Followers

Wednesday, March 10, 2010

எம்.எஃப்.ஹுசைன் தேச துறவறம்.

இந்திய நாட்டின் பலம் மேலைநாடுகள்,வளைகுடா,மற்ற ஆசிய நாடுகளுக்கில்லாத வகையில் அனைத்து விதமான கலை,ஓவியம்,மதம்,தத்துவங்கள் என உள்வாங்கிக் கொள்வதே.ஆனால் சந்தர்ப்பங்களின் கலாச்சார முரண்பாடுகளின் வெளிப்பாடாகவோ,எண்ணங்களின் எதிர் வினையாகவோ சில விசயங்கள் ஒரு சிறு கோட்டிலிருந்து துவங்கி,அதன் பார்வைகள் அகன்று ஊதி பூதாகரமாகவும் ஆவதுண்டு.

சிலநேரங்களில் சர்ச்சைக்குரிய பார்வை யாருடைய கண்ணிலும் படாமல் அமுங்கிப்போவதுமுண்டு.உதாரணத்திற்கு சி.என்.என் 9/11 நேரலை காட்சியின் போது மனிதாபிமானமுள்ள எவரும் படபடத்துக்கொண்டிருக்க பிரெஞ்சு நாட்டு ஓவியர் ஒருவர் இரு கட்டிடங்கள் எரிந்து கொண்டிருப்பதை 21ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியமென்றார்.அதேபோல் விவாதத்திற்குரியதாக அல்லாத ஒன்றை எப்படி ஊதி பெரிது படுத்துவதென்பதற்கு சல்மான் ருஷ்டி விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு.

சல்மான் ருஷ்டியின் சாட்டானிக் வெர்சஸ் இதுவரை எத்தனை பேர் படித்து அதன் பொருளை உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை.ஆனால் சாதாரண வாசகனின் மனதுக்குப் புலப்படாத எழுத்துக்களால் நாவல் என்ற நிலையில் எழுதப் பட்ட புத்தகம் அது.ஈரானின் பத்வாவினால் சல்மான் ருஷ்டியும்,சாத்தான் வேதம் ஓதுகிறதுவும் உலகம் முழுவதும் அறியப்பட்டது.சல்மான் ருஷ்டி லண்டனில் போய் தஞ்சமடைந்தார்.அதே போல் எம்.எஃப்.ஹுசைன் ஓவியம் இந்துக்களின் மனதை புண்படுத்துகின்றதென்று அவர் மேல் பல வழக்குகள் வரை நீதிமன்றத்தில்.வழக்குகளுடன்,உயிருக்கான பயமுறுத்தல்கள் வேறு.ஓவியனாகவோ,முதுமையான வயதின் பொருட்டோ தொடர் வழக்குகள்,பயமுறுத்தல்கள்,அரசியல்,மதவாதம் போன்ற காரணங்களாலும் தனது ஓவியத்தை சந்தைப் படுத்த சிறந்த இடம் என்று அவர் துபாய் சென்றிருக்கலாம்.

திரும்பவும் இந்தியா செல்ல விரும்பாத நிலையில் அருகிலுள்ள கத்தார் அரசு ஹுசைனை தனது குடிமகனாக ஏற்றுக்கொண்டது.சில தினங்களுக்கு முன் மெக்ஃபூல் ஃபிடா ஹுசைன் என்ற எம்.எஃப்.ஹுசைன் தனது இந்திய கடவுச் சீட்டை கத்தார் இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்து விட்டார்.இனி மேல் அவர் கத்தார் குடிமகன்.

ஹுசைன் துபாய் செல்வதற்கு முன்பான இதன் பின்புலத்தை சற்று பின் நோக்கிப் பார்த்தால் இந்தியப் பாரம்பரியமான ஓவியத்துக்கும் அப்பால் அரசியலும்,மதபித்தும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதைக் காணலாம்.அவரது சரஸ்வதி,துர்கா,சீதா ஓவியங்கள் விமர்சனங்களுக்கான துவக்கம்,புள்ளி என்று பார்த்தால் எம்.எஃப்.ஹுசைனின் சீதா,துர்கா ஓவியங்கள் ஹுசைனால் 1970ம் வருடம் வரையப்பட்டதும் அவரது தனிப்பட்ட சேகரிப்பின் பத்தாயிரத்துக்கும் மேலான ஓவியங்களில் சில.1996ம் வருடம் விசார் மிமான்சா என்ற ஹிந்தி பத்திரிகையில் "MF Hussain,the Painter or a Butcher" என்ற தலைப்பில் தனிக் கட்டுரையாக வந்தது.அந்த சமயத்தில் எழுந்த எதிர் விமர்சனங்களின் விளைவாக ஆபாசமான பெயிண்டிங்,மற்றும் பெண்களை தரக்குறைவாக நியமனப்படுத்தல் என்ற கூற்றில் இ.பி,கோ 153எ,295எ என்ற பிரிவில் வழக்குகள் தொடரப்பட்டன.1996,அக்டோபரில் இந்துத்வா பஜ்ரங்க்தள் அகமதாபாத் கெர்விட்ஜ் கேலரியில் ஹுசைனின் ஓவியங்களை சேதப்படுத்தியது.

