவேளை சொல்ஹைய்ம் அதிசயம் நிகழ்த்த இயலாமல் போயிருக்கலாம்.ஆனால் குறைந்தபட்சம் தவறுகள் இழைப்பதிலிருந்து நின்றிருக்கலாம்.தூதுத்துவம் என்பது நிகழ்த்திக் காட்டக்கூடிய கலையாக இருக்கலாம்.ஆனால் உரிமைப் போர் என்பது இயலாததை நிகழ்த்திக் காட்டுவது".

ஸ்காண்டிநேவியா நாடுகள் மனித உரிமைகளைப் பேணுவதில் உறுதியும் ஆற்றலுமுடையவர்கள்.அதனால்தான் உங்கள் தலைமை நார்வேயை இருதரப்பின் பேச்சாளராக தேர்ந்தெடுத்தது.ஆனால் அரவிந்தம் தலையில் ஆணி அடித்தது மாதிரி சொன்னார் " நார்வே மையப் புள்ளியை தவறவிட்டு விட்டது.சமாதானத்துக்கான இரு தரப்பின் சார்பில்லாத அங்கமாக இருக்கும் நிலையில் எல்.டி.டி.இ யினை ஆயுதங்களை களையுமாறு சக நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்களுடன் கூடி அழுத்தம் தருவது முறையல்ல.இலங்கையின் இனப்படுகொலையின் கரங்களில் வன்னி மக்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை இதை விட கவலைக்குரியது.படிப்படியான இவர்களின் தோல்வியால் நார்வேகாரர்கள் அனைத்து உலக மத்தியஸ்தம் பேசும் எண்ணத்திற்கே தோல்வியை கொண்டு வந்திருக்கிறார்கள்.தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள இன்னும் கூட நேரமிருக்கிறது,பூகோள அரசியல் குறிக்கோளர்களின் உடந்தையாக இல்லாமல் உலக மனித நாகரீகங்களுக்கு தங்களை உட்படுத்துவார்களேயானால் ".

நேரடியாகவும் மறைமுகமாகவுமான இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசின் அளவிடா அதிகாரத்தின் கால்களின் கீழ் தமிழீழ மக்கள் நசுக்கப்படுகிறார்கள்.ஈழ தமிழர்களுடனான இயற்கையான தமிழ்நாட்டு சகோதர உறவும் அலட்சியப் படுத்தப் பட்டுள்ளது.13 தமிழ் சகோதரிகளும் மேலும் பலரும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்கள் உங்களுக்கு ஆதரவாக,ஆனால் ஊடகங்களும்,அரசாங்கமும் இதுபற்றி கவனிக்கிறார்களா?முக்கியமாக நாடே தேர்தல் கள நிலையில் இருக்கும்போது.

தூரத்திலிருந்து நோக்கினால் அனைத்து தமிழர்களின் நிலைப்பாட்டில் தமிழக தலைமை ஏமாற்றுவதாகவும் உண்மையில்லாததுமாக இருக்கிறது.உங்கள் ஈடுபாடுகளை அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை.உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எனக்கு,தமிழ் தலைமையைப் போலவே இந்திய தலைமையும் உங்களுடனும் உங்கள் குறிக்கோள்களுடனும் சாணக்கியர்களாக விளையாடுகிறார்கள் எனவே படுகிறது.வெற்றிகரமாக கூட.இந்தியா உங்கள் பகைவனா அல்லது நண்பனா என உலகால் புரிந்து கொள்ள முடியவில்லை.இந்தியா இந்த மாதிரி இரட்டைவேடம் போடவே செய்கிறது.இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது,இருந்தும் அமைதியான முகத்தை காட்டுகிறது.

நான் போர் விமர்சகனல்ல.ஆனால் நார்வே அமைதிப் பேச்சு நடந்த போது,உங்கள் மக்களின் போராட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது.நிச்சயமாக அப்பொழுது உங்கள் தலைமைக்கு நடைமுறைக் காரணங்கள் இருந்திருக்குமென நம்புகிறேன்.ஆனால் இந்த மாதிரியான சமாதானப் பேச்சு வார்த்தைகள் நம்பகத்தன்மையில்லாத விதிமுறைகளை மீறிய அரசுக்கு ஆயுதங்களை சேகரித்து மேலும் பல சாவுகளை உருவாக்கவும் அழிவுகளை உருவாக்கவே உதவியது.இந்தியாவும் சீக்கியர்கள்,காஷ்மீரிகள்,நாகா,மிஷோ வுக்கும் இதனையே செய்தது.9/11 க்கு பின்னால் மாற்றமடைந்த பூகோள அரசியல் நிலைகள் கூட நார்வேஜியன் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டதற்கு காரணமாக அமைந்தது.

