Followers

Tuesday, March 31, 2009

அருந்ததிராயின் பார்வையில் இலங்கை

அருந்ததிராய் பற்றி முன்னுரை கூறுவதற்கு அவசியமில்லாத காரணத்தால் நேராக அருந்ததிராயின் பதிவின் கருத்துக்குப் போய் விடலாம்.அதற்கு முன் இந்தப் பதிவை ஒட்டிய அருந்ததிராயின் கருத்துக்கு வெட்டி ஒட்டலாக ஆங்கில மூலத்தை அன்புடன் பாலா பதிவிட்டுள்ளார்.அதே ஆங்கில மூலத்தை சுகுணா திவாகரும் அவரது பாணியில் தமிழ்படுத்தியுள்ளார்.பதிவும் பின்னூட்டங்களும் அவரவர் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லும்.

இலங்கையின் மனித அவலங்களும் அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளும் மனித உரிமையும், இனவெறிக்குமிடையே எதுவெல்லும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.தமிழக அரசியல் ஈழம் குறித்த பார்வையை பொம்மலாட்டமாகி விட்டது.அந்த சோகத்தில் நானும் ஏனைய மனித நேயம் கொண்ட பதிவர்களும் நிலை தடுமாறியது ஈழம் குறித்த பதிவுகள் குறைவதிலிருந்து நன்கு தெரிகிறது.தமிழக அரசியல் மட்டும் ஈழம் குறித்த தீர்வாகி விட முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில் தமிழக ஓட்டு அரசியலையும் ஈழத்தையும் தனித்து தனித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

வரும் தேர்தலை கட்சி,ஈழம் என்ற பார்வையில் பார்க்காது தங்கள் தொகுதியில் திறமையுள்ளவர் என்ற தனிமனிதப் பார்வையில் மட்டுமே இந்த தேர்தலை தமிழர்கள் அணுக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.இலங்கை ஒரு பெரும் வலைப்பின்னலாய் சூழ்ச்சிகள்,சுயநலங்கள்,அரசியல்,தீவிரவாதப் போர்வை என பல பரிமாணங்களில் நிகழும் நிகழ்வுகள் பிரதிபலிக்கிறது.இலங்கை அரசு நினைப்பது போல் மனித அவலங்களை எளிதாக உலகின் கண்களில் இருந்து மறைத்து விட முடியாது.நிகழ்ந்தவைகள் தோல்விகள் என்ற விரக்திகளை களைந்து நடப்பவைகளின் நியாயங்களை எழுத்துக்களாக பதிவு செய்வது பதிவுலக எழுத்தாளர்களின் கடமையாகிறது.

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களுக்குட்பட்டு தங்கள் குரல்களை ஒலித்துக்கொண்டே இருப்பதும் அவசியமாகிறது.கட்சி அரசியலால் குழம்பியிருந்தாலும் தமிழகப் பொதுமக்களின் உணர்வுகள் ஈழத்து மக்களுக்கு எப்பொழுதும் ஆறுதல் தருவதாகவே இருக்கும்.

இனி அருந்ததிராய் சொன்னது நான் புரிந்துகொண்டபடி.

வடமுனையில் தோன்றும் சப்தமின்மை ஒரு பயங்கரத்தை உருவாக்கும் சாத்தியங்களை தோற்றுவிக்கின்றன.இந்தியாவிலும் முக்கியமாக உலக அரங்கிலும் எந்தவிதமான ஊடகச் செய்திகள் இல்லாமையும் அல்லது அங்கு என்ன நிகழ்கிறது என்ற உண்மை அறிய முடியாத நிலையும் ஏன் என்பது மிகவும் கவலைக்குரிய விசயம்.

கசியும் சில செய்திகளில் காணப்படுவது என்னவென்றால் இலங்கை அரசாங்கம் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கொஞ்சமாவது தென்பட்ட ஜனநாயகத்தையும் அத்திப் பழ இலைகளாய் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, பேசமுடியாத அளவுக்கு குற்றங்களை தமிழர்களுக்கு எதிராக செய்கிறது.

ஒருவனோ ஒருத்தியோ நிரூபிக்காத வரையில் தமிழன் ஒரு தீவிரவாதி என்ற கொள்கையில் பொதுமக்கள் வசிக்குமிடம்,மருத்துவமனைகள்,தஞ்சம் புகுந்த இடம் என்று குண்டுகளைப் பொழிந்து அனைத்தையும் போர்க்கள பூமியாக மாற்றிவிட்டது.200,000க்கும் மேற்பட்ட மக்கள் சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர் என்று நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.போர் டாங்கிகள்,விமானங்கள் உதவியுடன் ராணுவம் முன்னேறிச் செல்கிறது.

