Followers

Thursday, May 19, 2011

தமிழர்களின் சகோதர யுத்தமும் மத்திய அரசின் சுய முடிவுகளும்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அன்று தொட்டு இன்று வரை தமிழனைப்போல் சகோதரத்துவம் பேணியவர்கள் எவருமில்லை.அதற்கு கணிகைப் பூங்குன்றனார் முதல் இன்றைய கோடம்பாக்க திரைப்படத்துறை, கேரளா,குஜராத்,பீகார்,உ.பி யிலிருந்து தமிழகம் வருபவர்களை வரவேற்பது வரையும் உலகமெல்லாம் தமிழன் பரவியிருப்பதே சாட்சி.அதே போல் சகோதர யுத்தம் என்ற சொல்லாடல் ஈழப் போராளிகளின் உட்சண்டைகளால் உருவாகியகோட்பாடுமல்ல.சேரன்,சோழன்,பாண்டியன்,பல்லவர்கள் இன்னும் பல முன ஆண்ட பாட்டன்,பாட்டிகள் முதல் தொடர்ந்து கொண்டே வரும் வரலாற்று சங்கிலி இது.

சுதந்திர இந்தியாவில் துவக்கத்தில் தமிழகத்தில் காங்கிரஸின் கை ஓங்கியிருந்திருந்தால் நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையே மேலோங்கி முந்தைய கேரளத்து நக்ஸலிசம் பின் கம்யூனிஸம் என தமிழகத்திலும் பரவியிருக்கும்.அதன் பாதையை கல்வியென்று மாற்றியதில் காமராஜ் காங்கிரஸ்க்கும் சமூகம்,மொழி உணர்வாக திசை மாற்றியதில் திராவிட கழகங்களுக்கும் பங்குண்டு என்று நாணயத்தின் மறுபக்கத்தையும் சொல்லி வைப்போம்.அதே நேரத்தில் திராவிட கழகங்களின் வரலாற்றை நோக்கினால் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து குளோனிங் செய்யப்பட்ட சகோதர யுத்த கழகங்களாய்

திராவிட கழகம்
தி.மு.க
அ.தி.மு.க
ம.தி.மு.க
தே.மு.தி.க
இன்னும் பல ஜாதி கட்சிகள்

என்று கட்டெறும்புக் கதைகளையும் சகோதர யுத்தம் என்றே சொல்லலாம்.ஈழப் போராட்டம் ரத்த சிவப்பை தன் மீது தெளித்துக் கொண்டதால் சுதந்திர தாகத்துடன் ரத்த வாடையும் வீசுகிறது.ஆனால் சமூக கழகப் போராட்டங்கள் ஜனநாயக முகமூடி அணிந்து கொள்வதால் எழுகின்ற குரலோசையில் சகோதர யுத்த வாடை பெரிதுபடுத்தாமல் காணமல் போய் விடுகிறது.தமிழக கழகங்களின் அரசியலும் சகோதர யுத்தமே என்பதற்கு அரசியல் கொலைகள் இன்று வரை தொடர்வதே சாட்சி.

ஐ.நாவின் அறிக்கையின் சில விழுக்காடுகள் இருபக்கங்களின் பாதகங்களை விமர்சித்தாலும் பெரும் விழுக்காடுகள் ராஜபக்சேவின் இலங்கை அரசு போர்க்குற்றங்களை உலகரங்கில் முன் வைக்கின்றன. தமிழக சகோதர யுத்தம் காரணம் கொண்டே மூன்று காத தூரத்திலிருக்கும் சீனாக்காரனும், ரஷ்யாக்காரனும் குறுக்கே நின்று வழிமறிக்கிறானே என்று இக்கரையிலிருந்து அக்கரை(றை)க்கு கூக்குரலிட வைக்கிறது.இந்திப் போராட்டம் என்ற ஒன்று தமிழகத்தில் நிகழாமல் இருந்திருந்தால் மத்திய அரசை எதிர்த்து போராடுவதில் நியாயமேயில்லை என்று ஜார்ஜ் கோட்டை கூரையேறியோ, புதிய சட்டசபை வளாகத்தில் குரல் எதிரொலிக்கும் இடத்தில் நின்று கொண்டு சத்தமிடலாம்.

