Followers

Sunday, June 22, 2008

தசாவதாரம் படம் பார்த்த பின்

முன் கதை:

சில வருடங்களுக்கு முன் உண்மையில் நடந்த நிகழ்வின் விவரணப் படம் ஒன்று காண நேரிட்டது. சிறியதொரு விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பனிப் பிரதேசத்தில் காணாமல் போய் விடுகிறார்கள்.காணாமல் போனது பயணிகள் மட்டுமல்லாது விமானத்தின் சின்ன பாகம் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தகவலுடன் தேடும் விமானங்கள் பல வருடங்கள் முயன்றும் தோல்வியைத் தடவி முயற்சியைக் கிடப்பில் போட்டுவிட்டது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் பனிக்கட்டிகள் உருகி (இப்பத்தான் சீக்கிரம் உருகுவதற்கான சாத்தியக் கூறுகளை எல்லோரும் சேர்ந்து செய்கிறோமே.கூடவே கையெழுத்தும் போடமாட்டேன் என்ற தாதா புஷ்சின் அடம் வேறு.) விமானத்தின் பாகங்களும் பயணிகள் உடமைகளும் பூமியின் வெளிச்சத்துக்கு வருகின்றன.இத்தனை வருடம் தேடியும் கிடைக்காத பொருட்கள் இப்ப மட்டும் எப்படி கிடைத்தது என்ற நோக்கின் ஆய்வில் தெரிந்த உண்மைகள் பனிக்கட்டிகளின் படிமங்களாகிய (கிளேசியர்) நகர்வதும் சுழழ்வதும் கண்டுபிடிக்கப்படுகிறது. விபத்தின் வேகத்தில் பனிக்கட்டிகளுக்குள் புகுந்த விமானத்தின் பாகங்கள் மீண்டும் பூமியின் மேல் மட்டத்திற்கு வருவதற்கான நகர்வும் சுழலும் ஐம்பது வருடங்களுக்கும் மேல் என்ற வர்ணனுடையுடன் விபரணப்படம் முடிகிறது.

இனி

பல நூற்றாண்டுகளின் வாத விவாதங்களின் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாம் தமிழ்மண்ணுக்கு மறந்துபோன ஓர் நிகழ்வினைச் சொல்லவேண்டுமாயின் கதைகேட்டே தூங்கிப்பழகிப்போன பழக்கத்தோசத்தில் ஓர் சரித்திர நிகழ்வுடன் கொஞ்சம் கற்பனையும் கலந்தே சொல்லவேண்டிய கட்டாயத்தில் துவங்குகிறது தசாவதாரம்.

பென்கர்,சீன் கானரி,காட்பாதர் படங்களின் காலத்தில் என்னமாய் படமெடுக்கிறானுங்க என்ற அங்கலாய்ப்பு தோன்றும்.அவைகளையெல்லாம் ஓரளவுக்கு பூர்த்திசெய்யும் கமல் உண்மையில் பாராட்டுக்குரியவரே.ஓர் கலைஞனையும் பல கூட்டுத்திறமைகளின் உழைப்பையும் பலகோடி முதலீட்டு சந்தைப்படுத்தலையும் கொச்சைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே கமலின் உழைப்பிற்காகவும்,கேமிராவின் தொழில் நுட்பங்களுக்காகவும் கதையை கிரகித்துக்கொள்ள ஒரு முறையும் கமலின் துண்டு வசனங்களுக்கும் அவர் எதனை சொல்ல வருகிறார் என்ற தீர்மானித்து விவாதக்களம் தொடங்குவதற்கும் இன்னொரு முறை பார்க்கலாம்.

அப்படியும் அதில் புதிய பரிமாணங்கள் தோன்றும்.படத்துக்குப் படம் மெல்லியதாக கம்யூனிஸ சிந்தனைகளை அங்கங்கே தூவிக்கொண்டு வருகிறார்.அதனையும் தாண்டி மனிதம் பேசிக்கொண்டு வருகிறார்.சமீபத்து உதாரணம் அன்பே சிவம். இப்போது தசாவதாரம்.

படத்தின் சோழர்காலத்து துவக்கக் காட்சியும் பின் வசனங்களும் நீண்ட நாட்களுக்குப் பின் சரித்திரப்படத்தின் முதிர்ச்சியுடன் வலம் வருகிறது.தடாலடியாக அமெரிக்காவிற்குள் கேமிரா புகுந்து ஆங்கிலப்படங்களை நினைவுக்கு கொண்டுவந்து ஒடுது ஓடுது துரத்தத் துரத்த ஓடுது சிதம்பரம் வரையில்.

பல்ராம் "ரா"வின் நகைச்சுவை ஓர் புதிய பரிமாணம்.பூவராகவன் பாத்திரத்தின் வார்த்தை உச்சரிப்பு வித்தியாசப் பட்டது.ஆனால் அதற்கும் நுண்ணரசியல் சொல்லி பதிவினர் கருத்து தேடும்போது மனம் வலித்தது.எதிர்வினையாகவும் சில பதிவுகள்.ஆனால் பதிவிடுவதற்கும் ஓர் நிகழ்வு ஒருவரைப் பாதிக்கவேண்டும்.எதிர்வினையும் அதன் பதில்வினையும் ஒரு படத்தின் சந்தைப்படுத்தலுக்கான ஜிம்மிக் என்றே கருதுகிறேன்.