கடந்த வருடம் இந்த நேரத்தில் கொசோவொ ஒரு புதிய நாடாகப் பிறந்தது.அதற்கும் முந்தைய ஆண்டு,தைமூர் லியஸ்ட் சுதந்திரம் அடைந்தது.2009 தமிழ் ஈழத்துக்கு சொந்தம் என நினைத்தேன்.எனக்கு இன்னும் அந்த நம்பிக்கை இருக்கிறது இந்த வருடத்தில் ஏற்படாதென்ற போதிலும்.உங்கள் போராட்டம் இறுதி வடிவில் இருக்கிறதென்ற எண்ணம் உலகம் பூராவும் இருக்கிறது.

உண்மைகள் பாதிக்கபடுவதாலும் உண்மைகள் சரியாக வெளிப்படாத நிலையிலும் எனது முழு நம்பிக்கை அப்படியிருக்கக் கூடாதென்பது.உங்கள் போராட்டம் தொடர வேண்டும்.புரட்சி சுதந்திரம் என்ற கொடியை நீங்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க அட்டார்னி ஃப்ரூஸ் பெய்ன்,அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பச்சை அட்டை வைத்திருக்கும் ஜெனரல்.பொன்சேகாவின் மனித உரிமைக் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பது எனது முழு நம்பிக்கை.நியுயார்க்கை அடிப்படையாகக் கொண்ட இனப்படுகொலை தடுப்பு அமைப்பு இனப்படுகொலை நிகழும் எட்டு நாடுகளைக் குறிப்பிட்டிருக்கிறது,அதில் இலங்கையும் ஒன்று. உங்கள் மண்ணில் நிகழும் மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி உலகுக்கு வெளிப்படுத்தும் என நம்புவோம்.

பாதுகாப்பு சபையில் கூட ஐ.நாவுக்கான மெக்ஸிகோ தூதர் க்ளாட் ஹெல்லன் தனது நாட்டின் ஜனத்தொகையை பாதுகாக்கும் பொறுப்புக்கான தீர்மானத்தை கொண்டுவருவதில் கூட சிறிய நம்பிக்கை ஏற்படுகிறது.

அன்பின் திரு.சார்ல்ஸ்,தெற்காசிய பூகோளத்தை மாற்ற நினைப்பவரின் மகனாக இந்தப் போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வீர்கள் என நம்புகிறேன்.எனது தரப்பிலிருந்து இதனைச் சொல்ல விரும்புகிறேன் கொசவோ சுதந்திரம் வெற்றியடைந்த போது " சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் சொன்னபடி, "சுதந்திரத்தை யாரும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதில்லை.யாருக்கு தேவையோஅவர்கள் தங்களது உறுதியாலும்,பலத்தாலும் அதைப் பெற வேண்டும்". விரைவாகவோ,தாமதமாகவோ நீங்கள் அதைப் பெறுவீர்கள்.

நீங்களும்,உங்கள் மக்களும் உங்களது வாழ்நாளிலேயே சுதந்திரத்தை ருசிப்பீர்கள் என வாழ்த்துகிறேன்.எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களின் மீது தனது ஆசிகளை தூவவும் அவர்களது துயரங்கள் முடிவுக்கு வரவும் உலகின் முன் சுதந்திர மனிதர்களாக உயர்ந்து நிற்கவும் துணைபுரிவாராக.

உண்மையுடன்
ஜெக்மோகன் சிங்

குறிப்பு: இந்த எழுத்தாளர் லூதியானா,பஞ்சாப்பில் வசிப்பவர்.அவரை அணுகவேண்டிய முகவரி jsbigideas@gmail.com

Wednesday, April 29, 2009

ஒரு பின்னூட்டம் தந்த பதிவு

நறுக்குன்னு நாலு வார்த்த கேட்கும் பதிவர் பாலா ஜெய்ஹிந்த்புரம் பதிவில் போட்ட பின்னோட்டம் ஒரு பதிவாகப் போடத் தூண்டியது.

http://jaihindpuram.blogspot.com/2009/04/blog-post_26.html

பாலாவின் வரிகள் அடைப்பானில்.