கூடவே,தங்கள் நில புலன்களைத் துறந்த மக்களை மன்னார்,வவுனியா மாவட்டங்களில் குடிபுகுத்துவதாகக் கூறி "நலன் கிராமங்கள்" அமைப்பதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன.டெய்லி கிராஃப் செய்தியின்படி (Feb 14, 2009) இந்த கிராமங்கள் "சண்டைப்பகுதியிலிருந்து தப்பித்தோடும் பொதுமக்களை கட்டாயமாக அடைத்து வைக்கப்படும் இடங்கள்".

பட்டவர்த்தனமாக அல்லது அப்பட்டமாக சொல்வதென்றால் நாசிப் படையின் வதை முகாம்களா இவை? இலங்கையின் முந்தைய வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர டெய்லி டெலிகிராஃப் க்கு சொன்னது "சில மாதங்களுக்கு முன்னால் கொலம்போவில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்ற கருத்தில் தமிழர்கள் அனைவரும் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் சொன்னது.ஆனால் இந்த தனிமனித விபரங்களை 1930ல் நாசிகள் உபயோகித்தது போல் அரசாங்கம் தங்கள் குறுகிய நலன்களுக்கு உபயோகிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது.அனைத்து தமிழ் மக்களையுமே தீவிரவாதிகள் என்று அரசாங்கம் முத்திரை குத்தப் போகிறார்கள்.

அரசின் குறிக்கோளான தமிழ்விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் மக்களையும் விடுதலைப் புலிகளையும் ஒன்றாக அழிக்க நினைப்பது ஒரு இனப்படுகொலையை நடத்துவதற்கான அறிகுறியைக் காட்டுகிறது.ஐ.நாவின் அறிக்கையின் படி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.மேலும் பலர் சொல்ல முடியாத அளவுக்கு பலத்த காயங்களுடன் உள்ளனர்.கண்ணில் கண்ட சாட்சிகள் சிலரின் சொற்களின் படி போர்ப்பகுதிகளின் நிலை நரகம் போல் காட்சியளிக்கிறது.

இவைகளின் மூலம் நாம் அறிந்து கொள்வது அல்லது இலங்கையில் நிகழ்வது என்னவென்று தெரியாதவண்ணம் மிகத் தந்திரமாக மக்களின் பார்வைக்குட்படாதவாறு மறைக்கப்படுவெதென்பது ஒரு திறந்தவெளி இனவெறிப் போரே. இலங்கையின் தண்டிக்கப்பட இயலாத சுதந்திரத்துடன் செய்யும் இந்தக் குற்றங்கள் இனவெறுப்பின் முகத்திரையைக் கிழிக்கிறது.இந்த செய்கைகள் முதலாவதாக தமிழர்களை தனிமைப்படுத்தவும் அவர்களது உரிமைகளைக் குறைக்கவுமே பயன்படுத்தப் படுகிறது.இந்த இனவெறுப்பு நீண்ட வரலாறு,சமூகத்தில் தனிமைப்படுத்தல்,பொருளாதர தடை,திட்டமிட்ட படுகொலைகள்,வன்கொடுமைகள் நிறைந்தது. பல ஆண்டுகளாய் நிகழும் இந்த உள்நாட்டுப் போர் துவக்கத்தில் அமைதியாக,சத்யாக்கிரகப் போராட்டமாகவே வேர்கொண்டது.

ஏன் இந்த மவுனம்? இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர சொல்வது " ஒரு சுதந்திரமான ஊடகம் சுத்தமாக இப்பொழுது இலங்கையில் கிடையாது" சமரவீர மேலும் சொல்வது,"வெள்ளை வாகனம்,சாவுக் குழு என சமுதாயமே பயத்தால் உறைந்து கிடக்கிறது." எதிர்க் குரல் எழுப்புவர்களும் முக்கியமாக பத்திரிகையாளர்கள்,ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள்.

உலக ஊடகவியலாளர் அமைப்பு கூறுவது," இலங்கை அரசாங்கம் ஒரு கூட்டுக் கலவையாக தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள்,ஆள்கடத்தல்,கொலை என ஊடகவியலாளர்களின் எதிர்ப்புக் குரல்களை அடக்குகிறது.

இதில் வருத்தப்பட வேண்டியதும் இன்னும் உறுதி செய்யப்படாத செய்திகளும் இந்திய அரசாங்கம் ராணுவ தளவாட உதவிகளை மனிதர்களுக்கு எதிரான குற்றங்களாய் இலங்கை அரசுக்கு செய்கிறதென்பது.இது உண்மையானால் இது கோபத்திற்கும் கண்டனத்துக்கும் உரியது.மற்ற நாட்டின் அரசுகள் எப்படி?பாகிஸ்தான்?சைனா? இவர்கள் எந்த உதவியை அல்லது நிலைமைகளை சீர்கெடுக்கிறார்கள்?

