சென்ற முறை சேனல் 4ன் காணொளி கண்டு பதறிய மனம் இந்த முறை எந்த சலனத்தையும் என்னில் ஏற்படுத்தவில்லை. மனம் மரத்துப் போன நிலையென்றாலும் இணைய தேடல்களில் முதன்மையாக ஈழ மக்கள் குறித்த அக்கறையும்,இலங்கை அரசு தனக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளும் தன்மைகளையே மனம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.சேனல் 4 காணொளி வெளி வராத தினங்களுக்கு முன்பே 2009ல் மௌனமாக இருந்த இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்த முறை விவாதக்களத்தையும்,இலங்கை குறித்தான தலைப்புக்களை முன் வைத்தது ஆச்சரியத்தையும் அதன் தேவையையும் உணர முடிந்தது.
அரசியல் நாடக நடிகர்கள் அதிகம் வந்து போகும் ஊடகம் என்பதால் இந்திய ஊடகங்களில் NDTV எனது முன்னுரிமை.கூடவே ஆங்கில நடைக்கும் இலங்கை அரசின் ஊதுகுழலாய் என்.ராமின் காலத்தில் களநிலைகளையும்,இலங்கை அரசு என்ன ஊதுகிறது என்று அறிந்து கொள்ளவும் இந்து பத்திரிகை.இப்பொழுது என்.ராம் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இட்லி வடை சாப்பிட்டுக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் இப்பொழுது இந்து பத்திரிகை இலங்கை சார்ந்த அமெரிக்க தீர்மானத்தையெல்லாம் வெளியிடுவதோடு மத்திய அரசின் இலங்கை நிலைப்பாடு குறித்தெல்லாம் செய்திகள் வெளியிட ஆரம்பித்திருப்பது வரவேற்க தகுந்த மாற்றம் எனலாம்.
சேனல் 4 காணொளிக்கு முன்பே அமெரிக்க தீர்மானம் குறித்து NDTV யில் சுப்ரமணியன் சாமி,முன்னாள் தூதரகப் பணியாளர் ஜி.பார்த்தசாரதி,கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா,காங்கிரஸ் கட்சியின் நாரயணசாமி,மீனா கந்தசாமி போன்றோருடன் பர்காதத் கலந்துரையாடல் நிகழ்ச்சி காண நேரிட்டது.சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் இந்தியாவின் காஷ்மீர்,மணிப்பூர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றி எதிர்காலத்தில் பேச்சு வரும் என்றார்.சுப்ரமணியன் சாமியின் வாதம் திசை திருப்பல் என்பதோடு எதனையாவது இட்டுக் கட்டியாவது விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சுமத்துவது மட்டுமே என்ற நீண்டகால நோக்கு கொண்டவர்.
காஷ்மீர்,மணிப்பூர் மனித உரிமை மீறல்கள் என்றால் ஐ.நா தீர்மானம் இந்தியாவுக்கும் கொண்டு வரவேண்டும் என்றார் மீனா கந்தசாமி. மேலும் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை இலங்கை ராஜபக்சே குழுவினரின் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிட்டு விடமுடியாது.மத்திய அமைச்சர் நாராயணசாமி தீர்மானத்தை ஆதரிப்போம் என்றுமில்லாமல் இலங்கை அரசுடன் சார்ந்து செயல்படுவோம் என்றுமில்லாமல் மதில் மேல் பூனையாக ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளை மன்னிக்கவும் மாட்டோம்,அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்கின்ற ரீதியில் தனது கருத்தை முன் வைத்தார்.ஒரு புறம் டி.ராஜாவின் கருத்துக்கும்,மறுபுறம் அமைச்சர் நாராயணசாமியின் வாதத்திற்கும் ஏளன சிரிப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தார் சுப்ரமணியன் சாமி.
நான்கு பேர் கலந்து கொள்ளூம் விவாதத்தில் அவரவர் நிலைப்பட்ட வாதங்களை வைக்கும் போது பேச்சின் இடையே குறுக்கிடும் வழக்கத்தை இந்தியர்கள் பெரும்பாலோர் கடைப்பிடிக்கிறார்கள்.சுப்ரமணியன் சாமியின் ஸ்டைல் என்னவென்றால் தானே அறிந்தவன் என்ற மமதையோடு மற்றவர்களை நக்கல் செய்யும் ஏளன சிரிப்பு மற்றும் உனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற மாதிரி முகத்திற்கு நேரே சொல்லி விடுவது.இதனை முன்பு ஜெயந்தி நடராஜன் மற்றும் ரேணுகா சவுத்ரி போன்ற மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் பெண்களிடம் ஏளனம் செய்ததை காண முடிந்தது.படித்தும்,பொது வாழ்வில் ஈடுபட்டும் பக்குவப்படாத மனிதன் என இவரை துணிந்து சொல்லலாம்.உருப்படியாக செய்த ஒரே வேலை 2G என்பதையும் மறுப்பதற்கில்லை.
சுப்ரமணியன் சாமியின் நிலைப்பாடு முன்பு சீனா,மற்றும் அமெரிக்கா சார்ந்தும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலையென்பது தெரிந்த ஒன்றே.ஆனால் சென்ற வருடம் அமெரிக்க பல்கலைக்கழகம் சுப்ரமணியன் சாமியின் பேச்சுக்கும், அவர் கற்றுக் கொடுக்கும் பாடத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதை உணர்ந்தோ என்னவோ கௌரவ ஆசிரியர் பதவியை பறித்துக்கொண்டது.அதனால் இப்பொழுது அமெரிக்க தீர்மானம் குறித்தும் அமெரிக்காவை எதிர் விமர்சனம் செய்வதை உணர முடிந்ததது.