உலகச் சந்தையினைக் குறி வைத்து எடுக்கும் பொருளாதாராத்தினுடன் ஒரு மொழி பேசும் மக்களின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் திரைப்படத்தினை ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்குமா?கிடைத்த தொழில்நுட்பத்தில் பெரும் பணம் முதலீடு செய்து அதனை திரும்ப லாபத்துடன் வியாபாரம் பார்க்கவே யாருக்கும் தோன்றும். அப்படியும் பாலுமகேந்திரா,மகேந்திரன் போன்றோர் பரிட்சார்த்தமாக படங்கள் செய்யவே செய்தார்கள்.ஜான் ஆப்ரகாம் போன்றோர் உலக சினிமா எடுக்கும் முயற்சியில் விலாசங்கள் கூட தெரியாமல் போய்விட்டார்கள்.

எனவே பணம்,நல்ல சினிமா எடுக்கும் முயற்சிக்கு இடையில் மக்களின் ரசனையுடன் இரண்டையும் காம்ப்ரமைஸ் செய்து படத்தை தயாரிக்க வேண்டிய நிலையில் தமிழ்ப்படங்களும் ஒவ்வொரு வட்டங்களிலிருந்தும் விடுபட்டு முன்னோக்கி தனது பாதங்களை நகர்த்துகின்றது என்றே சொல்லலாம்.

முகப்பூச்சுக்களற்ற குடிசை மாதிரி பரிட்சார்த்தப் படங்கள் சென்னை சபையரில் காலைக் காட்சியாக மட்டும் ஓடி தனது அனுபவத்தை முடித்துக்கொண்டது.ரசனையின் வேகம் பத்தாது எனக்குறைபட்டுக் கொள்ளலாமே தவிர திரைப்படங்கள் தேங்கிப்போய்விடவில்லை என உறுதியாகச் சொல்லலாம்.

மீண்டும் தசாவதாரத்துக்கு

அசின் பிசின் மாதிரி ஒட்டிக்கொண்டு கமல் கூடவே பயணிக்கிறார்.ஏய்!வாயாடிப்பெண்ணே! நீயில்லாமல் இருந்திருந்தால் கமலுக்கு பேச்சுத்துணைக்கு ஆளிருந்திருக்காது.

ஜார்ஜ் புஷ்சின் அறியாமை எலைட்களின் மத்தியில் பிரபலம்.இனி அது தமிழ்நாட்டுக்குள்ளும் வலம்வரும்.கமலின் நட்பு சார்ந்து மற்ற நடிகர்களுக்கு வாய்ப்புக்கள் தரப்பட்டிருக்கலாம்.கமலின் அவதாரங்களே படம் முழுவதும் ஆக்கிரமிப்பதால் மற்ற நடிகர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு.ஒலிப்பெட்டிகளின் பக்கத்தில் D20 என்ற முத்திரையுடன் இருக்கை.மெல்லிய ஒலிகளும் வல்லிய ஒலிகளும் காதை துளைத்தது.தேவி பிரசாத் புதிய அனுபவம். சுனாமியின் காட்சிகளை அதன் உக்கிரப் பார்வையின் காலத்தில் காணும்போது ஏற்பட்ட உணர்வை மீண்டும் ஒருமுறை உயிர்ப்பித்தது போல் இருந்தது படப்பிடிப்பு.

படத்தின் இடையில் நெருடல்கள் இருந்தாலும் துவக்கக் காட்சியும் அதனை கதையோடு இணைக்கும் உத்தியின் கடைசிக் காட்சியும் படத்தின் சிறப்பென்றே கருதுகிறேன்.பிளட்சரும் கானும் முகமூடி என்ற புலம்பல்களும் பக்கத்துப் பதிவுகளில் கேட்கத்தான் செய்கிறது .முகத்தில் ஒட்டிப்பார்க்காமல் அதன் வலியை உணரமுடியாது.கடலை மாவை வார இறுதியில் முகத்துக்கு தண்ணீருடன் கலந்து ஒட்டி 10நிமிசம் காயவைத்த கல்லூரிக் கால அனுபவத்தில் சொல்கிறேன் இதை.நம்மிடம் நல்ல முகக்கலைஞர்கள் உள்ளார்கள்.வாய்ப்புக்கள் கிடைத்தால் அசத்துவார்கள்.

எனவே குறை கண்டு பிடிக்கும் சூழ்நிலையில் நான் இல்லை.ஏனென்றால் இல்லாத ஊருக்கு தசாவதாரம் சர்க்கரைப் பொங்கல் மாதிரி.எனவே மற்ற விமர்சனங்களிலிருந்து வேறுபடுகிறேன்.

13 comments:

கிரி said...

நீங்க சொன்ன முதல் கதை நன்றாக இருந்தது.

