Followers

Saturday, June 18, 2011

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் மற்றும் பொன்னியின் செல்வனும்,EXODUS

கருணாநிதி,ஜெயலலிதா,தமிழர்கள்,சிங்களவர்கள் அனைவரும் காணவேண்டிய வரலாற்று உண்மைகள்
சென்ற பதிவின் இறுதியில் பதிவர் ரதி எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலத்திற்கும் முன்பும் இலங்கை பற்றியும் ஈழ விடுதலை பற்றியும் சொல்லியிருக்க வேண்டுமென்றும் சொன்னார்.பதிவுகளைப் படித்து விட்டு பதிவர் வானம்பாடிகள் பாலா ”ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள்” என்ற pdf புத்தகத்தை படித்தீர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இவற்றோடு பதிவர் தருமி ”Exodus by Leon Uris" என்ற ஆங்கில நாவலை அவரது பதிவில் முன்னொரு முறை குறிப்பிட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. என்றும் சொல்லியிருந்தேன்.தொடுப்புக்கான தேடலில் பொன்னியின் செல்வனும் EXODUS-ம் என்ற தலைப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் என்ற புத்தகம் 36 பக்கங்களைக் கொண்டது.புத்தக வாசிப்புக்கள் குறைந்த போன இந்த கால கட்டத்தில் 1984ல் “ இலங்கை இன்று,போர்க்காலத்தின் தீவிர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சிங்களவரின் மனிதாய சக்திகளும் இலங்கை தமிழர்களின் மனிதார்த்தங்களும் இந்த தீவிர நிலையை அறிவுசார்ந்த தளத்துக்குக் கொண்டு செல்ல முடியாதவாறு நிலமை ஆக்கப்பட்டு விட்டது.இந்நிலை தவிர்க்க முடியாதவாறு நிகழ்ந்த ஒன்றுதானா?இதற்கு இரு பிரிவினருள் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளியா? இத்தகைய கேள்விகளின் சலனங்களைக்கூட எழ முடியாத தீவிர நிலைதான் இன்றுள்ளது என உணர்கிற போதே இக்கேள்விகள் கேட்டாக வேண்டியவை என்பதையும் நாம் கண்டு கொள்வது மிக அவசியம்” என்ற முகவுரையுடன் இலங்கையின் ஆதி அந்தமாக துவக்க காலம் முதல் தமிழர்கள் யார், சிங்களவர்கள் யார்,மகாவம்சத்தின் திரிபுகள் என துவங்கி  போர்ச்சுகீசியர்,டச்சுக்காரர்கள்,ஆங்கிலேயர் வருகையென சொல்லி செல்வநாயகம் பற்றிய பகுதி 2ல் குறிப்பிட்டது வரை படிக்கும் போது எழுத்து நடையும்,வரலாற்று உண்மைகளும் 1984லிருந்து இன்றைய 2011 ஜூன் மாதம் 18ம் தேதி வரை மாறாமல் போனது சோகத்துக்குரியது.
 கீழே வரும் வரிகளிலிருந்து துவங்கி -

’இலங்கைக்குப் பிழைக்குப் போன தமிழர்கள்’ இது இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்பிராயம்.முதலாவதாக இலங்கைவாழ் தமிழினம் இலங்கைக்குப் பிழைக்கப் போன ஒரு இனமல்ல.இலங்கையிலுள்ள ‘இலங்கைத் தமிழர்கள்’ விசயத்தில் மட்டுமல்லாமல் அங்குள்ள ’இந்திய வம்சாவழித் தமிழர்கள்’ விசயத்திலும் இது பொருந்தும்.இலங்கைத் தமிழர்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகள் மீது பூர்வீக உரிமை உண்டு.இலங்கையில் வழங்கும் தமிழ் இடப்பெயர்களின் தொன்மை முதலியன இதற்கு சாட்சியமாகும்.அங்குள்ள சிங்களவர்களையும் விட தொன்மையான தொடர்புகளுக்கு சாட்சியங்கள் இவை.