//மன்னிக்கணும். நொடிச்சி விழுந்தாலும் தன்னம்பிக்கையோட திரும்ப எழுந்து கம்பீரமா நடக்கிறத பாசிடிவா எழுதியிருக்கலாம்னு நினைக்கிறேன். அங்கயே உக்காந்து அழுது யாராவது தூக்கமாட்டாங்களானு இருக்கிறதுதானே இன்றைக்கு இயல்பா இருக்கு.//

தன்னம்பிக்கை என்பது பொதுவாக இந்திய மனப்பான்மையில் இல்லையென்பதற்கும் அது ஒளிந்து கிடக்கிறதென்பதற்கும் ஒரு சின்ன உதாரணம்.

கோவாவில் Flee market ல் மேடான இடத்தில் ஒரு ஹிப்பி உட்கார்ந்திருந்தான்.அவனுக்கும் கீழே கைக்கெட்டும் தூரத்தில் ஒரு சின்னப் பாறையும் மேடும்.கொஞ்சம் தூரத்தில் கடற்கரை மணலும் கடல் அலையும்.

கடற்கரைப் பக்கமிருந்து வந்த ஒரு நடுத்தர இந்தியர் நடந்து வந்து பாறைக்கு அருகில் வந்ததும் மேடு மேல் ஏறி வருவதற்கு கொஞ்சம் தயங்கினார்.அருகில் இருந்த ஹிப்பியிடம் கையை நீட்டி உதவி கேட்டார்.ஹிப்பி சொன்னான் " your legs and hands are alright.climb up and come " என்றான்.வேறு வழியில்லாமல் இந்தியர் கொஞ்சம் சிரமப் பட்டு மேலே வந்து விட்டார். உனக்கு நீயே உதவி என்ற மனப்பான்மையினால்தான் cliff hanging (தமிழென்ன!யாராவது உதவுங்களேன்)கூட மேலை நாட்டில் சாத்தியப் படுகிறதென நினைக்கிறேன்.

சொல்லத் துணிந்த தமிழக அரசியல்

தமிழில் மேடைப் பேச்சுகளில் மக்களை மனம் கவர்ந்து ஆட்சிக்கு வந்த திராவிட கழக இயக்கமான தி.மு.க தனிமனித ஈகோக்களால் பிரிந்து தி,மு.க எனவும்,அ.தி.மு.க எனவும் பிரிந்து போனது.எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தது எப்படி தமிழகத்தின் அரசியலை மாற்றி அமைத்ததோ அதே போல் கால சூழல்களால் அரசியலுக்கு வந்த ஜெயலலிதா தி.மு.கவின் அரசியலுக்கு வலுவான எதிர் சக்தியாக மாறினாலும் கூட இரு இயக்கங்களின் சில அரசியல் பார்வைகள் தமிழகத்திற்கு ஆக்க பூர்வமானதாக இல்லை.

ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நிர்வாகத் திறமையில் இரு இயக்கங்களும் தமிழகத்தை முன்னிலைக்கு கொண்டு சென்றாலும் மாநிலத்தின் நன்மைக்கும் அப்பால் தனி மனித காழ்ப்புணர்ச்சிகள் வந்து குறுக்கே நின்று விடுகிறது.

கலைஞர் தனது வாழ்வே அரசியலாக்கிக் கொண்டதால் அரசியல் பால பாடங்களை கற்றுத் தேறி சமயங்களில் சகுனியின் பாத்திரத்தையும் ஏந்தி மொத்த மதிப்பீட்டில் சாணக்கியனாய் வளர்ந்து நிற்கிறார்.ஜெயலலிதா அரசியலுக்கு வந்த விதம் அவருக்கே சில சமயங்களில் ஆச்சரியத்தை உண்டுபண்ணியிருக்கக் கூடும்.பெண்ணுக்கே இயல்பான உடை,நகை,சொத்து மோகங்களில் அடிபட்டு ஓரளவுக்கு அரசியலின் நுனியைப் பற்றி மேலே வந்து விட்டார் எனலாம்.