1998ம் வருடம் பம்பாயில் ஹுசைனின் வீட்டை பஜ்ரங்க்தள் சார்ந்தவர்கள் சேதப்படுத்தினார்கள்.இதனை சிவசேனாவின் பால்தாக்கரே எப்படி நியாயப்படுத்துகிறாரென்றால்"If Husain can step into Hindustan, what is wrong if we enter his house?" பால்தாக்கரே குழுவை எந்த விதத்தில் விமர்சிப்பதென்று தெரியவில்லை.ஒரு புறம் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட மும்பாய் வரக்கூடாதென்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, இந்தியா மீதான நிழல் தாக்குதலை தொடரும் போது இந்த மாதிரியான விளையாட்டுக்கள் பயன் தராது என்ற வாதத்தில் நியாயம் இருந்தாலும் இந்திய நாட்டுக்குள் மனித நல்லுணர்வை குலைப்பதில் மட்டுமே சிவசேனா இதுவரையிலும் முன்னிலை வகிக்கிறது.

ஹுசைன் தனக்குத்தானே அக்னிப் பரிட்சை செய்து கொள்வதாகவும், ஒரு ஓவிய விமர்சகர்,ஒரு வழக்கறிஞர், ஒரு விஷ்வ ஹிந்து பரிசத் உறுப்பினர் கொண்ட குழு அமைத்து வரும் தீர்ப்பில் தனது ஓவியம் மனம் புண்படும்படியாக இருந்தால் தானே முதல் ஆளாக எனது அனைத்து ஓவியங்களையும் கொழித்தி விடுகிறேன் என்றார். "நான் ஒரு ஓவியன்!இந்திய தேசத்தில் நம்பிக்கை கொண்டவன்!எனக்குத் தெரிந்ததெல்லாம் ஏழு வர்ணங்களும் அதன் கலவைகள் மாத்திரமே" என்று அவர் வீட்டை சேதப்படுத்திய நேரத்தில் சொன்னார்.


2004ல் இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம் " On Seeing the sketch or drawing of the lady with bull one finds that it has been drawn in such a manner that it appears to be a piece of art and creative imagination and in no way falls within mischief of obscenity nor does it come within mischief of word or gesture or on act indending to hurt the modesty of a woman." என்று வழக்குகளை தள்ளிபடி செய்தது.

இதற்கிடையில் 2006 வருடம் டேனிஷ் கார்ட்டூனிஸ்ட்டால் வரையப்பட்ட முகமதுவின் கார்ட்டூன் உலகளாவிய அளவில் முஸ்லீம்களின் கோபத்துக்குள்ளானது.உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மந்திரி டேனிஷ் கார்ட்டூனிஸின் கரங்களை வெட்டுபவருக்கு 51 கோடி வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.கையை வெட்டுவது மாதிரியான அறிவிப்புக்களையெல்லாம் எதிர்த்து யாரும் இந்தியாவில் குரல் கொடுக்க காணோம்.இதையெல்லாம் இங்கே சுட்டிக் காண்பிப்பதன் காரணம் தேர்தல் காலத்து அரசியலும் மதவாதங்களும் எப்படியெல்லாம் ரூபமெடுக்கின்றன என்பதற்காகவே.

அதே கால கட்டத்தில் 2006,பிப்ரவரியில் தனது எதிர் விமர்சன ஓவியங்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாயும் ஓவியங்களை ஏலம் விடுவதை நிறுத்திக் கொள்வதாயும் அறிவித்தார்.பின்பு தனது ஓவியங்களை சந்தைப் படுத்தவும்,எதிர்வினைகளை தவிர்க்கவும் துபாய் சென்று விட்டார்.

மாதுரி தீட்சித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஹிந்தி திரைப்பட ரசிகர்கள் மாத்திரமல்லாது இன்பெச்சுவேசன் மாதிரி மாதுரி தீட்சித்தின் திரைப்படங்களை நண்பர்களுடன் திரை அரங்குகளில் தொடர்ந்து பார்த்ததும் மாதுரியை வைத்து திரைப்படம் தயாரிக்க நினைத்து வங்கி கணக்கை குறைத்துக் கொண்டார்.தமிழில் கூட என்ஜினியர் என்று மாதுரியை கதாநாயகியாக அறிமுகப்படுத்த நினைத்து விளம்பரத்துடன் படம் நின்று போனது மாதிரியான நினைவு.

தெகல்கா பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணலில் சில வரிகள் எம்.எஃப்.ஹுசைன் என்ற ஓவியனின் மனதை படம்பிடித்துக் காட்டுகிறது.

