Followers

Monday, December 31, 2012

ஒரு பதிவு உருவாகும் கதை

இந்த பதிவு திடீர்ன்னு முளைப்பதற்கு இரண்டு காரணங்கள்.முதலாவதாக நணபர் ஜோதிஜி வலைச்சரத்தை அலங்கரிக்கும் முகமாக சொல்லியிருந்த பதிவிடும் திட்டமிடல். திட்டமிடல் எதுவுமே இல்லாமல் அப்படியே இங்கே வந்து உட்கார்ந்து கொள்ளும் நம்ம பதிவு ஸ்டைல்.

இரண்டாவதாக தமிழின் தலையெழுத்து என்ற தலைப்பில் விடுதலை தளத்தின் கருத்தும்.தமிழகத்தில் இந்தி,தமிழ்,ஆங்கிலம் மும்மொழி திட்டம் தோல்வியடைந்ததில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பும்,மாணவர் போராட்டம் வலுவடைந்து மத்திய அரசின் மறுபரிசீலனையில் இந்தியை பின் தள்ளிவிட்டு தமிழ்,ஆங்கிலம் தமிழகத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. 

கலைஞரின் குடும்ப நலன் அரசியல் இப்போது சந்திக்கு வந்துவிட்டாலும் கூட அவரது ஆட்சிக்கால கல்வி சீர்திருத்தங்களை பாராட்ட வேண்டும்.இந்தி படம் பார்க்க முடியலை,டெல்லியில் எழுத்தர்,தட்டச்சர்,கணக்குப்பிள்ளை வேலைக்கு தமிழர்கள் போட்டி போட முடியவில்லையென்ற  பொதுவான ஆதங்கங்கள் தவிர தமிழர்களுக்கு எந்த வித இழப்புமில்லை.ஆனால் வாரே வாவ் என்று உச்சுக்கொட்டும் இந்தி கவிதைகள்,ஹிந்துஸ்தானி இசை,கஜல் போன்றவற்றை ரசிக்க முடியாமல் போவதற்கு இந்திமொழி புரியவில்லையே என்ற வருத்தம் சரியாக இருக்கும்.,ஒரு மொழி மண் சார்ந்தே உச்சரிக்கப்படுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் மெட்ராஸ் (சென்னை) தமிழ்,தஞ்சாவூர்,கும்பகோணம் பகுதி தமிழ்,மதுரை,நெல்லை,கொங்கு,ஈழத்தமிழ் எனலாம்.

அது போலவே இந்தி உச்சரிப்பும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன.நமக்குத்தான் இந்தி தெரியாதே நம்மை விட்டு விடுவோம்.கேரளாவில் ரயில் பிடித்து சந்திரனில் சாயா கடை போடும் சேட்டன்கள்,ஏமண்டி மரியாதை ஆந்திரகாருகள் இந்தி பேசுகிறார்கள்.இவர்கள் இந்தியை பற்றி சொல்வதற்கு முன் சேட்டன் சாயா கடை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.முன்பு மெட்ராஸில் கார் உபரி சாதனங்கள் விற்கும் காயலாங்கடை மவுண்ட்ரோட்டின் மத்தியில் இருக்கும.அந்தப்பகுதியை இப்பொழுது நவீன சென்னை மின்பொருள் அங்காடிகளாக மாறி விட்டன.

ஆங்கிலப் படம் பார்ப்பவர்களுக்கும்,அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும் ஸ்கேரேப் எனப்படும் பழைய கார்களை நொறுக்குமிடம் தெரிந்திருக்கும்.வளைகுடா நாடுகளில் யாருமே நடக்க கூடாதுன்னு எழுதாத சட்டம் என்பதால் எங்கும் வாகன மயமென்பதால் பன்னாட்டு கார் உற்பத்தியாளருக்கு நல்ல போணி.பழைய வாகனங்கள் உபரி பாகங்களுக்காகவும்,விபத்தில் காவல் துறை சேமிப்பு கிடங்காகவும் நகரின் எல்லையை தாண்டி இருக்கிறது.கார் ரேடியேட்டர் ஃபேன் மற்றும் நம்ம வழக்கமாக வண்டி பழுது பார்க்கும் பாகிஸ்தானிய பழுதுபார்க்குமிடமிருப்பதால் சென்ற வாரம் செல்ல நேரிட்டது.

அமெரிக்க ஹம்மர் வண்டியிலிருந்து கொரியாவின் ஹுண்டாய் வரை கடை பரப்பியிருக்கும் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,ஈரான்,சிரியாக்காரர்களில் ஒரே ஒரு சாயா,பரோட்டா கடையொன்று நம்ம இந்திய சேட்டனுடையது.இப்படி உழைப்பை கொட்டும் சேட்டன்களின் இந்தியும் சரி, இந்தி படங்களில் முதலீடு செய்யும் ஆந்திரக்காரர்களின் இந்தியும் சரி இந்திப்பட உலகில் ஒரு நக்கலான நையாண்டி முறையிலே மெதராஸி இந்தி என சித்தரிக்கபடுகிறது.இந்த நையாண்டியின் வரலாறு நம்ம ஆச்சி மனோரமா இந்தி சிரிப்பு நடிகர் மெஹ்மூத் இருவரும் சேர்ந்து நடித்த குன்வாரா பாப்' என்ற படம். (பிரம்மச்சாரித் தந்தை) என்ற இந்தி படத்தில் மெஹ்மூத் இந்தியை உச்சரிக்கும் முறையில் துவங்குகிறதென்பது எனது ஆராய்ச்சி.மாற்றுக்கருத்து இருந்தாலும் உள்வாங்கிக்கொள்ளலாம்.பிரச்சினையில்லை.