அடுத்து இந்திய வம்சாவழித் தமிழர்கள் இலங்கைக்குப் ‘பிழைக்கப் போனவர்கள்’ அல்ல.இலங்கையின் சிங்கள மலையகங்களிலிருந்த காபி தோட்டங்களில் ஒரு கொடுமையான அடிமை முறையிலே உழைக்க பிரிட்டிஷாரால் 1840க்கும் 1850க்குமிடையில் ஏறத்தாழ பலவந்தமாக திருநெல்வேலி,மதுரை ஜில்லாக்களிலிருந்து ஜனத்தொகை கடத்தல் (Mass Deportation) செய்யப்பட்ட பாமரத் தமிழர்கள் இவர்கள்.இவர்களை இலங்கைக்குப் பிழைக்கப்போனதாக கூறுவது ஒரு ஆதிக்கமுறையின் சரித்திர சாட்சியம் வாய்ந்த கொடுரத்தைப் பற்றிக் கண்மூடித்தனமாகப் பேசும் மனோபாவமாகும்;இலங்கைக்குப் ’பிழைக்கபோன’ இந்தியர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் எந்தளவு சதவிகிதத்திலும் அடங்குவதில்லை.இவர்கள் வசதியுள்ள தொழிலதிபர்களிலிருந்து கள்ளத்தோணியில் சென்று பிடிபட்டு திருப்பி அனுப்பபடும் வகையினர் வரை உள்ளவர்கள்.இவர்கள் ஒன்றும் மலையகங்களிலுள்ள தோட்டங்களில் உழைத்து தங்கள் உழைப்பை இலங்கையில் அன்றிருந்து சுரண்டிய பிரிட்டிஷாருக்கும் பின்பு இலங்கை அரசின் கஜானாவுக்கு தானமாக வழங்கியவர்களல்ல.’பிழைக்கப் போன’ விசயம் இவ்விதம் அடிபட்டால் அடுத்து இலங்கைத் தமிழர்களின் ‘தனி நாட்டுக் கோரிக்கை’

1948ல் இலங்கைக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து சிங்களப் பெரும்பான்மையினர் இலங்கைத் தமிழர்களை இலங்கையினுள்ளே தனிமைப்படுத்த துவங்கினர்.இது தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக ராஜீயத் தளத்தில் பறிக்கும் முறையில் ஆரம்பித்து தமிழ்க்குடிமக்கள் மீது தாக்குதல் செய்கிற முறை வரை செயல்படுத்தப் பட்டு வந்துள்ளது.இதன் சரித்திர விளைவே தனி நாட்டுக் கோரிக்கை.ஒரு குறிப்பிட்ட அரசியல் திருப்பு முனையிலிருந்து தொடர்ந்து,இலங்கை அரசே தனது ராஜீயக் கருவிகளான போலிஸ்-ராணுவம் ஆகியவற்றின் மூலம் தமிழ் பொதுமக்களை தாக்க ஆரம்பித்திருக்கிறது.(இது இரு நாட்களுக்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் இல்லாத ஒன்று கூடல் வரை இன்னும் தொடர்கிறது)பதவிகளுக்கும்,கல்விக் கோட்டங்களுக்கும் தமிழர்கள் செல்வதற்கு முட்டுக்கட்டையிடுதல்,தமிழர்கள் வாழும் பகுதியிலேயே அவர்களை சிறுபான்மையாக்கும் வகையில் சிங்களவரைக் குடியேற்றுதல் முதலிய தந்திரங்களில் ஆரம்பித்த அடக்குமுறை போலிஸையும்,ராணுவத்தையுமே தமிழருக்கு எதிராகப் பிரயோகிக்கத் துவங்குகிறது.இது சிங்கள அரசின் மூலமே தமிழர்களைத் தனிமைப்படுத்திய தேசியப் பிளவு.இதன் அரசியல் பிரக்ஞை வடிவமே தமிழரின் தனி நாட்டுக் கொள்கை.இக்கோரிக்கையின் நியாயம்,தமிழரைத் தனிமைப் படுத்திய சிங்கள அரசாங்கங்க இயக்கங்களிடமே(JVP யின் சரித்திரம்) ஜனிக்கிறது.எனவே தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை எளிமையாக விமர்சிப்பது குருட்டுத்தனமாகும்”