தெகல்கா:உங்களுக்கெதிரான அடிப்படைவாதிகளைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

ஹுசைன்:நான் இது பற்றி பொருட்படுத்தவில்லை.இந்தியா ஜனநாயக நாடு.ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்துக்களை சொல்ல உரிமையுண்டு.ஆனால் இந்தக் கருத்துக்களை வன்முறை உபயோகிக்காமல் விவாதங்கள் மூலமாக வெளிப்படுத்தினால் நல்லது.ஊடகங்கள் என்னிடம் கடுமையான வார்த்தைகளை எதிர்பார்க்கின்றன.எனக்கு இந்தியா மீது மிகவும் நம்பிக்கை இருக்கிறது.இந்திய ஓவியங்கள் 5000 வருடங்களாக தொடர்ந்து புது வடிவங்களை சுமந்து வந்துள்ளது.இனி வரும் இளைய தலைமுறை அடிப்படை வாதிகள்,பிற்போக்குவாதிகளின் கருத்துக்களை மறுத்து இந்தியாவில் மாற்றம் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன்.அதே சமயத்தில் அடிப்படைவாதிகள்,பிற்போக்குவாதிகளின் கருத்துக்களும் ஒரு பக்கம் வலம் வரட்டும்.இந்தியா ஒரு பெரிய குடும்பம் மாதிரி.குடும்பத்தில் ஒரு குழந்தை எதையாவது சேதப்படுத்தினால் நாம் கோபப்பட்டு வீட்டை விட்டு துரத்தி விடுவதில்லை.பதிலாக நாம் விளக்கி கற்றுக் கொடுக்க வைக்கிறோம்.எனது ஓவியங்களை குற்றம் சொல்பவர்கள் ஒன்று அதனை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.அல்லது எனது ஓவியத்தை பார்த்திருக்க மாட்டார்கள்.

தெகல்கா:உங்களுக்கு இந்திய ஓவியம் மற்றும் கலாச்சாரத்தில் ஈடுபாடு எப்படி வந்ததென்று சொல்ல இயலுமா?

ஹுசைன்: முன்பு பந்தர்பூர் என்ற இப்போதைய இந்தூரில் நான் சிறுவனாக இருக்கும் போது ராம் லீலா கதைகளில் வசீகரிக்கப்பட்டேன். மங்கேஸ்வர் என்ற எனது நண்பனும் நானும் அதேபோல் வேடம் போடுவோம்.ராமயாணம் ஒரு சிறந்த வலுவான கதை.ராஜகோபலாச்சாரி ராமயாணம் பற்றி சொல்லும் போது இதிகாசம் உண்மையாகி விட்ட மாதிரி இருக்கும்.எனது அம்மா இறந்த பின் எனக்கு 14,15 வயதில் நிறைய கெட்ட கனவுகள் வந்தன.எனக்கு 19 வயது இருக்கும் போது முகமது இஷாக் என்பவரிடம் குரானை இரண்டு வருடம் படித்தேன்.கூடவே மங்கேஸ்வருடன் புராணங்கள்,கீதை,உபநிசதங்களைப் படித்தேன்.அதன் பின் மங்கேஸ்வர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இமயமலை சென்று விட்டான்.நான் தொடர்ந்து படித்ததன் காரணமாக மிகவும் அமைதியாகிவிட்டேன்.எனக்கு கெட்ட கனவுகள் வந்ததெல்லாம் நின்று போயிற்று.

பின் 1968ல் ஹைதராபாத்தில் டாக்டர் ராம் மனோகர் லோகியா என்னை ராமயாணத்தை வரையச் சொன்னார்.என்னிடம் பணமில்லை.ஆனாலும் எட்டு வருடங்களில் 150 வரை ஓவியங்களை வரைந்தேன். நான் வால்மீகி மற்றும் துளசிதாஸ் ராமயாணங்களை தொடர்ந்து படித்தேன்.பனாரஸிலிருந்து இந்து குருக்களை வரவழைத்து அவர்களிடம் ஓவியத்தின் குறைகளை கேட்டறிந்தேன்.சில இஸ்லாமியர்கள் என்னை அருகி இஸ்லாமிய கருத்துக்களுடனான ஓவியங்களை வரையச் சொன்னார்கள்.இஸ்லாமுக்கு இந்திய சகிப்புத்தன்மையிருக்கிறதா என்று பதிலளித்தேன்.ஒரு காலிகிராபி எழுத்து தவறாகப் போனாலும் ஓவிய ஸ்கிரீனை கிழித்து விடுவார்கள்.என் வாழ்நாளில் 100க்கும் மேலான கணேஷ் ஓவியத்தை வரைந்துள்ளேன்.அவை எனக்கு ஆத்ம திருப்தியுள்ளவை.எந்த ஒரு பெரிய ஓவியத்தை வரையும் முன்பும் கணேஷ் வரைந்து விட்டே ஓவியத்தை துவங்குவேன்.சிவன்,நடனமிடும் நடராஜ் ஓவியங்கள் மிகவும் சிரமமானவை.ஐன்ஸ்டீனின் விதிகள் மாதிரி மிகவும் நுட்பமானவையும் தத்துவார்த்தம் கணக்கியல் சார்ந்தது அவை.