 மேலும் தென் மாநிலங்களில் எந்த மாநிலத்தவர்கள் இந்தியை மெஹ்மூத் ஸ்டைலில் உச்சரிக்கிறார்கள் என்று கவனித்ததில் ஆந்திரவாடுகள் உச்சரிப்பு மெஹ்மூத் உச்சரிப்புடம் கொஞ்சம் ஒட்டிப்போகின்ற மாதிரி தெரிகிறது. இப்பொழுதும் என்னை கிண்டல் செய்யும் ஒரு குஜராத்திக்காரன் மெஹ்மூத் ஸ்டைல் இந்தியிலே என்னோடு பேசுவான்:) அவனுக்கு தெரியுமா நம்ம அரை குறை இந்தியே இந்தி படம் பார்த்துத்தான் கற்றுக்கொண்டதென்பது.

சரி!என்னனென்னமோ உளறுவதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னா முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பல மொழி கற்றுத் தேர்ந்தவராம்.கிட்டத்தட்ட பத்து,பதினெட்டு மொழிப்புலமை கொண்டவராம்.
அப்ப தலைப்பின் விகுதி? எந்த மொழியும் உருப்படியா இல்ல.மூக்கும் முழியுமா இருந்த பெண்ணோடு படித்த பிரெஞ்சு முதல் இன்|றைய அரபி வரை எதுவும் நாக்கில் ஒட்டாமல் சொல் தடுமாற்றங்களில் பேசும் போது வீட்டில் வாங்கிக்கட்டிக்கொள்வது மட்டுமே மிச்சம்.எனக்கே இப்படின்னா இப்ப புரியுதா நரசிம்ம ராவ் ஏன் வாயே திறக்கம இருந்தார்ன்னு?அவர் சொல்லிக்கொடுத்த பேசும் நுட்பத்தைத்தான் இப்ப மன்மோகன் சிங் பயன்படுத்துகிறார்.

கொஞ்சம் உளறுகிற மாதிரி தெரியல!இந்தப் பதிவுக்கு முதலில் வைத்த தலைப்பு  நரசிம்மராவின் மௌனமும் என்னோட உளறுவாயும்.

மனம் போன போக்கில் சொல்லியவை எத்தனையென்று இன்னும் எண்ணிப்பார்க்கவில்லை.2012க்கு இதுதான் கடைசி பதிவு.

நன்றாக தமிழ் பேச முயற்சி செய்வோம்:)

அனைவருக்கும் 2012 வாழ்த்துக்கள்.





Wednesday, December 26, 2012

இது கொத்து பரோட்டா அல்ல! நிஜமாவே பரோட்டா!:)

விடாம கொத்து பரோட்டா சாப்பிடற லோகத்துல பரோட்டா பற்றி ஒரு சின்ன ஆராய்ச்சி.நீ ரொம்ப நல்லவன்னு வருடக்கடைசி கிடங்கு கணக்கு சரி பார்க்க ஊர் கடத்தி விட்டதால் அவசரத்துக்கு சேட்டன் கடைக்கு பரோட்டா சாப்பிட போக சாப்பிடும் நேரத்தில் பரோட்டா சாப்பிடுவது உடலுக்கு கெடுதின்னு யாரோ ஒருவர் பரோட்டா மேல் இருக்குற கோபத்தை இணையத்தில் கொண்டு வந்து கொட்டிய நினைவு வர மெய்யாலுமே பரோட்டா உடலுக்கு கெடுதியான்னு யோசனை செய்ய கும்கி யானை மாதிரி பிளிறிக்கொண்டு வந்த எண்ணங்கள் இவை:)

இணைய தேடலில்
ஒரு கருத்தின் மையமாக மைதாவில்

Benzoyl peroxide,
Alloxan .
Artificial colors,
Mineral oils,
Taste Makers,
Preservatives,
SUgar,
Saccarine,
Ajinamotto

போன்ற பொருட்களை கலப்பதாக யாரோ ஒரு மூல ரிஷி சொன்னதையே காபி பூனைகளாக பெரும்பாலோனோர் பரோட்டா செஞ்சு பதிவு என்னுடையதாக்கும் செய்திருக்கிறார்கள்.மேலும் இணையதேடலில் மாவு பேக்டரியில் பணிபுரிந்த ஒரு மேலாளர் மட்டும் கெடுதி ஆதரவு பதிவு ஒன்றில் ஆங்கில வார்த்தைளை கலப்பு செய்வதில்லை என்கிறார்.எப்படியிருந்த போதிலும் இந்திய தரக்கட்டுப்பாட்டுக்கு நான் கியாரண்டி அல்ல.
படம் தேடியதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில்  பொராட்டா சுடுகிறார்கள்.பரோட்டா லேயருக்காக எனது தேர்வு இது.