ஜி.பார்த்தசாரதி இலங்கை,பாகிஸ்தான் போன்ற இடங்களில் இந்திய தூதராகப் பணீ புரிந்திரிக்கிறார்.நிச்சயம் பூகோள அரசியலை நன்கு தெரிந்து வைத்திருப்பார்.ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் மேசைக்கு வரும் முன்பே தீர்மானம் தோற்றுவிடும் என்று ஜோஸ்யம் சொல்லி விட்டார். இவர் ஜோஸ்யம் பலிக்கிறதா என இன்னும் சில தினங்களில் பார்த்து விடலாம்:) ஆசிய மனித உரிமைகள் சார்ந்து ஒரு பெண்ணும்,சர்தார்ஜி ஒருவரும் கருத்துக்கள் முன்வைத்தார்கள்.பெயர்கள் நினைவில் இல்லை. கலந்துரையாடல் செய்த அனைவரின் விவாதங்களையும், மொத்த நிகழ்ச்சியின் போக்கையும் இறுதியில் வந்த சேனல் 4 காணொளியின் இயக்குநர் கேலம் மெக்ரா (Callum Macrea) தனது நியாயமான கருத்தின் மூலமாக தட்டிக்கொண்டு போய்விட்டார்.
NDTVயின் காணொளி கிடங்கில் இருந்தால் இணைப்பு கொடுக்கலாமென்று தேடியதில் கால விரயம் மட்டுமே மிச்சம்.மன்னிக்கவும்.
என்.ராம், சுப்ரமணியன் சாமி,சோ,ஜி.பார்த்தசாரதி,பி.ராமன் என்று ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் எவரும் விடுதலைப்புலிகள் என்ற ஒற்றைக் கோட்டைத் தாண்டி விமர்சனம் செய்வதில்லை. இதில் என்ன பிரச்சினையென்றால் எதிர் விவாதம் செய்ய இயலாத ஊடக கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு இவர்கள் பூச்சாண்டி காட்டுவதே. இவர்களின் இன்னும் புரியாத புதிர் ஒன்று என்னவென்றால் இந்து கலாச்சாரமாக பரதம், கோயில், பட்டு, வேட்டி, சம்பிராதயங்கள் என ஈழத்தமிழர்கள் இந்து மத பாரம்பரியங்களை கட்டிக் காத்தாலும் கூட இந்துத்வா எனும் மையத்தில் சேரும் இவர்கள் ஈழப்போரின் அவலங்களுக்கு முந்தைய காலத்தின் அடிப்படையிலேயே கருத்துக்கள் வைப்பதும்,மக்களின் துயரங்கள்,இழப்புக்கள் என்று அனைத்தையும் பின் தள்ளி விட்டே கருத்து வெளியிடுவது மனித நேயத்துக்கு உகந்ததாக இல்லை.இவர்களை விட சில இலங்கை பத்திரிகையாளர்களும்,இலங்கை அரசின் அடக்குமுறையில் வெளிநாடு சென்ற சிங்களவர்கள் மேல்.
பார்வைகளும்,விமர்சனங்களும் வித்தியாசப்பட்டால் தனி மனித கருத்துக்கள் என்று புறம் தள்ளி விடலாம்.ஆனால் இவர்கள் ஏதோ ஒரு வட்டத்தில் மையம் கொள்கிறார்கள்.மேற்கத்திய நாடுகள் இலங்கையின் மீதான தங்கள் சுயநலம் அடங்கிய அழுத்தங்கள் தொடுத்தாலும் கிழக்கத்திய நாடுகளோடு ஒப்பிடும் போது மனித உரிமைகளையும் மதிக்கிறார்கள் என்பது நிச்சயம். இவர்களுக்கு இருக்கும் ethics கூட இல்லாமல் இந்திய நலன் என்ற முகப்பூச்சு பூசிக்கொண்டு மட்டுமே இவர்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். சோவின் துக்ளக்,சுப்ரமணியன் சாமியின் NDTV &IBN,பி.ராமனின் பழைய indiff & இப்போதைய outlook India,ஜி.பார்த்தசாரதியின் கிடைத்த இடம் என இவையெல்லாவற்றையும் விட இலங்கை அரசின் வைரமாலை பத்திரிகையாளன் இந்து என்.ராம் என அனைவரும் ஒரு கோட்டுக்குள் சங்கமமாகும் மர்மம் என்ன?ஒருவேளை தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகள்,கோபங்கள்,நியாயங்கள் அனைத்தும் தவறு என்றால் அவை எப்படி தவறு என விளக்குவதுமில்லை, சுட்டிக்காட்டுவதுமில்லை.இன்னும் கூட இவர்களின் ஒரே மையம் விடுதலைப்புலிகள் மட்டுமே.இவர்களின் எதிர்ப்புக்கள் ஒரு புறம் ஊடகப் பிரச்சாரமாக பவனி வர,இன்னுமொரு புறம் ஈழத்தமிழர்கள் சார்ந்த அனுதாபம் தமிழகத்தில் வளர்வது மட்டுமே நிதர்சன உண்மை.
இனி தொடர்ந்து சேனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து அடுத்து பார்ப்போம்.