எனது மகள் திருமணத்தின் போது எந்த விதமான விழாவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.எனவே ஒரு கார்டில் பார்வதி சிவனின் மடியில் உட்கார்ந்திருப்பது மாதிரியும் சிவனின் கரங்கள் பார்வதியின் மார்பை தொடுவது மாதிரியும் வரைந்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்தேன்.இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது புனிதமானது.எனக்கு மிகவும் நெருக்கமான அந்த உணர்வை நான் அவமதிப்பேனா?ஷியாவின் சுலய்மானி வகுப்பிலிருந்து வந்தவன் நான்.எங்களிடம் மறுபிறவி உட்பட பல இந்துமதம் சார்ந்த நம்பிக்கைகள் உண்டு.கலாச்சார ரீதியாகவும்,உணர்வு பூர்வமாகவும் ஜூடாயிஸமும்,கிறுஸ்தவமும் மிகவும் தொலைவிலானவை.ஆனால் இதையெல்லாம் என்னை எதிர்ப்பவர்களிடம் விவாதிக்க இயலாது.இவர்களிடம் கஜரஹோ சிலைகளைப் பற்றிக் கேட்டால் இந்திய ஜனத்தொகையைப் பெருக்குவதற்கு என்பார்கள்.ஆனால் உணர்வு பூர்வமான,புலன்களை மகிழ்விக்கும்,இன்னும் பரிணாம வளர்ச்சியடையும் இந்துக் கடவுள்களை கிராமப்புற மக்கள் மட்டுமே அறிவார்கள்.கிராமிய மக்கள் மலைகளில் ஆரஞ்சு வர்ணத்தை பூசுகிறார்கள்-இது ஹனுமானைக் குறிக்கிறது.

தெகல்கா: உங்களது ஓவியங்கள் எப்படி பேசப்படவேண்டும்,நினைவு கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?

ஹுசைன்:எனது ஒவியங்கள் ஒரு கதையை சொல்ல வேண்டும்.பார்க்கும் மக்களுடன் ஓவியம் பேசவேண்டும்.குப்தர் காலத்து பித்தளை உருவங்களை த்ரிபாங்கா என்ற எரோட்டிக் வர்ணமான பெகாரி ஓவிய வடிவத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறேன்.எனது ஓவியங்கள் பாரம்பரியத்தோடு இருப்பதோடு அதில் ஒரு கிராமியத்தன்மை இருப்பதை விரும்புகிறேன்.இந்தியாவில் கலை,ஓவியம் சார்ந்த தஞ்சாவூர்,சோழர்,குப்தர்கள் கால பொற்காலங்கள் உண்டு.நூற்றாண்டுகளின் பார்வை அவைகளில் உண்டு.பல பண்பாடும்,பாரம்பரியமும் இருந்தும் இந்தியா சுதந்திரமடைந்து 60 வருடங்களுக்கும் மேலாகியும் ஓவியம் கற்பவர்களுக்கு கிரேக்க கலை சார்ந்த உடலைப் பற்றி மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.ஷேக்ஸ்பியர்,கீட்ஸ் சொல்லிக் கொடுத்து விட்டு காளிதாசனைப் பற்றி சொல்லிக் கொடுக்க மறந்து விடுகிறோம்.இந்தியன் யாரென்று சரியாக அடையாளப்படுத்த தவறி விடுகிறோம்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சுப்புலட்சுமி,மதர் தெரசா,ஜே.ஆர்.டி டாட்டா,என்னை கவுரவிக்கும் போது தலையில் ஒரு சிவப்பு தொப்பியும்,ஒரு அங்கியையும் கொடுத்து சிறப்பித்தது:)

இந்தியாவின் இரைச்சலும்,ஜனநாயக சுதந்திரங்களும்,பல மாநிலத்து பண்பாட்டுக் கலாச்சாரங்களும்,கடந்து வந்த நூற்றாண்டுகளின் படையெடுப்புக்களும்,அதனைச் சார்ந்த மாறுதல்களும்,இவற்றின் ஊடே தம்மை உறுதிபடுத்திக் கொண்ட கலை,கட்டிடங்கள்,மொழிகள்,இனங்கள்,உடை,உணவுப்பழக்கங்கள் ஒரு கலைஞனுக்கு,ஓவியனுக்கு,கவிஞனுக்கு,இலக்கியவாதிக்கு,சிந்தனையாளனுக்கு,வாழ்வின் தத்துவம் தேடுபவனுக்கு ஒரு வரப்பிரசாதம்.இதையெல்லாம் துறந்து ஓவியனாக எம்.எப் ஹுசைன் இனி பாலைவனக் கலாச்சாரத்தின் வேர்களையும்,உயர்கட்டிடங்களுக்கு புதிய உயிரோட்டத்தைக் கொண்டு வருகிறாரோ இல்லையோ முதுமையில் அமைதியான நாட்களை கத்தார் வழங்கும் என உறுதியாக நம்பலாம்.

17 comments:

vasu balaji said...

இதெல்லாம் யாருக்கு சார் புரியும். இல்லாத கலாசாரமும், எழவெடுத்த அரசியலுக்கும் கலையாவது கத்தரிக்காயாவது. யாரையாவது பலி கொடுத்துகிட்டே இருக்கணும்.

ராஜ நடராஜன் said...

வந்துட்டீங்களா!நான் உங்க கடையில ரகளை விட்டுகிட்டு இருந்தேன்:)

Thekkikattan|தெகா said...