அரிசு மாவுல இட்லி, தோசை தினமும் சாப்பிடுவது கெடுதியா இல்லையா?ஜீரண சக்தியோடு ஒப்பிடும் போது இட்லி,தோசை பரவாயில்லை தான்.ஆனால் நம்ம வீட்டில் கல்லூரிக்குப் போகும் நம் சகோதரிக்கு அம்மா இட்லியை அவசரத்துக்கு டிபன் கேரியரில் அமுக்கி வைத்தால் என்னம்மா!தினமும் இட்லியா என தோழிகளோடு பிசா சாப்பிட போய் விடும்.சரி நாம் பொராட்டாவுக்கே வருவோம்.
புரோட்டாவா,பராட்டாவா.பொராட்டாவா என பெரிய சந்தேகம் இருப்பதால் அவ்வபோது புராட்டா,பரோட்டா,பொராட்டான்னு இடையிடையே ப்ளோவுக்கு தகுந்த மாதிரி சேர்த்துக்குவேன் சரியா?.

மேலே சொன்ன ஆங்கில மூலப்பொருட்கள் கலந்திருப்பது உடலுக்கு கெடுதியென்றால் மேலை நாட்டவர்கள் விடாமல் ரொட்டி,,பிஸ்கெட்,கேக் என செய்து சாப்பிட்டு விட்டு திடமாக இருக்கிறார்களே எப்படி? ம்!அவர்கள் நன்றாக உடற்பயிற்சி செய்கிறார்கள் என சிலர் நினைக்கலாம். மிலிட்டரிக்கும்,தொலைகாட்சி சீரியலுக்கும் உடற்பயிற்சி செய்பவர்களோடு நிஜமாகவே உடற்பயிற்சி வாழ்க்கையின் ஒரு பகுதியென அன்றாட வாழ்வில் திணிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது போக அமெரிக்கா ஓவர் வெயிட் கொலாஸ்டரல் பூமியென நினைக்கின்றேன். இது தவிர Cheese,Burgar,KFC,Fries என வேறு காரணங்களும் கூட..தமிழ் அமெரிக்கர்கள் கம்ன்னு கிடக்காம கருத்து சொன்னா எனக்கு தெளிஞ்சிரும்:)
பிராந்தியை அப்படியே வாயில் ஊற்றினோமான்னு இல்லாமல் கேக்குக்கு நெருப்பு வைக்கும் சதி:)

கேக் செய்தோமா  சாப்பிட்டோமான்னா இல்லாமல் அதில் பிராந்திய வேற ஊற்றி பிளாம்பே ன்னு ஒரு ஸ்டைல் வேற. புபேன்னு நின்னுகிட்டே சாப்பிட ஆட்கள் ஏற்கனவே சில ரவுண்டு வந்திருப்பார்கள் என்பதால் புபேக்களில் பிளாம்பே செய்வதில்லையென நினைக்கிறேன்.

புபே என்றதும் ஒரு செமினார்ல நீச்சல் குளத்து புபே ஒன்தில்  பார்த்த ருமாலி ரொட்டி ஞாபகம் வந்துடுச்சு..வட நாட்டில் ருமாலி ரொட்டின்னு ஒன்று இருக்குது.நாம் வடை சட்டியில எண்ணை ஊத்தி வடை சுட்டா ராஜஸ்தான்காரர்கள் வடை சட்டியை கவிழ்த்துப்போட்டு ருமாலி ரொட்டி சுடுகிறார்கள். புபேயில் ருமாலி மாஸ்டரை ஷோ காட்டும் பந்தாவுக்கு வைத்திருந்தாலும் கூட ருமாலி மாஸ்டர் ரொம்ப விசயம் தெரிஞ்ச ஆளாக இருக்க கூடும்.ஏன்னா ருமாலி ரொட்டியை ஆகாயத்துல தூக்கி வீசிட்டு கெத்தா திரும்பி நின்னுகிட்டார். ருமாலி ரொட்டி காற்றில் ஒரு நடனமாடி கவிழ்த்துப்போட்ட வடைச்சட்டியில் சரியா வந்து உட்கார்ந்துகிச்சு. ஆச்சரியமான அனுபவம்.
 
ருமாலி ரொட்டி கவிழ்த்துப்போட்ட வடைச்சட்டிக்குள் வந்து உட்கார்வதற்கு முன்னால்.ருமாலி ஷெஃப்!நீங்க வித்தைக்காரன் தான்.

சரி மறுபடியும் பரோட்டா ஆராய்ச்சி.