இனி காங்கிரஸ் என்ற பெயரால்

ஒரே தவறை மீண்டும் மீண்டும் காங்கிரஸ் மத்திய ஆட்சி திரும்ப திரும்ப ஏன் செய்கிறது என்று புரியவில்லை.இதோ ராஜபக்சே போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க வேண்டி ஜி.எல். பெருசை டெல்லி போய் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு வா என்கிறது.
புரோட்டகால் படி அப்படித்தான் பேச்சு வார்த்தை நிகழும் என்று யாராவது நினைத்தால் இலங்கை சார்பில் ராஜபக்சே காப்பற்றப்படுவதற்கு உத்தரவாதம் கேட்டு பெரிசும்,இந்திய நலன் சார்ந்த முடிவாய் இந்தியாவும் எடுக்கும் முடிவே இன்னுமொரு முறை அரங்கேறப் போகிறது.நாம் நினைப்பது தவறென்றால் மத்திய அரசும்,இலங்கை அரசும் தாம் செய்வது சரியென்று நிரூபணம் செய்யவேண்டும்.இவர்கள் நிருபணத்தின் லட்சணம் தமிழகத்தில் ஜனநாயக தேர்தல் வடிவிலும்,இலங்கையில் இனப்படுகொலை போர்க்குற்றவாளிகள் என்ற தண்டனைக் கைதிகளாய் தமிழகமும், உலகரங்கும் உரக்கச் சொல்கின்றன.

தீர்வுக்கான பேச்சு வார்த்தை என்றால் ஒன்று காணிக்காரர்களான மக்கள் பிரதிநிதிகளாய் ஈழத்தமிழர்களையும் கூட புலம் பெயர் தமிழர்களையோ அமர்த்தி பேச வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் தமிழக ஆட்சி பிரதிநிதிகளுடன் ஈழத்தமிழ் மக்கள் ஆதரவாளர்களையாவது இணைத்து அழைத்து பேச வேண்டும்.இரண்டுமற்ற தன்மையாய் மத்திய அரசும்,இலங்கை அரசுமே சேர்ந்து பேச்சுவார்த்தை நிகழ்த்தி விட்டு அதனை ஈழ மக்கள் மீது திணிப்பது நிரந்தர தீர்வை தருவதாக அமையாது.அரசு இய்ந்திரத்தின்  கைத்தடிகள் என்பதலாயே இரு பக்கங்களும் எடுக்கும் முடிவுகள் அதனையே பேச்சுவார்த்தை,உடன்படிக்கை என்ற பெயரில் மறைமுகமாக ஈழமக்கள் மீது சுமத்தும் சூழ்நிலைகளை உருவாக்குவது எதிர்காலத்தில் பயனை தராது.இவர்கள் தரப்பிலிருந்து எடுக்கப்படும் முடிவுகள் தமிழர் சார்புக்கும் சாதகமாக இருக்குமா என்பதும் கேள்விக்குறி என்பதோடு இனியும் பொறுத்திருந்து ஆராய வேண்டிய ஒன்று.

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடனும், காஷ்மீர் பிரதிநிதிகளுடனும் பேசும் இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஏன் இலங்கையை மட்டும் முன்னிலைப்படுத்துகிறது. யாசகம் கேட்கும் நிலையில் ஈழத்தமிழன் என்பதால் இந்த முடிவா?இதே தவறைத்தானே ராஜிவ் காந்தியின் காலத்து அரசு இயந்திர அல்லக்கைகளாய்  தீட்சித் போன்றவர்கள் செய்தார்கள்.இவைகளை சொல்லி விட்டு ராஜிவ் காந்தியின் படுகொலையையும் தொடாமல் போனால் அது ஒரு பக்க பார்வையாய் போய் விடும்.ராஜிவ் காந்தியின் படுகொலை வரலாற்றுத் தவறே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.90களின் தமிழக மக்கள் மனமும் அதனையே பிரதிபலித்தன.ராஜிவ் காந்தியின் படுகொலை எப்படி தவறோ அதே போல் முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டதும் வரலாற்றுத் தவறே.ஒரு தவறால் இன்னொரு தவறை நேர்மை படுத்தி விட முடியாது.ஒரு தேசத்தின் பிரதிநிதியின் உயிர் பெரிதா அல்லது ஒரு மில்லியன் மக்களின் துயரம் பெரிதா என்று மக்கள் மனம் ஊஞ்சலாடினால் மக்களின் துயரின் பக்கத்தில் நிற்பதே மனிதாபிமானம் மிக்கவர்கள் எடுக்கும் முடிவாக இருக்கும்.

