Followers

Wednesday, March 31, 2010

ஈரோடு பதிவுலக வேண்டுகோளும் கூட்டாஞ்சோறும்.

நீரை சிக்கனமாக்கும் குறிக்கோளாக ஈரோடு வலைப்பதிவர்கள் குழு குறிப்பிட்ட வழக்கத்தை மீறி இந்த வருடம் கோடை வெப்பமாக இருக்கிறது என்ற இடுகையின் சாரமாக இங்கே புவி வெப்பம் பற்றி குறிப்பிட்டாகி விட்டது.

நமது நாட்டில் பொதுவாக குளியல்,உணவு,தாகம்,கழுவுதல் போன்ற நான்கு பிரிவில் நீர் தேவைப்படுகிறது.கர்நாடகா,ஆந்திரா,கேரளா என தமிழகம் தண்ணீரை நம்ப வேண்டிய சூழலும்,அதிகரிக்கும் ஜனத்தொகையும்,புவி வெப்பமும் நீரை Scarcity commodity என்ற பகுதியில் நிறுத்தி விட்டது.பதிவர்களுக்கு வேண்டுகோளின் பின்னூட்டத்தில் கார்த்திகைப் பாண்டியன் சொன்னது போல இல்லத்தரசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

நீர்,நிலம்,மலை,காடுகள் என்று இருக்கும் நாமே நீருக்கு சிரமப்படுகிறோமென்றால் உயர்ந்த கோபுரங்களுடன் நவீன யுகத்தில் உலாவரும் வளைகுடா நாடுகள் பெட்ரோல் கிடைப்பதற்கும் முன்பு தங்கள் வாழ்க்கையின் முக்கிய ஆதாரங்களை எப்படி சேகரித்திருப்பார்கள்,சிக்கனம் செய்திருப்பார்கள்?

ஈராக்கின்,யூப்ரடிஸ்,டைகிரிஸ்-எகிப்தின் நைல் போன்றவை நாகரீக தொட்டில்களாக அமைந்திருந்தாலும் ஏனைய அடர்ந்த பாலைவன நாடுகளாகவும்,கடல் எல்லைகளை ஒட்டியே இருந்த பாலைவன நாடுகள் பண்டமாற்று முறையில் வணிகம் செய்தும்,அரிசி,வாசனை திரவியங்கள்,தண்ணீர் போன்றவற்றை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டார்கள்.அப்படியான சூழலில் நீர் உணவுக்காக பயன்பட்டிருக்குமென்று பார்த்தால் மைதாவால் சுடப்பட்ட ரொட்டி,செந்தழலால் சுடப்பட்ட ஆட்டிறைச்சி,குறைந்த நீர் நிலைகளில் வளரும் கீரை வகைகள் போன்றவை உணவுகளாகின.இப்பவும் வளைகுடா நண்பர்கள் ந்ன்கு அறிந்த குப்பூஸ்,மொட்டைக்கடலை மாதிரியான பருப்பு,நெருப்பின் அணலில் வறுத்த கோழி,ஆட்டுக்கறி,குதார் எனப்படும் இலைதழைகள் போன்றவற்றை குப்பூஸில் சாப்பிட்டால் கையைக் கழுவ வேண்டிய அவசியமில்லாமல் நாப்கினில் தடவிட்டு போய் விடலாம்.
நாமும் கலாச்சார மாற்றங்களில் மாறியிருந்தாலும் நெல்லைக் கண்டு பிடித்த முப்பாட்டன் காலம் தொட்டு அரிசி சோறும்,கஞ்சியும் மாறவில்லை.இங்கேயிருந்து துவங்கலாம் நீர் சேமிப்பை.நான் பார்த்த வரை கஞ்சியை தாய்க்குலம் வடித்து கொட்டி விடுகிறார்கள்.முன்பெல்லாம் கஞ்சி ஒரு நேரத்து ஆகாரமாகக் கூட இருக்கும்.கேழ்வரகும்,சோளமும்,கம்பும் அரிசிக்குப் போட்டியாக இருந்தன.இப்ப எப்படி?ஒரு கிலோ அரிசிக்கு 3 மடங்கு தண்ணீர் சேர்த்தாலே அரிசி வடித்து கஞ்சியை கீழே கொட்டலாம்:) பதிலாக 1கிலோ அரிசி,1-1/2 கிலோ தண்ணீர் பதத்தில் சோறு சமைத்தால் சுண்டும் தண்ணீரீலே சோறை சமைத்து விடலாம்.வடிக்கும் வேலை மிச்சம்.ஆனால் பொல,பொலன்னு சோறு சாப்பிட முடியாது.கூட்டாஞ் சோறு அதிகமாக சாப்பிட்டுப் பழகலாம்.உடல் நலத்துக்கும் நல்லது.தண்ணீர்,நேரத்தை மிச்சப்படுத்தி விடலாம்.அரிசியில் கார்போ ஹைட்ரேட் அதிகமாவதால் நம் உடலிலும் அதிகமாகிறது.வட இந்திய ஸ்டைலில் கொஞ்சம் சப்பாத்தி,கொஞ்சம் சாதம் சாப்பிடலாம்.இல்லையென்றால் சப்பாத்தி மட்டுமே.
தாகம் தீர்ப்பதில் பெப்சி,கோலா பானங்களை தவிர்க்கலாம்.அப்புறம் அது...அது....தவிர்க்கலாம்.நானெல்லாம் கிடைக்காம சும்மா இல்ல:)பழ ரசங்கள்,இளநீர் மாற்றாக அமையலாம்.

தினமும் மொண்டு மொண்டு ஊத்தி மொடாவை காலி செய்வதை விட வாரத்தில் இரண்டு நாட்கள் துவலைத் தொட்டு பிரஞ்சுக்காரனாகலாம்.(எல்லாத்துக்கும் அமெரிக்காவை பின்பற்றுவதற்கு மாறுதலாக பிரெஞ்சுக்காரர்களும்தான் மகிழ்ந்து கொள்ளட்டுமே)

பாத்திரம் விளக்கியாகனும்,துணி கழுவியாகனும்,பல் கழுவியாகனும்.எப்படி சுத்தி வந்தாலும் கழுவுதல் இடிக்குதே! யோசிச்சு சொல்றேன்.

Tuesday, March 30, 2010

சாராவின் மதமாற்றமும்,மனித உரிமை அமைப்புகளும்

இனியொரு தளத்தில் மதமாற்றம் தவறல்ல:சாராவை விடுவிக்க கோரும் மனித உரிமை அமைப்புகள் என்ற இடுகையை காண நேர்ந்தது.
இனியொரு தளத்திலிருந்து அடைப்பான்!

"பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது."


இந்த திடீர் மனித உரிமை அமைப்புகள் எங்கேயிருந்து தோன்றின?குறைந்த பட்சம் இவைகளின் இருப்பாக விலாசமாவது வளைகுடாக்களில் வாழும் யாருக்காவது தெரியுமா?அப்படி ஏதாவது அமைப்புகள்,நிறுவனங்கள் இருந்தால் மகிழ்ச்சிக்குரியவை.

ஆனால் சாரா மலனி பெரேராவின் மனித உரிமை என்ற சொல்லுக்குப் பின்னாலிருந்து குரல் எழுப்பும் மனித உரிமைகளின் முகமூடிக்குப் பின்னால் மதம் சார்ந்த குரல்கள் எழுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.சாரா மலனி பெரேராவுக்கு மதமாற்றத்துக்கான உரிமை நிச்சயம் உண்டு.ஆனால் அவர் ஏனைய இலங்கையர்களை மதமாற்றத்துக்காக வேண்டி புத்தகம் எழுதியிருந்தாலோ,மத அமைப்புகளுடன் இணைந்து செயல்படுபவராகவோ இருந்தாலோ அது விமர்சனத்துக்குரியது.

ஆசிய நாடுகளின் மனித உரிமைகளின் நிலையும், அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளின் மனித உரிமைகள் பற்றியும் அதற்காக அர்பணித்துக் கொண்ட மனித உரிமைகளின் அமைப்புகள் பற்றியும் இங்கே சொல்லித் தெரியவேண்டாம்.மனித வள,மனித உரிமை,ஆசிய நாட்டு தூதரகங்கள் போன்றவைகள் நம் வயல்வெளிகளின் சோளக்காட்டு பொம்மைகள் மாதிரி. அப்படியில்லாமல் இருந்தால் உயிர் உள்ள அமைப்புகளாக மனித உணர்வுகளோடு வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ்,இலங்கை,பெங்களாதேஷ்,இந்திய,நேபாள பணிப் பெண்களுக்கும் இதர உழைக்கும் வர்க்கத்து மனிதர்களுக்கும் உதவிகள் செய்ய முன்வந்திருக்கும்.அந்த அந்த நாட்டு தூதரகங்கள் ஓரளவுக்கு பணியிலிருந்து ஓடிப்போவோர்களுக்கு உதவி செய்கிறதென்றாலும் அடைக்கலத்திற்கான மூல காரணங்களை வெளியுறவு துறை வரையிலும் எந்த நாடும் கொண்டு செல்வதில்லை.சிரமங்கள் பல இருந்தும் வளைகுடா மோகம் இன்னும் விட்டபாடில்லை.அதற்கான ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கை நிலைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியது அவசியம்.

வளைகுடா நாடுகளின் மனித சுரண்டல் குறிப்பாக பெண்கள் விசயத்தில் எப்படி திசை மாறுகிறதென்றால் இந்திய தூதரக,பிலிப்பைன்ஸ் தூதரகங்களின் சிபாரிசுகளின் பேரில் அரசாங்கம் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க மறுத்தால் இலங்கையோ அல்லது நேபாளமோ விசா எண்ணிக்கைகளில் முந்திக் கொள்ளும்.எந்த ஒரு கூட்டு உடன்பாடும் கிடையாது.சார்க் போன்ற அமைப்புகளில் இது போன்ற மனித உரிமைகள் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லாமல் முன்பு வாஜ்பாயும்,முஷ்ரஃபும் கை குலுக்கி கொள்கிறார்களா என்று ஆங்கில ஊடகங்கள் குறி பார்ப்பதிலும்,சென்ற ஆண்டில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் கவலைகள் கொல்லாமல் எங்கள் மேல் குண்டு விழாமல் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள் என்று ஆசிகள் கூறி சார்க்கை நிறைவு செய்தார்கள்.

ஏதோ மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகளும்,அமெரிக்காவின் அனைத்து நாடுகளின் அவ்வப்போதைய மனித உரிமை படிகளை,தரங்களை வெளியிடுவது மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல்.அதிலும் மனித உரிமை விமர்சனங்கள் சி.என்.என் வரை செல்லாதவரை அரைக்கண் தூக்கமே அனைவருக்கும்.

இங்கே அரேபியர்கள் என்றவுடன் மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கை முறையிலோ அல்லது உள்ளூருக்குள்ளேயே இஸ்லாத்தின் வேர்களில் ஊன்றியவர்களோ கூட மனிதாபிமானத்துடன் இருப்பவர்களும் உள்ளார்கள்.ஆனால் விகிதாச்சாரத்தில் மனித உரிமை மீறல்காரர்கள் அதிகம்.இதற்கான சாட்சியாக ஒவ்வொரு நாட்டின் தூதரகங்களில் கடவுசீட்டு இல்லாமல்,கையில் காசு இல்லாமல் தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கை.