இட்லி மட்டுமே பெயர் மருவாமல் அப்படியே இருக்குது.தோசை,தோசா என வடநாட்டுல பெயர் மறுவுவது போல் இது இந்த வம்பே வேண்டாமென வளைகுடாவில் இதனை சப்பாத்தி என்றுதான் அழைக்கிறார்கள். வளைகுடாவில் பிரபலமான மூன்று உணவுகள் பிரியாணி,பரோட்டா,சமோசா எனலாம். இதில் பரோட்டாவை மற்றும் இங்கே ஆராயலாம். குப்புஸ் என்ற மைதா,அரிசி மாவு கலந்த ரொட்டி காலை,மதியம்,இரவு உணவுகளில் உண்பது போலவே பரோட்டா காலை,மாலை,இரவு என சாயாவோடு கிடைக்கிறது. இதில் முக்கியமாக காலை உணவாக பணீ அவசரத்தில் இருக்கும் பல உழைப்பாளர்களுக்கும்,ருசி காரணமாக அரபியர்கள், எகிப்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என காலை உணவாக புரோட்டாவே பிரதானம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னா குப்புஸ்ல எண்ணை கலப்பு குறைவு.பரோட்டாவில் எண்ணை வளம் அதிகம்.எண்ணைப் பிசு பிசுப்பு கொலாஸ்ட்ரலுக்கு காரணம் என்பதால் பரோட்டா பயமுறுத்தல்கள் எனலாம்.

மேலும் பரோட்டா ஜவ்வு மாதிரி இழுபடுவதால் நார் சத்து குறைவாக,மற்றும் குறைந்த விலை எண்ணை,வெஜிடபிள் ஆயில் என கலக்க கூடுமென்பதால் உடல் கெடுதிக்கான சாத்தியங்கள் இருக்க கூடும்காபி பூனை பதிவர்கள் சொல்லிய இன்னுமொரு விசயம் கேரளத்தைப் பாரு,பொராட்டாவை தடையே செய்துட்டாங்கன்னு இன்ன்மொரு ஆகா!ஓகோ கேரளத்துக்கு.

ஆனால் வளைகுடாவில் இன்னும் பொராட்டாவை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் சேட்டன்மாரே.சரக்கு மாஸ்டர்கள் அப்படியே நுகர்ந்து பார்த்தே சரக்கின் தரத்தை எடை போடும் மது கொனாசியர்கள் போல் பரோட்டா சாப்பிடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு பரோட்டா செய்வது எப்படி என பார்க்கலாம்.

இப்படி ஆராய்சி செய்ததுல பொராட்டாவுக்கான முக்கியமானதும், சரியானதுமான பொருட் கலவை என்னன்னா மைதா, முட்டை, பால், சர்க்கரை, எண்ணை,இத்துணூண்டு உப்பு,கலந்து பிசைய கொஞ்சம் தண்ணீர்.இந்த கலவையில பொராட்டா செஞ்சாதான் நல்லாயிருக்கும்.ஆனால் பால் விற்கிற விலைக்கு பொராட்டா போட்டு கட்டுபடியாகாதுன்னு  அப்படியும் யாராவது பொராட்டா மாவில் பால் கலக்கும் பொராட்டா மாஸ்டர் விசயம் தெரிந்த அனுபவசாலியாக இருக்க கூடும்..பொராட்டா மாவை உருட்டி உருண்டையா எடுத்து தட்டையா செஞ்சா நல்ல பொராட்டாவே வராது.பொராட்டா நுணுக்கமே துணி மாதிரி துணி போட்டு ஊறவைப்பதிலும்(Fermentaion)மாவை துவைச்சு காயப்போடுவதிலும்தான் இருக்குது.

கும்கி படத்துல யானைக்கு கவளம் தருகிற உருவத்துல இருக்கிற பொராட்டா மாவை மெல்லிடையாள் என எஸ்.பி.பி மென்மையா பாடுகிற மாதிரி பேப்பரை சுத்துற மாதிரி பதத்தில் அடிச்சு மிருதுவாக்கி மாவை வட்டமா சுருட்டி வச்சு மறுபடியும் பொராட்டா அளவு செய்து பொன்னிறத்தில் சுட்டு எடுத்து மாஸ்டர் பொராட்டா சூட்டோடு சூடா பொராட்டாவை இரண்டு உள்ளங்கையாலும் ஒரு குத்து விட்டா பொராட்டா சுருள் சுருளா வரணும்.இந்த நுட்பம் பொராட்டா மாஸ்டருக்கு மட்டுமே கை வந்த கலை.

சரி!பரோட்டாவை தமிழகத்தில் கடையில் வாங்கினால் உண்ணும் முறை பெரும்பாலும் அப்படியே பிச்சுப்போட்டு,சால்னா ஊத்தி முழுங்கிடறது.அதிலும் நம்ம சரக்கு அண்ணாத்தைகள் சாப்பிடற கெத்தே தனி. சிரிச்சிக்கிறேன்:)
பரோட்டாவில் கொஞ்சம் சர்க்கரை தெளித்து பாலை ஊற்றி 3 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு ஊட்டலாம்.நம்ம ஊர்ல டீயில் பண்ணை முக்கி சாப்பிடுவது போல் பரோட்டாவுக்கும்,சாயாவுக்கும் ஏகப்பொருத்தம்.