//இந்தியாவின் இரைச்சலும்,ஜனநாயக சுதந்திரங்களும்,பல மாநிலத்து பண்பாட்டுக் கலாச்சாரங்களும்,கடந்து வந்த நூற்றாண்டுகளின் படையெடுப்புக்களும்,அதனைச் சார்ந்த மாறுதல்களும்,இவற்றின் ஊடே தம்மை உறுதிபடுத்திக் கொண்ட கலை,கட்டிடங்கள்,மொழிகள்,இனங்கள்,உடை,உணவுப்பழக்கங்கள் ஒரு கலைஞனுக்கு,ஓவியனுக்கு,கவிஞனுக்கு,இலக்கியவாதிக்கு,சிந்தனையாளனுக்கு,வாழ்வின் தத்துவம் தேடுபவனுக்கு ஒரு வரப்பிரசாதம்//

இதை தெளிவா உள்வாங்கி கிட்டாவே, இவிங்க எதையும் காப்பாத்தணுங்கிற அந்த நிலையில இல்லைன்னு புரிதல் வந்துரும். எல்லா இடத்திலும் வயிற்றுப் பிழைப்புக்காக அரசியல்... :(

அது சரி(18185106603874041862) said...

//
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மந்திரி டேனிஷ் கார்ட்டூனிஸின் கரங்களை வெட்டுபவருக்கு 51 கோடி வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.கையை வெட்டுவது மாதிரியான அறிவிப்புக்களையெல்லாம் எதிர்த்து யாரும் இந்தியாவில் குரல் கொடுக்க காணோம்.
//

பிரச்சினையின் மையப் புள்ளி இங்கு தான் இருக்கிறது...டேனிஷ் கார்ட்டூனிஸ்டின் கையை வெட்டுவதாக அறிவித்த மந்திரி ஹூசைன் விஷயத்தில் என்ன செய்தார்??

எல்லா வினைகளுக்கும் எதிர் வினை உண்டு...இந்திய அரசியல் ஒரு புறமாக சாய்ந்ததின் விளைவே குப்பைக் கூடையில் எறியப்பட்ட பிஜேபி ஆளுங்கட்சி ஆனதும், பால் தாக்கரே போன்றவர்கள் சக்தி மிக்கவர்கள் ஆனதும்...

இந்திய அரசியலில் உண்மையாகவே செக்யூலரிசம் இருக்கிறதா என்பது பரிசீலனை செய்யப்பட வேண்டியது...

அது சரி(18185106603874041862) said...

//
திரும்பவும் இந்தியா செல்ல விரும்பாத நிலையில் அருகிலுள்ள கத்தார் அரசு ஹுசைனை தனது குடிமகனாக ஏற்றுக்கொண்டது.
//

அப்படியே சல்மான் ருஷ்டியையும் குடிமகனாக ஏற்று முழு பாதுகாப்பு வழங்குமா? இதன் மூலம் கத்தார் சொல்ல வருவது என்ன?

அது சரி(18185106603874041862) said...

//
இதனை சிவசேனாவின் பால்தாக்கரே எப்படி நியாயப்படுத்துகிறாரென்றால்"If Husain can step into Hindustan, what is wrong if we enter his house?"
//

பால் தாக்கரே போன்றவர்கள் இந்து பயங்கரவாதிகள்...ஆனால், இவர்களுக்கு பின்னாலும் ஒரு பெரும் கூட்டம் இருக்கத் தான் செய்கிறது...

உண்மையிலெயெ மத உணர்வுகள், உறவுகள் பற்றிய வெளிப்படையான விவாதம் இல்லாதவரை, பின் லேடன்களும் பால் தாக்கரேக்களும் வந்து கொண்டே தான் இருப்பார்கள்...

அது சரி(18185106603874041862) said...

//
ஆனால் இந்தக் கருத்துக்களை வன்முறை உபயோகிக்காமல் விவாதங்கள் மூலமாக வெளிப்படுத்தினால் நல்லது
//

இது உண்மை...வன்முறை மூலம் சாதிக்கப்படுவது எதுவும் இல்லை..

ராஜ நடராஜன் said...

////இந்தியாவின் இரைச்சலும்,ஜனநாயக சுதந்திரங்களும்,பல மாநிலத்து பண்பாட்டுக் கலாச்சாரங்களும்,கடந்து வந்த நூற்றாண்டுகளின் படையெடுப்புக்களும்,அதனைச் சார்ந்த மாறுதல்களும்,இவற்றின் ஊடே தம்மை உறுதிபடுத்திக் கொண்ட கலை,கட்டிடங்கள்,மொழிகள்,இனங்கள்,உடை,உணவுப்பழக்கங்கள் ஒரு கலைஞனுக்கு,ஓவியனுக்கு,கவிஞனுக்கு,இலக்கியவாதிக்கு,சிந்தனையாளனுக்கு,வாழ்வின் தத்துவம் தேடுபவனுக்கு ஒரு வரப்பிரசாதம்//

இதை தெளிவா உள்வாங்கி கிட்டாவே, இவிங்க எதையும் காப்பாத்தணுங்கிற அந்த நிலையில இல்லைன்னு புரிதல் வந்துரும். எல்லா இடத்திலும் வயிற்றுப் பிழைப்புக்காக அரசியல்... :(////

வாங்க தெகா!இணையத்தால் இன்னும் 50 ஆண்டுகளில் பல புதிய மாற்றங்கள் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.புதிய தலைமுறை மாற்றங்களை கொண்டு வரும் என நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

////உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மந்திரி டேனிஷ் கார்ட்டூனிஸின் கரங்களை வெட்டுபவருக்கு 51 கோடி வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.கையை வெட்டுவது மாதிரியான அறிவிப்புக்களையெல்லாம் எதிர்த்து யாரும் இந்தியாவில் குரல் கொடுக்க காணோம்.
//

பிரச்சினையின் மையப் புள்ளி இங்கு தான் இருக்கிறது...டேனிஷ் கார்ட்டூனிஸ்டின் கையை வெட்டுவதாக அறிவித்த மந்திரி ஹூசைன் விஷயத்தில் என்ன செய்தார்??