வெவ்வேறு அரேபிய,ஆசிய உடை,உணவு,பழக்கங்கள் என மாறுபட்டிருந்தாலும் துவக்க காலங்களில் வீட்டு வேலை பெண்களுக்கு மிகவும் தடையாக இருப்பது மொழி.இதனையெல்லாம் காலப்போக்கில் கடந்து அரேபிய கலாச்சாரத்தோடு ஒன்றி விடும் வீட்டில் பணிபுரிபவர்களை தங்களில் ஒருவராகவோ குறைந்த பட்சம் சகமனிதன் என்ற பரந்த மனப்பான்மையுடன் நடத்துவது அவசியம்.குவைத்தில் கூட தற்போது உழைப்பாளர் சட்டங்களில் (Labour Laws) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்திருக்கின்றன.ஆனாலும் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான சலுகைகளுடன் ஒப்பிடும் போது வீட்டுபணிகளை செய்பவர்களுக்கு இல்லை.வளைகுடா மாற்றங்களின் பயணத்தின் தூரம் இன்னும் நீண்டு கிடக்கிறது.

அரேபிய இணையம்,சி,என்.என் தொலைக்காட்சிக்கு இணையான அல்ஜசிரா,துபாயின் பொருளாதார மாற்றங்கள்,உலகமயமாக்கல்,பன்னாட்டு கலாச்சாரங்களின் மாற்றங்களின் நிறை,குறைகள், அமெரிக்காவின் வளைகுடா கண்,ஈரானின் அணு நாடாகும் கனவு,இஸ்ரேல்,பாலஸ்தீனிய பிரச்சினை,பெட்ரோல் போன்றவை வளைகுடாவை ஒரு புதிய மாற்றத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.விளைவுகள் இனி மேல்தான் தெரியவரும்.

ஒவ்வொருவருக்கும் இயல்பாக ஒன்று... மதம்,காதல்,மனிதம் என்று பிடித்துப் போவதில் தவறில்லை.இதில் காதல்,மனிதம் போன்ற உணர்வுகள் இயல்பாகவே ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் ஒட்டிக்கொள்கின்றன.ஆனால் மதம் அப்படியில்லை.அதற்கு ஒரு கிரியா ஊக்கியாக ஒரு தனி மனிதன்,ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.மதமாற்றம் கூட யாருக்கும் இயல்பாய் வருவதில்லை.அதன் பின்புலங்களை ஆய்ந்தால் சூழல்,சுயநம்பிக்கையின்மை,தாழ்வு மனப்பான்மை,துயரம்,சுய லாபங்கள்,மத மாற்றத்துக்கென்றே அர்பணித்துக் கொண்ட அமைப்புகள் என்று ஏதாவது ஒன்று இருக்கும்.தான் வாழும் குடும்பம்,நாடு,சூழல் என்ற வட்டத்துக்குள் ஒருவருக்கு இயற்கையாகவேஅவரின் மதத்தின் சாயல்கள் வந்து விடுகிறது.இதனை புறக்கணித்து இன்னொரு நிலைக்கு மாறுவது நட்பு,புத்தகம்,சூழல் என்ற சுய உணர்வில் மத மாற்றம் என்ற பரிட்சார்த்தம் என்பது மிக அபூர்வம்.அப்துல்லா சேஷாசலம் போன்றவர்கள் ஒருவேளை இந்த விதிக்குள் வருவதற்கு சாத்தியமிருக்கிறது.ஆனால் இதற்கான உட்காரணங்கள் இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.அப்துல்லா சேஷாசலம் இப்பொழுதுதான் விதைத்திருக்கிறார்.அறுவடை வரை பொறுத்திருப்போம்.

ஆனால் சிலர் மத கடைகள் திறந்து வைத்து மதமாற்றமும் மறைத்து வைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களில் (Hidden Agenta) ஒன்று என்ற அவர்களின் பிரசாரத்தில் தொண்டனாகிப் போவது சுய புத்தியில்லாததும் சுய சோதனைக்குள்ளாக்கி கொள்ளாததுமே.தொலைக்காட்சிகள் ஓரளவுக்கு சமூக சூழல்களை எடை போட உதவுவதால் அதன் நோக்கில் பார்த்தால் சுய மருத்துவ விளம்பரதாரர்கள்,மொழி மாற்றம் செய்யப்பட்ட உடல் வளைக்கும் சாதனங்கள்,செய்தி,மெகா,சினிமா,நகைச்சுவை நேரங்களோடு ஒவ்வொரு மதமும் வித்தியாசப்படாமல் ஒரு மணி நேரமாவது மூளை சலவைக்கு தயார் படுத்துகிறார்கள்.

இந்தியாவில் கிறுஸ்தவம் புகுந்ததின் சில நன்மைகள் பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகள் போன்றவை.எதிர்வினையாகவும் மதத்தின் அடையாளமாகவும் தேவாலயங்கள் நிற்கின்றன.ஷாஜகானின் தாஜ்மஹால்,குதுப்மினார்,ஜும்மா(வெள்ளிக்கிழமை)மசூதி,செங்கோட்டை போன்றவைகளில் ஜும்மா மசூதி மதத்தின் அடையாளம்.கூடவே அல்கைடா என்ற வரை மதத்தின் மாற்றங்கள் மனிதனை இழிவுபடுத்துகின்றன. சமணம்,ஜைனம்,சைவம் என கோயில்கள் மதத்தின் அடையாளமாய் இருந்தாலும் வர்ணாசிரமம் இணையம் வரை சிவதாண்டமாடுகிறது.

நேற்று வரை தனக்கு சொந்தமான மதம் இன்றைக்கு மதம் மாறிப் போனதும் அந்நியமாகிப் போக இயலுமா என்பது கேள்விக்குரியது.கட்சிகள் கூட மதங்களுக்கு இணையானவை.ஏனென்றால் இரண்டுமே தோற்றுவிக்கப்பட்டவை ஒரு காலகட்டங்களில் தனிமனித வெளிப்பாடாகவோ அல்லது ஒரு கூட்டு நம்பிக்கைகளாலோ.கட்சியிலும் மாறிக்கொள்ளலாம்.மதத்திலும் அப்படியே.இரண்டும் குறை,நிறை கொண்ட வலுவான, மனிதனை உளவியல் ரீதியாக பாதிப்பவை.இரண்டும் சில இசங்களை தன்னுள் தக்க வைத்துக் கொள்கிறது.அரசியலும்,மதமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை காலம் காலமாய்.

Monday, March 22, 2010

fish n chips ம் டக்கீலா வேதாளமும்.

அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் வித்தியாசம் என்னன்னா சந்தைபடுத்தும் நுட்பம்.நண்பர் விஜயராகவன் முன்பு வெளிநாடு போகும் போது அடிக்கடி லண்டனில் டேரா போடுவது வழக்கம்.அப்படி டேராவில ஒரு முறை ஒரு டை வாங்கி வந்து கொடுத்தார்(நம்மூர்ல ஒரு நல்ல ரேபான் கிளாஸ் இருந்தா வாங்கி வாயேன்னு சொல்ற மாதிரி).இந்த டைல என்ன விசேடமின்னா கழுத்த சுருக்கு போட்டு தொங்க விடவேண்டிய அவசியமில்ல.டை தொண்டைக்குழி கிட்ட ஒரு கிளிப் இருக்குது.கிளிப்பை வாயத் திறக்க சொல்லி ஒரு அமுக்கு அமுக்கினா டை கட்டுற வேலை முடிஞ்சது.ஆனா மூணு முடிச்சு டை சந்தைப்படுத்தலில் முந்திகிச்சு.
அமெரிக்கா KFCயை நல்லா சந்தைப் படுத்திடுச்சு.ம்!KFC சாப்பிட்டு பெப்சி குடிச்சேன்.ரொம்ப குண்டாயிட்டேன்,கொலாஸ்ட்ரல் அதிகமாயிடுச்சுன்னு கோர்ட் கேஸ் இருக்குது.ஆனா இந்த மாதிரி சண்டையெல்லாம் பிரிட்டிஷ்காரங்க fish n chipsன்னு ஒரு மெனு வச்சிருக்காங்க,அதுக்கு வரல.இது KFCக்கு ஒரு மாற்று எனலாம்.ஆனால் சந்தைப்படுத்தலில் பின் தங்கிடுச்சு.KFC ரெசிபி தங்கமலை ரகசியமாமே?உண்மையாவா?ஆனால் fish n chips (இனி இதை சுருக்கமா FNC ன்னு KFCக்கு போட்டியா வச்சுக்குவோம்.)அப்படியெல்லாம் ரகசியமானதல்ல.ஏன்னா அது எப்படி செய்றதுன்னு சொல்லப் போறேன்.



மீன் பொறிக்கறது எல்லாருக்கும் தெரியும்.ஆனால் மீனுக்கு மேக்கப் போடும் பேட்டர் என்னன்னு யாருக்காவது தெரியுமா?அது மைதா மாவு,முட்டை,குருமிளகு பவுடர்,பூண்டு கொழ,கொழன்னு அரைச்சது,உப்பு,
மேக் இட் ஸ்பைசிங்கிறவங்களுக்கு மிளகாய் தூள்,மஞ்சள் தூள்.இதையெல்லாம் பஜ்ஜி சுடறதுக்கு மாவு செய்யற பதத்துல மீனை முக்கி எடுத்து சூடான வாணலி எண்ணையில் வறுத்து எடுக்க வேண்டும்.இதற்கு முன் அதே எண்ணெயில் உருளைக்கிழங்கு வறுத்து எடுத்து விடுவது நல்லது.

இன்னொன்னு finger chips.நிறைய பேர் நினைக்கிற மாதிரி சுண்டு விரல் அளவுக்கு உருளக்கிழங்கு வெட்டி வறுத்தெடுப்பதல்ல.மீனையே சுண்டு விரல் அளவுக்கு வெட்டி வறுத்த ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து வறுப்பது.

இதுக்கு இரண்டு அல்லக்கைகள்.ஒண்ணு தக்காளி கேட்ச் அப்!மற்றது மயோனைஸ்.இது என்னன்னா முட்டையோட வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து ஒரு கைல விஸ்க்க இன்னொரு கைல மெல்ல மெல்ல எண்ணையிட்டு தயிர் மாதிரி கட்டிப்படுத்துவது.தயிர்ப்பதம் ஐஸ்ல வெச்ச பட்டர் மாதிரி ஆயிடுச்சுன்னா கொஞ்சம் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் விட்டு மிருதுவாக்குவது.சென்னையில்,மீன் கிடைக்கிற வேலாங்கண்ணி,சுற்றுலா விவேகானந்தர் பாறை,பாண்டிச்சேரி மற்றும் உல்லாசப்பயண இடங்களில் FNC மீன்கடை ஸ்பெஷல் கடை திறக்கலாம்.

குறைந்த பட்சம் மாறுதலா ஒரு நாள் வீட்டில் செய்து பார்க்கலாம்.இப்படியெல்லாம் சமையல் பகுதியில் யாராவது சமையல் சொல்லிக் கொடுத்திருக்காங்களா?இருந்தால் நான் என்று முன்னாடி வந்து தைரியமாக நிற்கலாம்:)

நண்பர் சொன்ன இன்னொரு தகவல்.

டக்கீலாவெல்லாம் வேதாள பானமாயிடுச்சாம்.
(அமெரிக்காவுல கூட ஷகிலான்னு ஒரு பானம் இருக்கறதா ஜெண்டில்மேன் ஒருவர் சொல்கிறார்:)

பிரிட்டிஷ்காரர்கள் உடல் சுகாதார ஆர்வத்திலோ,கஞ்ச பிசினாரித்தனத்தாலோ பியர் மட்டுமே குடிக்கிறார்களாம்.
செர்ரி மற்றும் பிளடிமேரி பெண்களின் பானமாம்
பிராந்தில கார்ல்ஸ்பெக் தண்ணி கலந்து குடிக்கிற ஆளும்,பிளாக் லேபில பேரர் கண்ணுக்கு முன்னாடி காட்டிட்டு கிளாசுல ஊத்தினாலும் ட்ரவுசர் பாக்கெட்ல காசு வச்சிருக்கிற ஆளாம்.