பரோட்டா பெரும்பாலும் காலை உணவாக சாப்பிடுவது நல்லதென நினைக்கின்றேன்.இரவிலேதான் சாப்பிடுவேன்னு அடம் புடிக்கிறவங்க கல்லூரி வயசா இருந்தா தப்பில்ல. முன்பெல்லாம் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துட்டு கால்நடையா நடந்தா கோவை அவினாசி ரோட்டில் காசு போட்டா பாட்டைக்கேளு யந்திரத்தோடு பொராட்டாவும்,மட்டன் குருமாவும் ஈரானி ஓட்டல் ஒன்றில் மட்டுமே கிடைக்கும்.
 தூவிய கொத்துமல்லிக்காக பரோட்டாவுக்கு தொட்டுக்க இந்த படம்.

இப்பொழுது எங்கும்,எதிலும் பொராட்டா மையம் என்பதால் பொராட்டாவோடு ஆட்டை சாப்பிட்டாலோ,கோழிதான் பிடிக்குதுன்னாலோ முக்கியமா கவனிக்க வேண்டியது பொராட்டா, குருமா, பாயாவோடு கேரட், வெள்ளரிக்காய், லெட்யூஸ், முட்டைக்கோஸ், தக்காளி,வெங்காயம், எலுமிச்சம் பழம் என பச்சைக்காய்கறிகளையும் சேர்த்தே உண்ணவேண்டும்.குருமிளகு தூள் சேர்த்துகிட்டா இன்னும் ஒஸ்தி,உப்பு பத்தியமில்லாட்டி உப்புச் சிதறல் கூட கொஞ்சமோ கொஞ்சம்.தமிழகத்தில் அத்தனை காய்கறிகளும் விளையுது.ஆனால் பச்சைக்காய் கறியில்லாத உணவாகவே நிறையபேர் உண்கிறார்கள்.தமிழக ஓட்டல்களில் முதலில் தண்ணீர் தருவது மாதிரி உணவு வரும் வரை சாலடை சாப்பிடச் சொல்லும் பழக்கம் வரவேண்டும்.முடியலைன்னா ஒரு கேரட்,தக்காளியை அப்படியே கொண்டு வந்து கடிக்கச்சொல்லியும் கூட புது ஐடியா கொடுக்கலாம்:) 

சமையல்கட்டு அவசரத்துக்கு வெட்டினாலும் கூட எளிமைக்கான தேர்வு.

கேரட் உடலுக்கு நல்லதுன்னுதான் இதுவரையிலும் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.முந்தா நாள் ஒருவர் நீரிழிவு நோய்க்காரர்களுக்கு கேரட்  தரவே கூடாதென்றார்.இதற்கும் யாராவது ஆராய்ச்சி செய்தால் பரவாயில்லை.ஏனென்றால் நீரிழிவு நோயில் இந்தியா ஒலிம்பிக்ஸ் தங்கம் வாங்குதாம்.யாராவது ஒன்றை சொன்னால் அதை அப்படியே பின்பற்றும் காபி,பேஸ்ட் நிறையவே இருக்கிறார்கள்.சிந்திக்க மாட்டீர்களா:)

இந்திய மழை,வெயில்,காற்று முக்கியமாக உழைப்பு,யோகா சூழலில் நீரிழிவு நோயில் இந்தியா முதலிடம் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமே.குஜராத்திகள் நிறைய இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதால் சர்க்கரைக்கு வேணும்ன்னா மோடியையும் குஜராத்திகளையும் பிடிக்கலாம்:)நாம் ஹார்போஹைட்ரேட்காரர்கள்.கரைத்து விடலாம்தானே!

வேலை வாய்ப்பு,திரைப்படத் துறையில் நுழையனும்ன்னு மெட்ராஸ்,சென்னை போன இளைஞர்கள், கலைஞர்கள் காலை சாப்பாடுமில்லாமல்,மதிய சாப்பாடுமில்லாத நேரமாப் பார்த்து பசி தாங்கிப் பரோட்டா அல்லது காலை உணவு,இரவு உணவு தவிர்த்த புல்மீல்ஸ் மட்டுமே சாப்பிட்ட நீராகார நினைவுகள் இருக்கலாம்.

படமெல்லாம் போட்டு விட்டு சரியான உணவு கிடைக்காத மக்களும் இந்தியாவில் இருக்கிறார்களே என வினவு தோழர்களின் குரலும் மெல்லிதாக காதில் ஒலிக்கிறது. தீர்வுகளுக்கானவர்கள் இந்தியா வறுமைக்கோட்டுக்கும் அப்பால் நகர்ந்து விட்டதென்கிறார்கள்.

தற்போதைய வாழ்க்கை,உணவு மாற்றங்களில் எதை சாப்பிட்டாலும் சாப்பாடு கறைந்து போகும் உடல் உழைப்பு,உடற்பயிற்சி அவசியம்.உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலை. பார்வையிட்டவர்களுக்கு நன்றி.






