Followers

Tuesday, May 26, 2009

இனி மனிதம் மட்டுமே பேசுவோம்

போர்களினால் இடம்பெயர்ந்த எந்த மக்களும் பல திசை நோக்கியே பயணித்திருக்கிறார்கள்.ஒரு திசை நோக்கி நகர்ந்த மனித நகர்வுகள் என்று யோசித்தால் எனக்குத் தெரிந்து பைபிளின் மோசஸ் பின்னால் கடலுக்கு அருகே சென்ற இஸ்ரேல் வம்சத்தாரும் பிரபாகரன் பெயரால் நதிக்கரை நகர்ந்த ஈழத்து தமிழ் மக்கள் மட்டுமே.இரண்டுக்குமே கடல்கள் சாட்சி சொன்ன,சொல்லும் நிகழ்வுகள்.முந்தைய சரித்திரத்தை மெய்ப்பிக்கவென்றே இன்றும் பிரமிடுகள் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றன.இப்போதைய சரித்திரத்தையும் சாட்சிக்கு அழைக்கவென்றோ என்னவோ திருவள்ளுவன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான்.

இன்றைய மனிதர்களும் அவர்களைச் சார்ந்த நிகழ்வுகளும் கால ஓட்டத்தில் மறைந்து விடும்.ஆனால் வரலாறு நிகழ்வுகளை தன்னிடத்தே தக்க வைத்துக்கொள்ளும்.மக்கள் வேறு,புலிகள் வேறு என்ற கூற்றுக்கள் எல்லாம் இறுதிப் போரின் அவலங்களில் பொய்யாகிப் போய் இருக்கின்றன.போரின் வெற்றிகள் இலங்கைக்கு பலத்தையும் அதன் தெற்கு திசையில் கொண்டாட்டங்களையும் தருகிறது.சிங்கள மக்களின் கொண்டாட்டங்களை விமர்சிப்பது தவறு.அது இனம் சார்ந்த, மண் சார்ந்த மனித இயல்பு.ஆனால் நாம் விமர்சிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

போருக்கும் அப்பால் தமிழர்களுக்கான தீர்வாக இலங்கை அரசு எந்த தீர்வை உலகின் முன் வைக்கிறது?அப்படி வைக்கும் தீர்வுகள் எல்லாருக்கும் உடன்பாடு உள்ளதாக இருக்குமா?இப்போது நிகழும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன?இவர்களுக்கான எதிர்காலத்தை எப்படி முன்வைக்கப்போகிறது?புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லியே பயங்கரவாதியாகிப் போன இலங்கை அரசு தமிழர் மனதால் பட்ட காயங்களை எப்படி ஆற்றப் போகின்றது?இல்லை இவை காயங்கள் அல்ல வெறும் கீறல்களே என்று கருணா சாட்சியம் சொல்ல வருவாரா?

இலங்கை அரசுக்கு தன்னை நிரூபித்துக் கொள்ளவும் அப்பாவி மக்களின் துயரங்களைப் போக்கவும் உடனே செய்ய வேண்டியது பொதுமக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்துவதே.அது தவிர்த்து ஸ்கிரீனிங்க் என்பது இருக்கும் மனிதர்களை இல்லாமல் செய்வதற்குரிய உள்நோக்கமாகவே இருக்கும்.அமெரிக்கா செய்ததையே நானும் செய்கிறேன் என்று சொல்லும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா மாட்டுக்கொட்டில்களாய் எங்கும் மனிதர்களை முட்கம்பிக்குள்ளும் கூடாரங்களிலும் அடைத்து வைக்கவில்லை.

மடியில் கனமில்லை பயமில்லையென்றால் அனைத்துலக ஊடகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்கட்டும்.முன்புதான் ஊடகவியளாலர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர இயலாது.இப்போதைய தடைக்கான அவசியம் என்ன?உண்மைகள் இலங்கை அரசு சார்பாக இருந்தாலும் உலகின் முன் தெரியட்டும்.