அதுசரிண்ணே!லண்டனப் பற்றி கேள்விப்பட்டதுல எது மப்பு எது தப்பு,அது சரின்னு ஒரு பின்னூட்டம் போட்டிடீங்கன்னா வேதாளத்துக்கு புண்ணியமா போகும்.நன்றி.

பிளாக்குறது தப்பா!

சலுன் கடைல தினத்தந்தி படிச்சோமா,போண்டா தின்னுகிட்டே எதுத்தாப்புல இருக்குற பொட்டிகடைல மாலைமுரசு நாலுவரி செய்தி படிச்சோமா,பஸ்ல போறப்ப அந்தக் குமுதத்த கொஞ்சம் குடுக்கிறீங்களா?ஊர் லைப்ரரியில படிக்க முடியாத அளவு பக்கங்களுடன் இருக்கும் கதைப் புஸ்தகத்தையெல்லாம் படிச்சு திருஞ்சுகிட்டுருந்ததுக,ராணி,குங்குமம்,ஆனந்த விகடன்னு தொடர்கதைய வெட்டி,வெட்டி பைண்டிங் செஞ்ச கிறுக்குகள்,லெட்டர் டு தி எடிட்டர்,இன்ன பிற(?)படிப்பாளிக,பார்வையாளர்களுக்கெல்லாம் வந்த வாழ்வப் பாரேன்!

மொக்கையுங்குது,கவிஜப் பாடுது,தொழிலு நுட்பத்துல இது புதுசுங்கோ சொல்லுது,வேலையிருக்குது போறீயா விசாரிக்குது,சமையல் செய்து பாரேன் ரெசூபி சொல்லுது, இன்னுங் கொஞ்சம் மேல படியேறி காஞ்சிபுர மடத்தப் பத்தி பேசுது,ஹுசைன் ஓவியம் பார்க்காதவங்களையெல்லாம் இந்த கண்றாவியப் பாருங்களேன் சொல்றது,சன் டி.வியும்,அல்லக்கை நக்கீரனும் ஏதோ ஒரு நாள் ரேட்டு பேசி வியாபாரம் செஞ்சா அதையே புடிச்சிகிட்டு தெரியாத ராஜசேகரனுக்கு காவியுடை போட்டு இவந்தான் அவன் பிலிம் காட்டறது.

என்னமோ போனா போகட்டும்ன்னு விட்டுட்டோம்.சொல் எடுத்து மூஞ்சிகளை முகமூடி போட்டுகிட்டு கிழிக்கிறது,போட்டும்,போடாமயும்,க(ற்)ருப்புக்கே களங்கம் விளைவிக்கிறதுன்னு அடிச்ச லூட்டிகளையெல்லாம் நாங்க வந்து ஏதாவது கேட்டமா?ஆனா கட்சி கோட்பாட்டை குலைக்கிறது,மக்கள் நல்லா இருக்கட்டுமேன்னு அஞ்சும்,பத்தும் கொடுத்தா அதப்பத்தி பொரணி பேசுறது,தலிவரு உங்களுக்கெல்லாம் எத்தன செஞ்சிருப்பாரு அதையெல்லாம் விட்டுட்டு ஒரு தொண்டரடிப் பொடியாள்வார் சொன்ன மாதிரி ஏதோ கட்டிக் காப்பத்துன கட்சி,குடும்பம் சிதைந்து போகக்கூடாதேன்னு நினச்சு எதிர்க்கட்சிக செய்யுற சூழ்ச்சிகளையெல்லாம் தாங்க முடியாம இலங்கைப் பிரச்சினையில குட்டைய கலக்குனா மீன் எப்படி பிடிக்கறன்னு பார்க்கிறேன்னு விட்ட ஒரு சின்ன விசயத்தையெல்லாம் பெருசு பண்ணி ஊதி விடறது,நெருப்பு இருக்குதான்னு பார்க்கறது இதெல்லாம் இல்லாம பின்னுட்டம் போடற பேர்வழிகள்ன்னு கூடி கூடி கும்மியடிக்கிறது.

மக்கள் ரேசன் அரிசி சமைச்சு சாப்பிட்டாங்களா,வேலைக்குப் போனங்களா களைச்சு வீட்டுக்கு வந்தா அவங்க பாட்டுக்கு சீரியல் பார்த்தாங்களா,சினிமா பார்த்தாங்களான்னு இருக்குற ஓட்டுப் போடற அப்பாவி ஜனங்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை உங்களுக்கெல்லாம் என்னய்யா வந்தது?பிளாக்கு!அதென்னய்யா பிளாக்கு?பிளாக்கிங்கிறதே கருப்புத்தான்யா!அதையெல்லாம்தான் பாரபட்ச மில்லாம எல்லாக் கட்சிக் கொடியிலயும் வச்சிருக்கிறோமே.இதுவும் பத்தாதுன்னு கவியரசர் வைரமுத்துவ கூப்பிட்டு கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலருன்னு பாட்டு வேற எழுதி பரிசெல்லாம் குடுத்திருக்கிறோமே?அப்புறமென்னய்யா நீங்க எல்லாம் வந்து புதுசா தாளிக்கிறீங்க?

ஓசுல இடத்தக் கொடுத்தா அதுக்கு வேற பட்டா போட்டு படமெல்லாம் போட்டு வெச்சுகிட்டு என் கடைக்கு வாங்க!இந்தக் கடைக்கு வாங்க,அந்தக் கடைக்கு போங்கன்னு எலிய கடிக்க விடறது!இதையெல்லாம் யார் கொடுத்தா?பேட்டை அண்ணாச்சி அமெரிக்காதானே கொடுத்தாரு?அவரு சொல்றதத்தானே நாங்க கேட்கிறோம்?நேத்து கூடப் பாரு இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தைய நிருபமா ராவ் கிட்ட சொல்லி ஹில்லாரி காதுல போட்டுட்டமில்ல?நீங்க எல்லாம் சொல்றதுனாலதானய்யா சிதம்பரம் மறுபடியும் மும்பாய்க்கு வந்தீங்கன்னா இனி திரும்ப அடிப்போம்ன்னு அறிக்கை விடறாரு.

எங்க பேச்சைக் கேட்பான்னுதான் ராஜபக்சேவுக்கு உதவினோம்,அந்தாளு என்னடான்னா இந்தியாவுக்கும் பெப்பே,தமிழ் நாட்டுக்காரனுக்கும் பெப்பேன்னு சீனாக்காரன்கூட போய் சேர்ந்துகிட்டான்.நாட்டு ரகசியமெல்லாமா போய் பிளாக்குல சொல்றது?அதுதானே நிருபமா ராவ அனுப்பி பேச்சு வார்த்தை நடத்துறோமே அப்புறம் என்ன?இப்பவெல்லாம் நாங்க சேர் எடுத்து அடிச்சிக்கிறதில்லை தெரியுமா?காமிரா இருக்குற பயத்துல மெச்சூர்டு ஆகிட்டோமில்ல!எங்களை எங்க வேலைய செய்ய விடுங்கய்யா! வேணுமுன்னா கொடியப் புடிச்சிகிட்டு போராட்டம் நடத்த அனுமதி தருகிறோம்.அப்பப்ப ஏதாவது கோசங்கள் எழுப்புங்க!பஞ்சம் பொழக்கப் போனவங்க லீவு,காசு வசதியப் பொறுத்து வந்து ஒழிக!ஒழிக சொல்லுங்க.வேண்டாமுன்னா சொல்றோம்?

இல்ல ஊர் ஊருக்கு தினத்தந்தி,குங்குமம்,குமுதம்,விகடன் படிக்கிறத விட்டுட்டு நாடு நாடா சுத்தறதுமில்லாம அப்பாவியா இருக்குற எங்க புள்ளைகளையும் கெடுக்கறது.அமெரிக்காவுல இப்படியாக்கும்,லண்டன்ல இப்படியாக்கும்,சிங்கப்பூர்ல அப்படியாக்கும்,துபாய்ல இப்படியும்,அப்படியுமாக்கும்ன்னு பிளாக்குதான் எழுதுவீங்கன்னு நினைச்சா இனிமேல் இன்னுமொரு இணைய புதிய சட்டம் வரைஞ்சிட வேண்டியதுதான்.அமைச்சர் பூங்கோதைகிட்ட சொல்லியிருக்குது.வருது உங்களுக்கெல்லாம் ஆப்பு.

இல்ல!அமெரிக்காவுல இணையம் பயன்படுத்தலும் தங்கள் கருத்தை சொல்றதும் மனித உரிமைகளில் ஒன்றுன்னு தீர்மானம் போட்டிருக்காங்க.எங்களுக்கும் மனுச உரிம வேணுமுன்னு கேட்டீங்கன்னா மவனே,தோ!நேரா சீனாக்காரன்கிட்ட புடிச்சுக் கொடுத்துடுவோம்.ஏன்னா அவன்கிட்டத்தான் கூகிளே கிடையாதே?அப்புறம் எப்படி பிளாக்குவீங்க அப்புறம் எப்புடி பின்னால பின்னால சுத்துவீங்க? ஏம்ப்பா தெரியாமத்தான் கேட்கிறோம்,மத்த மாநிலத்து பசங்க எல்லாம் உங்க மாதிரியா ஒண்ணா சேர்ந்து கும்மியடிக்கிறாங்க?அது யாருப்பா!தமிழ்மணம்?தங்கிலீஷ்?உங்கனாலதான்யா இந்த அப்பாவி பசங்க கெட்டுப்போறாங்க.

Sunday, March 21, 2010

தமிழக பட்ஜெட் 2010-11

முன்பெல்லாம் தமிழக பட்ஜெட் என்றால் அரிசி விலை ஏறிப்போச்சு,மைதா மாவுக்கு இவ்வளவு வரி என்ற சிகை அலங்கார கடைகளில் தினப்பத்திரிகை அலசலும்,சிகரெட் விலை ஏறிப்போச்சுப்பா பீடிதான் சுகம் என்றும்,இந்த மாசம் பையனுக்கு பீஸ் கட்டணும்,பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சிருக்கு பேசி முடிச்சாகனும் என்ற வளமான வாழ்க்கைக்கான செலவுகளும், லைசென்ஸ் ராஜ் காலங்களும்,ஆட்டோ ரிக்க்ஷாக்காரர்கள் மீட்டர் போட்டா கட்டுபடியாகாதுங்க மீட்டருக்கு மேல ரேட் சொல்வதும்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் சமையல் கடலை எண்ணெய் நிரந்தர சமையலாய் தாளிக்கவும் அதே,ரசத்துக்கும் அதே என்றாகிப் போனது.வாழை இலை ஹோட்டல்களை நோக்கி பயணம் செய்ய எவர்சில்வர் பாத்திரங்களும் அதில் பெயர் போடச் சொல்லி அழகு பார்ப்பதும்,செய்திப் பத்திரிகைகளும்,வானொலியும்,வாய்மொழிச் செய்தியும் மட்டுமே தமிழக பட்ஜெட்.

அடுத்த கட்டமாக டூத் பேஸ்ட்,பவுடர் டப்பா போன்ற பொருட்களில் விலை+வரி என்று ஒட்ட வைத்து அதுவும் வரிகள் மாநிலம்,மாநிலத்துக்கு மாறுபடும்.லோடு ஏத்திட்டு போக முடியாதுங்க டீசல்,பெட்ரோல் விலை ஏறிப்போச்சு,நாளை லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்,நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்ற கம்யூனிச கொடிகளின் அணிவகுப்பு என இந்திய பட்ஜெட் எட்டிப்பார்க்கும்.

ஊர விட்டு வேற வந்தாச்சு,தொலைக்காட்சியும் நேரடியாக தகவல் தருவதால் 10-11க்கான தமிழக பட்ஜெட் எப்படியிருக்கும்ன்னு பார்த்தால்

அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் பட்ஜெட்-தி.மு.க.