Sunday, December 23, 2012

டெல்லி பஸ்ஸில் உயிரோடு பி.சி. ஸ்ரீராமின் வானம் வசப்படும்

தற்போதைய டெல்லி மருத்துவக்கல்லூரிப் பெண்ணின் பரிதாபம் எப்போதோ பார்த்து மறந்து போய் விட்ட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய படம் என்ற ஒற்றை  பிளாஷ் பேக் நினைவை நினைவுக்கு கொண்டு வந்தது.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் என்ற பெயர் பலருக்கு நினைவில் இருந்தாலும் அவர் இயக்கிய படத்தை அப்பொழுதே மறந்து விட்டதால் தமிழகம் இப்பொழுது நிச்சயம் மறந்திருக்கும்.எப்படியோ சில புண்ணியவான்கள் ஒளிப்பதிவாளார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் பெயரை பதிவு செய்த உதவியோடு அவர் இயக்கிய படத்தை தேடினால் வானம் வசப்படும் என்ற சிறு குறிப்போடு  மேலும் இணைய தேடலில் கூகிள் வேற உருப்படியா வேலையிருந்தா பார் சொல்லுது.இறுதியாக கதாசிரியர் சுஜாதா என்ற குறிப்போடு கூடல் தளம் வானம் வசப்படும் திரை விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருப்பதை கண்டு பிடிக்க முடிந்தது.

யதார்த்தமான கதை,நிகழும் சாத்தியங்களான சம்பவங்கள்,பெயர் தெரியா புதுமுகங்கள் என படம் வந்த வேகத்திலேயே படப்பெட்டிக்குள் போய் படுத்து உறங்கி விட்டது.இப்பொழுதுதான் கற்பனை டெல்லியில் உயிர் பெற்று வந்து விட்டதே!யாராவது படத்தை இணையத்தில் பி.சி. ஸ்ரீராமின் அனுமதியோடு கொண்டு வரலாமே!

முந்தைய திரை கற்பனை இப்பொழுது டெல்லியில் உயிர் வதை செய்கிறது.

Saturday, December 22, 2012

அருணாச்சலம் முருகானந்தம்!

டிஸ்கி : இந்த பதிவு பதினெட்டுக்கும் மேல்  என்ற முத்திரைக்குரியதா அல்லது சமூக அக்கறை முத்திரைக்குரியதா என்பது அவரவருக்கான கருத்துரிமை சொந்தமானது.

சில நல்ல மனிதர்களும்,செய்திகளும் வெளியுலகுக்கு அதிகம் விளம்பரம் இல்லாமல் போய் விடுகிறார்கள்.அந்த வரிசையில் சமூக அக்கறையோடு எந்த ஆணுமே செய்ய இயலாத அரிய சாதனையாளர் பட்டியலில் அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை குறிப்பிட்டாக வேண்டும்.

இப்பொழுது சானிடரி நாப்கின் பற்றிய விளம்பரங்களும்,விழிப்புணர்ச்சியும் நகர்ப்புறங்களிலும்,படித்த பெண்களிடையே பரவியிருக்கிறது.முந்தைய காலத்தை நோக்கினால் பெண்களுக்கோ வீட்டுக்கு தூரமாக உட்கார்ந்திருப்பது மற்றும் பழைய துணிகள் போன்ற அனுபவங்களே.முருகானந்தம் கல்யாணமான புதிதில் அவரது மனைவிக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கிலும் சானிடரி நாப்கின் செலவு அடிப்படை பொருளாதாரத்தோடு இணைந்த ஒன்று என்ற சிந்தனையில் உருவாகிறது மதர் கேர் சானிடரி நாப்கின் ஆராய்ச்சி முயற்சி. சானிடரி நாப்கின்கள் பெரும் முதலீட்டில் பெரும் இயந்திரங்களைக் கொண்டு இயங்கும் ஒரு கார்பரேட் வியாபாரம்.இதனை சிறு தொழிலாக கிராமத்துப் பெண்களும் செய்ய இயலுமா என்ற ஆராய்ச்சி,முயற்சியில் சிறிய அளவிலான வீட்டிலேயே இருந்து கொண்டு இயக்கும் வடிவத்திலான இயந்திரத்தை உருவாக்குகிறார் முருகானந்தம்.

ஆராய்ச்சியின் முதற் கட்டமாக நாப்கின் உருவாக்கியாச்சு.இதனைப் பரிட்சித்துப் பார்க்க அவரது மனைவி,சகோதரிகள்,மருத்துவக்கல்லூரி மாணவிகள் என்று முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை. நித்யானந்தா, பிரம்மானந்தாக்களுக்கு படை சூழ பெண்கள் வரும் போது தனது முயற்சிக்கு ஒரு பெண்ணுமே வாலண்டியராக விரும்பவில்லையென நகைக்கிறார். இறுதியில் தானே ஒரு சிறிய கால் பந்தில் ஆட்டு ரத்தம் செலுத்தி அதனை அழுத்தினால் சானிடரி நாப்கின்னுக்கு ஆட்டு ரத்தம் வந்து விழுகிற மாதிரி செய்த பரிசோதனை அந்த மூன்று நாட்கள் எவ்வளவு சிரமத்துக்குள்ளானவை என்ற பெண்கள் மீதான மரியாதையை அனுபவமாகத் தந்தது என்கிறார் அருணாச்சலம் முருகானந்தம்.நிலவில் கால் வைத்த ஆர்ம்ஸ்டாரங்க் மாதிரி இடுப்பில் சானிடரி நாப்கினை கட்டிக்கொண்டு பரிசோதனை செய்த முதல் மனிதன் தானாகத்தானிருக்கும் என்கிறார் முருகானந்தம்.