இந்த இரு இயக்கங்களின் தலைவர்களும் போன தலைமுறைக்கான அரசியல்வாதிகள் என்பது போக இந்த இயக்கங்கள் அரசியலை வளர்த்த விதம் தமிழகத்தைப் பொறுத்தவரை மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற திராவிட வாசகங்கள் நடைமுறையில் நல்லதான மாற்று சிந்தனைகளையும் வரவேற்கவேண்டும் என்ற நாகரீகங்களை வளர்க்கவில்லை.கலைஞரின் ஆட்சியில் நிகழும் நல்லவற்றிற்கு பாராட்டும் மனப் பக்குவம் ஜெயலலிதாவிற்கும் அவர் வழி நடத்தும் கட்சிகாரர்களுக்கும் இருக்க வேண்டும்.மாறாக செய் புகழ் தி.மு.க விற்கு போய் விடுமே என தேவையற்ற வெளிநடப்புகளும் தங்களது மந்திரமே மைனாரிட்டி கவர்ன்மெண்ட் வாசகமும் தமிழக அரசியல் நாகரீகத்தின் போங்கை காட்டுகிறது.தனிமனித கோபங்களாக இரு பக்க சிறையடைப்புக்களும் உதாரணங்களாய் கண்முன் வந்து போகின்றது.

இரு தலைவர்களும் ஒரு தலைமுறையின் இறுதி விளிம்பில் நின்று கொண்டிருப்பதால் விவேகமான,பிரச்சினைகளை அலசி ஆராயும்,தொலை நோக்குப் பார்வையுள்ள திட்டமிடுதல் கூடிய இளைய தலைமுறை அரசியல் களம் புகுதல் தமிழகத்திற்கு நலன் பயக்கும்.

தி,மு,க தரப்பில் கட்சியினை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும் இளைய தலைமுறையினர் லெனின் உட்பட நிறையவே தென்படுகிறார்கள்.ஆனால் சொந்தங்களின் விவகாரங்கள் பொதுவுக்கு வந்தபோது இருந்த நம்பிக்கையின் தன்மை குறைந்து போனது.அ.தி.மு.க பக்கம் ஜெயலலிதா தவிர்த்து மக்களை வசிகரிக்கும் யாரும் நினைவுக்கு வரவில்லை.ஜெயலலிதா சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஒப்பிவிக்கும் கிளிப்பிள்ளைகள்தான் தென்படுகிறார்கள்.எஸ்.வி.சேகர் தெரிந்தும் உள்ளே சிக்கி விட்டா போதும் என வெளியே ஓடி விட்டார்.அன்புமணி,மாறன் சகோதரர்கள் இன்னும் நம்பிக்கையூட்டச் செய்கிறார்கள்.

நாமும் எம்.ஜி.ஆர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் அரசியல் புகுந்த நடிகர்களின் அரசியல் பார்வைகள் தீர்க்கமாயில்லை.சிரமப் பட்டு உழைத்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை மீண்டும் அரசியலுக்குள் செலவு செய்வதென்பதிலிருந்தே வியாபார நோக்கங்களுக்கான சிந்தாந்தங்கள் புரிகிறது.

வை.கோ கழகத்திலிருந்து பிரிந்து வந்த நாள்முதல் விடாமல் நிற்கும் ஒரே கொள்கை விடுதலைப் புலிகள் ஆதரவு.சிறை வாழ்க்கை உட்பட விடுதலை ஆதரவில் உறுதியாய் இருப்பது ஒன்றே அவரது கொள்கைக்கான பலம்.அதனையடுத்து அவரது பேச்சுத் திறன் மேடையின் கீழே நிற்பவனை வசீகரிக்க செய்யும்.இது தவிர்த்து நோக்கினால் அவரது அரசியல் சமரசங்கள்,பார்வைகள் அனைத்தும் கேலிக்கூத்து.இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை வை.கோ விற்கு.வரும் காலம் திட்டமிடுதல்கள் சரியாக இருந்தால் சறுக்கல்களை நிவர்த்தி செய்ய இயலும்.பழ.நெடுமாறன் தமிழகத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதியாய் அனைவர் முன்னும் வலம் வந்திருக்க வேண்டியவர்.இரு கழக இயக்கங்களும் அவரை ஓரம் கட்டி விட்டார்கள்.