ம்!அம்மாவுக்கு புதிய சட்டசபைக்கு முறையா அழைப்பு விடலையே,பட்ஜெட்

திருப்தியில்லை வெளிநடப்பு செய்கிறோம்.அ.தி.மு.க மற்றும் சகலபாடி ம.தி.மு.க

விவசாயிகளுக்கு உரம் சலுகைய குறைச்சிட்டாங்க,விவசாய கடன் உதவி போன்ற சலுகைகள் இருக்குது-பாட்டாளி மக்கள் கட்சி.

கலைஞருக்கு பாராட்டுக்கள்- திருமாவளவன்

இப்படியொரு பட்ஜெட்டை நான் பார்த்ததேயில்லை-கி.வீரமணி

அன்னையின் ஆட்சியல்லவா?பட்ஜெட்டில் எங்களுக்கும் பங்குண்டு-காங்கிரஸ்

வாயே திறக்க மாட்டேன் - பி.ஜே.பி

காலை அலுவலகம் வரும்போது பி.பி.சி யில் ஒபாமா

"If you agree that the system is not working for ordinary families, if you've heard the same stories that I've heard everywhere, all across the country, then help us fix the system," - ஒபாமா.

அமெரிக்கா உலக அரசியலில் எவ்வளவு பேட்டை ரவுடியா நடந்துகிட்டாலும் உள்ளூர் அரசியலில் ஜனநாயக கருத்துக்களுக்கும் ,மக்கள் நலனுக்கும்,லாபியிஸ்டுகளுக்குமே முதலிடம்.மைக்கேல் மூரின் sicko டாகுமெண்டரி படம் பார்த்தவர்களுக்கும்,அமெரிக்கர்களுக்கும் மருத்துவ காப்புறுதி(இன்ஸ்யூரன்ஸ்)எப்படி செயல்படுகிறதென தெரியும்.இப்பொழுது வளைகுடா நாடுகளிலும் அதன் நகலாக அயல்நாட்டவர்கள் தாங்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை சென்றாலும் செல்லாவிட்டாலும் விசாவை புதுப்பிக்கும் முன் ஒவ்வொரு வருடமும் மருத்துவ காப்புரிமையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒபாமாவின் அரசு இந்த மருத்துவ காப்புரிமை சட்டத்தில் மாறுதலைக் கொண்டு வருவதற்கு முயல்கிறது.அதற்கு ஆதரவு சேர்க்கும் முகமாகவே இப்பொழுதுள்ள காப்புறுதி செய்யாத சாதாரண மக்கள் மருத்துவ உதவிகளை நாட முடியாது என்றும் அதற்கான மாற்றங்களை கொண்டு வர உதவி செய்யுங்கள் என்றும் கேட்கிறார்.

இப்ப தமிழக பட்ஜெட்டுக்கு திரும்பினால் நிலைமை என்ன?பள்ளி இறுதி வகுப்பு பாஸா?பெயிலா?ரிலிஸானாத்தான் தெரியும்.அந்த மாதிரி நிதியமைச்சர் சொன்னதுக்கப்புறம்தான் இங்கே சிறப்பு அங்கே நொள்ளை தெரியும்.முதலீடுகளின் பங்கீடு,பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் முன்பு போல் பற்றாக்குறை பட்ஜெட் இல்லாமல் ஓரளவுக்கு அனைத்து துறைகளையும் திருப்திபடுத்தி விடும் பட்ஜெட்டை நிச்சயம் இப்பொழுது தந்து விடலாம்.அதனால் ஏனைய கட்சிகளின் கருத்துக்களின் பங்களிப்பையும் கேட்டு பட்ஜெட் வெளியிடலாமே?கணக்கு போட்டு செலவு செய்வதற்கு முன் மாற்றுக்கட்சியின் கருத்துக்களையும் கேட்டு பட்ஜெட் வெளியிட்டால் வெளி நடப்பு போன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கலாமே.அதே நேரத்தில் எதிர்க்கட்சியும் மக்களால் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு வருபவர்களே அவர்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களையும் கேட்டறியலாமே.(பிரிட்டன் காலத்து சட்டமுறைகள் இதற்கெல்லாம் இடம் தராது போன்ற காரணங்கள் ஏதாவது இருந்தால் அறிந்தவர்கள் சொன்னால் புரிதலுக்கு உதவும்.)சட்டசபையே புதியதாகும் போது சட்டமன்ற உறுப்பினர்களும் புதியதாக.....ஸ்டாலின் அவர்களே!உங்களிடமிருந்தாவது தொடங்கட்டும் புது மாற்றங்கள்.

என்னது தேர்தல் வரப்போகுதா?

(ஒரு சட்டமன்றக் குரல்: ஆமாய்யா!அங்கன உட்கார்ந்துகிட்டு வக்கணையா எழுதிப்புடுவே.இங்க வந்து வெந்து பார்த்தாதானே தெரியும் துண்டை தக்க வைக்கிற தில்லாலங்கடி சிரமம்)

Friday, March 19, 2010

ருத்ரன் என்ற பழுத்த பழம்

தலைப்பு சொல்ல வினாடிகள் கூட எடுத்துக் கொள்ள வில்லை.தலைப்பை தொட்டதும் தொடர்கிறேன்.இரண்டு,மூன்று வருடங்கள் பதிவுலகை வலம் வந்தும்,அவ்வப்போது சில பின்னூட்டங்களும் கூட அங்கே இங்கேயென்று இவர் பற்றி தெரியாமலே(இன்னும் தெரியாமலே)கருத்துக்களின் அடிப்படையில்.

விவாதங்களால் தர்க்கம் செய்ய இயலாத போது ஒன்று முகமிலிகளாகவோ அல்லது தமது நம்பிக்கைகள் சிதைக்கப்படும் கோபத்தின் வெளிப்பாடாகவோ சிலருக்கு எழுத்துக்கள் எண்ணங்களின் பொது உலக வெளிப்பாடாக பதிவு செய்யப்படுகிறது.

விளையாட்டு பிள்ளைகள் என்ற எண்ணத்திலோ பதிவுலகின் சில நேரத்து எழுத்து சண்டைகளின் காரணமாகவோ சிலர் பதிவுலகம் உற்றுக் கவனிக்கப்படுகிறது என்று சொந்த முதுகை தட்டிக் கொண்டாலும் இன்னும் பதிவுலகம் தமிழ் நேசிக்கும் வாசகர்களை பரந்து செல்லவில்லை என்றே தூர தேசத்திலிருந்து என்னால் கணிக்க முடிகிறது.

இந்த நிலையிலும் மருத்துவர் ருத்ரன் போன்ற எழுத்துக்களின் சொந்தக்காரர்கள் பதிவுலகில் வலம் வருவது மகிழ்ச்சியைத் த்ருகிறது.நாகரீகமான எழுத்துக்களை முன் வைத்தும் இவர் மீது அவ்வப்போது எறியப்படும் சொற்கற்களின் மூலங்கள் என்ன?

எம்.எஃப்.ஹுசைன் கத்தார் இந்திய தூதரகத்தில் இந்திய கடவுச்சீட்டை திருப்பி தந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் இப்பொழுது தங்கள் கருத்துக்களை விட கோபங்களை அதிகம் வெளிப்படுத்துகிறார்கள்.அவர் ஓவியம் வரைந்ததை விட கத்தார் குடிமகனாகி விட்டது மனரீதியாக பலரையும் விமர்சன மேடைக்கு அழைத்து வருகிறது.

இதன் துவக்கமாக எனது பார்வையில் பட்ட எம்.எஃப்.ஹுசைன் இடுகைகளில் ருத்ரனின் ஓவியப் பார்வையே காணக்கிடைத்தது.அதனைத் தொடர்ந்து அவருடைய தளத்திலோ அல்லது அவரவர் தளங்களிலோ காணக்கிடைக்கும் முதிர்ச்சி இல்லா ருத்ரனின் எதிர்வினைக்காரர்களின் கோபம் தர்க்கம் என்பதை கடந்து முகமிலிகளாக வலம் வருகிறார்கள்.

இந்து பாரம்பரியம் காக்கிற முகமூடி போட்டிருப்பவர்களின் முகத்திரை விலக்கிப் பார்த்தால் அய்யோ பாவம் எனத் தெரிகிறது.இஸ்லாமிய பத்வாக்காரர்களுக்கு நிகரான இந்து சொல் பத்வாக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை

Feel free, Mr Husain. Go paint Qatari leaders

என்ற சோ ராமசாமியின் டெக்கான் ஹெரால்ட் தலைப்பு வாசகங்கள் சொல்கிறது.உங்கள் கோபம் ஓவியமா?ஹுசைனின் கத்தார் குடியுரிமையா? தமிழகத்தின் சிறந்த அரசியல் விமர்சகர் என்ற துக்ளக் வட்டத்துக்குள் நீங்கள் அழகாகவே தெரிகிறீர்கள்.ஆனால் ஹிந்துத்வா முகம் வேண்டாமே வளைகுடா வட்டத்துக்கு.அது நீண்ட எதிர்கால பின் விளைவுகளை உருவாக்கும்.

மீண்டும் ருத்ரனின் பார்வைக்கு வருவோம்.

(தஞ்சை பெரிய கோயிலில் சிலையின் கலையம்சத்தின் அழகில் மயங்கி வாங்கி வந்தது.சுருக்கப்படுவதற்கு முன் அதன் முழு தோற்றத்தின் 100% அடோபின் நோக்கில் கேமிராவின் பிரமிப்பு இன்னும் நீள்கிறது.)

ருத்ரனின் ஸரஸ்வதி மீண்டும் நமஸ்துப்யம் இடுகையை படித்ததால் கிளிக்கியது.

Wednesday, March 17, 2010

கோபி கிருஷ்ணன்

இந்த இடுகை ஒரு நாள் எழுதி கொஞ்சம் மேய்ந்து ஆராய்ந்து விரிவாக்கம் செய்யலாமேங்கிற நினைப்பில் கிடப்புல போட்டது.அதற்குள்ள சாரு நிவேதிதாவுக்கு வைரஸ் காய்ச்சல் வந்து அவரது எழுத்தெல்லாம் காணமப் போய் கூடவே ராஜசேகரன் மாதிரி ஆட்களும் காணமப் போகிற அளவுக்கு வந்து விட்டது.அதற்கும் முன்பு ஒரு நாள்.....

தமிழ் மணம் மேய்ந்து விட்டு அங்குமிங்கும் சுற்றிவிட்டு ஒன்றும் தேறாத காரணத்தாலும், வாசிக்கும் நேரம் இருந்த காரணத்தாலும்,கட்டுடைப்பு எழுத்தின் மீது பேராவல் இல்லாது போனாலும் சாருவின் கோணல் பக்கங்களில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மனுசன் எங்கே யதார்த்தப்படுகிறார்,எங்கே ரீல் விடுகிறார் அல்லது கனவு(பென்டசியை) கையாளுகிறார்,எங்கே தன்னை முன்னிறுத்தும் சுய எழுத்துக்கு தாவுகிறார்,எங்கே உண்மைக்கு திரும்ப வருகிறார் எது உண்மை எது பொய் என்ற குழப்பமான புரிதலிடனூடே கட்டுடைப்புக்களை முதலில் கையாண்டது தானும்,கோபி கிருஷ்ணனும்தான் என்று கோபி கிருஷ்ணன் பற்றி (கோபி கிருஷ்ணனும் நானும் வரம்பு மீறிய பிரதிகளும்) சொல்லிய வரிகளும்(யாரங்கே?இன்னுமா சாருவ நம்புறீங்கன்னு முணுமுணுக்கிறது:) அதனைத் தொடர்ந்த ஜ்யோவரம் சுந்தருக்கான இணைப்பும் வாசிப்பின் ஒரு புதிய அனுபவத்தை தந்தது.