இதுவரை பாலஸ்தீனியன் மாதிரி இருந்த ஈழத்தமிழன் அவனையறியாமலேயே யூதனாகிப் போனான்.ஈழத்தமிழா!மனிதம் பேசு.அறிவும்,திறமையும்,வீரமும்,பொருளும் உனக்குள்ளே நிறைந்து கிடக்கிறது.(இது புகழ்ச்சிக்கான வார்த்தை இல்லை இரு மொழியின் வரலாறுகள் இப்போதே கண்முன்)

ஒன்று சேர்.கட்டமைப்பு நடத்து.கதைகளை,கனவுகளை,புலம்பல்களை அகற்று.உலக நண்பர்களைச் சேர்.நிதர்சனம் காண்.வரும் சந்ததிக்கு நல்வாழ்வினை மாற்று.

(கடலுக்கும் அப்பால் இருக்கும் சகோதரத் தமிழனுக்கு உனக்காக வேண்டி குரல் மட்டுமே எழுப்ப முடியும்.கோஷங்களே வாழ்க்கையாகிப் போன எங்களுக்கு இது மட்டுமே சாத்தியம்.ஆனாலும் இந்த நீண்ட கோஷங்கள் மட்டுமே உனக்கு இழந்த வாழ்க்கையை மீட்டுத்தரும்.)

24 comments:

surya said...

great great great

ராஜ நடராஜன் said...

A great thanks surya.

Anonymous said...

*இனி மனிதம் மட்டுமே பேசுவோம்.*
இது தான் தேவையானது. நன்றி.
*புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன?*
அதை குப்பையில் போடுங்கள்.
"We want Tamil Eelam"
"Our leader is Prabakharan"
"புலிகளுக்கே சவாலா"

தேவன் மாயம் said...

ஒரு திசை நோக்கி நகர்ந்த மனித நகர்வுகள் என்று யோசித்தால் எனக்குத் தெரிந்து பைபிளின் மோசஸ் பின்னால் கடலுக்கு அருகே சென்ற இஸ்ரேல் வம்சத்தாரும் பிரபாகரன் பெயரால் நதிக்கரை நகர்ந்த ஈழத்து தமிழ் மக்கள் மட்டுமே.இரண்டுக்குமே கடல்கள் சாட்சி சொன்ன,சொல்லும் நிகழ்வுகள்.முந்தைய சரித்திரத்தை மெய்ப்பிக்கவென்றே இன்றும் பிரமிடுகள் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றன.இப்போதைய சரித்திரத்தையும் சாட்சிக்கு அழைக்கவென்றோ என்னவோ திருவள்ளுவன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான்.///

உங்கள் இதயத்தில் எவ்வளவு அருமையான சிந்தனைகள்!!

பழமைபேசி said...

நல்லதொரு சிந்தனை... வாழ்த்துகள்!

ராஜ நடராஜன் said...

அனானி!இன்றைய நிலையில் இலங்கையின் திசைகளுக்குள் இருக்கும் தமிழன் வாயில்லாப்பூச்சி.புலம் பெயர்ந்த தமிழர்களாலேயே இன்னும் எதிர்கால நம்பிக்கைகளை கொள்ள வேண்டியிருக்கிறது.

கருணா,பிள்ளையான்கள் இனியாவது தூரத்து சிந்தனை பெறுவார்களா?

ராஜ நடராஜன் said...

//உங்கள் இதயத்தில் எவ்வளவு அருமையான சிந்தனைகள்!!//

வருகைக்கு நன்றி தேவா!

ராஜ நடராஜன் said...

//நல்லதொரு சிந்தனை... வாழ்த்துகள்!//

நன்றி பழமையண்ணா.

ஷண்முகப்ரியன் said...

மனித ஈரமுள்ள,உயிருள்ள சிந்தனைகள்,ராஜ ராஜன்.

ஆ.ஞானசேகரன் said...

//(கடலுக்கும் அப்பால் இருக்கும் சகோதரத் தமிழனுக்கு உனக்காக வேண்டி குரல் மட்டுமே எழுப்ப முடியும்.கோஷங்களே வாழ்க்கையாகிப் போன எங்களுக்கு இது மட்டுமே சாத்தியம்.ஆனாலும் இந்த நீண்ட கோஷங்கள் மட்டுமே உனக்கு இழந்த வாழ்க்கையை மீட்டுத்தரும்.)//

உயிரோட்டம் உள்ள சிந்தனையாக இருக்கின்றது நண்பா? மானுடம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லியதாக இருக்கு...