என்று சொல்லி அந்த காலகட்டத்தில் சீக்கியர்களின் தனிநாட்டுக் கொள்கைக்கும் தமிழர்களின் தனிநாட்டுக் கொள்கைக்குமுடைய வித்தியாசங்களை சொல்லி ”சிங்கள,தமிழ் இனங்களை பிரிப்பது மொழி மட்டுமல்ல சிங்கள மொழியின் ஆரியச் சாயல் அவர்களை ஆரியர்களாக்கி,திராவிட மொழி பேசும் தமிழர்களை இனரீதியாகப் பிரித்து விடுகிறது.இந்தப் பிரிவினையை வலுவிழக்க வைக்கிற இந்து மதரீதியான ஆரிய-திராவிட உடன்பாடு இந்தியாவில் உண்டு.ஆனால் சிங்களவர்கள் பௌத்தர்கள்,அதிலும் ஹிந்துக்களால் இந்தியாவில் கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்ட பிக்ஷு பரம்பரை ஒன்று இலங்கைக்குப் போய் ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு ஆழ்ந்த பகைமையை பௌத்தத்துடன் சேர்த்து சிங்களவருக்குப்புகட்டியுள்ளது.இப்பகைமை விவேகநந்தரது சமகாலத்து இலங்கை பிக்ஷுவான அநகாரிக தர்மபாலாவின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சாட்சியம் பெறுகிறது.இது இலங்கையின் பிரிவினையுணர்வுக்கு மிகவும் தனித்த முகத்தை தருகிறது.இந்தியாவுக்கும்,இலங்கைக்குமிடையே உள்ள இந்த வேறுபாடு முக்கியமானதாகும்”

”1840க்கும் 1850க்குமிடையில் பிரிட்டிஷ் வர்த்தக அரசினால் தமிழகத்திலிருந்து இலங்கையின் சிங்களப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட சுமார் 10 லட்சம் பாமரத் தமிழ் தொழிலாள வர்க்கத்துடன் இலங்கைத் தமிழினம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதில்லை.இது எல்லாத் தரப்பினரும்அறிந்த உண்மை என்பதுடன் முக்ய கவனத்துக்கும் உரியது.ஜாதிய உள்ப்பிரிவு,பிராந்திய மனோபாவம் என்ற குணங்களை விட இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே இருந்த பிரிவினை முக்கியமானது.இன்று விஸ்வரூபமெடுத்துள்ள பிரச்னைக்கு மனிதாபிமானமற்ற இந்த பிரிவினையுணர்வு ஒரு வித்து.ஜாதிய,பிராந்தியப் பிரிவினை சிங்கள மகாஜனத்திடம் கூட உள்ள ஒன்றுதான்.செய்தொழில்,குடிமை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட சிங்கள ஜாதியப் பகுப்புக்கு சிங்களவரது பௌத்தம் காரியாலாய ரீதியாக முத்திரை வழங்கியதில்லை.ஆனால் ஒருவன் புத்தபிக்ஷுவாக மாறிய நிலையில் கூட அவனது ஜாதிய மூலகம் கவனிக்கப்படுகிறது.இது வியப்புக்குரிய ஒன்றல்ல;ஏனெனில் சிங்களவர்கள் இனரீதியாகவும்,மொழி ரீதியாகவும் பூர்வீகத்தில் ஒரு ஹிந்து மரபைச் சார்ந்தவர்களேயாவார்கள்.இவர்கள் இந்தியாவின் வங்கப்பகுதியிலிருந்து அல்லது வடபுறப்பகுதியிலிருந்து ஒரு சரித்திரகதியினால் கடத்தப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறது.இதைப் புராண ரீதியில் பதிவு செய்துள்ளது சிங்களவரின் சரித்திர இதிகாசமான ’மகாவம்ச’ என்ற பாளி நூல்.இந்தூல் வங்கத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசனையும் அவனது இருநூறு தோழர்களையும் இந்த சரித்திர கதிக்கு ஆட்பட்ட மூதாதைகளாக இனம் காட்ட முயற்சிக்கிறது.”