ஜ்யோவரம் சுந்தருக்கான தொடுப்புக்கள்:


1. http://jyovramsundar.blogspot.com/2009/04/1.html


2. http://jyovramsundar.blogspot.com/2009/04/2.html

3. http://jyovramsundar.blogspot.com/2009/04/3.html


4. http://jyovramsundar.blogspot.com/2009/04/blog-post_21.html


இவை வாசிப்பின் வேகத்தை கூட்டியது.யூமா வாசுகியின் மழை என்ற இதழுக்காக கோபி கிருஷ்ணனை நேர்காணல் கண்டதை வழக்கமான நேர்காணல் கேள்வி பதில் நடையில் இல்லாமல் ஒரு சுயசரிதை வாழ்வின் துவக்கம் முதல் ஒரு நடுத்தர வயதுக்காரனுக்கான வாழ்வின் அனுபவமாய் தன்கதை சொல்லி முடிந்திருந்தது.

வாழ்வின் இளமையும், கூச்ச சுபாவ வளர்ப்பும்,கல்லூரிக் காலங்களும்,பட்டப் படிப்பில் பொருளாதாரம்,ஆங்கில இலக்கியம்,உளவியல் மூன்றில் உளவியலைத் தேர்ந்தெடுத்தலும் அதனைத் தொடர்ந்த சமூக உளவியல் தேடுதலும்,காதல் வயப்படுதலும்,வேலையில் நிலையாமை,சோகங்கள்,வடுக்கள்,மன அழுத்தம்,குடும்ப வாழ்வின் சிக்கல்கள் என்று சராசரி போராட்டங்களுக்கும் அப்பால் கோபால கிருஷ்ணன் எழுத்தின் மீது கொண்ட தாகம் மனதை கட்டிப் போட்டு விடுகிறது.அதிலும் மனச்சிதைவு ஏற்பட்டவர்களுடன் பேசும் நேர்காணல் குறிப்புக்கள் மனவியல் சார்ந்து ஆய்பவர்களுக்கு உதவும்.

கோபி கிருஷ்ணன் வார்த்தை தேடலில் கைவிரலுக்குள் எண்ணி விடும்படியாக கண்ணுக்கு சிக்கியவர்கள் ஜ்யோவரம் சுந்தர் தவிர்த்து (கோபி கிருஷ்ணனின் இணையம் சார்ந்த நேர்காணல் வாசிப்பு அவருக்குரியது) அய்யனார்,சாரு,திண்ணை,ராமகிருஷ்ணன்,உயிர்மை,சொல்வனம்
என தேடலின் தூரம் அதிகமானது.

கோபி கிருஷ்ணன் போன்ற பல முகங்களை முந்தைய மெட்ராஸின் அண்ணாசாலையின் நீண்ட இருபக்க வேக நடைகளிலும் பலரும் சந்தித்திருக்க கூடும்.முகவரி இல்லா முகங்களுக்குள்ளும் ஒவ்வொரு கதை இருந்திருக்கும்.ஆனால் யாருடைய கதைகளையும்,முகம் நோக்கி கதை தேடும் நேரமில்லா மெட்ராஸ் நல்ல சென்னை.கோடம்பாக்கத்தில் வெற்றி பெறாத கதைகள் எல்லாம் திரைக்கு வராமல் ஒருவன் எழுதிய எழுத்து மேன்சன்களிலோ அல்லது மனதின் அடித்தளத்திலேயே அமுங்கிப் போயிருக்கும்.

ஆனால் ஒருவன் எழுத்தின் முகவரி சொல்லியும் ஒவ்வொருவரின் வாழ்வாதார தேடலில் முகமிழந்து போன மனிதனாக கோபி கிருஷ்ணன்.எழுத்தாளர் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஏதோ தங்களால் இயன்ற பணத்தை சேகரித்து ஒரு சிறிய தொகையை கோபி கிருஷ்ணனின் இறுதிச் சடங்கு காலத்தில் அவரது குடும்பத்தார்க்கு தந்தார்கள் என அறிய முடிகிறது.அதற்கு பின் அந்தக் குடும்பம் என்னவாயிற்று என்பது கோபி கிருஷ்ணனின் குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த கதை.

கலையுலகம் வாழ்த்துவதற்காகவும்,தானும் கலைத்துறையைச் சார்ந்தவன் என்பதற்காகவும் திரைப்படத்துறைக்கு செய்யும் உதவிகள் அளவுக்கு இல்லா விட்டாலும் தானும் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் கோபி கிருஷ்ணன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

கோபி கிருஷ்ணனை அறியத் தந்த ஜ்யோவரம் சுந்தருக்கு நன்றி.

பெத்சியா?தண்ணீரா?தண்ணியா

மதார் என்ற சுவர் என்ஞினியர் (அப்படித்தான் எண்டாஸ்கோபிங்கிற அவங்க பதிவுல சொல்றாங்க:))

ஒரு சாதாரண வயிற்று வலி எண்டாஸ்கோப் வரை கொண்டு போய் விட்டு விட்டதென்று சொன்னதுனால இடுகைக்கு ஒரு விசயம் கிடைச்சது.ஒவ்வொரு கடையா போய் சிரிப்பான் மட்டும் போடாம மாங்கு மாங்குன்னு இடுகைக்கு இணையா குண்டு குண்டா பின்னூட்டம் போடறதால நம்ம கடை வியாபாரம் போணியாகறதில்ல.அதனால பின்னூட்டத்துல சொல்ல வேண்டிய இத்துணுண்டு செய்திய இங்கே பார்க்கலாம்:)

சாதாரண இரண்டு நாள் மூக்குச் சளி,இருமல்,காய்ச்சல்ன்னா ஏதோ கஷாயம் குடிச்சோம்,சித்த வைத்தியம் பார்த்தோம்,இங்கிலிஷ் மருந்து சாப்பிட்டோம்ன்னு மூணாவது நாள் உடல் தனது சொந்த வேலையை திரும்ப செய்ய ஆரம்பிச்சுடுது.எப்படின்னா மூளை தனியா சிங்கம் மாதிரி சிலுத்துகிட்டாலும்,உழைப்பாளிகள் மாதிரி ஒண்ணா வேலை செய்யற உடல் ரொம்ப புத்திசாலிங்க.

சரி விசயத்துக்கு வருவோம்!நீண்ட நாள் உடல்,மனம் பிரச்சினைன்னா மருத்துவர்கள் உதவி மட்டுமேஇங்கே சிபாரிசு செய்யப்படுகிறது இங்கே.ஆனால் இதுவரைக்கும் பெரிசா ஒண்ணும் பிரச்சினைகள் இல்லீங்க அதுனால இனிமேலும் உடல் சுகாதார பிரச்சினைகள் எதுவும் வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க மட்டும் இங்கே வரிசையா நில்லுங்க.கோயம்புத்தூரு வைத்தியரு வனாந்தரம் போயும் இலவச வைத்தியம் பார்க்கிறாரு:)மூணு சீட்டு,ரெயில்ல சோப்பு டப்பா டுபாக்கூர் சூர்யா மாதிரியெல்லாம் இல்லாட்டியும் மருத்துவ ரிசல்ட் கேரண்டிங்ண்ணா!

காலை எழுந்தவுடன் படிப்புங்கிறதெல்லாம் இலக்கணப்பிழை.காலை எழுந்தவுடன் வயிற்றக் கழுவும் ஜல,மல வேலை.பல் துலக்கல்.எளிய யோகாசனப்பயிற்சி,குளியல்.அப்புறம் வயிறு போதும்ன்னு சொல்லும் வரை தண்ணீர்.அப்புறம்தான் படிக்கிறது,அடுப்பாங்கரை,காபி,சமையல்,கொட்டிக்கிறது எல்லாம்.இப்பவெல்லாம் இந்தியாவில் சர்க்கரையும்,இதய நோயும் அதிக மாமே!இங்கேயும் ஒண்ணும் குறைச்சலில்லை.அரபுகள் வீட்டுல சமைக்கிறாங்களோ இல்லையோ KFC,மெக்டொனால்ட் குடியிருப்பும் பெப்சி உறுஞ்சலுக்கும் குறைச்சலே இல்லை.அப்புறம் காரும் வீடும் ஏ.சி.

நாம் மட்டும் குறைஞ்சா போயிட்டோம்?கோழிக்கறி வச்சாலும் சரி,பருப்பு கடைஞ்சாலும் சரி சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்கிறதுக்கு பதில் பெப்சி குடிக்கும் மச்சினிகளும்,நாத்தனார்களும் கூட அதிகமாயிட்டாங்க.ரைம் சொல்லும் குழந்தைகளும் கூட பெத்சி!பெத்சி ன்னு
அடம் பிடிக்குதுகள்.வடம் பிடிக்கும் புலம் பெயர் தமிழர் குழந்தைகளும் ஊர் குளிருதுன்னு தண்ணீர் குடிக்க முடியாமல் இதனை தொடர்வார்கள் என்றே நினைக்கிறேன்.எப்படியோ பெத்சி சர்க்கரைநோய் காவலன் என்பது தெரியாமலேயே உலகபானம் பெயரைப் பெற்று விட்டது.ஹி...ஹி...இஃகி!இஃகி கீ!சரக்கடிச்சாலும் சரக்குக்குள்ளும் பெப்சி ஊத்து மாமே:)

(ஷ்!அப்பாடா! எத்தனை தடவைதான் மருத்துவம் நாட்டாமை பார்க்கிறதுன்னு தெரியல.போன வருடமே மருத்துவம் பார்க்கலையோ மருத்துவம் ன்னு சொல்லி கூவியாச்சு.அப்படியிருந்தும் நாட்டாமை வேலை பார்க்கறதலேயும்,சொம்பு தூக்குறதுலயும் ஒரு கிக் இருக்கத்தான் செய்யுது தலீவீர்களா!டாபிக்கு எங்கேயோ கிராஸ் ஆகுதே!!)

இப்போதைக்கு என்னோட மருத்துவ புதுக்கண்டு பிடிப்பு என்னன்னா நம்ம தல தெகா கடையில யோகாசன பயிற்சி முறைன்னு நல்ல அழகான படம் போட்டிருக்கார்.அவருக்கு பின்னூட்டம் போட்டீங்கன்னா எளிய யோகா விளக்கவுரை PDF தருவார்.பயனுள்ள எளிய விளக்கவுரை.

படம்ன்னு சொன்னதால இவ்வளவு தூரம் வந்துட்டுதால கொஞ்சம் பிலிம் காட்டாலாமுன்னும் ஆசை வந்துருச்சு.முன்னாடி தலிவர் அதுசரி வச்சிருக்கிற டக்கீலா அடிச்சுகிட்டு விக்ரமாதித்தன்கிட்ட சொல்ற வேதாளம் கதைகளுக்குப் போட்டியா சுட்ட,சுடும் படப்பழக்கம் இன்னும் போகலை.உண்ணும் உணவுப்பொருட்களின் சர்க்கரை விகிதாச்சாரம் பத்தி சின்னதா பிலிம் காட்டிடலாம் இப்ப....