கோடிகளில் புரளும் கோடிஸ்வரர்கள் இறுதியில் பொதுசேவை,நன்கொடை என்ற இறுதி நிலைக்கு வந்து விடுவதன் காரணம் வாழ்வின் முக்கால் பகுதி காலத்தில் பணத்தை தனது முன் பாக்கெட்டில் வைத்துக்கொள்வதால்தான்.எனவேதான் தான் பணத்தை பின்பக்கத்தில் வைத்துக்கொள்வதாகவும்,தனது ஆராய்ச்சியின் வெற்றியை பெரும் நிறுவனத்துக்கு தாரை வார்க்காமல் கிராமத்துப் பெண்கள் சுயதொழில் முயற்சியில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே மதர் கேர் சானிடரி நாப்கின் சிறுதொழிலை ஊக்குவிப்பதாக கூறுகிறார் முருகானந்தம்.

சித்ரா ஜெயராம் என்பவர் அருணாச்சலம் முருகானந்தம் பெரும் முயற்சிக்கு ஆதரவாக குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார். Rags to Pad என்ற இந்தப் படம் குறும்பட தயாரிப்பு போட்டியில் அரையிறுதி  வரை வந்துள்ளது.

பதிவுக்கான உதவி TED and vimeo.

குளிக்காமல் இருந்தா?

தாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு  சிவசேனாவாதி அடைமொழி கொடுத்திடாதீங்க:)

உலகில் 2.5 பில்லியன்,ஆப்பிரிக்காவில் 450 மில்லியன்,தென்னாப்பிரிக்காவில் 5 மில்லியன் பேர் குளிக்க முடியாதபடி தண்ணீர் தட்டுப்பாட்டில் இருப்பதாக லுட்விக் மாரிசன் என்ற பல்கலைக்கழக மாணவர் புள்ளி விபரம் தருகிறார்.இதில் தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் குளிக்க முடியாத சிரமத்தில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரம் யாருக்காவது தெரியுமா? 

குளிக்காமல் இருப்பது எவ்வளவு சுகமான அனுபவம் என்பது தந்தை பெரியாருக்கு மட்டுமே தெரியும் என்பதோடு காவிரி நீர்ப்பிரச்சினையெல்லாம் வரும்ன்னு சிம்பாலிக்காக குளிக்காம இருந்தாரோ என்னவோ?.ஒரு வேளை தமிழர்கள் குளிக்காமல் இருந்தால் தமிழக நீர்ப்பிரச்சினை ஓரளவுக்கு குறையும் வாய்ப்பு இருக்குமா?

முன்பு ஏரி,குளம்,ஆறு,கடல் என நீர் வளத்தில் சற்றும் குறைவில்லாத ஐந்து வகை நில வளங்களோடு யானை கட்டி போரடித்த தமிழகத்திற்கு இப்பொழுது காவிரி நீர் கிடைப்பதில்லையென்பதே உலக நீர்வநீள பற்றாக்குறையின் முதல் அறிகுறி.தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையை அழகாக சொன்ன படம் பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர். இப்பொழுது தா நீர்! தா நீர்.

யாராவது தண்ணீரை விட பெட்ரோல்தான் விலை அதிகம் என்று நினைத்தால் தவறு.அதிக விலை கொடுப்பது தேவை,உற்பத்தியோடு உபரி செலவுகளையெல்லாம் உங்கள் தலையில் சுமக்க வைக்கும் உலக பொருளாதர விலை..எனக்கெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோலை விட ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்தான் விலை அதிகம்.ஒரு லிட்டர் பெட்ரோல் 60/65 பில்ஸ்.ஒன்றரை லிட்டர் மினரல் வாட்டர் 150 பில்ஸ்.
 
தமிழகத்தில் தண்ணீர் தாகம் தீர்ப்பது தவிர தமிழக சமையல் முறையில் அரிசி கழுவுதல்,சாம்பார்,ரசம்,மோர் என அனைத்திலும் பயன்படுகிறது. இதோடு கை கழுவ, சாப்பிட்ட பாத்திரம் கழுவ,கால் கழுவ,முகம் கழுவ என எங்கும் நீர் மயம்.பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் வாழ்க்கை முறையை மாற்றுவதில் சிரமங்கள்,சிக்கல்கள் இருந்தாலும் கூட மனிதர்கள்,குறிப்பாக தமிழர்கள் குளிக்காமல் இருந்தால் எப்படியிருக்கும்? 

பிரெஞ்சுக்காரன் குளிருக்கு கொஞ்சம் வெந்நீரில் டவலை மட்டும் முக்கி உடலை துடைத்து விட்டு பிரெஞ்சு பாத் செய்து கொள்வது இன்னும் கொஞ்சம் நீர் சிக்கனம் என்ற போதிலும் குளிக்காமலே இருந்தால் எப்படியிருக்கும்? அதற்கு முன்னாடி நாம் ஏன் குளிக்கிறோம்ன்னு யோசித்தால் முதல் காரணம் உடல் நாற்றம் தவிர்க்க,இரண்டாவது காரணம் நோய் கிருமிகள் உடலை தாக்காமல் இருக்க.இரண்டு பிரச்சினைகளையும் தவிர்க்க மாற்று வழிகள் இருக்கிறதா?குளிர் பிரதேசங்களான காஷ்மீர், ஊட்டி, வால்பாறை, கொடைக்கானல் போன்ற இடங்களில் வியர்வைப் பிரச்சினை இல்லையென்பதோடு குளிக்க வேண்டிய அவசியமில்லை.அப்படியே குளிக்க நினைத்தால் சுடு நீர், குளிரில் உடை மாற்றம் போன்ற பிரச்சினைகள் உள்ளன..காஷ்மீர்,ஊட்டி குளிரெல்லாம் சினிமா டூயட் பாடலுக்கு மட்டுமே அழகாக இருக்கும்.