எல்லா வினைகளுக்கும் எதிர் வினை உண்டு...இந்திய அரசியல் ஒரு புறமாக சாய்ந்ததின் விளைவே குப்பைக் கூடையில் எறியப்பட்ட பிஜேபி ஆளுங்கட்சி ஆனதும், பால் தாக்கரே போன்றவர்கள் சக்தி மிக்கவர்கள் ஆனதும்...

இந்திய அரசியலில் உண்மையாகவே செக்யூலரிசம் இருக்கிறதா என்பது பரிசீலனை செய்யப்பட வேண்டியது...////

ஒரு குறிப்பிட்ட மதமென்றில்லாது இந்தியாவில் அடிப்படை வாதத்திற்கான வித்தை தூவியதற்கு காரணம் பி.ஜே.பி மாதிரி தோன்றினாலும் அடிப்படை வாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் தொடர்ந்து இந்தியாவின் மீது திணிக்கப்பட்டதென்றே சொல்ல வேண்டும்.வன்முறை சூழலை ரதயாத்திரை,மசூதி இடிப்பு போன்ற செயல்களால் பி.ஜே.பி ஸ்திரப்படுத்திக் கொண்டதென்றே கருதுகிறேன்.

பாகிஸ்தான்,சீனா போன்ற அண்டையர்களை ஒப்பிடும்போது இந்தியாவின் செக்யூலரிஸம் பாராட்ட வேண்டிய ஒன்றே.ஓட்டு மட்டுமே முக்கியம் என்ற சித்தாந்தத்தில் அரசியல் சறுக்கல்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு.இருக்கிற மாவுல தோசை சுடுவது மாத்திரமே இப்போதைக்கு முடியும்:)

ராஜ நடராஜன் said...

//பால் தாக்கரே போன்றவர்கள் இந்து பயங்கரவாதிகள்...ஆனால், இவர்களுக்கு பின்னாலும் ஒரு பெரும் கூட்டம் இருக்கத் தான் செய்கிறது...

உண்மையிலெயெ மத உணர்வுகள், உறவுகள் பற்றிய வெளிப்படையான விவாதம் இல்லாதவரை, பின் லேடன்களும் பால் தாக்கரேக்களும் வந்து கொண்டே தான் இருப்பார்கள்...//

பால்தாக்கரே கார்ட்டூனிஸ்ட் என்ற நிலையிலிருந்து சிவசேனா தலைவர் என்ற நிலைக்கு வந்தபின் இன்றைய தேதி வரை சாதித்த ஒரே விசயம் பம்பாய்,மும்பாய்க்குள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை விளையாட விடாத ஒன்று மட்டுமே.முன்பு தென்னிந்தியர்கள் இருக்ககூடாது,இப்ப பீகாரிகள்,ஏனைய வட இந்தியர்கள் இருக்ககூடாது,சச்சின் விமர்சனம்,ஹுசைன் விவகாரம் என மனித காழ்ப்புணர்ச்சிகளையே அதிகம் மாநிலத்திற்கும்,இந்தியாவுக்கும் பங்களித்துள்ளது.பால்தாக்கரே தலைமுறை மட்டுமே என்றில்லாமல் இப்பொழுது உதய் தாக்கரே என தொடர்கிறது.பின்லேடன்,தாக்கரேக்கள்
சித்தாந்தம் விரிவாகும் சாத்தியங்கள் இல்லை.

ராஜ நடராஜன் said...

////
திரும்பவும் இந்தியா செல்ல விரும்பாத நிலையில் அருகிலுள்ள கத்தார் அரசு ஹுசைனை தனது குடிமகனாக ஏற்றுக்கொண்டது.
//

அப்படியே சல்மான் ருஷ்டியையும் குடிமகனாக ஏற்று முழு பாதுகாப்பு வழங்குமா? இதன் மூலம் கத்தார் சொல்ல வருவது என்ன?//

வில்லங்கமான கேள்வி கேட்கறீங்கண்ணா:)ஈரானுக்கும்,கத்தாருக்கும் சண்டை மூட்டிவிடப்பார்க்கறீங்களே!ஹுசைனுக்கும் சல்மான் ருஷ்டிக்குமிடையிலிருக்கும் வேற்றுமை மரண தண்டனை பத்வா!சல்மான் ருஷ்டியின் லண்டனில் தஞ்சம் உயிர் பாதுகாப்பு வேண்டி.ஹுசைன் துபாய் சென்றது அவர் விரும்பியே Self exile மற்றும் ஓவியத்தை உலகளாவ வணிகப்படுத்த நல்ல இடமென்று.கத்தார் ஹுசைனை கவுரவுக்க வேண்டி தனது குடிமகனாக்கிக் கொண்டது.விஞ்ஞானி சந்திரசேகர் கூட இந்திய ஸ்காலர்ஷிப் கிடைக்காம அமெரிக்க குடிமகனாகி விட்டார்.ஏன் அமெரிக்கனாகி விட்டாரென்றா கேள்வி எழுப்புகிறோம்.ஐன்ஸ்டீன் ஜெர்மனியிலிருந்து அமெரிக்கனாகி விட்டார்.கற்றவனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்புன்னு லூஸ்ல விடலாமே!