இதுவரை சொன்னவை சொல்லவா வேண்டாமா என கணினியில் தூக்கம் போட்ட எழுத்துக்கள்.ஆனால் இதனை பதிவேற்றி விடுவது என்ற தீர்மானத்திற்கு கொண்டு வந்தது நேற்றைய தொலைக்காட்சியில் கண்ட மு.க.அழகிரியின் பேச்சுக்கள்.மரம் வெட்டிய காலம் தொட்டே மருத்துவரின் அரசியல் பிடிக்காமல் போனது.ஆனால் தி.மு.க தனது தமிழ்ப் பாதையை விட்டுப் போன காலியிடத்தை நிரப்புகிறாரோ என்று மக்கள் தொலைக்காட்சியின் மேம்போக்கு தெரிந்தது.ஆனால் பதவியே பிரதானம் என்பதிலே கண் என்பது அவரது தாவல்கள் சொன்னது.தேர்தல் காலத்து கூட்டணித் தாவல் மருத்துவருக்கு மட்டுமே சொந்தமன்று.அதற்கு பட்டயம் போட கலைஞரும் முன்னோடிதான்.

இவர்களுக்குள் கொள்கை சண்டைகள் இருந்தாலும் எதிர் அறிக்கைகள் விட்டாலும் தரமிழந்து தாழ்ந்து விடவில்லையெனவே நினைக்கிறேன்.ஜெயலலிதா கூட உதிர்ந்த ரோமங்கள் என நெடுஞ்செழியனை வசைபாடியதை விட கீழே இறங்கி வந்து விடவில்லை.இரு கழகங்களும் எதிர்க்கட்சியை கொச்சையாகத் திட்டுவதற்கு தொண்டர்கள் என்ற பெயரில் காசுப்பேச்சாளிகள் வைத்திருக்கிறார்கள்.கலைஞர் மேல் இத்தனை கல்லடிகள் விழுந்தும் வாய் தரம் தாழ்ந்ததில்லை என நினைக்கிறேன்.ஸ்டாலின் கூட அரசியல் பக்குவம் பெற்று விட்டமாதிரியே தெரிகிறது.

ஆனால் இன்னொரு மகன் அழகிரிக்கு பேசத் தெரியவில்லையா அல்லது அவரது குணநலன்களைப் பிரதிபலிக்கிறதா எனத் தெரியவில்லை.நேற்று பின்புறத்து கதவு வழியாக அன்புமணி மத்தியபதவிக்குப் போனவர் என்றார்.அது அரசியல் விமர்சனம் சரி.ஆனால் அன்பு மணியை திட்டுவதாக நினைத்து "எல்லோரும் ராமதாஸை அரசியல் வியாபாரிங்கிறாங்க.ஆனா உங்கப்பன் அரசியல் விபச்சாரி" என்றாரே பார்க்கலாம்.மனம் பகீர் என்றது.மதுரையையும் வருங்கால தி.மு.க வையும் நினைத்தால் பயமாக இருக்கிறது.

பையன் தவறு செய்தால் அப்பனிடமே முறையிடுவது வழக்கம்.அப்பனாக மட்டும் இல்லாமல் தமிழகத்தின் முதல்வரின் மகன் என்ற காரணத்தாலும் கலைஞரே!அழகிரி என்று பெயர் கொண்டு இது அழகா?உங்கள் தலைமைக்கும் பெயர் காப்பாற்றவும் எவ்வளவு பொறுப்புக்கள் இருக்கிறது.உங்கள் வயதுக்கு உண்ணாவிரதம் இருப்பதே கவலைக்குரியது.ஆனால் அதையும் அரசியலுக்காக வேண்டி உண்ணாவிரதம் திருப்தி அளிக்கிறதென்றும் ஜெயலலிதாவின் தனி ஈழம் பெற்றுத் தருவேன் குரலுக்கு எதிர் கணையாக மாற்று அமைப்புகள் மூலமாவது ஈழம் அமைந்தே தீரும் என்கிறீர்கள்.இப்படித்தான் ஈழம் அமையவேண்டும் என்ற கனவு கண்டவன் கூட எப்படியாவது ஈழம் அமையவேண்டும் என்றுதான் நினைப்பான்.இப்போதைய மக்களின் அவலங்களை காண்பவர்களின் எண்ணம் கூட அதுவே.

ஈழ விடுதலை உணர்வுகளின் இந்தக் காலகட்டத்தில் ஒரு உரிமைப் போருக்கு குரல் கொடுப்பதோடு தமிழக அரசியலை மாற்றிப் போட இயல்பாகவே வந்த மக்கள் எழுச்சி தமிழக அரசியலையும் மாற்றி அமைப்பதற்கான அருமையான சந்தர்ப்பங்கள் அமைந்தது.ஆனால் திராவிட வேர்களின் நீளம் அதன் ஆழம் கண்டால் தமிழகமே!என் தமிழகமே!புதிய விழுதுகளை எப்பொழுது படைக்கப் போகிறாய்?