இதனைத் தொடர்ந்து ஆய்வுரீதியான காளிவழிபாடாக சிம்மம்,மற்றும் விஜயனுடன்,அவனது தோழர்களும் சேர்ந்து 201 பேர் எனற தகவல்கள், ’சிங்கத்தின் பரம்பரை’ என்பதே ’சிங்கள’ என்ற இனக்குடிப் பெயராகவும் மொழியாகவும் ஆகிறது என்றும்,கிரேக்க கதைகளின் திரிபுகள் மகாவம்சத்தில் உள்ளன என்பது பற்றிய புராணக்கதைகள் சொல்லி மிக முக்கியமான குமரிக்கண்டத்தின் தமிழகமும்,இலங்கையும் இணைந்திருந்திருக்கலாமென்ற சாத்தியத்தையும்,சிங்களவர்களுக்கும்,கேரளத்துக்காரர்களுக்குமுடைய உடை போன்ற ஒற்றுமை கூறி,கேரளத்துக்காரகள் திராவிடர்கள் என்பதற்கு அவர்களது காவ்ய மொழியான இன்றைக்கும் தமிழ்மொழிதான் என்று சொல்லி சொற்களின் தொடர்புகளையெல்லாம் சுட்டிக்காட்டி தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்ற பெரும் வரலாற்று உண்மைகளையெல்லாம் சொல்லி சேர,சோழ,பாண்டியர் காலங்களைத் தொட்டு மீண்டும் SWRD பண்டார 1955ல் உபயோகித்த 24 மணிநேரத்தில் சிங்கள மொழி மட்டுமே அரச மொழி என்று கூறி அரசியல் சாசன நிராகரிப்பு செய்ததை உணர்ந்த தமிழ்த் தலைமை ஜூன் 5ம் தேதி,1956ல் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன் சாத்வீக ரீதியில் ஒரு எதிர்ப்பைக் காட்டிற்று.இது காந்தியின் அகிம்சா முறையாகப் பிரகடனமும் செய்யப்பட்டது.(இதனுடன் மீண்டும் முன்பு சொல்லிய பதிவின் பகுதி 2ம் தொடர்பு படுத்தினால் இதுவரை சொல்லியவைகளின் மெல்லியக் கோடுகள் மனதில் படியும்)

”1948 வரை இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ் அரசு தமிழர்களுக்கு இயற்கையாக கிடைத்திருக்க வேண்டிய பிரஜா உரிமைக்கான அஸ்த்திவாரங்களுக்கே இடம் விடவில்லை.சுமார் 100 வருசங்கள் இந்தியாவில் வாழ்ந்தது மட்டுமல்லாமல் இலங்கைக்காகவே உழைத்த இவர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி பிரிட்டிஷ் அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும்” என்ற வரிகள் எழுத்தாணி வாசகங்கள்.

இதனைத் தொடர்ந்த இந்திய அரசியலின் தலையீடும் IPKF ராணுவ காலம் துவங்கி தமிழகம் சார்ந்தோ அல்லது இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த தமிழர்களையோ கலந்து ஆலோசிக்காமல் சென்ற வாரம் மேனன்,நிருபமா ராவ் குழுவினரின் இலங்கை அரசு தரப்புடன் மட்டும் ஆலோசிக்கும் செயல்பாடுகள் இந்தியாவும் இன்னும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லையென்பதையே உணர்த்துகிறது.   
இதன் தரவுகளை ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள் என குறிப்பிட்டு mediafire.comல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இயலாதவர்கள் பின்னூட்டத்திலோ அல்லது எனது தனிமெயில் rajanatcbe ஜிமெயிலுக்கு தகவல் தந்தால் pdf வடிவமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மூத்த பதிவர் தருமியின் வாசிப்புக்கள் பற்றியும் விவாத களங்களையும் அவரைத் தொடர்புவர்களுக்கு புரிந்த ஒன்றே.அதில் ஒன்று Exodus by Leon Uris என்ற நாவல் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது.