இந்தப் படம் மாதிரி FCI,ISI( நல்லா பேர் வச்சாங்கய்யா)போன்றவங்க இட்லி,தோசை.உப்புமா,வடை சாம்பார்,கோழி பிரியாணி,முட்டை பொராட்டா,மீன் வறுவல்,பருப்பு,காய்கறிப் பொறியல்.ரசம்,மோர்,தயிர்,டீ,காபி,சரக்கோட சைட் டிஸ்க்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு?கார்போ ஹைட்ரேட்,புரோட்டின் ஊட்டச் சத்து,உப்பு,மிளகாய்,கால்சியம்ன்னு பரிசோதனை செஞ்சுட்டா இருக்குற வரைக்கும் நமக்கு பயன்படுகிறதோ இல்லையோ குறைந்த பட்சம் தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்க பயன்படும்.பின்னாடி தலைமுறைக்கும் பழக்கதோசத்துல சாப்பிடும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் அல்சர் வராமலோ,கொலாஸ்ட்ரல் வராமலோ இருக்கும்.ஆமா!சின்னதா ஒரு சந்தேகம்.அப்பவெல்லாம் விவசாயமெல்லாம் இருக்குமில்ல?இல்ல கிணறு வெட்டாம அணைய மறிச்சே எல்லாம் ஆவியாப் போகிடுமா?இப்பவே இமயமலை உருகுதாம்!

Tuesday, March 16, 2010

உதவி இயக்குநர்கள்.

ஒரு திரைப்படத்தின் வெற்றியில் பலருக்கும் பங்கு இருந்தும் உழைப்புக்கான பலனை அனுபவிக்காத ஜீவன்கள் என்றே உதவி இயக்குநர்களை சொல்லலாம்.துண்டு போட்டும் நின்று கொண்டே உழைக்கும் உழைப்பாளிகள் இவர்கள்.பெரும் எதிர்காலக் கனவுகளுடன் சினிமா துறையில் நுழைந்து முகமறியாமல் டைட்டில்களில் மட்டுமே பெயர்களை பதியவைத்து விட்டு காணாமல் போன துணை இயக்குநர்களின் பெயர்ப்பட்டியல் மட்டுமே தமிழக திரையுலக வரலாற்றில் அதிகம் இருக்கும் என துறை சாராதவர்களும் கூட உறுதியாக நம்பலாம்.

ரிஸ்க் இல்லை என்பதாலோ என்னவோ துணை இயக்குநரும் இயக்கிப் பார்க்கட்டுமென்று திரைப்பட பாடல் காட்சிகளை மட்டும் இயக்க சொல்லி சில இயக்குநர்கள் அனுமதிப்பதுண்டு என எங்கோ படித்த நினைவு.முண்டியடித்து டைட்டில்களினிடையே தெரிந்த உதவி இயக்குநர் பெயர் பட்டியலில் போராடி ஜெயித்த இயக்குநர்களும் உண்டு.கல்லூரிக்காலங்களில் அறிவுஜீவித்தனமாக கல்லூரி சாலைகளிலும் தரமணியின் மழை காலத்து நீரில் காமிரா,கையசைப்பு,நடன அசைவுகள் எனத் திரிந்த நடிப்புக்கல்லூரி காமிராமேன்,இயக்குநர்,நடிகை என ஒரு சில முகங்கள் தங்கள் அடையாளங்களைக் காண்பித்துக் கொண்டாலூம் அங்கேயும் காணாமல் போனவர்கள் பட்டியல் ஏராளம்.

பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வை வளமாக்க முடியாமல் அடையாளமில்லாமல் போகும் துணை இயக்குநர்களுக்கும் கூடவே இயக்குநர்களுக்கும் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மூலமாக வழங்கும் புதிய திட்டத்தை கடந்த வாரம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது வரவேற்க தக்கது.வடுவாகிப் போன பெரும் காயத்திற்கெல்லாம் மருத்துவம் பார்த்திருந்தால் தமிழக முதல்வர் கலைஞரை சரித்திரம் சரிக்க முடியாமல் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கும்.ம்!பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது.வேதனைகளின் வலிக்குமிடையில் தற்காலிக நிவாரண மருந்து மாதிரி உதவி இயக்குநர்கள் திட்டம்,கடந்த சனியன்று நிகழ்ந்த சட்டமன்ற திறப்பு விழா போன்ற திட்டங்களுக்கு கலைஞருக்கு குட்டலின் ஊடே பாராட்டவும் செய்யலாம்..

Monday, March 15, 2010

நேற்றைய நாத்திகமும் இன்றைய மதமும்

நாத்திகவாதிகள் குரல் ஓங்கி எழும்புகிறதோ இல்லையோ மகிழ்ச்சியின் அடையாளமாக பெரியார்தாசன் அப்துல்லாவாகிப் போனதில் பெரியார்தாசனுக்கு காசு செலவில்லாமல் ஏகப்பட்ட விளம்பரங்கள் இஸ்லாமிய மதநம்பிக்கையாளர்களிடமிருந்து.

பேராசிரியனாக,கற்றாய்ந்தவனாக,பாரதி ராஜா துணையால் நடிப்புக்கலையில் ஈடுபாடு கொண்டவனாக பெண்சிசுக் கொலைக்கெதிரான கருத்துகளுக்கு கிடைக்காத,நாத்திக சார்பு எண்ணங்கள் கொண்டு வாழ்ந்த காலங்களில் கிடைக்காத பெருமையாக நித்தியானந்த சாதனையாக ஒரே நாளில் அப்துல்லாவாகிப் போனதில் பெருமை.இதில் வருத்தப்படவோ,பெருமைப்படவோ எதுவுமில்லை.பன்முகப் பார்வை கொண்ட ஒரு தனிமனிதனின் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியென்றே இதனை கருதவேண்டும்.ஒரு மனிதனின் வாழ்நாளின் பெரும் நாட்களில் கிடைக்காத ஞானோதயம் ஒரே நாளில் ஒரு பெயர் மாற்றத்தால் வந்து விடப்போவதில்லை.

சுயசிந்தனை என்பது எண்ணங்களின் வேர்களின் ஆழத்தை தூசி தட்டிப்பார்த்தாலும் இரத்தநாளங்களில் எங்கேயாவது வாழ்ந்த வாழ்க்கையின் நாட்களின் சுக,துக்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்.பெரியார்தாசனுக்கு.நாத்திக எண்ணங்களிலிருந்து தாவியது போல் இஸ்லாத்தின் பிடிப்பும் ஒரு நாள் இல்லாமல் வேறு ஒரு இஸம் சிறந்ததென்று மாறினாலும் அப்போதும் வருத்தப்படுவதற்கும் பெருமைப் படவும் எதுவுமில்லை.தலாய் லாமா சொல்வது போல் மதம்,உணவு போன்றவை தனி மனிதனோடு கூட நடைபோட்டு வருபவை.நீ எதுவாக இருக்கிறாயோ அதுவாக இருப்பது எளிது.சிந்தனை மாற்றங்களுக்கு கருத்து சுதந்திரம் இருப்பதால் சுயமாக ஒருவன் சிந்தித்து எடூக்கும் முடிவுகளுக்கு அவனே பொறுப்பு.மாறாக ஆட்டுமந்தைக் கூட்டமாக மதமாற்றம் என்பதில் மட்டுமே கருத்து மாற்றங்கள்.

மதவாதிகளுக்கு மதத்தில் சுகமில்லை.நாத்திகனுக்கும் தேடலில் வினா தெரியாத கேள்விகளாய் மதம் என்ற பாஸ்போர்ட்..எனவே எங்கோ எதுவோ ஒரு வெற்றிடம் மனிதனை மையம் கொள்கிறது.நாத்திக மதவாதிகளின் பெயர்ப் பட்டியல் மிகநீளம்.ஆனால் ஒன்று கூட நினைவுக்கு வரவில்லை.பெரியார் என்ற பெயர்ச்சொல்லால் தாசன் இப்போதைக்கு நினைவுக்கு.....

நீயா?நானா அழகான பெண்கள்

அழகான பெண்களைப் பற்றி சொல்வதற்கு முன் ஒரே சமயத்தில் மக்களிடம் பிரபலமான இரு தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப் பட்டால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?உதாரணத்திற்கு நேரலையாக கிரிக்கெட் அல்லது பெண்களின் மனதை உருக்கும் மெகா சீரியல் என்கின்ற போது இயல்பாகவே ஆண்களுக்கு கிரிக்கெட்டும் பெண்களுக்கு மெகா சீரியலும் என்று எளிதாக சொல்லி விடலாம்.

ஆனால் கலைஞர் மானாட மயிலாடவும் விஜய் நீயா?நானாவில் அழகான பெண்கள் தென்னிந்தியப் பெண்களா அல்லது வடஇந்தியப்பெண்களா என்று பெண்களே களத்தில் விவாதிக்கும் போது உங்கள் விருப்பம் இரண்டில் எந்த நிகழ்ச்சிக்கு தாவும் என்பதும் கூட தனிப்பட்ட ரசனையைப் பொறுத்தது.பெரிய பட்ஜெட் படம் என பிரமாண்டமான தோட்டா தரணி செய்து படம் சரியாக ரசிகர் மத்தியில் போணியாகமல் போவதுமுண்டு.கதையின் வீச்சினால் கிராமப்புற யதார்த்தம் மனதை கொள்ளை கொள்வதுமுண்டு.அந்த மாதிரி பல லட்சக்கணக்கில் செலவு செய்து அலங்கார செட்டில் பெண்கள் கொஞ்சம் குண்டு,கொஞ்சம் அழகு,மேக்கப்போடு ஜிகினா உடைகள்,கொஞ்சம் ஜிம்னாசிய ஆண்கள்,திரைப்படங்களுடன் போட்டி போடும் நடன அசைவுகள்,நகைச்சுவை,கும்மாங்குத்து என கலவை செய்தாலும் மனது மானாட மயிலாடவில் லயிக்கவில்லை.

கலைஞர்,சன் தொலைக்காட்சி ஊடகங்கள் மீது தனிப்பட்ட வெறுப்போ,காழ்ப்புணர்ச்சியோ இல்லாது போனாலும் மக்களால் தங்களை உயர்த்திக் கொண்ட இவர்கள் தமிழுக்கும்,தமிழகத்திற்கும் தொலைக்காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரை பயனுள்ள வகையில் நிறைய செய்திருக்கலாம் என்ற மனக்குறை நிறையவே.தங்கள் சொந்த அர்ப்பணிப்பு,பங்களிப்பு,தமிழ் நாட்டின் சிறப்பான நிகழ்ச்சிகளையும் இணைத்துக் கொள்வது என அனைத்து விதக் கலவையாகவும் அதனூடே மொழியின் வீச்சாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலை அமைப்பது எப்படி என்பதை புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக பல தருணங்களில் பல்வேறு புலம்பெயர் தொலைக்காட்சிகள் நின்று போயிருந்தாலும் செயல்பட்ட வரை நிகழ்ச்சிகள்,தொழில் நுட்பம்,மொழி வளர்ச்சி என தங்கள் பங்கை நிறைவாக செய்ததை பாராட்ட வேண்டும்.தங்கள் உழைப்பின் சில விழுக்காட்டை சந்தாவாக செலுத்தி வளர்த்த காட்சி ஊடகங்கள் போல் அல்லாது தமிழக தொலைக்காட்சிகள் பொருள் வளம்,மனித வளம்,தொழில் நுட்பம் அனைத்தும் இருந்தும் பின்தங்கிப்போவதன் பொருட்டே மனம் அங்கலாய்க்கிறது.பல இளைஞர்,இளைஞிகளின் உழைப்பும்,நடன இயக்குநர் கலாவின் அபரீதமான நிகழ்ச்சிக்கான கற்பனைகளும் நிறைந்திருந்தாலும் ஒரு வித குறு குறுப்பையும்,குடும்பத்தோடு உட்கார்ந்து பார்ப்பதென்றால் உடலை நெளியவும்,குறு குறுக்க வைக்கும் அங்க,நடன அசைவின் வெளிப்பாடுகள் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன மானாட மயிலாட.இதில் வேறு நேற்று டூயட் ரவுண்ட் எனும் போது சொல்லவா வேண்டும்?