தமிழ்நாட்டில் இலங்கையின் யுத்தத்தின் தாக்கத்தால் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குத் தானே தீக்குளித்துக் கொண்டார்கள்.
பொதுமக்களின் கோபம்,ஆத்திரம் பெரும்பாலானவைகள் நியாயமானதும் சில அரசியல் சூழ்ச்சிகள் கொண்டதும் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதில் ஆச்சரியப்படத்தக்கது இந்த ஆதங்கங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளை பயணிக்காதது.ஏன் இந்த அமைதி?இந்தியாவில் வெள்ளை வாகனம் போன்ற பயங்கள் இல்லையே,குறைந்தபட்சம் இந்தப் பிரச்சினையில்.இலங்கையில் நிகழும் செயல்களின் அளவும் இந்த அமைதியும் மன்னிக்க முடியாதவைகளாகும்.மிக முக்கியமாக இந்தப்பிரச்சினையில் பொறுப்பற்ற முறையில் கால் நுழைத்த இந்திய அரசாங்கத்தின் நீண்ட கால வரலாறான முதலில் ஒரு பக்கத்தில் சார்ந்தும் பின் அடுத்த பக்கத்துக்கு சார்பாக இருப்பதும்.

பலரும்,முக்கியமாக நானும் இந்தப் பிரச்சினை குறித்து மிக முன்பே பேசியிருக்க வேண்டும்.ஆனால் பேச இயலாமைக்கு காரணம் போர் பற்றிய போதிய அளவு உண்மைகளும் செய்திகளும் கிட்டாமையே.எனவே பலர் கொல்லப்படும் நிலையிலும் மேலும் பலர் வதை முகாம்களுக்கு செல்லும் நிலையிலும், 200,000 மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கும் நிலையிலும் ஒரு இனப் படுகொலை நிகழப் போகும் தருணத்திலும் ஒரு மயான அமைதி நிலவுகிறது இந்த மாபெரும் தேசத்தில்.

இது ஒரு மனித அவலம்.உலகம் இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் தாமதிக்காமல் இன்னும் காலதாமதமாகும் முன்.

10 comments:

குடுகுடுப்பை said...

ஆனால் யாரும் கண்டுக்கிற மாதிரி தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

//ஆனால் யாரும் கண்டுக்கிற மாதிரி தெரியவில்லை.//

வாங்க முதல்வரே!கூட்டம் கூடவில்லையென்று முக்கியமான எழுத்துக்களைப் பதிவு செய்யாமல் விட்டு விட முடியுங்களா?

சில எழுத்துக்கள் வங்கியின் டெபாசிட் மாதிரி.பலன் தர நேரம் பிடிக்கும்:)

நசரேயன் said...

நல்ல அலசல்

ராஜ நடராஜன் said...

//நல்ல அலசல்//

வாங்க தல.இப்பத்தான் உங்க வீட்டுக்கு போய் விட்டு வந்தேன்.

KarthigaVasudevan said...

இலங்கைப் பிரச்சினையை எல்லோரும் உற்றுக் கவனிக்கிறார்கள் தான்...தங்கள் கருத்துக்களைப் பதிகிறார்கள் தான்...பலன் மட்டும் இப்போதும் ...எப்போதும் பூஜ்யமே!? "பூனைக்கு மணி" என்று இதை வர்ணிக்க கூடாது ....சிங்கத்தின் காதில் கட்டெறும்பு நுழைந்தால் ஒருவேளை பலனிருக்கக் கூடுமோ !? காணத் துணியவில்லை மனம் ஈழத்து வீடியோ பதிவுகளை.

ராஜ நடராஜன் said...

//இலங்கைப் பிரச்சினையை எல்லோரும் உற்றுக் கவனிக்கிறார்கள் தான்...தங்கள் கருத்துக்களைப் பதிகிறார்கள் தான்...பலன் மட்டும் இப்போதும் ...எப்போதும் பூஜ்யமே!? "பூனைக்கு மணி" என்று இதை வர்ணிக்க கூடாது ....சிங்கத்தின் காதில் கட்டெறும்பு நுழைந்தால் ஒருவேளை பலனிருக்கக் கூடுமோ !? காணத் துணியவில்லை மனம் ஈழத்து வீடியோ பதிவுகளை.//

வாங்க மிஸஸ்.தேவ்!எல்லோரும் இதைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதில் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.இன்னும் உலகின் பல பகுதிகளிலும் வடமுனையில் நிகழும் மனித அவலம் கொண்டு செல்லப்படவில்லை.அருந்ததி ராய் போன்றோரின் ஓங்கிய குரல் இதனை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்ல உதவும்.