”இஸ்ரேல் என்ற நாடு உருவான நிகழ்வை வைத்து, உண்மையான மனிதர்களைக் கதை மாந்தர்களாக வைத்து புதினமாக எழுதப்பட்ட Exodus வெவ்வேறு இடங்களில் கண்ணீரை வரவைத்த வரலாற்று நவீனம். ஹிட்லரின் வெஞ்சினமும் யூதர்கள் ghetto-க்களில் பட்ட வேதனைகளும், kibbutz-களில் யூத இளைஞர்களின் வாழ்க்கையும் எல்லாமே கற்பனை என்ற சுவடே இல்லாதபடி நேரில் கண்முன் விரிவதுபோல் நகரும் கதை. இஸ்ரேல் என்றொரு நாடு உருவாவதற்கு U.N.O.- வில் ஓட்டெடுப்பு நடந்த பகுதியை வாசிக்கும்போது மூச்சை இறுக்கிப் பிடித்துதான் வாசிக்க வேண்டியதிருந்தது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக ஆதரித்து ஓட்டிட இந்தியாவும் இன்னும் சில கீழ்த்திசை நாடுகளும் எதிர்த்து ஓட்டுப் போட,பத்து நாடுகள் ஓட்டு போடாமல் "நடுநிலை" வகிக்க, 33:10 என்ற கணக்கில் இஸ்ரேல் ஒரு புதிய நாடாக அங்கீகரிக்கப் படும்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.” என்ற அவரது வரிகள் இன்றும் ஐ.நாவின் குணங்கள்,தன்மைகள் மாறாமலே பயணிக்கிறதென்பதை உணர்த்துகிறது.EXODUS ஆங்கில நாவல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை - பிரமிள், மற்றும் EXODUS இரு புத்தகங்களையும் உலக தமிழர்கள் அனைவரும் படிப்பதோடு கருணாநிதியும், ஜெயலலிதாவும் கட்டாயம் படிக்க வேண்டுமென்று சிபாரிசும் செய்கிறேன்.இந்த வரிகளை சொல்லும் போது அருந்ததி ராய் சமீபத்தில் லண்டன் புலம் பெயர் தமிழர்களுடன் பேசிய குறிப்புகளையும் குறிப்பிட வேண்டியதாகிறது.அதனை அடுத்த பதிவில் காண்போம்.   

17 comments:

ஜோதிஜி said...

ஒரு முடிவோடதான் இருப்பீக போலிருக்கே. ஈழத்தில் இறங்கி விட்டால் எவராலும் மீள முடியாது போல.

Anonymous said...

////’இலங்கைக்குப் பிழைக்குப் போன தமிழர்கள்’ இது இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்பிராயம்.முதலாவதாக இலங்கைவாழ் தமிழினம் இலங்கைக்குப் பிழைக்கப் போன ஒரு இனமல்ல./// உண்மை தான் ,கிமு 3 /4 ஆம் நூற்றாண்டின் பின் உருவாகியதே சிங்களம் என்ற இனம்...ஆனால் இன்றைய அநேக சிங்களவர்கள் தமிழர்களாக இருந்து மருபியவர்கள்.. அன்றைய துட்ட கைமுனு படையிலே பவுத்தத்தை தழுவிய தமிழர்களும் இருந்தார்களாம் ....

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!அதே!அதே!மீள முடியாதவாறுதான் வரலாற்று நிகழ்வுகள் அத்தனையும் உள்ளன.எல்லாவற்றையும் பதிவுகளில் உள்ளடக்க முடியவில்லை.அதனை அடுத்த பின்னூட்டத்தில் கந்தசாமியிலிருந்து தொடரலாம்:)

ராஜ நடராஜன் said...

கந்தசாமி!முக்கியமான எல்லாளன்,துட்ட கைமுனுவையும் பதிவில் தொடாமல் விட்டு விட்டேன்.நீங்கள் நினைவுபடுத்தினீர்கள்.பிரமிளின் வரிகள் பதிவின் துணைக்கு வருவதால் பிரச்சினையில்லையென்றே நினைக்கிறேன்.

முக்கியமாக நீங்கள் சொல்வது போல் சிங்களவர்கள் தமிழர்களாக இருந்து மருபியவர்கள் என்கின்ற உண்மைகளும்,உண்மையான பௌத்தமும் மறைக்கப்பட்டு ஒரு விதமான ஹிஸ்டீரியா மனநிலையிலேயே துயரங்கள் மீளமுடியாத வெகுதூரத்துக்கு வந்து விட்டது.

இதனை இனி வரும் வரலாறு எப்படி சரி செய்யும் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஹேமா said...

நிறைவான அலசல்கள் நடா.நிறையவே சொல்கீறீர்கள்.

இனி வரும் வரலாறு....
மகாவம்சத்தில் 10 அத்தியாயங்கள் மட்டும் சிவப்புச் சால்வைக்காரர்களுக்கு.
என்ன ஆகும் சரித்திரம் !

Anonymous said...