Maximum India said...

//கற்றவனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்புன்னு லூஸ்ல விடலாமே!//

உங்கள் வாதங்கள் எல்லாம் சிறப்பாகவே உள்ளன.

ஆனால் மதம் அல்லது மதவாதிகளால் ஒரு "சுதந்திர கலைஞருக்கு" ஆபத்து என்கிற கோணத்தில் மட்டுமே இந்த பிரச்சினையை அணுகுவது பிரச்சினையை திசை திருப்பும் செயல் என்று நினைக்கிறேன். மை நேம் இஸ் கான் திரைப்படத்தை பால்தாக்கரேயின் கொல்லைப்புரத்தில் உள்ள திரையரங்கில் வெற்றிகரமாக (பார்வையாளர்கள் அதிகம் இல்லாமலேயே) முழு போலீஸ் உதவியுடன் ஓடச்செய்த மகாராஷ்டிரா அரசுக்கு ஹுசைன் பாதுகாப்பு என்பது பெரிய விஷயம் என்று எனக்கு தோன்றவில்லை.

இந்திய குற்றவியல் சட்டத்தின் (மத நல்லிணக்க பிரிவு, பொது அமைதி, பிரிவினை மற்றும் தேசிய ஒருமைப்பாடு பிரிவுகள்) அடிப்படையில் ஹுசைன் மீது முறையாக வழக்கு தொடரப் பட்டால் அவர் அதிலிருந்து தப்புவது மிகவும் கடினம். சட்டத்தை சந்திக்க அவர் தயங்குவதுதான் இந்தியாவை விட்டு வெளியேற முக்கிய காரணம். குடியுரிமை மாறினாலும் அவரை தண்டிக்க நமது சட்டத்தில் இடமுண்டு என்றாலும் அவர் மீது "நல் விருப்பம்" கொண்ட காங்கிரஸ் அரசு அவரை சட்டத்தின் முன் "முறையாக" நிறுத்துமா என்பது சந்தேகமே. சொல்லப்போனால் அவருக்கு கட்டார் குடியுரிமை வழங்கியதில் கூட இங்குள்ள சிலரின் பங்கும் இருக்கலாம் என்றும் ஒரு சந்தேகம் உண்டு.

நன்றி!

Maximum India said...

//கற்றவனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்புன்னு லூஸ்ல விடலாமே!//

உங்கள் வாதங்கள் எல்லாம் சிறப்பாகவே உள்ளன.

ஆனால் மதம் அல்லது மதவாதிகளால் ஒரு "சுதந்திர கலைஞருக்கு" ஆபத்து என்கிற கோணத்தில் மட்டுமே இந்த பிரச்சினையை அணுகுவது பிரச்சினையை திசை திருப்பும் செயல் என்று நினைக்கிறேன். மை நேம் இஸ் கான் திரைப்படத்தை பால்தாக்கரேயின் கொல்லைப்புரத்தில் உள்ள திரையரங்கில் வெற்றிகரமாக (பார்வையாளர்கள் அதிகம் இல்லாமலேயே) முழு போலீஸ் உதவியுடன் ஓடச்செய்த மகாராஷ்டிரா அரசுக்கு ஹுசைன் பாதுகாப்பு என்பது பெரிய விஷயம் என்று எனக்கு தோன்றவில்லை.

இந்திய குற்றவியல் சட்டத்தின் (மத நல்லிணக்க பிரிவு, பொது அமைதி, பிரிவினை மற்றும் தேசிய ஒருமைப்பாடு பிரிவுகள்) அடிப்படையில் ஹுசைன் மீது முறையாக வழக்கு தொடரப் பட்டால் அவர் அதிலிருந்து தப்புவது மிகவும் கடினம். சட்டத்தை சந்திக்க அவர் தயங்குவதுதான் இந்தியாவை விட்டு வெளியேற முக்கிய காரணம். குடியுரிமை மாறினாலும் அவரை தண்டிக்க நமது சட்டத்தில் இடமுண்டு என்றாலும் அவர் மீது "நல் விருப்பம்" கொண்ட காங்கிரஸ் அரசு அவரை சட்டத்தின் முன் "முறையாக" நிறுத்துமா என்பது சந்தேகமே. சொல்லப்போனால் அவருக்கு கட்டார் குடியுரிமை வழங்கியதில் கூட இங்குள்ள சிலரின் பங்கும் இருக்கலாம் என்றும் ஒரு சந்தேகம் உண்டு.

நன்றி!

ராஜ நடராஜன் said...

////கற்றவனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்புன்னு லூஸ்ல விடலாமே!//

உங்கள் வாதங்கள் எல்லாம் சிறப்பாகவே உள்ளன.