அதே நேரத்தில் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் அழகான பெண்கள் தென்னிந்தியப் பெண்களா,வட இந்தியப் பெண்களா என்று மாநிறத்தில் யதார்த்தமான மூக்கும் முழியுமாக தென்னகப் பெண்களையும் வடநாட்டை காலை வாரிவிட வேண்டுமென்ற நோக்கத்திலோ அல்லது தமிழ் பேசும் சவுகார்பேட்டைப் பெண்களையோ வடநாட்டுக்கு சிபாரிசு செய்து உட்கார வைத்திருந்தார்கள்.இருந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை தென்னகத்தை விட வடநாட்டுப்பெண்கள் காக்கிறார்கள் என்று ஒரு பெண் இசைக்கேற்ப குடத்தை இடுப்பில் வைத்து ஆடியதும்,தாண்டியா நடனமும் வடக்குக்கு கரவொலி எழுப்பியது.தென்னகப் பெண்கள் கும்மியடி பெண்ணே கும்மியடி குடி கொலவயும் போடு கும்மியடி என ஹாரிஸ் ஜெயராஜின் பாடலுக்கு கும்மியடித்தார்கள்.

வடநாட்டு,தென்னக முக்கியமாக தமிழ்நாட்டு ஆண்கள் பற்றிய பெண்களின் பார்வையில்...

தெற்கு:ஆம்பிளைன்னா மீசை முறுக்கோட மிடுக்கா இருக்கணும்.ஜல்லிக்கட்டு காளையக் கூடப் புடிக்கிற தெம்பு இருக்கணும்.கருப்பா இருந்தாலும் களையா இருக்காங்க நம்ம பசங்க.வடநாட்டுப் பசங்களப் பாரு மீசையில்லாம அமுல் பேபி மூஞ்சிகள வச்சிகிட்டு பொம்பள மாதிரி மெதுவா பேசிகிட்டு.

வடக்கு:ஆமா!எப்ப பார்த்தாலும் கத்தி பேசிகிட்டே இருந்தா யாருக்கு புடிக்கும்?ஒரு லுங்கிய கட்டிகிட்டு ஊர் முழுதும் திரியறது:)வடக்கிலயும்தான் வீரமான ராஜ்புத் ஆண்கள் இருக்கிறார்கள்.

தெற்கு:ஆம்பிளைன்னா கத்தி பேச வேண்டிய நேரத்துல கத்தி பேசனும்.மெதுவா பேச வேண்டிய இடத்துல மெதுவா பேசனும்.இந்த இரண்டும் தமிழ்நாட்டு ஆண்கள்ட்ட இருக்குது.

வடநாட்டுப் பெண்கள் மாடர்னாகவும் ஆங்கிலத்தில் பேசுபவர்களாக இருந்தாலும் தங்கள் மொழியிலும் திறம்பட பேசும் ஆற்றலுடையவர்களாக இருக்கிறார்கள்.பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் தவறில்லை.மாறாக மாநிறம்தான் அழகு என்பதை உணராமல் தென்னிந்தியப் பெண்கள் தங்களை சிவப்பாக்க முயற்சி செய்து கொள்கிறார்கள் என்று நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் முடித்து வைத்தார்.கோபிநாத்தின் சரளமான தமிழுக்கும் மொக்கை தலைப்புக்குள்ளும் நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை இணைத்து வெற்றிகரமாய் கொண்டு செல்வதற்கு பாராட்டுக்கள்.

இந்தியா என்ற ஒரே எல்லைக்குள் நோக்கும் போது வடக்கு,தெற்கு கலாச்சார மாறுபாடுகளின் வெளிப்பாடுகள் இருக்கக் கூடும்.சென்னை,மும்பாய்,டெல்லி,கல்கத்தா என எல்லைகள் கடந்தபின் இந்திய,மேற்கத்திய,அரேபிய,லெபனான்,சிரியா,பிலிப்பைன்ஸ்,இலங்கை,எகிப்து பெண்கள் என்ற பார்வையில் 33 விகிதாச்சார உரிமைகளைக் கோரும் பெண் உரிமைகளில்
இந்தியப்பெண்கள் முன்னேறி நிற்கிறார்கள் ஏனைய பெண்களை விட.

Wednesday, March 10, 2010

எம்.எஃப்.ஹுசைன் தேச துறவறம்.

இந்திய நாட்டின் பலம் மேலைநாடுகள்,வளைகுடா,மற்ற ஆசிய நாடுகளுக்கில்லாத வகையில் அனைத்து விதமான கலை,ஓவியம்,மதம்,தத்துவங்கள் என உள்வாங்கிக் கொள்வதே.ஆனால் சந்தர்ப்பங்களின் கலாச்சார முரண்பாடுகளின் வெளிப்பாடாகவோ,எண்ணங்களின் எதிர் வினையாகவோ சில விசயங்கள் ஒரு சிறு கோட்டிலிருந்து துவங்கி,அதன் பார்வைகள் அகன்று ஊதி பூதாகரமாகவும் ஆவதுண்டு.

சிலநேரங்களில் சர்ச்சைக்குரிய பார்வை யாருடைய கண்ணிலும் படாமல் அமுங்கிப்போவதுமுண்டு.உதாரணத்திற்கு சி.என்.என் 9/11 நேரலை காட்சியின் போது மனிதாபிமானமுள்ள எவரும் படபடத்துக்கொண்டிருக்க பிரெஞ்சு நாட்டு ஓவியர் ஒருவர் இரு கட்டிடங்கள் எரிந்து கொண்டிருப்பதை 21ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியமென்றார்.அதேபோல் விவாதத்திற்குரியதாக அல்லாத ஒன்றை எப்படி ஊதி பெரிது படுத்துவதென்பதற்கு சல்மான் ருஷ்டி விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு.

சல்மான் ருஷ்டியின் சாட்டானிக் வெர்சஸ் இதுவரை எத்தனை பேர் படித்து அதன் பொருளை உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை.ஆனால் சாதாரண வாசகனின் மனதுக்குப் புலப்படாத எழுத்துக்களால் நாவல் என்ற நிலையில் எழுதப் பட்ட புத்தகம் அது.ஈரானின் பத்வாவினால் சல்மான் ருஷ்டியும்,சாத்தான் வேதம் ஓதுகிறதுவும் உலகம் முழுவதும் அறியப்பட்டது.சல்மான் ருஷ்டி லண்டனில் போய் தஞ்சமடைந்தார்.அதே போல் எம்.எஃப்.ஹுசைன் ஓவியம் இந்துக்களின் மனதை புண்படுத்துகின்றதென்று அவர் மேல் பல வழக்குகள் வரை நீதிமன்றத்தில்.வழக்குகளுடன்,உயிருக்கான பயமுறுத்தல்கள் வேறு.ஓவியனாகவோ,முதுமையான வயதின் பொருட்டோ தொடர் வழக்குகள்,பயமுறுத்தல்கள்,அரசியல்,மதவாதம் போன்ற காரணங்களாலும் தனது ஓவியத்தை சந்தைப் படுத்த சிறந்த இடம் என்று அவர் துபாய் சென்றிருக்கலாம்.

திரும்பவும் இந்தியா செல்ல விரும்பாத நிலையில் அருகிலுள்ள கத்தார் அரசு ஹுசைனை தனது குடிமகனாக ஏற்றுக்கொண்டது.சில தினங்களுக்கு முன் மெக்ஃபூல் ஃபிடா ஹுசைன் என்ற எம்.எஃப்.ஹுசைன் தனது இந்திய கடவுச் சீட்டை கத்தார் இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்து விட்டார்.இனி மேல் அவர் கத்தார் குடிமகன்.

ஹுசைன் துபாய் செல்வதற்கு முன்பான இதன் பின்புலத்தை சற்று பின் நோக்கிப் பார்த்தால் இந்தியப் பாரம்பரியமான ஓவியத்துக்கும் அப்பால் அரசியலும்,மதபித்தும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதைக் காணலாம்.அவரது சரஸ்வதி,துர்கா,சீதா ஓவியங்கள் விமர்சனங்களுக்கான துவக்கம்,புள்ளி என்று பார்த்தால் எம்.எஃப்.ஹுசைனின் சீதா,துர்கா ஓவியங்கள் ஹுசைனால் 1970ம் வருடம் வரையப்பட்டதும் அவரது தனிப்பட்ட சேகரிப்பின் பத்தாயிரத்துக்கும் மேலான ஓவியங்களில் சில.1996ம் வருடம் விசார் மிமான்சா என்ற ஹிந்தி பத்திரிகையில் "MF Hussain,the Painter or a Butcher" என்ற தலைப்பில் தனிக் கட்டுரையாக வந்தது.அந்த சமயத்தில் எழுந்த எதிர் விமர்சனங்களின் விளைவாக ஆபாசமான பெயிண்டிங்,மற்றும் பெண்களை தரக்குறைவாக நியமனப்படுத்தல் என்ற கூற்றில் இ.பி,கோ 153எ,295எ என்ற பிரிவில் வழக்குகள் தொடரப்பட்டன.1996,அக்டோபரில் இந்துத்வா பஜ்ரங்க்தள் அகமதாபாத் கெர்விட்ஜ் கேலரியில் ஹுசைனின் ஓவியங்களை சேதப்படுத்தியது.

1998ம் வருடம் பம்பாயில் ஹுசைனின் வீட்டை பஜ்ரங்க்தள் சார்ந்தவர்கள் சேதப்படுத்தினார்கள்.இதனை சிவசேனாவின் பால்தாக்கரே எப்படி நியாயப்படுத்துகிறாரென்றால்"If Husain can step into Hindustan, what is wrong if we enter his house?" பால்தாக்கரே குழுவை எந்த விதத்தில் விமர்சிப்பதென்று தெரியவில்லை.ஒரு புறம் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட மும்பாய் வரக்கூடாதென்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, இந்தியா மீதான நிழல் தாக்குதலை தொடரும் போது இந்த மாதிரியான விளையாட்டுக்கள் பயன் தராது என்ற வாதத்தில் நியாயம் இருந்தாலும் இந்திய நாட்டுக்குள் மனித நல்லுணர்வை குலைப்பதில் மட்டுமே சிவசேனா இதுவரையிலும் முன்னிலை வகிக்கிறது.

ஹுசைன் தனக்குத்தானே அக்னிப் பரிட்சை செய்து கொள்வதாகவும், ஒரு ஓவிய விமர்சகர்,ஒரு வழக்கறிஞர், ஒரு விஷ்வ ஹிந்து பரிசத் உறுப்பினர் கொண்ட குழு அமைத்து வரும் தீர்ப்பில் தனது ஓவியம் மனம் புண்படும்படியாக இருந்தால் தானே முதல் ஆளாக எனது அனைத்து ஓவியங்களையும் கொழித்தி விடுகிறேன் என்றார். "நான் ஒரு ஓவியன்!இந்திய தேசத்தில் நம்பிக்கை கொண்டவன்!எனக்குத் தெரிந்ததெல்லாம் ஏழு வர்ணங்களும் அதன் கலவைகள் மாத்திரமே" என்று அவர் வீட்டை சேதப்படுத்திய நேரத்தில் சொன்னார்.


2004ல் இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம் " On Seeing the sketch or drawing of the lady with bull one finds that it has been drawn in such a manner that it appears to be a piece of art and creative imagination and in no way falls within mischief of obscenity nor does it come within mischief of word or gesture or on act indending to hurt the modesty of a woman." என்று வழக்குகளை தள்ளிபடி செய்தது.