அருமையான பதிவு .. இலங்கையில் 18 நூற்றாண்டுக்கு முன்னே குடியேறியத் தமிழர்களும் சரி, அதன் பின் குடியேறியவர்களும் சரி பிழைக்கப் போனவர்கள் இல்லை என்பதை உரக்கச் சொல்லியதற்காக ஒரு சபாஷ் ..

இலங்கைத் தமிழர்களின் மத்தியிலேயே மலையகத் தமிழர்கள் பிழைக்கப் வந்தவர்கள் என்ற கருத்து இன்னமும் நீடித்து வருகின்றது. ஆனால் ஆங்கிலேயேரால் இலங்கைத் தீவில் இருப்பவர்கள் வேலை செய்ய சோம்பல் பட்டக் காரணத்தினால் இந்தியாவின் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாடு உட்பட பல பாகங்களில் இருந்து கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்படுதல் என்ற பெயரில் இடப் பெயர்வு செய்யப்பட்டவர்களே மலையகத் தமிழர்கள் ஆவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் - அவர்கள் நாதியற்ற, நிலமற்ற விவசாயிகள் அல்ல, மாறாக 18 நூற்றாண்டில் உலகெலாம் ஏற்பட்ட கடும் பட்டினி தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை.. அந்த பட்டினியால் விவசாயம் பொய்த்தத்தால் குறைந்த கூலிக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தினால் இடப் பெயர்வினை சந்தித்தவர்கள் அவர்கள்.

இன்று அவர்களில் ஒரு தொகுதியினர் தமிழ்நாடு திரும்ப அனுப்பப் பட்ட போதும் அவர்களின் வேர்கள் அறுந்து வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகின்றார்கள் .. சுமார் 20 லட்சம் வரையிலானோர் அப்படி தாயகம் திரும்பியோரின் சந்ததிகள் இன்று தமிழகத்தில் இருக்கின்றார்கள்.

Anonymous said...

அதற்கு அடுத்து 18 நூற்றாண்டின் முன் சென்ற இலங்கையர் அனைவருக்கும் தென்னிந்தியாவே தாய்நாடாக இருக்க முடியும் என்பதை பலரும் மறந்துவிடுகின்றனர்.

சிங்கள, தமிழர் ஆகிய இரு இனங்களும் மூன்று பகுதி மக்களினால் கலவையுற்று இரண்டு பெரும் இனங்களாக பிரிந்து நிற்பன ஆகும்.

அதாவது தெனிந்திய மக்கள், வட இந்திய மக்கள், தென் கிழக்காசிய மக்கள் ஆகிய மூன்று இனங்களும் இலங்கையில் குடியேறி கலவையுற்று - அவற்றில் இருந்து மதம், மொழி, கலாச்சார காரணங்களால் .. இரு தேசியமாக உருவெடுத்தன ...

இவற்றில் சிங்கள இனத்தின் ஆதிக்கமே இலங்கையில் அதிகமாக இருந்தாலும். ஆரம்ப கால சிங்கள - தமிழ் யுத்தங்கள் அனைத்தும் வெறும் பாண்டியர்களின் தோழர்களான சிங்கள அரசுக்கும் - சோழர்களுக்குமான யுத்தமே தவிர . இன்றைய இனவாதிகள் கருதுவது போல தமிழ் சிங்கள யுத்தமே அல்ல !!!

துட்டகெமுனு - எலாரன் ஆகியோரின் சண்டைகள் கூட இனப் பிரச்சனை போல காட்டப்பட்டாலும் அது இரு அரசுகளுக்கு இடையே எழுந்த வெறும் அரசியல் பிரச்சனையே ஆகும். ஏனெனில் அதே மகாவம்சம் துட்ட கெமுனுவுக்கு ஆதரவாக இருந்த தமிழ் ராஜவம்சத்தினரையும் கூட சொல்கின்றது. அது தமிழ் சிங்கள யுத்தமாக .. அநாகரிக தர்மபாலரின் நவ கால நாசி பௌத்தவாதிகளின் பொய் பிரச்சாரத்தினால் எழுந்தவையே ஆகும்.

Anonymous said...