பஞ்சாபின் களங்கமாய் இந்திராகாந்தி படுகொலையே மறக்கப்பட்டு மன்மோகன் சிங் பிரதமராகும் தேசம்தான் மனிதாபிமானம் இழந்து உலகரங்கில் ஏனைய மனித உரிமைகளை ஓரளவுக்காவது மதிக்கும் நாடுகள் ஐ.நாவின் இலஙகை போர் அறிக்கை பற்றிக் குரல் கொடுக்கும் போது  இந்தியா மௌனியாய் வாய் மூடி மௌனம் காக்கிறது.இதனை குற்ற உணர்வு என்று சொல்லவா அல்லது இருதலைக் கொள்ளி எறும்பு நிலையென்று பரிதாபப்படவா அல்லது தவறான வெளிநாட்டுக்கொள்கையில் மாட்டிக்கொண்டு  செய்வதறியாது அடுத்து வரும் ஆட்சிக்கு பிரச்சினையை தள்ளிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாமென்ற காலம் தாமதித்தலா?இலங்கைப் பிரச்சினையை தீர்க்கும் தூரப்பார்வை கொண்ட பிரதமர் யாரென இனிமேல்தான் தேடவேண்டும்.அது நிச்சயமாய் மன்மோகன் சிங் அல்ல என்பது அவரது எனக்குத் தெரியாது நிலைப்பாட்டில் நன்றாகவே புரிகிறது.மாறும் இந்திய,தமிழக அரசியல் களங்களும்,உலக அரசியலும் எந்த தீர்வை முன் வைக்கிறதென பார்க்கலாம்.

இறுதியாக ஒன்று!மக்கள் உணர்வுகள் புரியாத அரசு இயந்திரமாய் தேசிய முகமூடி போட்டுக்கொண்டு கட்சி என்ற பெயரில் வலம் வரும்போது இனி வரும் கட்சிகளும் தமிழ் சந்ததிகளால் ஓட்டு என்ற ஆயுதத்தால் முறியடிக்கப்படட்டும். 

விமர்சனங்கள் தாண்டி ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என இனி அடுத்து...

11 comments:

Bibiliobibuli said...

ராஜ நட, சகோதர யுத்தம் என்று தலைப்பை படித்தவுடன் ஓடிவிடலாமா என்று யோசித்தேன். பிறகு முழுதும் படித்தேன். இருந்தாலும் குளோனிங் கட்சிகள் என்பதற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

நீங்க என்னதான் சொல்லுங்க. இலங்கை தெளிவாய் இந்தியாவை மாட்டிவிட்டது. ஜி.எல். பீரிசும் லேசுப்பட்ட ஆளில்லை.

இந்தியா எப்பவுமே தமிழர்களை கேட்காமல் தானே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முடிவெடுக்கிறது.

rajamelaiyur said...

Very truthful statement

ராஜ நடராஜன் said...

//ராஜ நட, சகோதர யுத்தம் என்று தலைப்பை படித்தவுடன் ஓடிவிடலாமா என்று யோசித்தேன். பிறகு முழுதும் படித்தேன். இருந்தாலும் குளோனிங் கட்சிகள் என்பதற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

நீங்க என்னதான் சொல்லுங்க. இலங்கை தெளிவாய் இந்தியாவை மாட்டிவிட்டது. ஜி.எல். பீரிசும் லேசுப்பட்ட ஆளில்லை.

இந்தியா எப்பவுமே தமிழர்களை கேட்காமல் தானே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முடிவெடுக்கிறது.//

ரதி!தற்போதைய சூழலில் இந்தியா,இலங்கை என இருவருமே மாட்டிக்கொண்ட நிலையில் தான் இருக்கிறார்கள்.எனக்கு பிரணாப்,கிருஷ்ணா,மேனன்,நாரயணன் என்பவர்களின் வெளியுறவுக்கொள்கையில் நம்பிக்கையில்லை.சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மால் கூட பிரச்சினைகளை அணுக இயலும் என்கிற ஸ்டேட்ஸ்மென்ஷிப் இல்லாத சராசரி மனிதர்க்ளே இவர்கள்.