குடுகுடுப்பை said...

ஒன்று சேர்.கட்டமைப்பு நடத்து.கதைகளை,கனவுகளை,புலம்பல்களை அகற்று.உலக நண்பர்களைச் சேர்.நிதர்சனம் காண்.வரும் சந்ததிக்கு நல்வாழ்வினை மாற்று.

//

இதுதான் இன்றைய தேவை. நல்ல பதிவு.

நசரேயன் said...

நீங்க சொன்னது நடந்தா நல்லா இருக்கும்

அது சரி(18185106603874041862) said...

மனிதம் பேசினாலும்....இனவெறி பிடித்த சிங்கள அரசையும், இந்திய அரசையும் மன்னிக்க முடியாது....எரியும் நெருப்பு அணைய மிக நீண்ட நாளாகும்....குறிப்பாக இந்தியா மீதான வெறுப்பு....

இந்தியா ஒரு பிணந்தின்னி நாடு...இனவெறி, நிறவெறி பிடித்த அசிங்கமான கோர முகத்தை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற கிழிந்த சேலையில் மூடி மறைக்கும் நாடு....

இந்த உண்மை வரும் தலைமுறைக்கு சொல்லித் தரப்படும்...ராஜபக்சே, கொத்தபய, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி, எம்.கே.நாராயன், விஜய் நம்பியார்...இவர்களெல்லாம் ஹிட்லருடன் ஒரே லிஸ்டில் வைக்கப்படுவார்கள்...

இனப்படுகொலையில் ஈடுபட்டு கையில் இத்தனை ரத்தத்துடன் இவர்கள் எப்படித் தான் மன நிம்மதியுடன் தூங்குகிறார்க்ளோ?

அது சரி(18185106603874041862) said...

//
அறிவும்,திறமையும்,வீரமும்,பொருளும் உனக்குள்ளே நிறைந்து கிடக்கிறது.
//

இது உண்மை!

அது சரி(18185106603874041862) said...

அப்படியே இதையும் படித்து பாருங்கள்...

http://www.vinavu.com/2009/05/26/indian-media-eelam-genocide/

ராஜ நடராஜன் said...

//மனித ஈரமுள்ள,உயிருள்ள சிந்தனைகள்,ராஜ ராஜன்.//

வருகைக்கு நன்றி ஷண்முகப்ரியன் சார்.

ராஜ நடராஜன் said...

//உயிரோட்டம் உள்ள சிந்தனையாக இருக்கின்றது நண்பா? மானுடம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லியதாக இருக்கு...//

வாங்க ஞானசேகரன்!தற்கால உலக நிகழ்வுகளை கவனித்தால் மனிதகுலம் மானுடம் நோக்கித்தான் போகிறதா என்ற கவலையும் தோன்றுகிறது.

ராஜ நடராஜன் said...

//ஒன்று சேர்.கட்டமைப்பு நடத்து.கதைகளை,கனவுகளை,புலம்பல்களை அகற்று.உலக நண்பர்களைச் சேர்.நிதர்சனம் காண்.வரும் சந்ததிக்கு நல்வாழ்வினை மாற்று.

//

இதுதான் இன்றைய தேவை. நல்ல பதிவு.//

வாங்க வருங்கால முதல்வரே!உரிமைகளை மீட்க இன்னும் காலம் செல்லும்.உலக அரங்குக்கு வந்து விட்ட ஈழம் இனி நாம் எதிர்வரும் காலங்களை எப்படி நகர்த்துகிறோம் என்பதைப் பொறுத்தே நிகழ்வுகள் அமையும்.

ராஜ நடராஜன் said...

//நீங்க சொன்னது நடந்தா நல்லா இருக்கும்//

வாங்க நசரேயன்!உலக தமிழர்களின் ஆதரவோடு புலம் பெயர்ந்த மக்களுக்கும்,மண்ணின் மைந்தர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இனி உள்ளது.தற்போதைக்கான தேவை மனித,பொருளாதார கட்டமைப்புக்களை ஒன்று படுத்தவும்,தியாக மனப்பான்மையுடனும்,உறுதியுடனும் சாத்வீகமான முறையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நல்ல மனிதர்களை தேடிக்கண்டு பிடிப்பது மட்டுமே.காந்திய குணங்கள் உள்ள மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை சமீபத்து உண்ணாவிரதங்கள் கூறுகின்றன.பார்க்கலாம் வரும் நிகழ்வுகளை.