எனவே குளிர் பிரதேசத்தில் இருந்தால்,அக்னி வெயில் சென்னையில் இருந்தாலும் குளிப்பதற்கு மாற்று இருக்குது.நமக்கு தண்ணீர் பிரச்சினை போலவே தென்னாப்பிரிக்காவில் ஒரு பக்கெட் குடிதண்ணீர் கொண்டு வர ஒரு மைல் போக வேண்டியிருந்ததோடு குளிப்பதென்பது சிரமம் என்பதோடு முகம் கழுவாமல் இருந்த பல ஆப்பிரிக்க குழந்தைகள் ட்ரெக்கோமா என்ற நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்துள்ளார்கள்.

குளிப்பதற்கு சோம்பேறித்தனப்பட்ட லுட்விக் மாரிசன் கணினி வசதியில்லாமல் நோக்கியா மொபைல் போனின் இணைய தொடர்போடு விக்கிபீடியா,கூகிள்  என தேடியிருக்கிறார். எது எதுக்கோ மெயில் அனுப்பும் ஆப்பிரிக்கர்கள் இது பற்றி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தா ஏனப்பா  லுட்விக் உலகம் முழுதுமா தேடற! இதோ இந்த சுட்டிக்குப் போன்னு  அசின் பிரியர்,புள்ளி விபர நிபுணர்  பெயரை சொல்லியிருக்க மாட்டேனா:)

லுட்விக் இணைய தேடலில் அத்தனை பன்னாட்டு கழிம்பு,கிரிம்   என கண்டுபிடித்ததுதான் உலர் குளியல் கிரிம்.எடுத்து உடம்பு முழுதும் தேய்ச்சால் அன்றைய குளியல் முடிந்தது.லுட்விக் மாரிசன் கண்டுபிடிப்பை  குளிக்க இயலாத நீண்ட விமான பயணம் செய்பவர்களுக்கும்,ராணுவ வீரர்களுக்கும் தரப்படுகிறது.இந்தியாவில் என்னென்னமோ கார்பரேட் கிரிமெல்லாம் வந்தும் கூட உலர் குளியல் கிரிம் எப்படி வராமல் போனது?வியாபாரம் போணியாகாது போயிடும்னு ஜி.எம் நிறுவனம் கண்டு பிடிச்ச எலெக்ட்ரிக் கார்களை திரும்ப வாங்கிக்கொண்ட  கதை மாதிரியாக இருக்குமோ என்னவோ?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்துலேகா என்ற முடி எண்ணை (ஹேர் ஆயில்) பற்றி ஒருவர் பதிவு போட்டிருந்தார்.சரி!அப்படி என்னதான் இருக்குமென்று பார்த்தால் நம்ம கேரளத்து சேட்டன் யாரோ தேங்காய் எண்ணையோட சில இலைகளையும் சேர்த்து இருப்பார் போல இருக்குது.ஆனால் கொஞ்சம் வேப்பெண்ணை வாடையும் கொஞ்ச நேரத்துக்கு மூக்கை துளைக்கிறது.தலை முடி உதிர்தல் குறைக்குமா என தெரியவில்லை.இன்னும் பரிட்சித்துப் பார்த்து விட்டு பின்பு உறுதி செய்கிறேன்.இதை இங்கே ஏன் சொல்கிறேன்னா அமேசான் காட்டில் விளைந்த இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது எர்வாமெட்டின் என தொலைக்காட்சி விளம்பரங்கள் வர முடி உதிர்தலுக்கு மாற்றாக இந்துலேகா தேங்காய் கலப்பு எண்ணை வருகிறது.

தலைமுடி உதிராம இருக்கணுமின்னா கண்ட கண்ட ஷாம்பு போடுவதை விட தலையைக் கழுவாமல் இருந்தாலே  முடி உதிர்வது குறைந்து விடுமென படித்தேன்.இதுவும் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல.எப்படியோ நோய்க் கிருமிகள் தோலை தாக்காமலும்,குளிக்காத தைலமோ,கிரிமோ தயாரிப்பது கர்நாடகத்திடமிருந்து தண்ணீருக்கு கெஞ்சுவதை நிறுத்த மாற்று வழிகளையும்,மாற்று வாழ்க்கை முறையையும் உருவாக்கும். நாளைக்கு செவ்வாய் கிரகத்து குடியேறினாலும் கூட தண்ணீர் பஞ்சம் வராத படி குளிக்காமல் இருப்பது உதவியாக இருக்கும்.

பதிவுக்கான கரு: TED