தாவும் நிலை ஜி.எல்.பெரிஷ் பற்றியும் ஒன்றும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.பிரணாப்,பெரிசுகளின் ஆங்கிலத்திற்கே ஹில்லாரி கிளிண்டன் காத தூரம் ஓடுவார்:)

(இந்தாளுகளை கரிச்சுக்கொட்டறதுக்கு இதை விட வேற வழிய் தெரியவில்லை)

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very truthful statement//

Thank you Sir!

vasu balaji said...

அதான் எஸ்கேப்பாவறதுக்கு ஆலோசனை சொல்றாங்களாமே கூட்டுக் களவாணிப் பன்னாடைங்க.:(

செங்கோவி said...

//மக்கள் உணர்வுகள் புரியாத அரசு இயந்திரமாய் தேசிய முகமூடி போட்டுக்கொண்டு கட்சி என்ற பெயரில் வலம் வரும்போது இனி வரும் கட்சிகளும் தமிழ் சந்ததிகளால் ஓட்டு என்ற ஆயுதத்தால் முறியடிக்கப்படட்டும். // அருமை நண்பரே..நம் மக்கள் என்னதான் அமைதியாக இருந்தாலும், சரியான தீர்ப்பை அளித்தார்கள்.

ஹேமா said...

நடா...அரசியல் சீட்டாட்டத்தில ஆர்வமாத்தான் இருக்கீங்க !

ராஜ நடராஜன் said...

//அதான் எஸ்கேப்பாவறதுக்கு ஆலோசனை சொல்றாங்களாமே கூட்டுக் களவாணிப் பன்னாடைங்க.:(//

பாலாண்ணா!நேற்று பதில் சொல்லியிருந்தேன்.நீண்ட வரிகளாய் இருந்ததால் கூகிள் ஆட்டையப் போட்டுடுச்சு.

மீண்டும் வார்த்தைகளை கோர்க்க இயலவில்லை.

ராஜ நடராஜன் said...

//அருமை நண்பரே..நம் மக்கள் என்னதான் அமைதியாக இருந்தாலும், சரியான தீர்ப்பை அளித்தார்கள்.//

வாங்க செங்கோவி!மக்கள் ஓரளவுக்கு வசதியாக இலவசத்தால் சந்தோசமாகத்தான் இருக்கிறாங்க என்றே நானும் நினைத்திருந்தேன்.

வரும் கால அரசியலை புரட்டிப் போட்ட தீர்ப்பு எனப்தில் சந்தேகமேயில்லை.

ராஜ நடராஜன் said...

//நடா...அரசியல் சீட்டாட்டத்தில ஆர்வமாத்தான் இருக்கீங்க !//

ஹேமா!நான் பதிவுலகம் வந்த போது தமிழில் புகைப்படக் கலையே என்னை மிகவும் கவர்ந்தது.கூடவே இடையிடையே கொஞ்சம் மொக்கை கும்மிகளும்.தனிப்பட்ட முறையில் குடும்ப கும்மிகளும்,இன்னைக்கு யார் ஊட்ல பார்ட்டியும்,வார இறுதியில் கடற்கரை சுத்துவதும் மீன் பிடிப்பதும்:)

ஈழப்போர்,இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்,தி.மு.க வின் செயல்பாடுகள்,புலம் பெயர்ந்தவர்கள்,தாய் மண்ணில் இருப்பவர்கள்,உலகரங்கு அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பிருப்பதாலும் ஈழப்பிரச்சினைக்கு இந்தியா சார்ந்த தமிழகம் தரும் அழுத்தங்களின் மூலமாக அரசியல் ரீதியாக தீர்வுகளைக் கொண்டு வர முடியும் என்று நம்புவதால் அரசியலையும் சொல்ல வேண்டியிருக்கிறது.மற்றபடி அரசியல் சீட்டாட்டத்தில் எனக்கு ஆர்வமில்லை.

http://thavaru.blogspot.com/ said...

ஆக்கபூர்வமான செயல்பாடுகளை தெரிந்தும் கொள்ளும் ஆவலில் ராஜநட....