All toghether srilanka conflict turned into a mind game.It is our responsbility how we play and expose the naked truth to the world community.

அது சரி(18185106603874041862) said...

//
ஒரு இனப் படுகொலை நிகழப் போகும் தருணத்திலும் ஒரு மயான அமைதி நிலவுகிறது இந்த மாபெரும் தேசத்தில்.
//

நீங்கள் டெல்லிக்கு சென்றிருந்தால், டெல்லியில் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது வசித்திருந்தால் உங்களுக்கு இதற்கான காரணம் மிக எளிதாக தெரியும்...

டெல்லியில் பலருக்கு இந்தியாவின் தெற்கு எல்லை ஆந்திராவுடன் முடிகிறது...அதுவும் திருப்பதி இருப்பதால்... அதற்கும் தெற்கே இருக்கும் பிரதேசங்கள் அவர்களுக்கு அன்னியமானவை...குறிப்பாக மலையாளிகளையும் தமிழர்களையும் அவர்களுக்கு பிடிப்பதில்லை...

எத்தனை முயன்றும் ஹிந்தி கால்வைக்க முடியாத இடங்களில் இன்றக்கும் தமிழ்நாடும் ஒன்று...உலகமெல்லாம் செல்லும் ஷாருக்கானின் படம் செல்லாத இடம் தமிழ்நாடு...அமிதாப்னா யாரு என்று கேட்கும் இடமும் இது தான்...உள்ளே எரியும் வெறுப்பு....வெளியே வரும் புகை!

அது மட்டும் காரணமல்ல...இன்னொரு முக்கிய காரணம் நிற வெறி...உலகில் மிக மோசமான ஆதிக்க வெறியும், நிற வெறியும் பிடித்தவர்களில் இந்தியர்களுக்கு முக்கிய இடம் உண்டு...ஆண்ட்ரு சைமன்ட்ஸை மங்கி என்று அழைக்கு நிற வெறி....கறுப்பாக இருப்பவர்கள் கேவலமானவர்கள் என்று நினைக்கும் நிறவெறி... பெரும்பாலான தமிழர்கள் கறுப்பு...

கூட்டிக் கழித்து பாருங்கள்...உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத் தானே கொண்டாடிக் கொள்ளும் நிறவெறி, இன வெறி தேசத்தின் மிக அசிங்கமான ஆனால் உண்மையான முகம் வெளியே வரும்!!!

ராஜ நடராஜன் said...

//நீங்கள் டெல்லிக்கு சென்றிருந்தால், டெல்லியில் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது வசித்திருந்தால் உங்களுக்கு இதற்கான காரணம் மிக எளிதாக தெரியும்...

டெல்லியில் பலருக்கு இந்தியாவின் தெற்கு எல்லை ஆந்திராவுடன் முடிகிறது...அதுவும் திருப்பதி இருப்பதால்... அதற்கும் தெற்கே இருக்கும் பிரதேசங்கள் அவர்களுக்கு அன்னியமானவை...குறிப்பாக மலையாளிகளையும் தமிழர்களையும் அவர்களுக்கு பிடிப்பதில்லை...//

வட இந்தியர்களுக்கு தென்மாநிலத்தவர் அனைவரும் மதராஸியே.ஆனால் டெல்லியின் பீரோகிராட்டிக் ஆட்சி தமிழர்களிடமும்,மலையாளிகளிடமும்.

ராஜ நடராஜன் said...

//எத்தனை முயன்றும் ஹிந்தி கால்வைக்க முடியாத இடங்களில் இன்றக்கும் தமிழ்நாடும் ஒன்று...உலகமெல்லாம் செல்லும் ஷாருக்கானின் படம் செல்லாத இடம் தமிழ்நாடு...அமிதாப்னா யாரு என்று கேட்கும் இடமும் இது தான்...உள்ளே எரியும் வெறுப்பு....வெளியே வரும் புகை!
//

யாருங்க அமிதாப்,ஷாருக்கான்?புதுமுகங்களா:)

ராஜ நடராஜன் said...

//அது மட்டும் காரணமல்ல...இன்னொரு முக்கிய காரணம் நிற வெறி...உலகில் மிக மோசமான ஆதிக்க வெறியும், நிற வெறியும் பிடித்தவர்களில் இந்தியர்களுக்கு முக்கிய இடம் உண்டு...//

மதவெறிகளுடன் ஒப்பிடும்போது நீங்கள் சொன்னவையின் எடை தராசின் மேலே நிற்கிறது.