மற்றொன்று தமிழர்களின் தேசியத்தை நிராகரிக்க சிங்களவர்கள் கூறும் காரணங்கள் அர்த்தமற்றவை .. ஏனெனில் தமிழர்கள் 10 நூற்றாண்டில் குடியேறியவர்களாகவே வைத்தாலும் கூட, கடந்த 10 நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக வாழ்ந்து தமக்கான ஒரு பிரதேசங்களை வைத்திருந்தவர்கள் ..

ஓட்ட்மோன் ஆட்சிக்கு பின் எழுந்த அல்பேனியர்கள் தமக்கான நாடுகளை உருவாக்கிக் கொள்ள சர்வதேசம் அனுமதிக்கும் போது, வெறும் நானூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய ஐரோப்பியர் தமக்கான பல நாடுகளை உருவாக்கிக் கொண்ட போது, எகிப்திய மக்களினை அழித்து அரபிகள் குடியேறிய தமக்கான நாடுகளை உருவாக்கிக் கொள்ளும் போது ..

ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாக தனித்துவமாக வாழ்ந்த தமிழர்கள் தமக்கான தேசியத்தை உருவாக்க சிங்களம் சொல்லும் காரணிகள் ஏற்புடையதாக இல்லை !!!

Anonymous said...

மீண்டும் சொல்வது தான் .. தமிழர்கள் எப்போது சென்றார்கள் அல்லது தமிழர்கள் என்ற தனி அடையாளம் எப்போது உருவானது என்பது எல்லாம் தேவையற்றவை ..

சிங்களவர்கள் தமிழர்களின் தேசியத்தை அங்கீகரித்தே ஆக வேண்டும் .......... !!

செங்கோவி said...

தமிழர்களின் பூர்வீகத்தை அருமையாக விளக்கி உள்ளீர்கள்..காலம் கடந்த நிலையில் இனி இழப்புகளை எப்படிச் சரி செய்வதெனு யோசிப்போம்.

ராஜ நடராஜன் said...

ஹேமா!மகாவம்சம் படித்திருப்பீங்க போல இருக்குதே.நேரம் கிடைக்கும் போது இன்னும் கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.

நேற்று இந்த பதிவு எழுதிகிட்டிருக்கும் போது லண்டன் வாழ் உறவுகள் மாங்கு மாங்குன்னு முதுகிலும்,நாக்கிலும் அலகு குத்திகிட்டு தெரு முதல் கோயில் வரை அல்லோகலப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.கூடவே பிரிட்டனின் காமிராக்காரர்கள்,போலிஸ்,தலையில் பூக்கூடை அதனோட ஒரு சட்டி,பட்டுப்புடவைகள் என ஒரே அமர்க்களம்தான்.

முன்பே ரதிகிட்ட புலம்பினதுதான்.கலாச்சாரங்களைப் பாதுகாப்பதில் தவறில்லை.ஆனால் சேனல் 4 நேரத்திலும்,மண்ணில் மக்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் இவைகள் தேவைதானா என்பதை புலம்பெயர் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

ராஜ நடராஜன் said...

சகோ இக்பால் செல்வன்!உங்கள் வருகையை அதிகம் எதிர்பார்த்தேன்.இலங்கை மலையகத் தமிழர்கள் மாதிரியே தமிழ்நாட்டிலும் நீலகிரி,வால்பாறை தேயிலை,காபித்தோட்டங்களை இப்பொழுது நினைக்கும் போது தேயிலை உற்பத்தியின் துவக்க காலத்தில் மதுரை,கோவை,கேரளா போன்ற இடங்களிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர்களாகவே இருப்பார்கள் எனத் தோன்றுகிற்து.

மேலும் மலையகத்தமிழர்களை திருப்பி பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கைக்குப் பின் தமிழகம் திரும்பிய பெரும்பாலோனோர்களை அரவணைத்துக் கொண்டது நீலகிரி,வால்பாறை தேயிலைத் தோட்டங்களே என நினைக்கிறேன்.

பசுமையும்,பனிபடர்ந்த இனிமைக்கும் அப்பால் இந்த மக்களின் வாழ்க்கை சோகங்களைத் தாங்குவதோடு சிறுத்தை போன்ற விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து மக்களை இன்னும் துயரத்தில் ஆழ்த்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜ நடராஜன் said...

//சிங்கள, தமிழர் ஆகிய இரு இனங்களும் மூன்று பகுதி மக்களினால் கலவையுற்று இரண்டு பெரும் இனங்களாக பிரிந்து நிற்பன ஆகும்.//

பிரமிள் புத்தகத்தில் சொல்வதும் இதுதான்.கலவையுற்ற தன்மையினால் இரு இனங்களும் திராவிட இனமேயென்றும் மொழியின் சொற்கள் காரணமாக சிங்களவர்களுக்கு ஆரியத்தன்மை வந்து விடுகிறதென்றும் கூறுகிறார்.

ஜவர்ஹலால் நேருவின் Discovery of India என்ற புத்தகத்திலும் கூட இந்திய இனமே படையெடுப்புக்கள்,மேற்கத்திய நாடுகளின் வருகையால் இன கலப்பு ஏற்பட்டதை குறிப்பிடுகிறார்.

அநாகரிக தர்மபாலரின் நவ கால நாசி பௌத்தவாதிகள் பற்றியெல்லாம் நீங்கள் குறிப்பிடும் போது ஆழ்ந்த வரலாற்றுச் செய்திகளை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனப்தை உணர முடிகிறது.

ராஜ நடராஜன் said...

சகோ இக்பால் செல்வன்!நீங்கள் குறிப்பிட்ட படி Ottoman Empire சிதைவுக்குப் பின்பு ஏற்பட்ட தேசங்களே வளைகுடா நாடுகள் அத்தனையும்.போஸ்னியா கலவரங்களிலும்,சூடான் கூட இரு நாடுகளாக ஐ.நாவில் அங்கீகாரமாகும் போது இலங்கையும் இரு நாடுகளாக பிரிவதற்கான அத்தனை கூறுகளும் அங்கீகாரம் பெறுவதற்கு தகுதி பெற்றதே.தற்போது ஈழ மண்ணிலிருந்து அதற்கான குரல்கள் எழுவதற்கு வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழகமும்,புலம்பெயர் தமிழர்களும் ஒன்று படுவதில் மட்டுமே இதற்கான வாய்ப்புக்கள் உருவாகும்.ஒன்றுபட்ட இலங்கையென்ற வாதத்திற்கான காலங்களை கடந்து 30 வருடங்களுக்கும் மேலான இருபக்கத்து ரத்தப் போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது.

உங்கள் பதிவின் பூகோள அமைப்பின் வரைபட சாத்தியங்கள் நினைவுக்கு வந்து போகிறது.இரு இனத்து மக்களுக்கும் கடல் எல்லைகள் நிறைந்து காணப்படுவதால் பொருளாதாரம்,பாதுகாப்பு,உலக வர்த்தகம் என பல நிலைகளிலும் தங்களை வளப்படுத்திக்கொள்ளவும் தங்கள் கலாச்சார வேர்களைக் காக்கவும் முடியும்.விட்டுக்கொடுப்பு சாத்தியம் எனும்பட்சத்தில் இன்னும் கூட கொஞ்சம் நில மாற்றங்களைக் கூட செய்ய வேண்டியது தேவையென்றாலும் கூட வரும் சந்ததிகளின் வாழ்வை சிறக்க செய்யலாம்.
I have a dream...மார்டின் லூதர் கிங் நினைவுக்கு வந்து போகிறார்.

ராஜ நடராஜன் said...

வணக்கம் செங்கோவி!இவ்வளவு அழுத்தங்களைக் கொடுக்கும் போதே பதிவர்கள் கூட்டம் போடுகிற மாதிரி நான்கைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கலந்துரையாடல் செய்யும் போது வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது.இதுவும் இல்லாட்டி ராணுவ,போலிஸ் அடாவடிகள் எல்லை மீறியே போகும்.

மேற்கத்திய நாடுகளின் தலையீடு இல்லாமல் அல்லது தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்தவர்களையும் உள் வாங்கிக்கொண்டு இந்தியா-இலங்கை அரசு செயல்படாத வரைக்கும் தீர்வுக்கான வழிகள் இல்லை.எனவே அதனை நோக்கி பயணம் செய்வதே புதிய பாதைகளைத் திறக்கும்

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட தங்களுக்கு என்னுடைய மனபூர்வமான வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

//ராஜநட தங்களுக்கு என்னுடைய மனபூர்வமான வாழ்த்துகள்.//

தவறு!உங்கள் தொடர் ஆதரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.