இதற்கிடையில் 2006 வருடம் டேனிஷ் கார்ட்டூனிஸ்ட்டால் வரையப்பட்ட முகமதுவின் கார்ட்டூன் உலகளாவிய அளவில் முஸ்லீம்களின் கோபத்துக்குள்ளானது.உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மந்திரி டேனிஷ் கார்ட்டூனிஸின் கரங்களை வெட்டுபவருக்கு 51 கோடி வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.கையை வெட்டுவது மாதிரியான அறிவிப்புக்களையெல்லாம் எதிர்த்து யாரும் இந்தியாவில் குரல் கொடுக்க காணோம்.இதையெல்லாம் இங்கே சுட்டிக் காண்பிப்பதன் காரணம் தேர்தல் காலத்து அரசியலும் மதவாதங்களும் எப்படியெல்லாம் ரூபமெடுக்கின்றன என்பதற்காகவே.

அதே கால கட்டத்தில் 2006,பிப்ரவரியில் தனது எதிர் விமர்சன ஓவியங்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாயும் ஓவியங்களை ஏலம் விடுவதை நிறுத்திக் கொள்வதாயும் அறிவித்தார்.பின்பு தனது ஓவியங்களை சந்தைப் படுத்தவும்,எதிர்வினைகளை தவிர்க்கவும் துபாய் சென்று விட்டார்.

மாதுரி தீட்சித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஹிந்தி திரைப்பட ரசிகர்கள் மாத்திரமல்லாது இன்பெச்சுவேசன் மாதிரி மாதுரி தீட்சித்தின் திரைப்படங்களை நண்பர்களுடன் திரை அரங்குகளில் தொடர்ந்து பார்த்ததும் மாதுரியை வைத்து திரைப்படம் தயாரிக்க நினைத்து வங்கி கணக்கை குறைத்துக் கொண்டார்.தமிழில் கூட என்ஜினியர் என்று மாதுரியை கதாநாயகியாக அறிமுகப்படுத்த நினைத்து விளம்பரத்துடன் படம் நின்று போனது மாதிரியான நினைவு.

தெகல்கா பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணலில் சில வரிகள் எம்.எஃப்.ஹுசைன் என்ற ஓவியனின் மனதை படம்பிடித்துக் காட்டுகிறது.

தெகல்கா:உங்களுக்கெதிரான அடிப்படைவாதிகளைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

ஹுசைன்:நான் இது பற்றி பொருட்படுத்தவில்லை.இந்தியா ஜனநாயக நாடு.ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்துக்களை சொல்ல உரிமையுண்டு.ஆனால் இந்தக் கருத்துக்களை வன்முறை உபயோகிக்காமல் விவாதங்கள் மூலமாக வெளிப்படுத்தினால் நல்லது.ஊடகங்கள் என்னிடம் கடுமையான வார்த்தைகளை எதிர்பார்க்கின்றன.எனக்கு இந்தியா மீது மிகவும் நம்பிக்கை இருக்கிறது.இந்திய ஓவியங்கள் 5000 வருடங்களாக தொடர்ந்து புது வடிவங்களை சுமந்து வந்துள்ளது.இனி வரும் இளைய தலைமுறை அடிப்படை வாதிகள்,பிற்போக்குவாதிகளின் கருத்துக்களை மறுத்து இந்தியாவில் மாற்றம் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன்.அதே சமயத்தில் அடிப்படைவாதிகள்,பிற்போக்குவாதிகளின் கருத்துக்களும் ஒரு பக்கம் வலம் வரட்டும்.இந்தியா ஒரு பெரிய குடும்பம் மாதிரி.குடும்பத்தில் ஒரு குழந்தை எதையாவது சேதப்படுத்தினால் நாம் கோபப்பட்டு வீட்டை விட்டு துரத்தி விடுவதில்லை.பதிலாக நாம் விளக்கி கற்றுக் கொடுக்க வைக்கிறோம்.எனது ஓவியங்களை குற்றம் சொல்பவர்கள் ஒன்று அதனை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.அல்லது எனது ஓவியத்தை பார்த்திருக்க மாட்டார்கள்.

தெகல்கா:உங்களுக்கு இந்திய ஓவியம் மற்றும் கலாச்சாரத்தில் ஈடுபாடு எப்படி வந்ததென்று சொல்ல இயலுமா?

ஹுசைன்: முன்பு பந்தர்பூர் என்ற இப்போதைய இந்தூரில் நான் சிறுவனாக இருக்கும் போது ராம் லீலா கதைகளில் வசீகரிக்கப்பட்டேன். மங்கேஸ்வர் என்ற எனது நண்பனும் நானும் அதேபோல் வேடம் போடுவோம்.ராமயாணம் ஒரு சிறந்த வலுவான கதை.ராஜகோபலாச்சாரி ராமயாணம் பற்றி சொல்லும் போது இதிகாசம் உண்மையாகி விட்ட மாதிரி இருக்கும்.எனது அம்மா இறந்த பின் எனக்கு 14,15 வயதில் நிறைய கெட்ட கனவுகள் வந்தன.எனக்கு 19 வயது இருக்கும் போது முகமது இஷாக் என்பவரிடம் குரானை இரண்டு வருடம் படித்தேன்.கூடவே மங்கேஸ்வருடன் புராணங்கள்,கீதை,உபநிசதங்களைப் படித்தேன்.அதன் பின் மங்கேஸ்வர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இமயமலை சென்று விட்டான்.நான் தொடர்ந்து படித்ததன் காரணமாக மிகவும் அமைதியாகிவிட்டேன்.எனக்கு கெட்ட கனவுகள் வந்ததெல்லாம் நின்று போயிற்று.

பின் 1968ல் ஹைதராபாத்தில் டாக்டர் ராம் மனோகர் லோகியா என்னை ராமயாணத்தை வரையச் சொன்னார்.என்னிடம் பணமில்லை.ஆனாலும் எட்டு வருடங்களில் 150 வரை ஓவியங்களை வரைந்தேன். நான் வால்மீகி மற்றும் துளசிதாஸ் ராமயாணங்களை தொடர்ந்து படித்தேன்.பனாரஸிலிருந்து இந்து குருக்களை வரவழைத்து அவர்களிடம் ஓவியத்தின் குறைகளை கேட்டறிந்தேன்.சில இஸ்லாமியர்கள் என்னை அருகி இஸ்லாமிய கருத்துக்களுடனான ஓவியங்களை வரையச் சொன்னார்கள்.இஸ்லாமுக்கு இந்திய சகிப்புத்தன்மையிருக்கிறதா என்று பதிலளித்தேன்.ஒரு காலிகிராபி எழுத்து தவறாகப் போனாலும் ஓவிய ஸ்கிரீனை கிழித்து விடுவார்கள்.என் வாழ்நாளில் 100க்கும் மேலான கணேஷ் ஓவியத்தை வரைந்துள்ளேன்.அவை எனக்கு ஆத்ம திருப்தியுள்ளவை.எந்த ஒரு பெரிய ஓவியத்தை வரையும் முன்பும் கணேஷ் வரைந்து விட்டே ஓவியத்தை துவங்குவேன்.சிவன்,நடனமிடும் நடராஜ் ஓவியங்கள் மிகவும் சிரமமானவை.ஐன்ஸ்டீனின் விதிகள் மாதிரி மிகவும் நுட்பமானவையும் தத்துவார்த்தம் கணக்கியல் சார்ந்தது அவை.

எனது மகள் திருமணத்தின் போது எந்த விதமான விழாவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.எனவே ஒரு கார்டில் பார்வதி சிவனின் மடியில் உட்கார்ந்திருப்பது மாதிரியும் சிவனின் கரங்கள் பார்வதியின் மார்பை தொடுவது மாதிரியும் வரைந்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்தேன்.இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது புனிதமானது.எனக்கு மிகவும் நெருக்கமான அந்த உணர்வை நான் அவமதிப்பேனா?ஷியாவின் சுலய்மானி வகுப்பிலிருந்து வந்தவன் நான்.எங்களிடம் மறுபிறவி உட்பட பல இந்துமதம் சார்ந்த நம்பிக்கைகள் உண்டு.கலாச்சார ரீதியாகவும்,உணர்வு பூர்வமாகவும் ஜூடாயிஸமும்,கிறுஸ்தவமும் மிகவும் தொலைவிலானவை.ஆனால் இதையெல்லாம் என்னை எதிர்ப்பவர்களிடம் விவாதிக்க இயலாது.இவர்களிடம் கஜரஹோ சிலைகளைப் பற்றிக் கேட்டால் இந்திய ஜனத்தொகையைப் பெருக்குவதற்கு என்பார்கள்.ஆனால் உணர்வு பூர்வமான,புலன்களை மகிழ்விக்கும்,இன்னும் பரிணாம வளர்ச்சியடையும் இந்துக் கடவுள்களை கிராமப்புற மக்கள் மட்டுமே அறிவார்கள்.கிராமிய மக்கள் மலைகளில் ஆரஞ்சு வர்ணத்தை பூசுகிறார்கள்-இது ஹனுமானைக் குறிக்கிறது.

தெகல்கா: உங்களது ஓவியங்கள் எப்படி பேசப்படவேண்டும்,நினைவு கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?

ஹுசைன்:எனது ஒவியங்கள் ஒரு கதையை சொல்ல வேண்டும்.பார்க்கும் மக்களுடன் ஓவியம் பேசவேண்டும்.குப்தர் காலத்து பித்தளை உருவங்களை த்ரிபாங்கா என்ற எரோட்டிக் வர்ணமான பெகாரி ஓவிய வடிவத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறேன்.எனது ஓவியங்கள் பாரம்பரியத்தோடு இருப்பதோடு அதில் ஒரு கிராமியத்தன்மை இருப்பதை விரும்புகிறேன்.இந்தியாவில் கலை,ஓவியம் சார்ந்த தஞ்சாவூர்,சோழர்,குப்தர்கள் கால பொற்காலங்கள் உண்டு.நூற்றாண்டுகளின் பார்வை அவைகளில் உண்டு.பல பண்பாடும்,பாரம்பரியமும் இருந்தும் இந்தியா சுதந்திரமடைந்து 60 வருடங்களுக்கும் மேலாகியும் ஓவியம் கற்பவர்களுக்கு கிரேக்க கலை சார்ந்த உடலைப் பற்றி மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.ஷேக்ஸ்பியர்,கீட்ஸ் சொல்லிக் கொடுத்து விட்டு காளிதாசனைப் பற்றி சொல்லிக் கொடுக்க மறந்து விடுகிறோம்.இந்தியன் யாரென்று சரியாக அடையாளப்படுத்த தவறி விடுகிறோம்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சுப்புலட்சுமி,மதர் தெரசா,ஜே.ஆர்.டி டாட்டா,என்னை கவுரவிக்கும் போது தலையில் ஒரு சிவப்பு தொப்பியும்,ஒரு அங்கியையும் கொடுத்து சிறப்பித்தது:)

இந்தியாவின் இரைச்சலும்,ஜனநாயக சுதந்திரங்களும்,பல மாநிலத்து பண்பாட்டுக் கலாச்சாரங்களும்,கடந்து வந்த நூற்றாண்டுகளின் படையெடுப்புக்களும்,அதனைச் சார்ந்த மாறுதல்களும்,இவற்றின் ஊடே தம்மை உறுதிபடுத்திக் கொண்ட கலை,கட்டிடங்கள்,மொழிகள்,இனங்கள்,உடை,உணவுப்பழக்கங்கள் ஒரு கலைஞனுக்கு,ஓவியனுக்கு,கவிஞனுக்கு,இலக்கியவாதிக்கு,சிந்தனையாளனுக்கு,வாழ்வின் தத்துவம் தேடுபவனுக்கு ஒரு வரப்பிரசாதம்.இதையெல்லாம் துறந்து ஓவியனாக எம்.எப் ஹுசைன் இனி பாலைவனக் கலாச்சாரத்தின் வேர்களையும்,உயர்கட்டிடங்களுக்கு புதிய உயிரோட்டத்தைக் கொண்டு வருகிறாரோ இல்லையோ முதுமையில் அமைதியான நாட்களை கத்தார் வழங்கும் என உறுதியாக நம்பலாம்.