ஆனால் மதம் அல்லது மதவாதிகளால் ஒரு "சுதந்திர கலைஞருக்கு" ஆபத்து என்கிற கோணத்தில் மட்டுமே இந்த பிரச்சினையை அணுகுவது பிரச்சினையை திசை திருப்பும் செயல் என்று நினைக்கிறேன். மை நேம் இஸ் கான் திரைப்படத்தை பால்தாக்கரேயின் கொல்லைப்புரத்தில் உள்ள திரையரங்கில் வெற்றிகரமாக (பார்வையாளர்கள் அதிகம் இல்லாமலேயே) முழு போலீஸ் உதவியுடன் ஓடச்செய்த மகாராஷ்டிரா அரசுக்கு ஹுசைன் பாதுகாப்பு என்பது பெரிய விஷயம் என்று எனக்கு தோன்றவில்லை.

இந்திய குற்றவியல் சட்டத்தின் (மத நல்லிணக்க பிரிவு, பொது அமைதி, பிரிவினை மற்றும் தேசிய ஒருமைப்பாடு பிரிவுகள்) அடிப்படையில் ஹுசைன் மீது முறையாக வழக்கு தொடரப் பட்டால் அவர் அதிலிருந்து தப்புவது மிகவும் கடினம். சட்டத்தை சந்திக்க அவர் தயங்குவதுதான் இந்தியாவை விட்டு வெளியேற முக்கிய காரணம். குடியுரிமை மாறினாலும் அவரை தண்டிக்க நமது சட்டத்தில் இடமுண்டு என்றாலும் அவர் மீது "நல் விருப்பம்" கொண்ட காங்கிரஸ் அரசு அவரை சட்டத்தின் முன் "முறையாக" நிறுத்துமா என்பது சந்தேகமே. சொல்லப்போனால் அவருக்கு கட்டார் குடியுரிமை வழங்கியதில் கூட இங்குள்ள சிலரின் பங்கும் இருக்கலாம் என்றும் ஒரு சந்தேகம் உண்டு.

நன்றி!//

வாங்க மேக்சிம்!உங்கள் குழந்தை எப்ப்படியிருக்காங்க.நன்றாக படிக்கிறாங்களா?ரொம்ப நாட்களாக உங்கள் பெயரை தமிழ்மணம் பக்கங்களில் காணவில்லை.ஒருவேளை எனது கண்களுக்கு கல்தா கொடுத்துமிருக்கலாம் இப்போதைய தாமத பதில் போல.

ஹுசைன் கேஸ் என்ன ஜெயலலிதாவா அல்லது சங்கராச்சாரியார் போன்றவையா?அவர்களே தில்லாக வாய்தா,ஒத்தி வைப்பு என்று கால நீட்டிப்பு செய்கிறார்கள்.ஹுசைனும் நினைத்திருந்தால் அந்த நுணுக்கங்களை உபயோகித்திருக்கலாம்.மாறாக அவரது தொழில் அவருக்கு உலக அங்கீகாரத்தை தருகிறது.இடுகையின் உயர்நீதி மன்ற தீர்ப்பின் சாரம் போதும் ஹுசைனின் வாதம் ஜெயிப்பதற்கு.ஆனால் தொடர் வழக்குகளை எதிர்த்து நின்று மன உழைச்சலுக்கு ஆவதை விட துபாயின் உயரமான கட்டிடத்தில் ரிட்டையர்டு செய்த முடிவை பாராட்டுகிறேன் நான்.

ராஜ நடராஜன் said...

//குடியுரிமை மாறினாலும் அவரை தண்டிக்க நமது சட்டத்தில் இடமுண்டு என்றாலும் அவர் மீது "நல் விருப்பம்" கொண்ட காங்கிரஸ் அரசு அவரை சட்டத்தின் முன் "முறையாக" நிறுத்துமா என்பது சந்தேகமே. சொல்லப்போனால் அவருக்கு கட்டார் குடியுரிமை வழங்கியதில் கூட இங்குள்ள சிலரின் பங்கும் இருக்கலாம் என்றும் ஒரு சந்தேகம் உண்டு.//

சந்தேகமென்ன சந்தேகம்.நள்ளிரவில் அவர் கத்தார் இந்திய தூதரகத்தில்(ஆசியா நெட் நியூஸ்)கடவுசீட்டை திருப்பி தரும்போதே தெரியவில்லையா.பி.ஜே.பிக்கு முஸ்லீம்கள் எப்படி ஒரு துருப்புச்சீட்டோ காங்கிரஸுக்கும் அதே துருப்பு சீட்டுத்தான்.பயன்படுத்தும் விதங்கள் மாறுபடுகின்றன.

குடுகுடுப்பை said...

at times athu sari and I think in same direction.

I still doubt Hussain's honesty.

ராஜ நடராஜன் said...

//at times athu sari and I think in same direction.

I still doubt Hussain's honesty.//

Sir,What makes you doubt Hussain's honesty?Any one point.Does any of his friends utter a word against him or does he or any media interviews expressed negatively on his views especially on sita and saraswati.

We must know how to segregate the religious fanatical extremis(t)m and a paint(er).

The real enemies of humanity are hidden behind some other social masks.They are to be identified and eradicated.