ராஜ நடராஜன் said...

//மனிதம் பேசினாலும்....இனவெறி பிடித்த சிங்கள அரசையும், இந்திய அரசையும் மன்னிக்க முடியாது....எரியும் நெருப்பு அணைய மிக நீண்ட நாளாகும்....குறிப்பாக இந்தியா மீதான வெறுப்பு....//

வாங்க அதுசரி அண்ணா!கூட கலைஞரின் குழப்பமான செயல்பாடுகள்,சுயநலங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.இந்த மனிதர் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்?

ராஜ நடராஜன் said...

//இந்தியா ஒரு பிணந்தின்னி நாடு...இனவெறி, நிறவெறி பிடித்த அசிங்கமான கோர முகத்தை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற கிழிந்த சேலையில் மூடி மறைக்கும் நாடு....//

ஆழ்ந்து பார்த்தால் இதுவரை நமது தேசத்தின் கோர முகத்தை மூடி வைத்தே நாம் இந்திய கோஷங்களை எழுப்பியிருக்கிறோம் என்பது புரிகிறது.

ராஜ நடராஜன் said...

//இந்த உண்மை வரும் தலைமுறைக்கு சொல்லித் தரப்படும்...ராஜபக்சே, கொத்தபய, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி, எம்.கே.நாராயன், விஜய் நம்பியார்...இவர்களெல்லாம் ஹிட்லருடன் ஒரே லிஸ்டில் வைக்கப்படுவார்கள்...

இனப்படுகொலையில் ஈடுபட்டு கையில் இத்தனை ரத்தத்துடன் இவர்கள் எப்படித் தான் மன நிம்மதியுடன் தூங்குகிறார்க்ளோ?//

நமது மன அலைகள் ஒரே சீராக பயணிக்கிறது என நினைக்கிறேன்:)நேற்று இந்தப்பதிவை எழுதும்போது இவ்வளவு உயிர் இழப்புக்கள்,மனித அவலங்களைப் பார்த்தும் ராஜபக்சே சகோதரர்களுக்கு எப்படி உறக்கம் வருகிறது என்றுதான் நானும் நினைத்தேன்.

ராஜ நடராஜன் said...

////
அறிவும்,திறமையும்,வீரமும்,பொருளும் உனக்குள்ளே நிறைந்து கிடக்கிறது.
//

இது உண்மை!//

இது உயர்வு நவிழலுக்கான சொன்ன வார்த்தைகள் இல்லீங்கண்ணா!இணையதளம் பொதுமக்களுக்காக துவங்கிய 1992-94 காலகட்டத்தில் ஒலி சேட்டிங் குரல்களை முதல் முதல் கேட்டது ஈழ சகோதரர்களுடையதுதான்.

(புலிகள் அரசியல் ரீதியாக போராட்டத்தை முன்னெடுக்காதது போலவே சேட்டிங்களிலும் தனிமனித கத்தல்கள்,கோபங்கள் தலைதூக்கியதையும் குறிப்பிட்டாகவேண்டும்.)

பின் ஈழத்தமிழர்களின் தரமான தொலைக்காட்சி ஊடகங்கள் பல வந்தன.அவை வேறு பல காரணங்களுக்காக தோன்றி மறைந்தும் போய்விட்டது.

யோசித்துப் பாருங்கள் உலக ஆயுதங்களுக்கான நெட்வொர்க் அமைப்பது எவ்வளவு கடினமான விசயம்.அந்த நெட்வொர்க்கில் செலுத்திய கவனத்தில் கொஞ்சம் உலக தமிழர்களுடன் உதவியுடன் அரசியல் லாபிகளையும் உருவாக்கியிருக்கலாம்.மனித உரிமைகளுக்கான லாபிகளை உருவாக்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//அப்படியே இதையும் படித்து பாருங்கள்...

http://www.vinavu.com/2009/05/26/indian-media-eelam-genocide///

வினவு தொடர்ந்து படித்து வருகிறேன்.