நான் இன்னும் தாசவாதாரம் இன்னும் பார்க்கவில்லை, அதனால் உங்கள் விமர்சனம் படிக்கவில்லை.

:-)

Thekkikattan|தெகா said...

//எனவே கமலின் உழைப்பிற்காகவும்,கேமிராவின் தொழில் நுட்பங்களுக்காகவும் கதையை கிரகித்துக்கொள்ள ஒரு முறையும் கமலின் துண்டு வசனங்களுக்கும் அவர் எதனை சொல்ல வருகிறார் என்ற தீர்மானித்து விவாதக்களம் தொடங்குவதற்கும் இன்னொரு முறை பார்க்கலாம்.//

இதுவேதான் எனது நிலைப்பாடும். படத்தை ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

ராஜ நடராஜன் said...

வாங்க கிரி சார்.நீங்கதான் முதல் போணி.தயவு செய்து விமர்சனம் படிக்காதீர்கள்.படம் பாருங்கள்.பின் பதிவர்களின் பார்வைகளைத் தேடுங்கள்

கதிர் said...

Honorable View :)

Thekkikattan|தெகா said...

எனவே கமலின் உழைப்பிற்காகவும்,கேமிராவின் தொழில் நுட்பங்களுக்காகவும் கதையை கிரகித்துக்கொள்ள ஒரு முறையும் கமலின் துண்டு வசனங்களுக்கும் அவர் எதனை சொல்ல வருகிறார் என்ற தீர்மானித்து விவாதக்களம் தொடங்குவதற்கும் இன்னொரு முறை பார்க்கலாம்.//

இதுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டம் போட்டேனே வரவில்லையா?

எப்படியோ, என்னுடைய நிலைப்பாடும் இதுவேதான். நல்லா படத்தினை ரசித்து பார்த்திருக்கிறீர்கள்னு புரியுது.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம்,ராஜ நடராஜன் சார்,..
நியாமான பார்வையில் விமார்சனம் பாராட்டுகள். தமிழ் படம் உலகம் வியக்கும்படி இருக்கவேண்டும் என்று முயற்ச்சித்து எடுக்கபட்ட படம் எதுவானாலும் கரம் கொடுப்பது என் என்னம்.

ராஜ நடராஜன் said...

வாங்க தம்பியண்ணா

படம் பார்க்குமுன் உங்கள் அங்கலாய்ப்பினை உங்கள் பதிவில் கண்டேன்.உங்களை மாதிரி அறிவுஜீவிகள் குறைந்தும் குறைந்த பட்ச கதைகளில் திருப்தி கொள்ளும் ரசிகர்கள் அதிகம் உள்ளதாலும் உங்கள் ஏக்கங்கள் நிறைவேறுவதில்லை.இல்லையென்றால் பெயர் தெரியாத குட்டி நாடுகளும் அழுத்தங்கள் நிறைந்த ஈரானும் சாதிக்கும் போது ஐம்பது வருசத்துக்கும் அதிகமான சினிமா வரலாறு கொண்ட தமிழகம் ஏன் சாதிக்காது?

ராஜ நடராஜன் said...

தெகா வருகைக்கு நன்றி.நம்புங்கள் இதுவே உங்களின் முதல் பின்னூட்டம் தொபுக்கடீர்னு வந்து விழுந்தது.உடனே ஒரு கிளிக்.ஒரு பதில்.

puduvaisiva said...

தம்பியண்ணா??

thambi or Anna?

:-))

good you are correct write this film preview

puduvai siva

ராஜ நடராஜன் said...

//தம்பியண்ணா??//


தம்பி அவர் புனைப்பெயர்.அண்ணா அவருக்கு செய்யும் மரியாதை.

ராஜ நடராஜன் said...

//தமிழ் படம் உலகம் வியக்கும்படி இருக்கவேண்டும் என்று முயற்ச்சித்து எடுக்கபட்ட படம்//

வணக்கம் ஞானசேகரன்.வருகைக்கு நன்றி.ஆமாங்க நல்ல முயற்சிகளை ஆதரிப்பது நமது தார்மீகக் கடமை.ஒரு படம் பார்ப்பதற்கான செலவு,ஓர் விமர்சனம்,ஓர் பின்னூட்டம் என்ன குறைஞ்சுடப் போவது.

வேளராசி said...

ஓர் கலைஞனையும் பல கூட்டுத்திறமைகளின் உழைப்பையும் பலகோடி முதலீட்டு சந்தைப்படுத்தலையும் கொச்சைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.பணம்,நல்ல சினிமா எடுக்கும் முயற்சிக்கு இடையில் மக்களின் ரசனையுடன் இரண்டையும் காம்ப்ரமைஸ் செய்து படத்தை தயாரிக்க வேண்டிய நிலையில் தமிழ்ப்படங்களும் ஒவ்வொரு வட்டங்களிலிருந்தும் விடுபட்டு முன்னோக்கி தனது பாதங்களை நகர்த்துகின்றது என்றே சொல்லலாம்.

Thamira said...

நிஜமாகவே நியாமான கோணத்திலிருந்து ஒரு விமர்சனம். பாராட்டுகள் நடராஜன்.